திங்கள், 4 அக்டோபர், 2010

வீர வணக்கங்கள்

இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மாண்ட வேங்கைகள் வீரவணக்கங்கள்

தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா - இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா - இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கையளிப்பு நாடகம்

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் கடந்த செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அது சம்பந்தமான செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் பரவலாக முக்கியத்துவம் மிக்க செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பல கல்லுரிகள் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் ஆலயங்கள் என்பன தொடார்சியாக மக்களின் பாவனைக்கு வரலாம் என்ற நம்பிக்கை யாழ். மக்களின் மனங்களில் தோன்றின. ஆனால், இந்த நிகழ்வில் பாடசாலை கையளிப்பு என்பது மக்களை ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட ஒன்று போல் தென்படுகின்றது.

புதன், 29 செப்டம்பர், 2010

நீர்வழங்கல் சபைக்குத் தண்ணீர் காட்டும் யாழ்ப்பாணத்து சண்டியன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பில் வசித்து வரும் இரண்டு வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத்திற்காக கட்டணமாக நூற்றி ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 443 ரூபாவை செலுத்த  வேண்டும்.கொழும்பு 5 பார் வீதியில் அமைச்சர் வசித்து வரும் இலக்கம்; 121 வீட்டிற்கான குடிநீர் விநியோக கட்டணமாக 83 லட்சத்து 65 ஆயிரத்து 695 ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கடந்த மாதம் 25 ஆயிரம் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதேவேளை கொழும்பு 4 லெயாட்ஸ் வீதியில் உள்ள அமைச்சர் தேவானந்தாவின் 15 கீழ் 1 என்ற இலக்க வீட்டின் குடிநீர் கட்டணமாக 17 லட்சத்து 70 ஆயிரத்து 750 ரூபா செலுத்த வேண்டிள்ளது

இலங்கை ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் கொள்ளாத தலைவர்கள்

ஐக்கிய நாடுகளின் 65-வது மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதியை உலகத் தலைவர்கள் எவரும் சந்திக்கவில்லை எனச் சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு இதுவரை காலமும் காணப் பட்ட நற்பெயருக்குத் தற்போது களங்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையினால் நடத்தப்பட்ட விருந்துப சாரத்திற்கு 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் ஒரு நாட்டுத் தலைவரே இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 27 செப்டம்பர், 2010

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை : அதிபர் ஒபாமா விரும்பவில்லை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் உறுதியுடன் கூறியதாக, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான பாப் உட்வேர்ட் சமீபத்தில், அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய போர்களைப் பற்றி, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். மொத்தம் 417 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஒபாமாவைச் சந்தித்த போது நடந்த உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.

பௌத்த தேரர் மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டக்களப்பில் வைத்து தன்னை அவமானப்படுத்தியைக் கண்டித்தே தான் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மங்களா ராம விகாரைக்கு முன்னால் இப்போராட்டம் தொடர்கிறது.அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக வந்து தன்னிடம் மன்னிப்புக் கோரும் வரை சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென அவர்மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் தடுப்பு .ஐ.சி.ஜே கவலை

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் போராளிகளும், சரணடைந்தவர்களும், ஒரு சட்டரீதியான கருஞ்சூன்யத்தை எதிர்நோக்குவதாகக் கூறும் இந்த அமைப்பு, இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படவேண்டும் என்று கூறுகிறது. இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சர்வதேச உதவி தரப்பட்டால், அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச சமூகமும் ஒத்திசைவாகச் செல்லும் ஆபத்தை ஏற்பத்தும் என்று இந்த அமைப்பு கூறுகிறது. இலங்கையில் இவ்வாறான தடுப்புக்காவல் கைதுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, இந்த சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், நிர்வாகத்தால் தடுத்துவைக்கப்படுவது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் , விசாரணையில்லாத தண்டனை என்றும் வர்ணிக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கப்டன் மொறிஸ்

நான் போர்முனையில்
குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்
மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்
உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!
என்றான். அவன்தான் மொறிஸ்.
நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீதுமேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையால் அச்சுறுத்தல்

தமது நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அச்சுறுத்தலாக அமைந்துள்ளதா? என்பதில் இந்தியா தற்போது அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட "லஹ்ர் ஈ தொய்பா" அமைப்பின் ஒருவர் தாம் இலங்கையில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தமையை அடுத்தே இந்த அக்கறை ஏற்பட்டுள்ளது.முதலில் இந்தப் போராளிக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சிகளை வழங்கி யிருப்பார்களா? என்ற சந்தேகத்தை இந்தியா கொண்டிருந்தது.எனினும் பின்னர் அது நிரூபிக்கப்படாத நிலையில் இலங்கையின் படையினர் மீது இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது.

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் குளத்தினுள் ஆயுதம்கள் படையினர் தேடுதல்

கல்வியங்காடு சந்திரசேகரப்பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளம் ஒன்றில் ஆயுதம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கல்வியங்காடு சந்திரசேகரப் பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள குளத்தினுள் ஆயுதம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாகவும் இதனையடுத்து அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு குளத்தை இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நீர் இறைக்கும் பணி நடைபெறுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சனி, 25 செப்டம்பர், 2010

மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு நாள் வீரவணக்கங்கள்

26.09.2001 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்கு மேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீர வணக்கங்கள்

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

 தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்திமூன்று வருடங்களுக்கு முன்பு  நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது."இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும்அவ்வாறுமுன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

திலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் – 26.09. 1987

இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன்.

இலங்கை கடற்படை மீது மரைன் போலீசார் வழக்கு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது, மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில், இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி உள்ளனர். கை, கால், கண்களை இழந்து ஊனமாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இந்திய அரசு அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சில நாட்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை கடற்படையினர், மீண்டும் தாக்குதலை தொடர்கின்றனர்.