திங்கள், 5 ஏப்ரல், 2010

அதிர்ந்த ஆனந்தபுரச் சமர்: காவிய நாயர்களுக்கு வீரவணக்கம்

கடந்த வருடம் போர் உச்சக்கட்டமடைந்திருந்த வேளை, ஏப்பிரல் மாதத்தில் ஆனந்தபுரத்தில் தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டை பெட்டி அடித்து அதனைச் சுற்றி வளைத்த இலங்கை இராணுவத்திற்கு எதிராக கடும் போர் மூண்டது. கேணல் தீபன் தலைமையில் முதலாவது அணி களமிறங்க, இராணுவ முன் நகர்வு வெகுவாகத் தடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சமரை சமாளிக்க முடியாத இராணுவத்தினர், மேலதிக துருப்புக்களை வரவழைத்து முன்னேற முயன்றவேளை, தீபன் காயமுற்றார். அவருக்கு தோளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக தளபதி, விதுசா, மற்றும் துர்க்கா ஆகியோர் களமிறங்கினர். தலைவர் தங்கியிருந்த வீட்டை பெட்டியடித்து தாக்கி வந்த இராணுவத்தை, எதிர்த்து தாக்குதல் களத்தில் குதித்தனர் விதுசா மற்றும் துர்க்காவின் அணிகள். அகோரத் தாக்குதல் காரணமாக, பல இழப்புக்களைச் சந்தித்த இராணுவத்திற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. இச் சமரில் கடாபி நேரடியாக களமிறங்கி பெட்டியடித்த இராணுவத்தை சுற்றி தாம் ஒரு பெட்டி அடித்து பாரிய தாக்குதலை தொடுத்தார். (அதாவது இராணுவத்தை சுற்றிவளைத்தார்) இதனை சற்றும் எதிர்பார்க்காத இராணுவம் பல இழப்புக்களைச் சந்திக்க நேர்ந்தது.

நேரத்திலேயே இலங்கை இராணுவம் உலகப் போர் மரபுகளை மீறும் வண்ணம் ஒரு ஈனச் செயலில் ஈடு படத் துணிந்தது. எதிரியை சமாளிக்க முடியவில்லை என்றதும் பேடித்தனமான செயலை அரங்கேற்றத் நினைத்தது இராணுவம். உடனடியாக தனது இராணுவத்தை 2 கி.மீட்டர் பின்வாங்கச் சொல்லி கட்டளை பிறப்பித்தது. சமரில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் உடனே தமது நிலைகளில் இருந்து பின் வாங்கி சுமார் 3 கிலோ மீட்டர் பின் நகர்ந்தனர். அப்போது இராணுவம் இழப்புக்களை தாங்க முடியாமல் பின் வாங்குவது போன்ற தோற்றப்பாடே மேலோங்கி இருந்தது. இராணுவம் பின் வாங்கிய சிறிது நேரத்திலேயே அங்கே பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன, நச்சுவாயுக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும் அவ்விடத்தில் மழையாகப் பொழிந்தன. இத் தாக்குதலில் காயமுற்றிருந்த கேணல் தீபன் வீரச்சாவை தழுவ, நச்சுக் குண்டின் தாக்குதலில் தளபதி விதுசா, துர்க்கா ஆகியோர் வீரச்சாவடைந்தனர். கடாபியின் அணிமீது எரிகுண்டு வீழ்ந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதிநேரத்தில் 2 கால்களையும் அவர் இழந்ததாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இலட்சியத்தை வெல்லும் பணி”

ஏப்ரல் 8 இல் நடைபெறவுள்ள சிறி லங்கா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் தமது பரப்புரையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாக்காளப் பெருமக்களோ தேர்தல் தொடர்பில் அக்கறையின்றி இருந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழ் மக்களில் அரசியல் விழ்ப்புணர்வு அதிகம் மிக்கவர்கள் எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டு மக்களிடையே இத்தகையை அக்கறையின்மை அதிகமாக நிலவுகின்றமை இரட்டிப்புக் கவலையைத் தருகின்றது. * ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது, யாழ் குடாநாடே அதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதை மறைப்பதற்கில்லை. ஏனைய பிரதேசங்களில் ஆகர்சமிக்க தலைவர்கள் காலத்துக்குக் காலம் உருவாகிப் பங்களிப்பு நல்கியிருந்த போதிலும், காத்திரமான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும், தமிழர் அரசியலின் மையம் யாழ் குடாநாட்டிலேயே இருந்து வந்தது. தொடர்ந்தும்; இருந்து வருகின்றது. அத்தகைய யாழ் குடாநாட்டுத் தேர்தல் களம் இன்று கவனத்திற்கு உரிய ஒன்றாக மாறியுள்ள நிலையிலும், அங்கு வசிக்கும் வாக்காளப் பெருமக்கள் தேர்தலில் அக்கறையின்றி இருப்பதற்குப் பிரதான காரணம் எதுவாக இருக்க முடியும்? நாடாளுமன்ற முறைமைகளுக்கு ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கொள்வது முடியாதது என்ற புரிதலின் வெளிப்பாடாகவே ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. இந்த ஆயுதப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமைபெற்ற தேசம் எவ்வகையினதாக அமையும் என்ற மாதிரியைத் தமிழ் மக்களுக்குக் காண்பித்தது. அது மட்டுமன்றி நாடாளுமன்ற அரசியலுக்கு ஊடாக இது சாத்தியமற்றது என்ற நிதர்சனத்தையும் உறுதிப் படுத்தியது. 1977 இன் பின்னான எந்தவொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் உணர்வுடன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தேர்தல்களை அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபட்ட ஒரு தந்திரோபாயமாகவே கருதியிருந்தனர். * கடந்த மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் தலைமை துடைத்தழிக்கப்பட்ட பின்னர் தமிழர் அரசியலில் ஒரு வெறுமை பரவியுள்ளதை மறைப்பதற்கில்லை. அதன் வெளிப்பாடே மக்களின் இன்றைய தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மை. தமிழ் மக்களுக்கு முன்னரும் தேர்தல்களில் உண்மையான அக்கறை இருந்திருக்கவில்லை. ஆனால், அத்தேர்தல்களில் பங்கு கொண்டு வாக்களிப்பதும், வாக்களிக்காமல் தவிர்ப்பதும் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்ற புரிதல் அவர்களிடையே இருந்தது. தமிழ் மக்களின் தலைமை அரசியற் சக்தியாகத் திகழ்ந்த விடுதலைப் புலிகள் கூறியவாறு மக்கள் நடந்து கொண்டார்கள். அதாவது, தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு தந்திரோபாய நடவடிக்கையே என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்கள் தாமே என்று கூறிக் கொண்டு களத்தில் நிற்பவர்கள், தாம் தேர்தல்களைத் தந்திரோபாய ரீதியில் பயன்படுத்துவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி போன்றவற்றை வெற்றி கொள்ள எத்தகைய திட்டத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தெளிவு படுத்தவில்லை. இதுவே, மக்களின் தேர்தல் தொடர்பிலான அக்கறையின்மைக்குப் பிரதான காரணம். தேர்தல்களை ஒரு தந்திரோபாயமாக உயயோகிக்கின்றோம் என விடுதலைப் புலிகள் கூறிய பொழுது அவர்கள் சமாந்தரமாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கூற்றை நம்பி, ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயற்பட்டார்கள். இன்று தேர்தல் களத்தில் நிற்பவர்களுக்கு தெளிவான செயற்திட்டம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைளை வென்றெடுக்க என்ன வழி என்பது அவர்களுக்கே தெரியாத நிலையில், எந்த வழிமுறைகளுக்கு ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது என முன்னர் பரப்புரை செய்து, அதனை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்களோ, அதே வழிமுறைகளுக்கு ஊடாக தாம் தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போவதாக இன்று கூறும்போது மக்கள் அதனை நம்ப மறுப்பதில் வியப்பில்லை. எனவே, இன்று மக்களுக்கு இரண்டு விடயங்கள் புரிய வைக்கப்பட வேண்டும். * முதலாவது, நாங்கள் முன்னைய போராட்ட வடிவத்தை – அதாவது ஆயுதப் போரட்டம் சார்ந்த போராட்ட வடிவத்தை – முற்று முழுதாகக் கைவிட்டு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாகப் போராடி(?) தமிழ் மக்களின் ஜீவாதாரக் கோரிக்கைகளை வென்றெடுக்கப் போகின்றோம் என்பதை மக்களுக்குத் தெளிவாகக் கூறியாக வேண்டும். இதற்கு அடிப்படையாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்பட்டு, அந்த அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள யதார்த்தத்தை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்களின் இலட்சியத்துக்கான போரட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகளின் கைகளிலேயே உள்ளது என்ற யதார்த்தத்தை தமிழ் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். ஊடக அறிக்கைகளூடாகவோ, செவ்விகளூடாகவோ மாத்திரம் அதனைச் சாதித்துவிட முடியாது. மக்களின் காலடிக்குச் சென்று விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அளப்பரிய தியாகங்களைப் புரிந்ததன் பிற்பாடே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். எனவே, அவர்களுக்கு மாற்றீடாக அரசியல் நடத்த முன்வருபவர்களும் தமது நம்பகத் தன்மையை நிரூபித்தாக வேண்டும். அதற்குப் பின்னரே மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும். * இரண்டாவது விடயம். நாடாளுமன்ற மார்க்கமே தற்போது எம்முன்னே உள்ள ஒரேயொரு மார்க்கம் என்பதை மக்களுக்குப் புரியச் செய்வது இது மிகவும் கடினமான ஒரு செயன்முறையே ஆயினும் செய்யப்பட வேண்டிய ஒன்றே. இதற்கு முறையான நீண்டகாலச் செயற்திட்டம் ஒன்று அவசியம். அதிலே இலக்கு மாத்திரமன்றி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும், குறித்த வழிமுறைகள் பயனளிக்காதவிடத்து மேற்கொள்ளப்படக் கூடிய சாத்தியமான மாற்று வழிமுறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவை மக்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. மக்களின் எண்ணங்களை விடுதலைப் புலிகள் பிரதிநிதித்துவம் செய்துவந்து நிலையில் முன்னர் இவ் இடைவெளி பெரிதாகத் தெரியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் இந்த இடைவெளி தெளிவாகத் தெரிகின்றது. இந்நிலையில் மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான மக்கள் போராட்டங்களை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டும். தடுப்பு முகாம்களில் வாடுவோரின் விடுதலை, மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மற்றுமொரு இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலை, மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்தலும், மேம்படுத்தலும், உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம், சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொடரும் சிங்களக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயமாக்கல்களைத் தடுத்து நிறுத்துதல், சிதைக்கப்படும் தமிழர் நினைவுச் சின்னங்களைக் காப்பாற்றுதல், மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், தமிழ் மக்களின் கௌரவத்தைக் காப்பாற்றுதல் எனப் பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளன. 2006 ஆம் ஆண்டின் முற்பகுதியின் பின்னர் சிறி லங்காவில் எங்குமே தமிழ் அரசியல் கட்சிகளால் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடாத்தப்பட்டதாக நினைவில் இல்லை. இந்நிலையில் அரசியற் கட்சிகளிடம் இருந்து மக்கள் விலகியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இது மாத்திரமன்றி இன்று மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் கைக்கொண்ட அதே அணுகுமுறை காலத்துக்கு ஒவ்வாதது. பயன் தராதது. எனவே, புதிய அணுகுமுறை கையாளப்பட வேண்டும். அத்துடன் புதிய முகங்களும் அறிமுகப் படுத்தப்பட வேண்டும். மாற்றம் என்பது சடுதியாக நிகழும் ஒன்றல்ல. அது சூழலைப் பொறுத்து விரைவாகவோ அன்றி மெதுவாகவோ நிகழக் கூடும். எனினும் அதற்கு குறிப்பிட்ட காலம் அவசியம். * இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும். அதற்குத் தேவை சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலுமே.

அடிப்படை வசதியின்றி அல்லல்படும் தமிழ் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளை இழந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முதல் போரினால் பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்தவர்களுக்கு இதுவரை வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். புனர்வாழ்வு அமைச்சு முஸ்லீம் கிராமங்களில் புனரமைப்பு பணிகளையும் அபி;விருத்தி பணிகளையும் மேற்கொண்டு வருகின்ற போதிலும் தமிழ் கிராமங்கள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இவர்களை கவனிக்காது இருந்த ஆளும் கட்சியைச்சேர்ந்த அமைச்சர்கள் இத்தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இன்றி புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பல அரச சார்பற்ற நிறுவனங்களாலும் அரசினாலும் பல உதவித்திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டாலும் கூட எதுவித உதவிகளும் கிடைக்காத நிலையில் பல தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. தேசத்தை கட்டி எழுப்புவோம் மகிந்த சிந்தனை யாவருக்கும் குடியிருப்பு வசதி என்றெல்லாம் பல திட்டங்கள் இருந்தாலும் இந்த திட்டங்களினூடாக தமிழ் மக்கள் பயனடைவதில்லை.

துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. மாவீரர் துயிலிடங்கள், மாவீர்களின் நினைவுச் சின்னங்கள், நினைவுத் தூபிகள், தமிர்களின் வரலாற்றுச் சான்றுகள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளை அவற்றை இழிவுபடுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் சிங்களக் கைக்கூலிகளால் இடித்தழிக்கப்பட்டன. இந்த நிலையில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்புப் பகுதியில் தமிழின அழிப்பினை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மற்றும் அரசின் கைக்கூலியான ஈபிடிபியின் தலைவர் மற்றும் குழுவினரது விளம்பரங்கள் ஒட்டப்பட்டு மாவீரர்களை இழிவு படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது. உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது. இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. 1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு. இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார். இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது. பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி. யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது. முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன். இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. 18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது. இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம். அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.

ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார்.


எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.
எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது.

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வயதிலிருந்தே பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனுடைய ஆழ அகலங்களை, அது பூகோள அரசியலில் செலுத்தக்கூடிய தாக்கங்களை, அதனால் புதிய உலக ஒழுங்கில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆக்கபூர்வமான முறையில் ஆய்வு செய்திருக்கவில்லை அல்லது செய்துகொள்ளப்பட்;ட ஆய்வுக்கமைய தமிழ்த் தேசிய அரசியல் நகரவில்லை என்ற சிந்திப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததாகிறது.

 கடந்த மே 18 ற்குப் பின்னர் பூகோள அரசியலில் இலங்கைத் தீவு காட்டிவரும் வகிபாகம் இந்த சிந்திப்பிற்கான வலுப்படுத்தல் காரணி. இதனடிப்படையில், எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை ஆய்வுக்குட்படுத்துவோம். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த கவனச்செலுத்தியே சமகால பூகோள அரசியலில், இலங்கைத் தீவானது பேசுபொருளாக மாறியிருப்பதற்கான காரணமாகிறது. பூகோள அரசியலில், பல்வேறு சர்வதேச சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இது பலதுருவ அரசியல் பொருளாதாரப் போட்டிகளுக்கு கால்கோலாகிறது. ஆனால், எல்லா ஆதிக்க சக்திகளும் தாம் மட்டும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு மைய அரசியலையே விரும்புகின்றன. அதற்காகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இதனடிப்படையிலேயே குறிப்பிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. பல சர்வதேச சக்திகளின் ஒரு மையக் வெளியுறவுக் கொள்கை முட்டிமோதும் களமாக இலங்கைத் தீவு மாறியிருக்கிறது. இன்றைய நிலையானது இராஜபக்ஸ நிர்வாகத்துக்கு குறுங்காலத்துக்கு சாதகமானதாக இருக்காலம். ஆனால், இலங்கைத் தீவினுடைய எதிர்காலத்துக்கான ஒரு புதைகுழி தோண்டும் நடவடிக்கையாகவே அரங்கேறி வருகிறது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொருதரப்புமே தத்தமது தனிப்பட்ட தேசியநலனை கருத்திற்கொண்ட செயற்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேசிய நலன்களுக்கிடையில் ஒரு பொதுமையப் புள்ளி உருவாகவில்லை. ஆதலால், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவருகின்றன. இந்த முரண்பாடென்பது இலங்கைத் தீவில் யார் செல்வாக்கு செலுத்துவதென்பது என்பதில் ஆரம்பமடைகிறது. ஏனெனில், இலங்கத் தீவானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு தேசமாக திகழ்கிறது. ஆபிரிக்காவினதும், அவுஸ்ரேலியாவினதும் தென்முனையில் 10000 கிலோ மீற்றர் விசாலமானதாக இந்து சமுத்திரம் பரிணமித்திருக்கிறது.

 இந்த இந்து சமுத்திரமானது அந்தமான் கடல், ஆபிரிக்கக் கடல், வங்காள விரிகுடா, ப்புளோரஸ் கடல், பெரிய அவுஸ்ரேலிய வளைவு, எதேன் வளைகுடா, ஓமான் வளைகுடா, ஜவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பெர்ஸ்சியன் வளைகுடா, செங்கடல், சவுகடல், மலாக்க நீரிணை மற்றும் தீமோர் கடல் போன்றவற்றை உள்ளடக்கி பிரமாண்டமாக பரிணமித்திருக்கிறது. நாற்பத்து ஏழு நாடுகள் இந்து சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக அல்லது கடல் எல்லைகளாக கொண்டுள்ளன. எட்டு நாடுகளிற்கு உரித்துடைய பிரதானமான பன்னிரெண்டு துறைமுகங்களை இந்து சமுத்திரம் உள்ளடக்குகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு பிரதான கடலாக இந்து சமுத்திரம் திகழ்கிறது. ஜப்பானுடைய 80 சதவீத எண்ணையும், சீனாவினுடைய 60 சதவீத எண்ணையும் மலாக்க நீரிணையூடாவே விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை விநியோகம் குறித்த நீரிணையூடாக இடம்பெற்று வருகிறது. அண்ணளவாக 40 சதவீத எண்ணை வளமானது இந்து சமுத்திர கரைகளுக்கு அப்பாலிந்தே உற்பத்தியாகிறது. உலகில் இடம்பெறும் பெரும்போர்களுக்கு எண்ணை ஒரு பிரதான காரணமாக இருப்பதையும், இந்து சமுத்திரத்தில் மலாக்க நீரிணை இருப்பதையும் நினைவிற்கொள்க. இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மஹான் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவினுடைய கேந்திரமுக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிபுப் பெறுமதியடைகிறது.

சனி, 3 ஏப்ரல், 2010

அரசின் தேர்தல் களத்தில் விளையாட்டு வீரர்கள், நடிகர்கள்! - விக்ரமபாகு கருணாரட்ன

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின்றனர். நாவலப்பிட்டிப் பிரதேசம் இன்று மஹிந்தானந்த அலுத்தகமகேவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர், இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர். ஏகாதிபத்திய விரோத நடிப்புக்கள் இன்று மேடையேற்றப்படுகின்றன. தேசத்தின் பஞ்சாயத்து, குமார என வர்ணிக்கப்படும் விமல் வீரவன்சவின் ஆடையைக் களைந்தால், உள்ளே அமெரிக்க உள்ளாடை இருப்பதைக் காணலாம். தேர்தல் முடிந்தவுடன் மஹிந்த அரசாங்கம் சரணாகதி அரசியலுக்குச் சென்று விடும். இடதுசாரிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் நிலவியது. இன்று அது இல்லை. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று இந்திய ஆதிக்க சக்திகளின் சதிக்குள் சிக்கிக் கிடக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மீள முடியாதவாறு அதனுள் சிக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் கூட்டமைப்பில் இன்று சிதைவு ஏற்பட்டிருக்கின்றது. 40 வருட காலமாகத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிவரும் எமக்கு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல சகல தகுதியும் உண்டு" என்றார்.

புரோட்டான் கதிர்கள் சாதனை வேகத்தில் மோதல்

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள '‌பி‌க்-பே‌ங்' சோதனை சாலையில், உலகளவில் இதுவரை இல்லாத வகையில் புரோட்டான் கதிர்களை அதிவேகமாக விஞ்ஞானிகள் மோதச் செய்துள்ளனர். இதுவரை அதிவேகம் எனக் கருதப்பட்ட வேகத்தை விட இன்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 3 மடங்கு வேகமாக புரோட்டான் கதிர்கள் நேரெதிரே மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌பி‌‌க்-பே‌ங் ஆ‌ய்வு: சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் (ஒரு பில்லியன்=100 கோடி) ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌மோதலினால் ஏற்பட்ட பெருவெடிப்பின் விளைவாகவே ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க்-பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி அதில் உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது. இ‌ந்‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய போது உருவான அணு மோதலை செயற்கையாக உருவா‌க்‌கி, அத‌ன் மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 80க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த பல ஆயிரம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம், பொ‌றியாள‌ர்களு‌ம் பல ஆண்டுகளாக முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். சுமார் 5.95 பில்லியன் டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தற்போது 10 பில்லியன் டாலர் என்ற அளவை நெருங்கியுள்ளது. இந்த ஆய்வுக்காக ‌பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்து, அதில் பி‌ங்-பே‌ங் சோதனை‌யை கடந்த 2008 செப்டம்பரில் துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன் கதிர்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க விஞ்ஞானிகள் ‌திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தில் இன்று 7 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் அளவில் புரோட்டான் கதிர்களை மோதச் செய்தனர். முன்னதாக புரோட்டான் கதிர்களை மோதச் செய்யும் பணியில் கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகள் சில மணி நேரம் தவித்தனர். எனினும், கோளாறுகளை சீரமைத்து அடுத்த சில மணி நேரத்திலேயே மீண்டும் புரோட்டான் கதிர்களை அதிவேகத்தில் மோதச் செய்து விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008இல் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் 2.36 டிரில்லியன் எலக்ட்ரான் வோல்ட் வேகத்திலேயே புரோட்டான் கதிர்கள் மோதல் நடைபெற்றது

ஐ.நா மீது இலங்கை மீண்டும் குற்றச்சாட்டு

இலங்கையில் போர் முடிந்து 9 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஐ.நா வல்லுநர் குழு அமைக்கப்படுவதில் அவசரம் காட்டுவதாக இலங்கை மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. ஈராக்கில் பிரிட்டன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்வதற்காக 9 ஆண்டுகளின் பின்னரே விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இலங்கை விவகாரத்தில் மட்டும் 9 மாதங்களில் வல்லுநர் குழு அமைக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தேர்தல் நடக்க முன்னர் இந்த வல்லுநர் குழு அமைக்கப்பட இருப்பதும் தமக்குச் சந்தேகம் இருப்பதாக அரசு கூறுகிறது. தேர்தல் நடக்கவுள்ள இந்தநேரத்தில் இந்த வல்லுநர் குழு தேவையில்லை, ஐ.நா செயலாளர் பான் கி மூன் நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் ரோஹித கூறியுள்ளார். மேலும் இன்னொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதற்கான குழுவை அமைப்பதில் பான் கி மூன் பாதுகாப்புச் சபையிடம் அனுமதி பெறவேண்டும். எனவே பான் கி மூன் எமது நாட்டின் தேர்தலை மதிப்பதோடு, அதற்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டார் எனவும் தாம் நம்புவதாக ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

யுத்த காலத்தில் அனுபவித்தவற்றை நினைத்துப் பார்க்க விரும்பவில்லை

யுத்தத்தைப் பற்றியோ, நாங்கள் அனுபவித்தவற்றைப் பற்றியோ இப்போது நினைத்துப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. உண்மையில் அது மிகவும் மோசமாக இருந்தது. எனது பெற்றோரை இழந்துவிட்டேன். இதிலும் பார்க்க வேறொரு மோசமான விடயம் இருக்குமென நான் நினைக்கவில்லை என்று ராகவன் சின்னத்துரை (15 வயது) என்ற மாணவன் கூறியுள்ளார். யுத்தத்தின் போது இந்த மாணவன் கிளிநொச்சியில் வசித்தார். 2008 இல் அவரும் குடும்பத்தினரும் இடம்பெயர்ந்து சென்றனர். இப்போது கிளிநொச்சிக்குத் திரும்பியிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்த மாணவனும் ஒருவராகும். “2008 அக்டோபர் மாதமானது எனது வாழ்க்கையில் மோசமான காலமாகும். அந்த மாதமே எனது வாழ்க்கை மாறியது. பலருடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அக்டோபர், டிசம்பருக்கிடையில் உக்கிரமான சண்டை இடம்பெற்றது. ஷெல் தாக்குதலால் மக்கள் மரணமடைந்தனர். யாரைக் குற்றம் சாட்டுவதென எனக்குத் தெரியாது. எவரையும் இப்போது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதுவொரு மனவருத்தமான காலமாகும். அடுத்த வருடம் பரீட்சை எழுதப்போகிறேன். இப்போது எனது மூத்த சகோதரனுடன் கிளிநொச்சியில் இருக்கிறேன். அவர் இருப்பதால் நான் அதிர்ஷ்டசாலி. நல்ல கல்வியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். சிறப்பான எதிர்காலத்துக்காக முயற்சிக்கிறேன். பாடசாலைக்குப் போகவுள்ளேன். சிலவேளை துன்பமான நினைவுகளுடன் இருப்பது கஷ்டமானதாகும். பாடசாலையில் அதிகமானவற்றை நான் இழந்துவிட்டேன். உண்மையில் அதுவொரு கெட்டகாலமாகும். இப்போது எங்களுக்கு இருக்கும் பாரிய பிரச்சினை வீட்டுப் பிரச்சினையாகும். அதுவே எமக்கு முக்கியான தேவையாக உள்ளது. வீட்டு வசதி சிறப்பாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் இருந்ததிலும் பார்க்க சிறப்பான நிலையிலிருக்கின்றோம் என்றாலும் எமக்கு அதிகளவு உதவி தேவைப்படுகிறது. எனது பெற்றோரை இழந்து விட்டேன். ஆனால், தினமும் அவர்களைப் பற்றி நினைப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும். இந்த நினைவுகளிலிருந்து நாம் விடுபட்டு அப்பால் செல்ல வேண்டும் என்று எனது சகோதரர் கூறுகிறார். அதனை நான் செய்வேன் என்று அந்த மாணவன் ஐ.ஆர்.ஐ.என்.னுக்கு கூறியுள்ளார்.

நமது தேசிய தலைவர் வரலாறு என் வழிகாட்டி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அவரின் அடிப்படை தத்துவங்களில் இதுதான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இயற்கையை தோழனாக பார்த்தார். வரலாற்றை வழிகாட்டியாக துணை கொண்டார். எந்த ஒரு நிகழ்கால நடவடிக்கையும் கடந்த காலத்தின் நிகழ்வுகளிலிருந்து கற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை சரியான வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இழப்புகள் என்பது கால சுழற்சியின் கட்டாயம். எதையுமே இழக்காமல், எதையுமே பெற முடியாது. ஒன்றை இழப்பதின் மூலம்தான் மற்றொன்றை பெற முடியும். ஆகவே, இழப்பு என்பது நம்மை அச்சமூட்டுவதற்குப் பதிலாக, நம்மை அது வழிநடத்த வேண்டும். அதிலிருந்து கற்றப் பாடத்தை நாம் உள்வாங்கிக் கொண்டு, நமது நகர்வை மீண்டும் துள்ளியமாக தீர்மானமாக சிதைவு ஏற்படாமல் எச்சரிக்கையோடு, ஆனால், கொண்ட இலக்கை அடைவதற்கு பயன்படுத்தவேண்டும். ஆகவே நாம், வறண்ட காலத்தில் இருக்கிறோம் என்கிற மனப்போக்கிலிருந்து மாறி, நாம் வசந்த காலத்தை நோக்கி பயணிக்கிறோம் என்கின்ற உளவியல் கோட்பாட்டை இந்த நேரத்தில் தமிழ் உறவுகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்று ஒன்று இருந்தும்கூட நாம், இந்தியாவின் காலணியாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதால், தமிழர்களின் உரிமை குறித்து பேசுவது, தமிழரின் வாழ்வை நேசிப்பது, தமிழர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திப் பிடிப்பது, இந்திய ஏகாதிபத்திய சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. அது, நமது நாட்டை துண்டாடுவதற்கான ஒரு செயல் என்று பேசுவதோடு, பிரிவினைவாதம் என்கின்ற ஒரு வார்த்தையை தேசியவாதிகள் தவளையைப் போல் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். தேசியங்கள் என்பது ஒரு தேசிய இனத்தை ஒடுக்குவதிலிருந்து துவங்குவது கிடையாது. மாறாக, அது வேறொரு தேசிய இனத்தை உயர்த்திப் பிடிப்பதிலிருந்தே உயர்வு பெறுகிறது. ஒரு தேசிய அடையாளத்தின் தன்மையை அதன் இறையாண்மையை ஒடுக்கிவிட்டு, பொதுவான ஒரு தேசிய அடையாளத்தை அறையலாம் என்று நினைப்பது அடக்குமுறை மட்டுமல்ல, அது அரசியல் ரீதியாக ஒரு எழுச்சியை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திலிருந்து உண்டாக்கும் என்பதை வரலாறு பலமுறை நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. வரலாற்றின் வழிகாட்டுதல் படியே நமது போராட்ட வாழ்வும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நாம் கூர்ந்து பார்க்கும்போது, தமிழீழத்தின் உறுதியான செயல்பாடு நிச்சயமாகிவிட்டது. தமிழீழ அரசு அமைவதை உலக ஆதிக்கத்தாலோ, அல்லது நடைமுறை அடக்குமுறையாலோ அணைத்துப் போட முடியாது என்பதே உண்மை. கடந்தகால போர் நிறுத்தப்பட்டதற்கு நமக்கு வரலாறு காட்டிய வழிதான் காரணம். தம்மை சுற்றி எதிரிகள் ஒரேநேரத்தில் சூழ்ந்திருக்கும்போது, அவர்களை ஒரேநேரத்தில் எதிர்த்துப் போரிடுவதென்பது முட்டாள் தனம் மட்டுமல்ல, அது மீண்டும் நம்மை அடிமை தனத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை நமது தேசிய தலைமை உணர்ந்திருந்த காரணத்தால், அந்த போரை தவிர்த்தார். ஒருமுறை வியட்நாமிய அதிபர் கொரில்லா யுத்தத்தில் வழிகாட்டியான தோழர் ஹோ சி மின்னிடம் சகத்தோழர் ஒருவர் மிகக் கடுமையாக கேள்வி ஒன்றை முன் நிறுத்தினார். எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் இந்த கொள்ளைக்காரர்களை பொறுத்துக் கொண்டிருப்பது? நீங்கள் உத்தரவிடுங்கள் தோழர். அவர்களை நாங்கள் முற்றாக அழித்துவிடுகிறோம் என்றபோது, ஹோ சி மின் ஒரு புன்னகை சிந்தினார். பின்னர் அவர் கீழ்க்கண்டவாறு அந்த தோழருக்கு பதிலுரைத்தார். இந்த அறையினுள் எலி ஒன்று நுழைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அதன்மீது கல் எறிவீர்களா? அல்லது அதை பிடிக்க முயற்சி செய்வீர்களா? என்று கேட்டார். அந்த தோழர் அறைக்குள் கல்லெறிவது முட்டாள்தனம் என்றார். அதற்கு தோழர் ஹோ சி மின் சொன்னார், அரசியலிலும் அப்படிதான். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருசிறு துரும்பை அசைத்தால் ஒரு காடே அதிரும் என்றார். இன்று தமிழீழத்திற்குள் புகுந்துவிட்ட சிங்கள எலிகளைக்கூட நாம் கருவி கொண்டு துரத்தி அடிக்க முடியும். ஆனால் அதை பிடிப்பதற்கான காலத்தையே நமது தேசிய தலைமை முடிவு செய்திருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு நமது தேசிய தலைவரின் நடைமுறை வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. நமது தேசிய தலைவரின் முடிவெடுப்புத் திறன் எவ்வளவு தொலைநோக்கோடு இருந்திருக்கிறது என்பதை கடந்தகால போர் நிறுத்தத்தில் அவர்கள் செய்த நடைமுறை செயல்களிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை உணர்ச்சி வசப்பட்டு, நமது தேசியப்படை தமிழீழத்தைத் தவிர்த்து, சிங்கள மக்களின்மீது தாக்குதல் நடத்தியிருக்குமேயானால், இன்று உலகளவில் தமிழீழத்திற்கு கிடைத்துவரும் ஆதரவுக்கு சிதைவு ஏற்பட்டிருக்கும். இன்று உலக நாடுகள் அங்கே நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்கின்றன. நடைபெற்றது இன விடுதலைக்கான போராட்டம் என்று அறியத் தொடங்கி இருக்கின்றன. நமது தேசிய தலைவரின் அரசியல் முதிர்ச்சி, சரியான திட்டமிடல், இந்தகால அரசியலின் தேவையை இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகிறது. தமிழீழ மக்கள் விடுதலையோடு வாழ்வதற்காக தம்மை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். உடல் மற்றும் உளவியல் ரீதியாக அவர்கள் இன்று ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக தமது உயிரையும் உடமைகளையும் இழப்பதற்கு மிகவும் விருப்பத்தோடு களம் கண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வு ஏற்பட அல்லது இந்த உணர்வு ஏற்பட ஒரேஒரு காரணம்தான் இருக்கிறது, அது போர்க்களத்திலே தேசிய தலைவர் எடுத்த அரசியல் முடிவுதான். அந்த முடிவே இன்று உலகத்தை ஒன்றிணைத்திருக்கிறது. சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான அணிச்சேர்ப்பை உறுதி செய்திருக்கிறது. எந்த நிலையிலும் தமிழீழம் வீழ்ந்து விடாமல் இருக்க, அந்த நகர்வே நமக்கு துணைபுரிந்தது. தோழர் லெனின் அடிக்கடி ஒரு வார்த்தையைச் சொல்லுவார். ஆயுத எழுச்சி என்பது ஒரு கலை என. ஆகவே, அந்த கலையை கையாளும் விதத்தை நம் தேசிய தலைவர் நன்கு அறிந்திருந்தார். தேவை ஏற்பட்டபோது அந்த கலையை அவர் சிறப்பாக பயன்படுத்தினார். தேவை இல்லாதபோது அதை மிக நேர்த்தியாக நிறுத்தி வைத்தார். காரணம், அவசரம் காட்டுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ ஆயுதக்கலை என்பது சாதாரணமானது கிடையாது. காரணம் அதில் எவ்வளவு வெற்றி கிட்டுமோ அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை மிக சரியாக தேசிய தலைவர் வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டதால் தமது மக்களைவிட மேலானது ஒன்றுமில்லை. வெறும் கௌரவத்திற்காக தமது மக்களை இழக்க தயாராக இல்லை என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். ஆயுத எழுச்சிக்கான சூழல் மீண்டுமாய் ஏற்பட வேண்டுமென்றால் அது தேசிய ராணுவத்தை கடந்து, மக்கள் ராணுவமாக மாற்றப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்பதை பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. ஆகவே, இப்போது நாம் கருவி களத்திலிருந்து சற்று திரும்பி, அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றோம். உலகெங்கும் நமது அரசியல் தன்மைகளை நிலைநிறுத்த, நமது அரசியல் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, தமிழ் தேசிய அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தனக்கான விடுதலையை நாம் பெற்றுக் கொள்வதற்கு வெறும் சாதாரண போர் முறைகளோடு நமது போராட்டம் நின்றுவிடக் கூடாது. அதைக்கடந்து மக்கள் எழுச்சியை உண்டாக்க வேண்டும். நாடு தழுவிய கிளர்ச்சியை செய்வதற்கு சரியான பரப்புரை கட்டமைப்புகளை நாம் படைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒரு சிறிய நாடு, குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு தேசிய இனம், பலம் பொருந்திய ராணுவத்தை எதிர்த்து வெற்றியடைய முடியும் என்பதை நமது தேசிய தலைமை சரியாக அறிந்த காரணத்தினால் இப்பொழுது தமிழீழத்தை சர்வதேச அளவில் அமைப்பதற்கான திட்டமிடல் மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த நடைமுறை செயல்களின் மூலமே தமிழீழ குடியரசிற்கான சாத்தியங்கள் மேலும் அதிகரிக்க முடியும். நமக்கான விடுதலை என்பது, தானாக நிகழப் போவதில்லை. அதை போராடித்தான் பெறவேண்டும் என்பதை நமது உறவுகள் உணர வேண்டும். எந்த நிலையிலும் போராட்டம் இல்லாத வெற்றி நிலைப்பது கிடையாது. நாம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் கிடைத்த படிப்பினைகளை வருங்கால போராட்டத்திற்கு செம்மையாக பயன்படுத்த வேண்டும். நமக்கான விடுதலைக்கு நாம் போராடுவதற்கு மனரீதியாக நாம் பக்குவப்பட வேண்டும். எமது தாய்நாடு எந்த நிலையிலும், வேறொருவன் கையில் அடிமையாக இருப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்கின்ற உணர்வு, தமிழ் உறவுகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். இந்த மனநிலையோடு நாம் களத்திற்கு வரும்போது, நமது வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். இரத்தக் கரை படிந்த இனவெறியர்கள் நம்மைப் பார்த்து கோரை பற்களில் வழியும் குருதி கரையோடு சிரிக்கலாம். நமது இன ஒடுக்குமுறைக்கெதிரான சமருக்கு துரோகம் செய்த தமிழ் உறவுகளே நம்மைப் பார்த்து நகைக்கலாம். ஆனாலும் அதையும்தாண்டி நமது வெற்றி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது வெற்றியின் தொடக்கம் பக்கத்தில் வந்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ஐந்து அடிப்படை கட்டமைப்புகளை. ஒன்று, நமது தேசிய அளவிலான ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பை முன்னிருத்துவது. இரண்டு, கடந்த காலத்தில் கடும் துயருக்கு உள்ளான நமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. மூன்று, நமக்கான விடுதலையை வென்றெடுக்க நாமே மக்கள் குழுவை உருவாக்க, தேசிய தலைமையோடு இணக்கம் காட்டுவது. நான்கு, உலக நாடுகளில் உள்ள மக்களோடு இணைந்து நமது அடிமையின் நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் போராட்டத் தளத்தில்தான் இதுவரை நாம் செயல்பட்டோம் என்பதை வலியுறுத்துவது. அவர்களை நமது களத்திற்கு துணைக்கு அழைப்பது. ஐந்து, தேசிய தலைமையின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்று அதன்படி நடப்பது. இவைகளின் மூலம் நமது வெற்றியை நம்மால் உறுதியாக தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது நமது கட்டாய கடமை. இதைநாம் மறக்கக்கூடாது. இது நமது தேசிய தலைவரின் தத்துவத்திலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள்.

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை: இதயச்சந்திரன்

இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், கொள்கைகளைக் கைவிட்டு கீழிறங்கிச் செல்வது தற்காலத்தில் சாதகம் போன்று தென்பட்டாலும், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனச்சுட்டிக்காட்டினார். "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஒருபோதும் கீழிறங்கிச் சென்றிருக்கவில்லை எனவும், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசத்தைக்கொண்ட தேசிய இனம் என்ற அடிப்படையில் இருந்து பேச்சுக்கள் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவும், மகிந்த அரசாங்கமும் கூட்டுத்திட்டம் தீட்டியிருப்பதாகத் தெரிவித்த ஆய்வாளர் இதயச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்திற்குள் முடக்கி, அவர்களின் பேரம்பேசும் திறனை மழுங்கடிப்பதே இந்தியாவின் நோக்கம் எனவும், வட மாகாணத் தேர்தல் நடந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் போட்டியிடுமா? என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டும் ஒன்றுபோல் காணப்பட்டாலும், அவை வேறான விடயங்களைக் கூறுவதாகவும், மாவீரர்கள், பொதுமக்களின் இழப்புக்களின் பின்னால் தமிழ் மக்கள் அடிபணிவு அரசியலுக்குள் சென்று விட்டார்களா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த அவர், சமஸ்டிக்காக இவ்வளவு உயிர்களும் இழக்கப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை முன்வைத்தும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய இதயச்சந்திரன், இரண்டு தேர்தல் அறிக்கைகளையும் விரிவாக விளக்கிக் கூறினார். சிங்கள தேசத்தின் இறைமையைப் பகிர்வதைப் பற்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிப்பதாகவும், ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனம் தமிழ் மக்களிற்கு தனியான இறைமை இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனையே வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், போராட முடியாதவர்களே அடிபணிவு அரசியலை மேற்கொள்ள முனைவர் எனவும் தெரிவித்தார். தனிநபர் வசைபாடல்கள் இடம்பெறுவது ஆரோக்கியம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் இதயச்சந்திரன், இதனை பிரதேசவாதமாகத் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறியதுடன், திருகோணமலையின் ஒரு பகுதியை அநுராதபுரத்துடன் இணைத்துவிடும் திட்டம் அரசுக்கு இருப்பதால், திருகோணமலையில் ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010


மக்கள் வீதியில் விடப்பட்டனர்

மகிந்தவின் வருகைக்கென வலுக்கட்டாயமாக ஏற்றிச்செல்லப்பட்ட வன்னி மக்கள் தெருவில் விடப்பட்டுள்ளனர்.மகிந்தராஜபக்ச கலந்துகொண்ட தேர்தல் பரப்புரை நிகழ்வு நேற்றுவவுனியாவில் நடைபெற்றிருந்தது.

நிகழ்விற்காக வன்னியில் மீள் குடியேறியுள்ள மக்களில்முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மன்றும் வவுனியாவடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் பங்குகொள்ள வேண்டும் என்றுஅடிக்கும் பாணியில் மிரட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒவ்வொருவர்பேருந்துகளில் ஏற்றப்பட்டுள்ளனர்.

அச்சம் காரணமாக மக்கள் பேருந்துகளில் ஏறிச் சென்றுள்ளனர்நிகழ்விடத்தில் மக்களைஇறக்கிய பேருந்துகள் சென்றுள்ளனமக்கள் நிகழ்வு நிறைவு பெற்றதும் தமதுஊர்களுக்குச் செல்வதற்காக ஏற்பாட்டாளர்களை அணுகி தமது போக்குவரத்துக்கு வழிசெய்யும்படி கேட்டிருக்கின்றனர்.

ஏற்பாட்டாளர்கள் கைவிரித்துள்ளனர்சம்பவத்தை அடுத்து மக்கள் நேற்று உணவேதும்இன்றி தெருவோரங்களிலும்பேருந்து நிலையங்களிலுமே தமது இரவைக்கழித்துள்ளனர்.

இன்று காலை மக்களில் பலர் தமது பகுதிகள்குச் செல்வதற்கு பணம் ஏதும் இன்றிச்சிரமப்பட்டதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றனமக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் எதுவித வருமானமும் இன்றியேவாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இம்முறை மிகக்குறைந்தளவு மக்களே யாழ்ப்பாண மாவட்டத்தில்நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்டிருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது