திங்கள், 1 மார்ச், 2010

UTHR அறிக்கை.....

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் உட்பட பல்வேறு படுகொலைகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சதான் பொறுப்பென மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை பயங்கரத்தின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. படுகொலையாளிகள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின் கீழேயே செயற்பட்டு வந்துள்ளனர் என்பதை தமக்கு கிடைத்த தகவல்கள் உறுதியாகத் தெரிவிப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. தமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களை இன்னொரு சுயாதீனமான தகவல் மூலத்தின் மூலம் தாம் உறுதிப்படுத்தியதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. உதாரணமாக புலனாய்வுத்துறையில் உள்ள வசந்தவுடன் பிள்ளையான் குழுவினருக்கு இருந்த தொடர்பு, அவர்களுடைய பி.என்.எம். தொடர்பு போன்றன. புலனாய்வுத்துறையைச் சேர்ந்த இரண்டு முக்கியமான உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவுடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணிச் செயற்பட்டு வந்துள்ளனர். ஒருவர் திருகோணமலையைத் தளமாகக் கொண்ட கடற்படையைச் சேர்ந்த கமால்தீன். மற்றவர் இராணுவத்தின் கெமுனுபடைப்பிரிவின் கட்டளை அதிகாரி தென்னக்கோன். இவர் வெலிக்கந்தவைத் தளமாகக் கொண்டவர். கருணா குழு, ஈ,பிடிபி ஆகியவற்றிலிருந்த கொலையாளிகளுடன் தொடர்பையும், அவர்களுக்கான உத்தரவுகளையும் பிறப்பித்து வந்தவர் சம்பத் எனப்படும் முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி. இவர் கமால்தீன் மற்றும் வசந்த ஆகியோரின் கீழ் செயற்பட்டு வந்தார். இந்தப் பயங்கரம் மூன்று தளங்களில் இடம்பெற்றுள்ளதாக நாம் வகைப்படுத்தலாம். மிகக் கீழ் மட்டத்தில் கருணா குழுவினர், ஈபிடிபி உறுப்பினர்கள், முஸ்லிம் துணை இராணுவக்குழுக்கள், மற்றும் விடுதலைப் புலிகளிலிருந்து வெளியேறியோர் ஆகியோரைக் கொண்டு நடாத்தப்பட்டது. இரண்டாவது தளத்தில் ஜாதிக ஹெல உருமய, பி என் எம் எனப்படும் தாய்நாட்டைப் பாதுகாக்கும் இயக்கம், மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டவை. மூன்றாவது இவர்களுடன் தொடர்புபட்ட ஒரு மூன்றாவது அணியால் நடாத்தப்பட்டவை. இதனை தேவைக்கெற்ப இரண்டாவது அணியினர் கையாண்டு கொண்டனர். கோட்டபாய ராஜபக்சதான் ரவிராஜ், கொல்லப்படக் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மேற்படி சூழ்நிலைகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மக்கள் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகளை முடக்குவதே அதன் உடனடியான இலக்காக இருந்தது. கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள், கப்பம் வாங்குதல் என்பன கோட்டபாய ராஜபக்சவின் கோஸ்டியினரால் மூடி மறைக்கப்படுவதை கண்காணிப்புக்குழுவின் அறிக்கை வெளிப்படுத்தி இருந்தது. அது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாற்றமெடுப்பதை அம்பலப்படுத்தியது. கண்காணிப்பக்குழுவின் இந்நடவடிக்கைகள் ஜனாதிபதிக்குப் பொறுக்க முடியாதவையாக இருந்தன. ஜனாதிபதியின் கீழ் இருந்த பாதுகாப்பு அமைச்சை அவருடைய இளைய சகோதரரான கோட்டபாயவே நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இலக்கு வைத்துக் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது. கொலையாளிகள் பாதுகாப்பு அமைச்சுடன் மிக நெருக்கமாகவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஊடகப் பணியாளர்கள் பலரைக் கொன்றிருக்கிறார்கள். முக்கியமான பத்திரிகையின் பெண் ஆசிரியாரை கருணா குழுவினரைக் கொண்டு அச்சுறுத்திய பாதுகாப்பு செயலாளரை ஜனாதிபதி விடாப்பிடியாக தொடர்ந்து பணியில் வைத்திருக்கிறார். ஏற்கெனவே சொல்லப்பட்ட மோசமான நிலைமைகைளில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடிய உண்மையான அர்த்தத்திலான பாதுகாப்பு செயலாளர் அல்ல அவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

எரித்திரியா எமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது

எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாம் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கு முற்பட்டிருந்தோம். ஆனால் எரித்திரியா தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவது மிகவும் பின்னடைவான விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. எரித்திரியா தொடர்பில் நாம் சில கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளோம். எரித்திரியாவில் விடுதலைப் புலிகள் பலமான வலையமைப்பை கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஊடகங்கள் எமது நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் எம்மால் எரித்திரியாவின் ஆதரவை பெறமுடியவில்லை. தற்போது நாம் மீண்டும் அவர்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம். பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அது அந்த நாடுகளுக்கு தெரியாது. நாம் தான் அதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.சில நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவது பயனற்றது, ஏனெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. சில நாடுகள் தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர் என தெரிவிப்பதை விரும்புவதில்லை. இது தொடர்பில் எமக்கு உள்ள சிறந்த உதாரணம் எரித்திரியாவாகும். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகமாகும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அழுத்தங்களை மீறி எம்மால் மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நாடுகளின் உதவிகள் இன்றி விடுதலைப் புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது என்பது கடினமானது. இராணுவ மோதல்கள் மூலம் பெறமுடியாததை, சில நாடுகளின் உதவிகளுடன் அடைந்துவிட விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் பெரும்பாலான தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறீலங்காவுக்கு மீண்டும் வந்து வாழ விரும்புகின்றனர். குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு .....

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில் அமர்த்துவதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை அள்ளி வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்த நாடுகள் மறுத்துள்ள போதும்- அதை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மேற்குலகின் செல்லப்பிள்ளையாக வளரவிருந்த மற்றொரு ஜியா- உல்- ஹக் தான், சரத் பொன்சேகா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம். ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்க முடியாதபடி இருக்கிறது மேற்குலகம். சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட உரிமை பெற்ற ஒருவர். ஆனாலும் அவரை விடுதலை செய் என்று கோர முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா. ஐ.நாவும் சரி- வேறெந்த நாடும் சரி அவரை விடுவிக்குமாறு கோரவில்லை. அப்படிக் கோர முடியாத வகையில்- அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தார்- ஊழல்களில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் என்பதால்- அவர்களே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இதனால் வெளிநாடுகள் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து- குட்டையக் குழப்பி வந்த சர்வதேசத்தின் முகத்தில் கரியைப் பூசுகின்ற வகையிலான இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதோ- சரத் பொன்சேகா தோல்வியுற்றதோ பெரிய விடயமல்ல. ஆனால் தமிழ்மக்களில் பெரும்பான்மையினர் தமக்கும் இந்தத் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்ற செய்தியைக் கூறியது தான் முக்கியமானது. இது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்பட்ட அடி. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விரும்பியது. மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் தமது கைக்குள் நிற்கமாட்டார் தமது சொற்படி ஆடமாட்டார் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கு பெரும் முயற்சிளை எடுத்தது மேற்குலகம். ஆனால் விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சமாதானம்... சமாதானம்...என்று பேசிப்பேசிக் காலத்தைக் கடத்தியே போராட்டத்தை அழித்து விடுவார் என்பது அவர்களின் கணிப்பு. எனவே சண்டைக்காரனான மகிந்தவை ஆட்சியில் ஏற்றி தமது படைபலத்தின் மூலம் மேலாதிக்கத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக் வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்குலகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் ரணில் விக்கிரமசிங்க குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போது மேற்குலம், தமிழ்மக்களின் வாக்குகளைக் கணக்குப் போட்டுப் பார்ததது. இவர்கள் அத்தனை பேரும் வாக்களித்திருந்தால் நிச்சயம் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார் என்று கருதியது. அந்த வாய்ப்பை இழக்க செய்து-தேர்தல் முடிவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புலிகள் இயக்கத்தை தண்டிக்க முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்தது. இந்தத் தடையின் விளைவாகப் புலிகள் இயக்கம் சமாதான முயற்சிகளில் இருந்து புறம் தள்ளப்பட்டு- அதில் நம்பிக்கையிழந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு வகையில் நான்காவது கட்ட ஈழப்போருக்கு புலிகளை உந்தித் தள்ளியதற்கு காரணமாக இருந்தது மேற்குலகம் தான். புலிகள் போரின் மீது விருப்புக் கொண்டிருந்தார்களா என்பதை விட சாதானத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பதற்கு காரணமாக இருந்தது மேற்குலகமே. இன்று அதே மேற்குலகம் விரும்பிய சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஸ தோற்கடித்திருக்கிறார். அதுவும் முன்னரைப் போன்று இல்லாமல் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தோல்வி. இதிலிருந்து மேற்குலகுக்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது- தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்ற எந்த வேட்பாளரையும் சிங்கள மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது. அடுத்தது- கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல என்பது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருந்தால் கூட ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்தமுறை தமிழ்மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குப் புலிகள் இருக்கவில்லை. ஆனாலும் பெருமளவிலான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால் இது சிங்களதேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான தேர்தலே என்ற கருத்தில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. இந்தக் கருத்து இப்போதைய விட, 2005 இல் மிகவும் வலுவானதாக இருந்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே தமிழ் மக்களிடம் புலிகள் வாக்களிப்பைப் புறக்கணக்குமாறு கோரா-திருந்தாலும் கூட- ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இது மேற்குலகுக்கு இப்போது ஓரளவுக்கேனும் புரிந்திருக்கும். அதாவது 2005 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணித்த விவகாரத்துக்கு புலிகள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. அடுத்து இந்தமுறை சரத் பொன்சேகாவின் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற- அவர்களுடன் கூட்டு வைக்கத் தயாராக இருக்கின்ற-எவரையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை. இது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கிறது. இதுபோலவே கடந்த முறை ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கப் போவதாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் சிங்களப் பேரினவாதம் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கும். அது ரணிலுக்குத் தென்னிலங்கையில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்;டிருக்கும். வடக்கு,கிழக்கில் ரணிலுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதாக உணர்ந்திருந்தால் சிங்கள மக்கள் மகிந்தவின் பக்கம் முற்றாகச் சாய்ந்திருப்பர். இந்தக் கட்டத்தில் ரணிலின் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. தாம் விரும்பியது போன்று ரணில் ஜனாதிபதியாகவில்லையே என்ற ஆத்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அப்போது எடுத்த தான் தோன்றித்தனமான முடிவு தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை.

அணு ஆயுத பாதுகாப்பு கூட்டம் ,

அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட்டி இருக்கிறார். இது ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு ஆயுத கடத்தலை தடுப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். `அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள், தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் தவிர்க்க முடியும்' என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

சிலியில் பயங்கர பூகம்பம்!

சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 85 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளதென அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்தது. அதைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனிஷிய பூகம்பத்தில் மூன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டில் வீடுகள் தரைமட்டம்: பூகம்பசாவு 300ஆக உயர்வு தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று அதிகாலை 3.34 மணியளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்த இந்த பயங்கர பூகம்பத்தால் சிலியில் முக்கிய நகரமான கான்செப்சியன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. தலைநகரம் சான்டியா கோவிலும் பூகம்பம் தாக்கியது. இதில் கான்செப்சியன் நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள், இடிந்து விழுந்தன. இந்த நகரை சுற்றி பல சிறிய நகரங்கள் உள்ளன. அங்கும் அதோ போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை 3.34 மணி என்பதால் மக்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். பூகம் பம் ஏற்பட்டதை உணர்ந்து தப்பி ஓட செல்ல முடியாமல் ஏராளமானோர் இடி பாட்டுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 300 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாட்டுக்குள் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி கிடக்கின்றனர். அவர்களிலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் மையம் கடலை ஒட்டிய பகுதியில் இருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராவீன்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்த தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதம் அடைந்தன. இங்கு உயிர் சேதம் எதுவும் இல்லை. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதும் அமெரிக்காவின் ஹவாய் தீவு, ஜப்பான், நியூசிலாந்து, ரவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள 16 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எச்சரிக்கை விடுத்தது போல பூகம்கம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை தாண்டி வந்தன. ஆனால் முன் எச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில குட்டி தீவுகளிலும் சுனாமி ஏற்பட்டது. அங்கும் சேதம் எதுவும் இல்லை. நியூசிலாந்து, ஜப்பானில் எதிர்பார்த்தபடி சுனாமி தாக்கவில்லை. எனவே இங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இங்கும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. சிலி நாட்டில் 15 பிராந்தியங்கள் உண்டு. இதில் 6 பிராந்தியங்கள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பாலங்களும் இடிந்து விழுந்து விட்டன. இதனால் சிலி நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் நாடே துண்டு துண்டாகி கிடக்கிறது. பூகம்பத்தில் 15 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலி மந்திரி மாரினோ பெர்னாண்டோ கூறினார். பல இடங்களில் மின் கோபுரங்கள், டெலிபோன் கோபுரங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் தலைநகரம் சான்டியாகோ உள்பட நாட்டில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெலிபோன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. கான்செப்சியன் நகரில் பூகம்பம் ஏற்பட்டதும் 12 கட்டிடங்கள் தீப்பற்றி கொண்டது. அதில் 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்று. அங்கிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நில நடுக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து 51 தடவை அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.9ல் இருந்து 6.9 புள்ளிகள் வரை இருந்தது. 2-வது தடவை ஏற்பட்ட அதிர்வு 6.1 ரிக்டர் ஸ்கேல் அளவாக இருந்தது. அப்போது சிலியின் பக்கத்து நாடான அர்ஜென்டினாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு 2 பேர் பலியானார்கள்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை.கடந்த வாரம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மாடயிரா தீவில் வீசிய புயலுக்கு பலர் பலியாகினர். இந்த நிலையில் இங்கு தற்போதும் புயல் வீசுகிறது. மரங்கள் வேரோடு சாய்கிறது. அதில் ஒரு சிறுவன் உயிர் இழந்தான். ஸ்பெயினில் கனேரி தீவுகளில் புயல் தாக்கியது. அங்குள்ள லா பால்மா, குரேன் கனேரியா, டெனேரிப் ஆகிய இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன. இங்கும் வீடு இடிந்ததில் ஒரு பெண் பலியானார். பிரான்ஸ் நாட்டிலும் இப்புயலின் தாக்கம் இருந்தது. புயல் காரணமாக மழை பெய்தது. தெற்கு பைரென்ஸ் பகுதியில் மரம் விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார். மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார்

ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த, குழந்தை குடி அகல்வோர் திட்டம் என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில், ஏழைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு மேலும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதிமொழியில் அனுப்பப்பட்டனர். ஆனால், இவ்வாறு அனுப்பப்பட்ட குழந்தைகளில் பலர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளானார்கள். இந்தச் சம்பவம் மிகவும் அவமானகரமான விஷயம் என்று வர்ணித்த பிரவுன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறார்களது குழந்தைப்பருவம் அபகரிக்கப்பட்டது என்றார். இதே போன்ற ஒரு மன்னிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அவர்களும் நவம்பர் மாதத்தில் கோரினார்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சிறீலங்காவும் – மாலைதீவும் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும்

சிறீலங்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்து மாலைதீவை எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லகம தெரிவித்துள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வேறு வழிகளில் அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைப்புக் காட்டிவருவதாகவும் ரோகிதபோகல்லகமவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா மாலைதீவு போன்ற நாடுகளை மையங்கொண்டு இவர்கள் செயற்படக்கூடும் என்றும் எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிhந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாதிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 4 ஆயிரம் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெர்மனியில் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனம் பிரசித்தி பெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 3 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பல விமானங்களின் போக்குவரத்து தாமதமாகவும் நடைபெறுகிறது. எனவே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டம் வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுவதால் இதில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் வாபஸ் பெற்று வேறு விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு புதிய பாதுகாப்பு சோதனை

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் 10 நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு முகம் மற்றும் கைரேகை பரிசோதனைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்தார். அதே சமயம் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருப்பதை கெவின் சூசகமாக தெரிவித்தார்.

103 சிறுமிகளை கற்பழித்த காமுக மருத்துவர்

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி. இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார். இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு.......................

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா? இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை. இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள். வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார். இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது. சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை. சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்? ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள். தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை. ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது. ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே. தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல. இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன? டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது.

அமெரிக்க நீதிமன்றில் இன்று வாதாடுகிறார் ருத்திரகுமாரன்

தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப் பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இன்று நேரில் ஆஜராகி வாதிடவுள்ளார் என இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன. மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு களை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத் தில் வாதிடுவார் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர்தான் என்றும் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது?

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை

புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்,

.விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசுடன் முரண்படாமல் கையாளுவதற்கு சிறிலங்காவில் அரசியல் அதிகாரம் படைத்த தமிழர் சக்தி ஒன்று இந்தியாவுக்கு அவசர தேவையாக உள்ளது. தனது இந்த தேவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே சரியான தெரிவாக இருக்கமுடியும் இந்தியா கருதுகிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தபோது, தனது திட்டம் கைமீறிப்போய்விட்டதாக இந்தியா பீதியுற்றபோதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வசமான களமாக தற்போது வந்து வாய்த்திருக்கிறது. இந்த தேர்தலில் தமது ஆளுகைக்குள் செயற்படக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்குவதன்மூலம் மட்டுமே சிறிலங்காவில் தனது ஏனைய திட்டங்களை முன்னகர்த்த முடியும் என்று இந்தியா நம்புகிறது. அவ்வாறு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடிய கூட்டமைப்பினில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தீவிர சக்திகள் இடம்பெறுமாயின், அது கூட்டமைப்பின் ஊடாக முன்னகர்த்த உத்தேசித்துள்ள எதிர்கால முயற்சிகளுக்கு பாரிய தடங்கலாக அமையும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கூட்டமைப்பினுள் நிச்சயம் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தமிழ் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு தாம் இடமளிப்பதாக கட்சியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது, அதற்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைமை ஒப்புதல் அளிக்காததிலிருந்து, கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரை வெளியகற்றவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைமை எவ்வளவுதூரம் உறுதியாக நிற்கிறது என்பது புலனாகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை இந்தியாவின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டால், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டின் அழுத்தத்துக்கு உள்ளாகவேண்டிய தேவையில்லை என்று சோனியா அரசு ஆழமாக நம்புகிறது. கருணாநிதி தலைமையிலான மாநில அரசு தனக்கு சார்பாக என்றென்றும் இருந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளபோதும், தெலுங்கானாவில் தற்போது தனிமானிலமாக அமைக்கக்கோரி மேற்கொள்ளப்படுகின்றன மக்கள் கிளர்ச்சி போல எனையா மாநிலங்களிலும் வேறு விடயங்களில் தலைதூக்குமா என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, எந்த ஒரு விடயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசினை பணயக்கைதியாக வைத்திருக்கக்கூடிய - சாத்தியமான - விடயங்களை விட்டுவைக்காமல் அவற்றை தானே நேரடியாக அணுகவேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக உள்ளார்கள். இதன் ஒரு நகர்வாகவே, சிறிலங்கா அரசியலையும் தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் அதனை தான் நினைத்ததுபோல வைத்திருக்கவும் இந்தியா தீர்க்கமான முடிவுடன் காய்நகர்த்திவருகிறது.

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல்,,,,

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள எவருக்காவது தெரியுமா? ஏன்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள். ஏன்பதும் உண்மையே. கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி சிவநாதன், கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதம் யாருக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலக்கியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது. என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும். என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது. இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே. சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.