புதன், 28 ஏப்ரல், 2010

பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்.....

தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? ‘பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!’ என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் ‘அலைகள்’ இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியதுடன், அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார். வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம். சி.செ.துரை என்பவர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்…. டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா? ‘‘நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.’’ மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘‘ ‘அலைகள்’ பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட் டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன். விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..’’ தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா? ‘‘இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவ ருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.’’ ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா? ‘‘பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். எனது தந்தை தாயகம் சென்ற பின் தந்தையார் மூலமாகத்தான் அனைவரது சுகங்களையும் நான் அறிந்து வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு போர் உச்சகட்டமடைந்தபோது, எனது தந்தை கடைசியாக என்னுடன் பேசினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை.’’ முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சார்லஸ் இறந்தார் என்ற செய்தியை பிரபாகரன் மற்ற தளபதிகளிடம் ‘என் மகனையும், மகளையும் நாட்டுக்காக விதைத்து விட்டேன்’ என்று கூறியதாக சிலர் எழுதினார்கள். அது பற்றி பிரபாகரன் உங்களிடம் ஏதாவது கூறினாரா? அல்லது மற்ற தளபதிகள் மூலமாகவாவது தெரிவித்தாரா? ‘‘இப்படியொரு தகவலைக் கூறியவர்கள் எல்லோருமே இடையில் இருந்தவர்கள்தான். இது, இவர்கள் மூலம் பிரபாகரனால் சொல்லப்படக்கூடிய செய்தியா என்று நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். தனது பிள்ளைகள் தேர்வில் சித்தியடைந்த (வெற்றியடைந்த) தகவலை இதற்குமுன் ஒருமுறை என்னிடம் தெரிவித்த பிரபாகரன், அந்தத் தகவலைக் கூட இவர்களை வைத்தே சொல்லியிருப்பாரே..? சரி! பிரபாகரன் இதுபற்றிக் கூறாவிட்டாலும் என் தந்தையாவது அதை ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருப்பார். எனது குடும்பத்தினர் ஒருவருடைய குரலில் இருந்தும் சார்லஸ் இறந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் எனக்கு வரவில்லை. அதனால்தான் மர்மம் இருக்கிறது என்றேன்.’’ முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகு பிரபாகரனின் உடலென்று ஓர் உடலைக் காட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மூத்தவர், அண்ணன் என்கிற முறையில் ஏன் அவரது உடலை முறைப்படி நீங்கள் கௌரவத்துடன் பெற்று மரியாதை செய்ய முன்வரவில்லை? இந்தக் கேள்வி அனைவருக்கும் இருக்கிறதே? ‘‘இதற்குப் பதில் தர சிறிது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தனது உயிர் மட்டுமல்ல, உடலும் கிடைக்கக் கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பிரபாகரன். அப்படிப்பட்டவருடைய உடல் என்று ஒன்று காண்பிக்கப்பட்டபோது நான் பலமாக யோசித்தேன். அது என்னுடைய தம்பியின் உடல்தான் என்பதை உறுதி செய்யக்கூடியவர் எனது தந்தைதான். அவர்தான் தம்பியுடன் கடைசி நேரம் வரை அங்கே இருந்தவர். அவரை அழைத்து வந்து அதைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டியதுதானே மரபு? அப்படி ஏன் செய்யவில்லை என்று எமக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இருந்து பேசுவதாகக் கூறி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், அந்த உடலுக்கு உரிமை கோரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கே.பி. என்பவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, ‘கே.பி கூறுவதை நம்புவதா? அல்லது நீங்கள் கூறுவதை நம்புவதா?’ என்று நான் அவர்களைக் கேட்டேன். மேலும், அன்றைய நிலையில் சிறீலங்கா செல்வது பாதுகாப்பு சிக்கல் கொண்ட விடயமாக இருந்தது. நாம் அங்குபோன பின் தவறான ஓர் உடலத்தைக் காண்பித்து உறுதி செய்யும்படி வற்புறுத்தினால் நாம் மறுத்து விட்டுத் திரும்ப வழியிருக்குமா? என்பதையும் சிந்தித்தேன். இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நமது நிலைப் பாட்டின் நியாயத்தன்மை உங்களுக்குப் புரியும்.’’ உங்கள் தம்பி பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தீர்கள்? மீண்டும் சந்திப்போம் என்று அப்போது ஏதும் நினைத்தீர்களா? நினைக்கின்றீர்களா? ‘‘இந்தக் கேள்விக்கு ஜோதிடம்தான் பதிலாக வருகிறது. ‘பிரபாகரனுடைய பிற்கால வாழ்வு நேதாஜியின் வாழ்வு போல மர்மமாக இருக்கும்’ என்று கூறியிருந்த ஜோதிடர் ஒருவர், ‘எனது ராசிக்கும் பிரபாகரனின் ராசிக்குமிடையே உள்ள நிலை காரணமாக இருவரும் சந்திப்பது சாத்தியமில்லை’ என்றும் கூறியிருந்தார். பிரபாகரனை ஈழத்தில் உள்ள ஒரு வீட்டில் கடைசியாக 1979-ம் ஆண்டு தற்செயலாக அங்கு சென்றபோது சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். பேசவில் லை. அவர் வந்ததும் நான் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன். பின்னர் சென்னைக்கு நானும் எனது தந்தையும் ஒருமுறை சென்றபோது, தம்பி அங்கு நிற்பதாகவும் (இருப்பதாகவும்) பார்க்கப் போகும்படியும் எனது தந்தை கூறினார். சேலத்தில் இருக்கும் எனது மனைவி இரண்டொரு நாளில் வந்தபின் அவருடன் சேர்ந்து சென்று தம்பி யைப் பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் ஒருமுறை (1987-ல்) தம்பியை இருவரும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவர் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.’’ பிரபாகரனின் இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறதே. அடுத்த தலைவர் இவர்தான் என்று வேறு யாரையும் அவர் அடையாளம் காட்டாமல் விட்டிருப்பது பெரும் குழப்பமாக அல்லவா இருக்கிறது? ‘‘இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கென ஒரு நியதி இருக்கிறது. இவருக்குப் பின் இவர்தான் என்று யாரையும் அதில் நியமிப்பதில்லை. ஒரு போராளியின் இடம் வெற்றிடமானால், அவரது இடத்துக்கு இன்னொரு போராளி வருவார். எல்லா போராளிகளுடைய வெற்றிடங்களையும் காலமும், செயற்பாடும் நிரப்பிச் சென்றுள்ளன. ஒவ் வொரு வெற்றிடமும் காலத்தால் சரியாகவே நிரப்பப்பட்டுள்ளன. இதில் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்களின் கையில் கொடுப்பதாக தம்பி தெரிவித்துள்ளார். அங்கும் அவர் மக்களையே அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.’’ ‘தலைவர் இறக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கின்றார்’ என்று முதலில் கூறிய கே.பி., பிறகு, ‘அவர் வீர மரணம் அடைந்து விட்டார்’ என்று கூறினார். ‘இப்படியொரு இரண்டுங் கெட்டான் பதிலை பிரபாகரன் தன் வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது’ என்று நீங்கள் இணையத்திற்குத் தெரிவித்திருந்தீர்கள். அப்படியென்றால்…? ‘‘உறைந்த மௌனத்தால் தம்பி ஏதோ ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளார் என்பதுதான் பதில். மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இரு ப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை என்றுமே கொடுத்தது கிடையாது. இப்போது அவர் மௌனமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.’’ தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்ததில் ‘இயற்கையானது’ என சிங்கள அரசு சொன்னது. ஆனால் நீங்கள் ‘மர்மம் இருப்பதாக’ கூறியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள்….? ‘‘தந்தையார் இறந்த செய்தியை எமக்கு அறிவிக்காமலே அவரது உடலை அடக்கம் செய்திருந்தால் இப்போது அவரையும் நாம் தேடிக் கொண்டுதானிருப்போம். அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. என் தந்தை இறப்பதற்கு முன் அவரை சந்தித்தவரென யாருமில்லை. அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்பது பல மாதங்களாகத் தெரியவில்லை. ஆனால், அவர் இறந்தது மட்டும் தெரிந்தது என்றால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந் தது என்ற கேள்வி இயல்பாகவே வரும். எனது தந்தை கொண்டு செல்லப்பட்ட பின் அவருடைய குரலில் இருந்து ஒரு வார்த்தைகூட எமக்குக் கிடைக்காத நிலையில், அந்த மரணத்தை மர்மமற்ற இயற்கை மரணமென வர்ணிப்பதை ஏற்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.’’ தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மக்கள் என அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சொல்லியாயிற்று. தந்தையின் மரணம்.. அலைக்கழிப்போடு தாய் ஓரிடம்…. இப்படி எல்லாமும் உங்கள் மனதை எப்படி வதைத்திருக்கிறது? என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்? ‘‘வாழ்வில் இதைவிட சுமப்பதற்கு பெரிய சுமை என்ன இருக்கப் போகிறது? அதைத்தான் சுமந்து கொண்டு வாழ்கிறேன். அந்தச் சோகத்தை தமிழ்ப்படுத்திக் கூற என்னால் முடியவில்லை.’’ பிரபாகரன் பெரிய தேசியத் தலைவராக அதிகாரத்தில் இருந்தபோதுகூட, அந்த அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி ஒதுங்கி எளிமையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதுபற்றி தலைவர் எப்போதாவது உங்களிடம் கேட்டதுண்டா? ஏன் இப்படி என்று வருத்தப்பட்டதுண்டா? ‘‘என்றுமே கேட்டதில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது, தம்பியுடன் தொடர்புகொள்வதெல்லாம் நமது சொந்த முடிவுகளே..’’ ‘என் தம்பி நேதாஜியை நேசித்தார். அவரைப் போலவே தூய்மையாக வாழ்ந்தார். நேதாஜியின் பிற்பகுதி வாழ்க்கைத் தோற்றத்தைப் போலவே கடந்த ஓராண்டு காலத்தை வைத்திருக்கிறார்… அதிலும் ஒரு போராட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அர்த்தம்…? ‘‘நேதாஜியின் போராட்டம் முடிந்ததாக இன்று வரை யாருமே கூறியதில்லை. காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தாலும், அந்தப் போராட்டத்தை அருவமாக நின்று நகர்த்தியது நேதாஜியின் போராட்ட சக்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல பிரபாகரன் 30 ஆண்டுகளாக நடாத்திய போராட்டமும் வெறும் பயங்கரவாத முத் திரையால் முடிவு கட்டப்பட முடியாத போராட்டமாகும். தமிழினத்தின் விடிவை முப்பதாண்டு காலமாக மின்னல் வேகத்தில் நகர்த்தியவர் அவர்தான். இனி எது நடந்தாலும் அது தம்பியின் தாக்கமில்லாமல் நடக்க முடியாதளவிற்கு முத்திரை பதித்துள்ளார். தமிழினத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்ற பந்தை அவர் சுவர் மீது அடித்தார். இப்போது அந்தப் பந்து புது விசையுடன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பிரபாகரன் சுதந் திரத்தின் வடிவம், பிரபாகரன் மீதான தேடல் சுதந்திரத்தின் மீதான தேடலே என்பதுதான் அதன் அர்த்தம். நேதாஜியைத் தேடியவர்கள் இறுதியில் கண்டது சுதந்திரம் எ ன்பதுபோல இந்தத் தேடலும் விடிவினைத் தரும். அப்போது நேதாஜி போல பிரபாகரனும் சுதந்திர சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார். இந்தியா சுதந்திரம் பெற்றது போல தமிழினமும் ஒருநாள் சுதந்திரம் பெறும்.’’ ‘பிரபாகரனது பிற்பகுதி வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாரும் அவரைக் காண இயலாது. அவர் எங்கே இருக்கின்றார் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் ஆரம்பகாலத்தில் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்’ என அலைகளுக்குத் தெரிவித்துள்ளீர்கள். அதுபற்றி விளக்கமாக பதில் தர இயலுமா? ‘‘‘நானும் தம்பியும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாது’ என்று கூறிய ஜோதிடர்தான் ‘பிரபாகரனை பிற்காலத்தில் யாருமே காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். ‘அவரை எல்லோரும் தேடுவார்கள் ஆனால் காண முடியாது’ என்றும் தெரிவித்திருந்தார். இது எப்போதோ பார்த்த ஜோதிடம், இப்போது நினைத்தால் பொருந்தி வருகிறது. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.’’ தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு இயக்கத் தலைவர்கள் பற்றி உங்களுடைய கருத்து? அவர்களில் யார் யார் உங்களுடன் பேசுவார்கள்? தமிழகத்தில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது….? ‘‘நான் ஆரம்பத்திலேயே சொல்லியது போல அரசியல் தலைவர்களுடன் நான் தொடர்பு கொள்வதில்லை. பழ. நெடுமாறன் ஒருவருடன் மட்டுமே எனக்குத் தொடர்பி ருக்கிறது. ஆகவே, என்னிடம் தலைவர்கள் பற்றிய யாதொரு கருத்தும் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பிரபாகரன் நேசித்ததும், தமிழக இளைஞர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரனாக பிரபாகரனை நேசித்ததும் வரலாற்றில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? தமிழக இளைஞர்களுக்கு எங்கள் அன்பையும், நன்றியையும் குமுதம் ரிப்போர்ட் டர் மூலமாகச் சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.’’

நல்லூர் வளாகத்தில் சங்கிலியன் மன்னனின் நிலத்தில் நட்சத்திர விடுதி

இந்துக்கள் புனிதமாகப் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில், யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலயனின் நினைவாகவுள்ள காணியில் 80 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதியொன்றை 400 மில்லியன் ரூபா செலவில் அமைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு யாழ் வர்த்தகர் சங்கமும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதிலும், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும் அரசிற்கு வழமைபோன்று துணைபோவதுடன், அதன் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி சங்கதிக்குக் கருத்துரைத்த யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதியொருவர், நல்லூர் புனித தலத்தில், அதுவும் சங்கிலி மன்னனுக்குச் சொந்தமான நிலத்திலும் இவ்வாறான நட்சத்திர விடுதி கட்டப்பட இருப்பதை தாம் எதிர்ப்பதுடன், வாழ்வாதார மற்றும் பொருண்மியப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள யாழ் மக்களுக்கு 400 மில்லியன் ரூபா செலவில் விடுதி தேவையில்லை எனவும் கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மொத்தம் 150 அறைகள் மட்டுமே தற்பொழுது இருப்பதால், தென்னிலங்கை சிங்கள மக்களிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விடுதியை அமைத்து, அதன் மூலம் இலாபம் பெற சிறீலங்கா அரசு முனைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள, துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும், இந்த விடுதி நல்லூர் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துரைத்த யோகேஸ்வரி, குறிப்பிட்ட விடுதியை தமது அரசு சங்கிலியன் மன்னனின் காணியில் கட்ட முனையவில்லை எனவும், போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து தனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே கட்டப்பட இருப்பதாகவும் வியாக்கியானம் அளித்துள்ளார். தமது அரசின் இந்தத் திட்டம் பற்றி உள்ளுர் தலைவர்களுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாள் பேச்சு நடத்தப்படும் எனவும் யோகேஸ்வரி மேலும் கூறியிருக்கின்றார். சிறீலங்கா அரசு மற்றும் துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் இந்த முயற்சிக்கு எதிராக அனைவரும் இணணைந்து குரல்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட வர்த்த சங்கப் பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

இளம் பெண் கடத்தல்; தம்பதியர் கைது

கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் துன்னாலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றிருக்கின்றார். அப்போது வெள்ளை வானில் சென்ற சிலர் பெண்ணை மிதிவண்டியுடன் கடத்திச் சென்று அவரைக் கொல்வதற்காக கழுத்தை நெரித்திருக்கின்றனர். சற்று நேரத்தில் குறித்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய கடத்தல்காரர்கள் அவரை அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பெண் மறுநாள் காலையில் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று நடந்ததைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இளம்பெண்ணை விசாரணை செய்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி இராஜ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றை அதிகாலை 4 மணிக்கு சுற்றிவளைத்தனர். அங்கு பெண்ணின் சைக்கிளும் அவரது நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அங்கிருந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், விசாரணை செய்த பின்னர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவா, சந்தேக நபர்கள் இருவரையும் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு, பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார். இளம் பெண் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதும் தனிப்பட்ட விவகாரம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய சம்பவம் ஏதும் இடம்பெற்றால் உடன் பொலிஸாருக்கு அல்லது நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

தமிழர் பகுதிகளில் சிங்களத்தில் அறிவிப்புப் பலகைகள்

தமிழர் பகுதிகளில் சிங்களத்தை புகுத்தும் வேலையை ராஜபக்சே படு வேகமாக செய்து வருகிறார். சிங்களர்களை ஏற்கனவே படிப்படியாக குடியமர்த்தி வரும் ராஜபக்சே அரசு தற்போது அறிவிப்புப் பலகைகளை சிங்களத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளாராம். தமிழர் தாயகத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியுள்ள ராஜபக்சே இப்போது அதை சிங்கள பகுதியாக மாற்றும் முயற்சிகளில் வெறித்தனமாக ஈடுபட்டு வருகிறார். தமிழர்களின் நிலங்களையும், உரிமைகளையும் இப்போது சிங்களர்கள் பறிக்க ஆரம்பித்துள்ளனர். பகிரங்கமாகவும், ரகசியமாகவும் தமிழர்களின் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதற்கு அரசும், ராணுவமும் பக்க பலமாக உள்ளது, பாதுகாப்பும் தருகிறது. தமிழர் பகுதிகளில் இது நாள் வரை இல்லாத சிங்களமும் இப்போது ஊடுறுவ ஆரம்பித்து விட்டது. தப்பும் தவறுமாக தமிழ்ப் பகுதிகளில் சிங்களத்தில் ஊர்ப் பெயர்கள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை எழுதி வைத்து வருகின்றனர். மேலும் தமிழர்களின் அடையாளங்களையும் அழித்தொழித்து வருகின்றனர். தமிழர் வழிபாட்டுத் தலங்களை காலி செய்து விட்டு புத்தர் சிலைகளை அங்கு கொண்டு வைத்து வருகிறார்கள். 1956-ம் ஆண்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இந்த சட்டம் தமிழர் பகுதிகளில் மட்டும் அமல்படுத்த முடியாமல் இருந்த்து. விடுதலைப் புலிகள் இல்லாத நிலையில் தற்போது அது முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. நயினா தீவு நாகபூசணியம்மன் கோவிலில் உள்ள அறிவிப்பு பலகைகளில் சிங்கள மொழி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொழும்பு, கண்டி, கதிர் காமத்தில் தமிழர்களின் கோவில்களில், தமிழ், ஆங்கிலம், சிங்களத்தில் அறிவிப்பு பலகைகள் உள்ளன. முதன் முதலாக நயினா தீவு கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. சிங்களத்தையும், சிங்களர்களையும் தமிழர் பகுதிகளில் படு வேகமாக ஊடுறுவச் செய்து வரும் ராஜபக்சே அரசின் செயலைப் பார்த்து தமிழர்கள் பீதியுடன் உள்ளனர்.

போராளிகளை சிறையில் பார்வையிட ஐ. நா வுக்கு தொடர்ந்தும் தடை

விடுதலைப்புலிப் போராளிகளை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்களுக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபைக்கு இன்னமும் தடையே இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று கவலை தெரிவித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் அட்ரெச் மஹே சிக் இவ்வாறு கவலை வெளியிட்டார். இம்முகாம்களில் சுமார் 12 ஆயிரம் பேர் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்து அரசின் நலன்புரி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்களில் அநேகமானோர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்வதற்கும் அங்குள்ளவர்களைப் பார்வையிடுவதற்கும் ஐ.நா.அதிகாரிகளைக் கூட அரசு அனுமதிப்பதில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். என்று அவர் மேலும் கூறியுள்ளார்

EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும் இவரை விடுவிப்பதற்காக அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆயுதக்குழுவின் உறுப்பினர் தான் எனத் தெரிவித்த தீபன் என்பவர் உறவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி பேரம் பேசி வருவதாகவும் தெரிவித்திருந்தது. இந்த பணப் பேரம் பேசலை அடிப்படையாகக் கொண்டு பணத்தை வழங்குவதாக கூறி சிவில் உடையில் சென்ற பொலிசார் செல்லக்கிளி என்ற தீபனை வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஈ.பீ.டீ.பீ முகாமில் வைத்து கைது செய்தனர். அத்துடன் கடத்தப்பட்ட தம்பிராசா ஜெயந்தனையும் பொலிசார் மீட்டனர். இவர் வழங்கிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு ஈ.பீ.டீ.பீயின் தற்போதய மன்னார் மாவட்ட பொறுப்பாளரர் லிங்கேசை பொலிசார் தேடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் வவுனியா ஈ.பீ.டீ.பீ முகாமில் முக்கியஸ்த்தராக இருந்த லிங்கேஸ் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற கடந்த 24 ஆம் திகதி வவுனியாவிலேயே இருந்து இந்த கடத்தலுக்கு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. இவரே வன்னியில் இருந்து செல்வம் என்ற பெயரில் அவர்களின் வானொலியிலும் செய்தியாளராக குரல் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லிங்கேஸ் அல்லது செல்வம் என்ற இந்த முக்கியஸ்த்தரின் குழுவில் பிரதானியாக இயங்கும் செல்லக்கிழி என்ற தீபனின் வீடு ஈரப்பெரியகுளத்தில் யோசப் முகாமிற்கு அருகாமையில் உள்ள தம்ரோ தளபாடக் கடைக்கு அருகாமையில் உள்ளது. இலங்கைப் புலனாய்வுப் பிரிவு அமைப்புகள் குறிப்பாக ரி.ஐ.டீயுடன் இணைந்தும் வேலை செய்த இவர் பல வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனக் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லங்கேசின் குழுவில் தீபனின் மைத்துணரான சுரேஸ், வட்டக்கச்சி யோகன், நந்தினி முதலானோர் இயங்குவதாகவும் இவர்கள் இலங்கைப் புலனாய்வு அமைப்பான ரீ.ஐ.டீயுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கடந்த சில வருடங்களாக வவுனியாவில் பெறப்பட்ட பல கப்பப் பணம் ஈரப்பெரியகுளத்திற்கு அண்மையில் உள்ள ஆலையம் அல்லது கடைகளிலேயே கைமாறப்பட்டதாக பணத்தை கப்பமாக செலுத்தியவர்கள் பலதடவைகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொலிசாரால் கைதான செல்லக்கிழி என்ற தீபன் தமது உறுப்பினர் அல்ல எனவும் தம்மிடம் பாதுகாப்பு கேட்டு காவற்துறையினர் வருவதற்கு சற்று முன்னரே தம்மிடம் வந்ததாக ஈ.பீ.டீ.பீயின் வவுனியா செயலகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தம்மை அர்ப்பணித்தோரது குடும்பங்கள் பிச்சை எடுக்கும் நிலை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நாளாந்த உணவிற்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர் என மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பத்தலைவர்களில் பெருமளவானோர் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான குடும்பத்தலைவர்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். கணவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான கணவன்மார்கள் போரில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணக் கொடுப்பனவுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு நிவாரண அட்டைகளும் மீளப் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாமலும், குழந்தைகளுக்கு பால்மா, உணவுகளுக்காக வீடுவீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பேரவலம் நிலவிவருகின்றது. தமக்கு உதவி வழங்குமாறு கிழக்கு மாகாண சபையினர், அரச அதிபர், பிரதேச செயலர்கள் உட்பட்ட அதிகாரத்தில் உள்ள அனைவரிடமும் தொடர்பு கொண்ட போதிலும் தமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்படுகின்ற பெண்கள் கண்ணீர்விட்டு கதறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பங்களே வன்னியில் வாழ்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறிப்பிட்ட குடும்பங்களுக்காவது யாராவது புலம்பெயர் அமைப்புக்கள் உதவ முன்வருவார்களா?

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

இலங்கை அரசாங்கம் காழ்ப்புணர்ச்சிகளை காட்டி வருகிறது – பிரித்தானியா கன்சவேட்டிவ் கட்சி

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இன்று வரையில் இலங்கை அரசாங்கம் பல இனப்படுகொலைகளையும், இன காழ்ப்புணர்ச்சிகளையும் காட்டி வருவதாக பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஹரோவ் மேற்கு, கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சல் ரோய்ஸ் தாம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், அமுல்படுத்தப்பட்ட சட்ட மூலங்கள் அனைத்தும் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராகவே அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் நூலகம் தீக்கிரைக்கப்பட்டதும் கூட தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதுவும் ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கையே என அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தமிழ் மக்கள் கடத்தப்படுதல், காணாமல் போதல், படுகொலை செய்யப்படல் என்பனவும் இலங்கை அரசாங்கம் இன சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே மேற்கொண்டுள்ளது.

அத்துடன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தொடர்ந்தும் வடக்கில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமையும், கடந்த காலங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பலர் பல வருடங்களாக முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை என்பனவும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளாகவே கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



ஊடக தர்மமும் உதயன் ஆசிரியர் வித்தியாதரனும்!


‘ஊடகங்கள் ஜனநாயகத்தின் மூன்றாவது கண்’ என்றே போற்றப்பட்டு வருகின்றது. நீதியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் நீதித் துறை, சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத்தின் இரு கண்களுக்கும் அடுத்து ஊடகத் துறை நோக்கப்படுகின்றது. எங்கே தவறு நேர்ந்தாலும், எங்கே மக்களுக்குப் பாதிப்புக்கள் நேர்ந்தாலும், எங்கே நீதி தவறினாலும் அவற்றையெல்லாம் தட்டிக் கேட்கவும், அந்தத் தகவல்களையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களுக்கான நீதியைக் கோரவுமான ஊடகங்களின் தளங்கள் விரிந்தே செல்கின்றன. இந்த ஊடக தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் இன்று வரை எண்ணற்ற ஊடகவியலாளர்கள் தமது உயிரையும் அர்ப்பணித்திருக்கிறார்கள். சிங்கள தேசத்தின் இனவாதத்திற் கெதிரான தமிழீழ மக்களின் நியாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் தார்மீகப் பணியில் தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தினால் வேட்டையாடப்பட்டார்கள். 2004 முதல் 2009 வரையிலான காலப் பகுதியில் 31 தமிழ் ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் பலி கொள்ளப்பட்டுள்ளதாக ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்களின் பங்கு மகத்தானது. சிங்கள தேசத்தின் அத்தனை ஊடக அடக்குமுறைக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் எத்தனையோ தமிழ் ஊடகவியலாளர்கள் தமது நியாயமான கருத்துக்களைத் துணிவோடு பதிவு செய்துள்ளார்கள். அதனால், அவர்களில் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டார்கள். பலர் நீண்ட சிறைவாசம் அனுபவித்தார்கள். ஆனாலும், இன்றுவரை நேர்மையான தமிழ் ஊடகவியலாளர்கள் நீதிக்காகப் போராடியே வருகின்றார்கள். அதற்காக, எதையும் இழக்கத் துணிந்தே வருகின்றார்கள் என்ற நம்பிக்கையை உதயன் – சுடரொளி நாழிதழ்களின் ஆசிரியர் திரு. வித்தியாதரன் ஏற்படுத்தியுள்ளார். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தம் உதயன் – சுடரொளி ஊடகத்தையும் விட்டு வைக்கவில்லை. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு அந்த ஊடகம் தனது 10 ஊழியர்களைப் பலி கொடுத்ததுடன், ஏராளமான அழிவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இத்தனை இழப்புக்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாத இந்த ஊடகத்தின் பிரதம ஆசிரியர் திரு. வித்தியாதரன் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். உலக நாடுகளின் அழுத்தங்களால் அவர் விடுவிக்கப்பட்ட போதும் தொடர் அச்சுறுத்தல்களுக்கிடையேதான் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்து வருகின்றார். இந்நிலையில்தான், சிங்கள நாடாளுமன்றத் தேர்தல் வடிவில் அவரது ஊடகப் பணிக்கு ஆபத்து உருவாகியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதற்கு உதயன் ஊடகத்தைப் பயன்படுத்தும் நோக்கத்தில் திரு. வித்தியாதரனை வேட்பாளராக்க முயன்றனர். இரு தடவைகள் அவரது வீட்டிற்குச் சென்ற மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோளை வைத்த போதும், ”10 ஊடகவியலாளர்களை களப்பலி கொடுத்து, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் ஊடகமாகத் தொடர்ந்து பணியாற்றும் உதயன் நாழிதழை ஒரு கட்சியின் பத்திரிகையாக மாற்றுவதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்” என மறுத்துவிட்டார். புலம்பெயர் தமிழர்களின் அதிருப்தியையும், தமிழீழ மக்களது நம்பிக்கையீனத்தையும் மூடி மறைத்து, வெற்றி பெறுவதற்கு ஊடக ஆடை தேவைப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது அடுத்த அஸ்திரத்தை உதயன் – சுடரொளி நிர்வாகிமீது தொடுத்தது. திரு. வித்தியாதரன் அவர்களது மைத்துனரும், முற்று முழுதான வர்த்தகருமான திரு. சரவணபவன் கும்பிட்ட கைகளுடன் மறுப்பேதும் இன்றிக் களத்தில் இறங்கினார். இந்தச் செய்தி, திரு. வித்தியாதரன் அவர்களது காதுக்கு எட்டியதும், அவர் முக்கியமான தனது முடிவை எடுத்துவிட்டார். தான் கட்டிக் காத்த ஊடக தர்மம் நொருக்கப்பட்டு, உதயன் பத்திரிகை ஒரு கட்சிப் பத்திரிகையாக வீழ்ச்சி அடையும் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாத வித்தியாதரன் அந்த ஊடகத்துக்கான தனது அத்தனை பொறுப்புக்களிலுமிருந்து விலகிக் கொள்வதாக நிர்வாகத்திற்கு அறிவித்துவிட்டார். உதயன் நாழிதழின் நிhவாகியான திரு. சரவணபவன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களம் இறங்கிய செய்தி வெளிவந்த போதே, தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களது மனதில் வலியும் தோன்றியது. யாழ். குடாநாட்டின் முன்னணி ஊடகமாக வெளிவந்து கொண்டிருந்த உதயன் நாழிதழ் கட்சிப் பத்திரிகையாகக் கீழிறங்கிவிட்டால், யாழ். மக்கள் இருட்டினுள் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் கூடவே எழுந்தது. ஆனாலும், ஒரு ஊடகவியலாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திரு. வித்தியாதரன் அவர்கள் உதாரணமாகிவிட்டார். இதே காலப் பகுதியில், லங்காசிறி என்ற இணையத்தளம் இதே காரணத்தோடு தன்னைக் கட்சி இணையத்தளமாக மாற்றிக் கொண்டு தாழ்ந்து விட்டதையும் நாம் வேதனையுடன் நினைவு கூரவேண்டியவர்களாகவே உள்ளோம். தமிழ்த் தேசியம் என்ற மக்கள் பக்கத்தில் நின்று செயலாற்ற வேண்டிய ஊடகங்கள், தனி மனித விருப்புக்களுக்கும், ஆசைகளுக்குமாகத் தம்மைத் தரம் தாழ்த்திக் கொள்வது மன்னிக்க முடியாத தேசியத் துரோகமாகவே நோக்கப்படுகின்றது. இன்னொரு புறத்தில், தமக்கான வரலாற்றுக் கடமையிலிருந்து தப்பிக் கொள்வதற்காக ‘தமிழ் நாதம்’, ‘புதினம்’ ஆகிய தமிழ்த் தேசிய இணையத்தளத்தினை மூடிவிட்டு, தலைமறைவாகிய ஊடக உரிமையாளரையும் தமிழீழம் மன்னிக்காது என்பதையும் இதில் பதிவு செய்ய விரும்புகின்றோம். முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை, விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில், தமிழ்த் தேசியத்திற்காக வருமானத்திற்காகவேனும் மாய்ந்து மாய்ந்து எழுதிய பல ஊடகவியலாளர்களை, தமிழீழம் அவலங்களுக்குள் புதைந்துள்ள காலத்தில் கண்டு பிடிக்கவே முடியாது போய்விட்டது. பல ஊடகவியலாளர்கள் பயத்தினால் மௌனமாகிப் போக, சிலர் தமிழ்த் தேசியத்தைச் சிதைப்பதற்காக முழு மூச்சோடு செயற்பட்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக முன்நின்று உழைத்த தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்கள் சிங்கள தேசத்தால் படுகொலை செய்யப்பட, அதையே காரணமாகக் கொண்டு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய சிதைவையே குறியாகக் கொண்டு கட்டுரைகளையும் வானொலி நிகழ்ச்சிகளையும் நடாத்தி வருகின்றனர். அண்மைக் காலமாக, சுவிஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்களது தமிழ்த் தேசிய கருத்துச் சிதைவு முயற்சிகள் ஊடகங்களின் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர் திரு. இரா. துரைரட்ணம் அவர்கள், புலம்பெயர் தேசத்தின் தமிழ்ச் செயற்பாட்டாளர்களை மிகக் கேவலமாக விமர்சிப்பதன் மூலம் தனது தமிழ்த் தேசியத் துரோகத்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றார். முள்ளிவாய்க்காலின் பின்னர் எல்லாமே முடிந்து விட்டதாக எண்ணி, ஊடகவியலாளர்கள் சிலர் தப்புத் தாளங்கள் போட்டுவரும் அவலங்கள் நிரம்பிய இந்த நாட்களிலும், தமிழ்த் தேசியத்திற்காகவும், ஊடக தர்மத்திற்காகவும் தனது பதவியையும், வசதிகளையும், உறவுகளையும் இழக்கச் சித்தமான ஊடகவியலாளர் திரு. வித்தியாதரனைப் பாராட்டாமல் இருக்க முடியாது

"விலைமாதரைக் கொடுத்து" இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம்: துணைபோகும் இந்தியம்....?


இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy - IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய திரைப்படங்களை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கோடு இந்த விழா நடத்தப்படுகிறது.

ஹாலிவுட்டின் அகாடமி (ஆஸ்கர்) விருது, கேன்ஸ் பட விழா ஆகியவற்றிற்குப் பிறகு உலக அளவில் பல கோடி மக்கள் ரசிக்கும் திரைப்பட விழா ஐஃபா விருது வழங்கு விழாவாகும். இந்த விழாவை தொலைக்காட்சி மூலம் 110 நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் ஐஃபா விருது விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து ஜப்பான் வரை போட்டி போட்டிக்கொண்டு விண்ணப்பம் செய்யும் அளவிற்கு விளம்பர, வணிக முக்கியத்துவம் கொண்ட விழாவாகும்.

2000வது ஆண்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும், 2001இல் தென் ஆப்ரிக்காவின் சன் சிட்டியிலும், 2002இல் மலேசியாவிலும், 2003இல் தென் ஆப்ரிக்கத் தலைநகர் ஜோஹனஸ்பர்கிலும், 2004இல் சிங்கப்பூரிலும், 2005இல் ஆம்ஸ்டர்டாமிலும், 2006இல் துபாயிலும், 2007இல் இங்கிலாந்தின் யார்‌க்சயர் நகரிலும், 2008இல் பாங்காக்கிலும், 2009ஆம் ஆண்டு மக்காவிலும் ஐஃபா விருது விழா நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு இவ்விழா வரும் ஜூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வந்த நாளில் இருந்தே இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், கொழும்புவில் இதை நடத்துவதற்கான பின்னணிக் குறித்தும் பல விவாதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், ஐஃபா விருது விழாவை நடத்த அயர்லாந்து அரசும், தென் கொரியாவும், ஜப்பானும், இங்கிலாந்தும் ஐஃபா அமைப்பை மிகவும் நெருக்கின. இதற்குக் காரணம் இந்த விழா நடைபெறும் நகரம், அந்த நாட்டு அரசிற்கு மிகப் பெரிய நிதிச் செலவு ஏதுமின்றி, ஐஃபா விழா நடப்பதாலேயே அந்த நகரை உலகின் பார்வைக்கு கொண்டு செல்கிறது. இது அந்த நாட்டிற்கு சுற்றுலா வருகையை அதிகரிக்கச் செய்யும். இரண்டாவதாக, இந்த விழாவில் பங்கேற்கவும், பார்க்கவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டிற்கு வருகின்றனர்.

சிங்கப்பூரில் ஐஃபா விழா நடக்கும்போது 30,000 சுற்றுலா பயணிகள் கூடுதலாக அந்நாட்டிற்கு வந்தனர். மூன்றாவதாக, இந்த விழாவின்போது ஏற்படும் வணிக ஒப்பந்தங்கள். பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நான்காவதாக, விழா நிக்ழ்ச்சி தொலைக்காட்சியின் மூலம் 50 முதல் 60 கோடி பேர் வரை கண்டுகளிப்பதால் அந்நாட்டி‌ன் சுற்றுலா மையங்களையும், இயற்கை எழிலையும் காட்டி, அதன் மூலம் திரைப்படப் படபிடிப்புகளுக்கு வாய்ப்பை மேம்படுத்தலாம்.

இதுவே இவ்விழாவை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என்று முன்னேறிய நாடுகள் கூட அலையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா அதற்காக ஐஃபாவிற்கு ரூ.50 கோடி அளிப்பதாகக் கூட உறுதியளித்திருந்து என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான், சற்றும் எதிர்பாரா வண்ணம் இந்த விழாவை கொழும்புவில் நடத்த இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அதற்கு என்ன பின்னணி என்றும் கேள்வி எழுந்தது.

இந்தியப் பின்னணி!
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, ஈழத் தமிழ் மக்கள் மீது சிறிலங்க அரசு நடத்தி முடித்திட்ட இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியான நாளில் இருந்து இன்று வரை சிறிலங்க அரசிற்கு உலகளாவிய அளவில் அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்கடி அதிகரித்து வருகிறது.


தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன, அது குறித்து விசாரணை நடத்தி, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு தட்டிக்கழித்த காரணத்தினால், அந்நாட்டில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு அளித்துவந்த இறக்குமதி வரிச் சலுகையை நிறுத்துவதென முடிவெடுத்து அறிவித்தது.

அயர்லாந்து தலைநகரில் கடந்த ஜனவரி மாதம் 14, 15, 16ஆம் தேதிகளில் நடந்த உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம், தமிழர்களுக்கு எதிரான போரில் சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்றும், வன்னி முகாமில் நடந்த மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்களை மெய்‌ப்பிக்கின்றது என்றும் தீர்ப்பளித்தது மட்டுமின்றி, அந்நாட்டிற்கு எதிரான தமிழினப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

நா.வின் நிதிச் சீர்திருத்தக் குழுவின் தலைவராக உள்ளவரும், தனது வாழ்வில் காந்தியின் அகிம்சை கொள்கையை கடைபிடித்து வருவதற்காக விருது பெற்ற பிரான்சுவா ஹூடார்ட் தலைமையிலான நிரந்தரத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஊடகங்கள் பெரும் செய்தியாக்கியதன் காரணமாக, அதுவரை அசையாமல் இருந்த ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன், போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்தார்.

தனது நாட்டு மக்களின் மீதே தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி இனப்படுகொலை நடத்திய சிறிலங்காவை உலக நாடுகள் தனிமைப்படுத்தி வரும் நிலையில்தான், அந்த நாட்டின் ‘பெருமை’யை கூட்ட, இந்திய அரசின் உந்துதலால் ஐஃபா விருது விழா கொழும்புவில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறிலங்க அரசிற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க இந்திய அரசின் ‘முயற்சி’யே என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் துணை போகிறதா?
சிறிலங்க அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போருக்கு எல்லா விதத்திலும் துணை போனது இந்திய அரசு என்பது உலகளாவிய உண்மையாகிவிட்ட நிலையில், அதனை மறைப்பதற்கு இந்த விழாவை நடத்த இந்திய அரசின் திட்டத்திற்கு பாலிவுட் துணை போகிறதே என்பதுதான் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்ச்சியலையாகும்.


‘இலங்கை ஒரு அமைதியான, அழகிய தீவு’ என்றும், அருமையான சுற்றுலா தலங்கள் நிறைந்த நாடு என்றும் கூறி, அந்நாட்டை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்று அதன் மூலம் அங்கு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மறைக்க நடக்கும் முயற்சியே இந்த விழா என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்திய அரசின் துணைகொண்டு தமிழினப் படுகொலை செய்து முடித்த சிறிலங்க அரசிற்கு, அதனை மறைக்க உதவவே ஐஃபா விருது வழங்கு விழாவை அங்கு தள்ளியுள்ளது டெல்லி அரசு. இல்லையென்றால் லண்டன், சியோல், டோக்கியோ ஆகிய நகரங்கள் தொங்கிக்கொண்டு பின்னால் வர, உலக நாடுகளின் சினத்திற்கு ஆளாகி நிற்கும் இலங்கையை ஐஃபா எதற்குத் தேர்ந்தெடுக்கிறது?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இரண்டரை ஆண்டுகள் நடந்த அந்த இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாய விசாரணையில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை உலகின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சி நடைபெற்றுவரும் சூழலில், இனப்படுகொலைக்கு காரணமான அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக தங்கிக்கொண்டு விழா அறிவிப்பை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளது ஏற்கத்தக்கதாக இல்லை.

இலங்கையில் தமிழினம் படுகொலை செய்யப்பட்டது அமிதாப் பச்சனுக்கோ அல்லது இந்தி திரைப்பட நட்சத்திரங்களுக்கோ தெரியாதா? சிறிலங்க கடற்படையினரால் 400க்கும் அதிகமான தமிழ்நாட்டின் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை மறைத்து அந்நாட்டோடு உறவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் இந்திய அரசின் மனிதாபிமற்ற நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகம் துணை போகலாமா?

தன்னை வரவேற்ற நடன மாதர்களின் புன்னகையை பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சன், “அவர்களின் புன்னகையில் சிறிலங்காவின் ஆளுமையும் தெரிகிறது” என்று பேசியதைக் கேட்டபோது, அந்தப் புன்னகையைக் காட்டி சிறிலங்க அரசு மறைக்க நினைக்கும் இனப்படுகொலைக்கு இவரும் துணை போகிறாரே என்றே வருந்தம் தோன்றுகிறது. சினிமா உலகம் வேறுபாடுகளைத் தாண்டி அனைவரையும் இணைக்கிறது என்று அமிதாப் பச்சன் பேசியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு இணைப்பு தமிழ், இந்தி திரையுலகங்களுக்கு இடையே இன்றுவரை நிலவுகிறது. தமிழ்நாட்டி‌ல் பல நட்சத்திரங்களும், தொழல்நுட்ப நெறிஞர்களும் பாலிவுட்டில் பணியாற்றுகின்றனர். ஆயினும் அவர்கள் மனதில் தமிழினப் படுகொலை ஆறாத இரணமாக நிலைத்துள்ளது என்பதை பாலிவுட் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கைத் தமிழினப் படுகொலையை கண்டித்துப் போராடியது தமிழ்த் திரைப்படவுலகம் என்பதை மறந்துவிட்டு பாலிவுட் கொழும்புவில் விழா நடத்துமானால் அது தமிழனையும், தமிழ்த் திரையுலகத்தை தனிமைப்படுத்துவதாக ஆகாதா?


உள்நாட்டுப் போரினால் அங்கு ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் தங்கள் குடும்ப உறவுகளையும், வாழ்ந்த இடங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அனாதைகளாக‌த் திரிகின்றனர் என்பதை அறிந்துதான் அந்த விழாவை அங்கு நடத்த ஐஃபா முடிவெடுத்ததா? அல்லது எதையுமே அறியாத ஒரு கனவுலகில் அமிதாப்பும் பாலிவுட்டும் மிதக்கின்றனவா? புரியவில்லை.

தங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நினைத்து தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் துயரத்தில்தான் உள்ளனர். சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தங்களின் மீனவர்களின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய இரணம் இன்னமும் ஆறவில்லை. அதற்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏங்கித் தவிக்கிறது. இதனைப் புரியாத பாலிவுட், கொழும்புவில் விருது விழாவை நடத்தச் செல்லுமானால், அது இதுநாள் வரை போற்றப்படும் உறவிற்கு பாதமாகவே முடியும்.


தமிழகத்திலிருந்து கட்டுரையாளர் ஆதிரையன் இன்போதமிழ் குழுமம்