வியாழன், 15 ஏப்ரல், 2010

வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர் இவர்கள்


கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பதுபோலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பித் தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்க வேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும் தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காகக் குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத்துவத்தை இடைநிறுத்தி, வலிகளைத் தாங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளனர். இது இப்படியிருக்க, ஷெல் விழுந்தபோது நாங்கள் அன்றே செத்துப்போயிருந்தால் இதைவிடவும் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்கிறார்கள் வவுனியா மெனிக்பார்ம் முள்வேலி முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு இங்குள்ள அனேகமான மக்கள் பட்டினியோடுதான் காலத்தைக் கடத்துகிறார்கள். 1.5 லிற்றர் கொள்ளளவுடைய ப்ளாஸ்டிக் பெப்சி போத்தலொன்றின் மேற்பகுதியை வெட்டிவிட்டால் கிடைக்கும் பாத்திரத்தினளவு அரிசிதான் ஒரு கிழமைக்கு ஒருவருக்குக் கொடுக்கப்படுகிறது. கோதுமை மாவும் அதே அளவுதான் கொடுக்கப்படுகிறது. ஐம்பது கிராமுக்கும் குறைவான அளவுடைய சீனியும் அதே அளவு பருப்பும் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறிய குவளையில் தேங்காயெண்ணெய் வழங்கப்படுவதோடு ஒரு வாரத்தின் ஏழு நாட்களையும் இந்த உணவுப் பொருட்களோடு மட்டுமே கழிக்க வேண்டியுள்ளது. மரக்கறி, கீரை வகைகள், இறைச்சி, மீனென்று எதுவுமே இல்லை. உடைகள், சமைக்கத் தேவையான மற்ற பொருட்கள், பாத்திரங்களென அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எதுவுமேயில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் மரக்கறி வகைகள், வெங்காயம், மிளகாய்த் தூள், மசாலாத் தூள், உப்பு, முட்டை, கிழங்கு, நெத்திலி போன்றவை இவர்களுக்குக் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இவை அனைத்தும் நிறுத்தப்பட்டதோடு வழங்கப்பட்ட அரிசி, கோதுமையின் அளவும் பாதியாகக் குறைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தற்போது அரிசி, கோதுமை வழங்கப்படும் அதே பாத்திரத்தின் இருமடங்கு அளவு ஒரு வாரத் தேவைக்கென ஒருவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இம்மக்களது விருப்பு வாக்குகள் எதிர்க்கட்சியைச் சார்ந்திருந்ததே இன்றைய நிலைக்கான காரணமென்பது வெளிப்படையாகிறது. உண்மையில் இங்குள்ள அனேகமான அகதி மக்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பே வழங்கப்படவில்லை யென்பதையும் இங்கே சொல்ல வேண்டும். இங்குள்ள அகதிகளில் சிலர் மட்டும் வெளிநாடுகளிலிருந்து தமது உறவினர்கள் அனுப்பும் பணத்தைக் கொண்டும் அரசு வேலைகளிலிருந்தோருக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டும்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். இது போன்ற உதவிகளேதுமற்ற பலர் அன்றாட வாழ்க்கையைக் கழிப்பதற்கே வழியில்லாத கையறு நிலையில் இருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் சென்று உழைக்கும் அனுமதியைச் சமீபத்தில் தான் இம்முகாம்வாசிகளுக்கு அரசு வழங்கியுள்ளது. அதுவும்கூட அதிகபட்சமாக இருமாதங்களுக்கு மட்டும் தான். அதாவது இரண்டு மாதங்களுக்கொருமுறை முகாமுக்குச் சமூகமளித்து, வெளியே சென்று வேலைபார்க்கும் அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த அனுமதிப் பத்திரத்தில் பகுதிப் பெயர், குழு இலக்கம், வீட்டு இலக்கம், குடும்ப இலக்கம், மாவட்டம், பிரதேச சபைப் பிரிவு, கிராம சேவகர் பிரிவு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப உறுப்பினர்களின் பெயர்களோடு அவர்களுக்கான இலக்கங்கள், உறவுமுறைகள், அவர்களது தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் ஆகியனவும் குறிப்பிடப்படுவது கட்டாயம். அதன் பிறகு தாம் தொழில் பார்க்கச் செல்லவிருக்கும் ஊரைக் குறிப்பிட வேண்டும். அந்த ஊருக்குப் போய்ச் சந்திக்கவிருப்பவரின் பெயரும் தொலைபேசி இலக்கமும் குறிப்பிடப்பட வேண்டும். அத்தோடு செல்லும் நாளின் திகதி மற்றும் நேரத்தோடு, இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வரும் நாளின் திகதியையும் நேரத்தையும்கூடக் குறிப்பிட வேண்டும். முகாமிலிருக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, இலங்கை அரசால் வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அடையாள அட்டைகள்கூட அதிநவீன பார்கோட் இலச்சினைகளுடன் இருக்கின்றன. இதனுள் முகாம்வாசியின் அனைத்துத் தகவல்களும் அடங்கப்பெற்றிருக்குமென நம்பலாம். நாட்டின் தேசிய அடையாள அட்டைகள்கூட இந்தளவு பாதுகாப்பானதாகவும் முக்கியத்துவம் மிக்கதாகவும் இல்லை. முகாம்வாசிகளுக்குத் தினமும் காலை ஆறு மணிக்குப் பிறகே வெளியே செல்ல அனுமதி கிடைக்கிறது. அத்தோடு இரவு எட்டு மணிக்குள் திரும்பிவிட வேண்டும். முகாமிலிருக்கும் ஒரு குடும்பத்தில் எல்லோருக்குமே ஒரே தடவையில் முகாமைவிட்டு வெளியே செல்ல அனுமதி கிடைப்பதில்லை. மக்கள் தமது முகாமன்றி வேறு முகாம்களுக்குச் செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தூர இடங்களிலிருந்து உறவினர்கள் இவர்களைப் பார்க்க வந்தால்கூட அவர்களோடு சுதந்திரமாக, எந்தத் தொந்தரவுமின்றிக் கதைப்பது சிரமமாக உள்ளது. முள்வேலியின் இருபுறமிருந்துதான் கதைக்கவும் முடியும். இவ்வாறான முள்வேலிச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டிருப்பது தத்தமது பாட்டில் விவசாயமோ கூலித் தொழிலோ செய்து உழைத்து வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்கள். நாங்கள் எங்கள் வீடுகளுக்குப் போய் இருக்க விரும்புகிறோம். அரசாங்கம் எதுவுமே தரவில்லையென்றால்கூடக் காட்டிலிருந்து தடிகளை வெட்டி, வீடு கட்டி, விவசாயம் செய்துகொண்டு வாழ விரும்புறோம். தங்கள் கரங்களின் பலத்தோடு வாழ்க்கையை நகர்த்திச் சென்ற இம்மக்களுக்கு இன்று உண்ணாமல், குடிக்காமல் அரிசி, கோதுமை சேகரித்து வவுனியாவுக்குக் கொண்டு போய் விற்று வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முகாமிலிருந்து வவுனியாவுக்கு வருவதற்கு ஒருவருக்குப் பிரயாணச் செலவாக ஐம்பது ரூபாய் தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்குக் கிடைக்கும் அரிசி, கோதுமையை ஒரு வாரம் உண்ணாமல் சேகரித்து, வவுனியாவில் அதை சரிபாதி விலைக்கு விற்று, இவர்கள் பணம் பெற்றுக்கொள்கின்றனர். தற்போது வவுனியாவிலும் தற்காலிகத் தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. முகாம்களிலிருந்து அன்றாடம் தொழில் தேடி வெளியேறும் இது போன்ற அகதிகளோடு, உறவினர்களுடன் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களால் வவுனியா நகரம் நிறைந்துபோயிருக்கிறது. குடிப்பதற்கான நீரையும் முகாம் மக்கள் குழாய்க் கிணறுகளின் மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில் காலையிலிருந்து இரவுவரைக்கும் வரிசைகள் நீள்கின்றன. காத்திருக்கின்றன. குளிப்பதற்காகச் சில நாட்களில் மட்டும் குழாய்களில் நீர் வழங்கப்படுகிறது. முகாம் பள்ளிக்கூடத்திலும் ஒரு நாளைக்கு ஒரு பாடமே கற்பிக்கப்படுகிறது. முகாமில் வைத்தியர்கள் இருந்தபோதிலும் மருந்து வசதிகள் ஏதுமற்ற காரணத்தால் நோயாளிகள் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். மீள்குடியேற்றம் என்னும் பெயரில், மறுவாழ்வு அளிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு முகாமிலிருந்து தங்கள் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்ட மக்கள் மகிழ்வோடுதான் வெளியேறினார்களா? இல்லை. ஏனெனில் தத்தமது ஊர்களுக்குப் போக முடியாத காரணத்தால் அவர்கள் ஏ ஒன்பது நெடுஞ்சாலையின் ஓரங்களில்தான் கூடாரமமைத்துக்கொண்டு தங்கியுள்ளனர். இதுதான் மீள்குடியமர்த்தல் என்ற சொல்லுக்குப் பின்பு மறைந்திருக்கும் உண்மை. யுத்தம் முடிவுற்றதோடு இடம்பெயர்ந்த மக்களனைவரையும் ஆறு மாத காலத்துக்குள் மீள்குடியமர்த்துவதாக அரசு வாக்குறுதியளித்திருந்தபோதிலும் அவர்களது சொந்தக் கிராமத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்திருப்பது மிகச் சிலருக்கே. மீள்குடியமர்த்தப்பட்டோரெனச் சொல்லப்படும் அனேகமான மக்கள் தங்கியிருப்பது தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் ஏ ஒன்பது வீதியோரக் கூடாரங்களிலும்தான். இந்தக் கொத்தடிமை முள்வேலி வாழ்க்கையிலிருந்து மீண்டு, இடம் பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாழும் சுதந்திரம் வழங்கப்படுவது எப்போது? இதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் எழும் ஒரே கேள்வி. இம்முகாம் மக்கள் இன்னும் காணாமல் போவதும் முகாமிலிருந்து பலவந்தமாகக் கொண்டுசெல்லப்படுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறாக அதிகளவாகக் காணாமல் போயுள்ளவர்களுக்கும் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்ததென யாருக்கும் தெரியவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் ஷெல் விழுந்து, விமானக் குண்டு போட்டுச் செத்துப்போனார்கள். எப்படியாவது உயிர்பிழைத்து வாழ வேண்டுமென்றுதான் பிணங்களின் மேலால் இங்கு ஓடிவந்தோம். அன்றே ஷெல்லொன்று விழுந்து செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமென இப்போது தோன்றுகிறது. அவர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.

அறுபத்திரண்டு ஆண்டுகளும் அப்பாவி(ஈழ)த் தமிழர்களும்!

இலங்கை என்னும் சின்னஞ் சிறு தீவு நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்து அறுபத்திரண்டு வருடங்கள் கடந்து போய்விட்டன என்பதைக் கொண்டாடும் வகையில், இந்த வருட முற்பகுதியில் தென்னிலங்கையில் மிகவும் குதூகலமான முறையில் விழாக்கள் நடந்தேறியிருக்கின்றன. நாட்டின் அதிபர் ‘புதிய துட்ட கெமுனு’வாக மீண்டும் அவதரித்திருக்கிறார்! கி.மு இரண்டாம் நூற்றாண்டில், தமிழ் மன்னன் எல்லாளனை வீழ்த்தி அனுரதபுர நகரினைச் சிங்களருக்கே மீண்டும் பெற்றுத்தந்த இளவரசன் துட்டகெமுனுவைப் போன்று, பிரபாகரன் தலைமையில் தமிழுரிமைக்காகப் போராடியவர்கள் அத்தனைபேரையும்- போராளிகள்,பொதுமக்கள் என்ற பேதமின்றி- அழித்த இருபத்தோராம் நூற்றாண்டின் ‘சிங்கள அரசனை’ப் பாராட்டி மகிழ்ந்தார்கள் அவ்வினத்தைச் சேர்ந்த பலர்! கூடவே, வரலாற்றில் எப்போதும் இடம்பெறும் ‘விபீஷணக்’கும்பல்களும் தாம் வெற்றி அடைந்துவிட்ட இறுமாப்பில் நெஞ்சை நிமிர்த்திப் பீறுநடை போட்டன. சிங்கள இனம், அண்மையில் அடைந்த ‘வெற்றி’யின் நாயகர்களில் ஒருவரான அதன் படைத் ‘தளபதி’ இப்போது தனது எதிர்காலம் பற்றிய கவலைகளுடன் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஒரு புறமிருக்க, ஒரே இலங்கை; ஒரே மக்கள் என்று ‘கவர்ச்சி சுலோ’கங்களை முழங்கும் அரசு, முப்பதாண்டுப் போரில் தாம் முறியடித்துவிட்ட ‘எதிரி நாடொன்றில்’கூட அரங்கேற்றமுனையாத செயல்களைப், ’போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம்’ என்னும் போர்வையில், அண்டை நாடுகள் சிலவற்றின் பொருளுதவியோடு வெகு துரிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது! இவையனைத்தையும் அறிந்திருந்தும், சென்ற ஆண்டு முற்பகுதியில் வடபுலத்தில் அரங்கேறிய படுகொலைகளைக் ‘கண்டும் காணாதிருந்ததை’ப் போன்று சர்வதேசம் ‘கள்ள மௌனம்’ சாதிக்கிறது! படுகொலைகளின் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படும்வரை ‘பொறுமை காத்த’ ஐ.நா வின் தலைவர், திடீரென ‘ஞானோதயம்’ பெற்றுவிட்டவர் போன்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் எரிகுண்டுகளுக்கும், தடைசெய்யப்பட்ட கனரக ஆயுதங்களுக்கும் பலியாகி உயிப்பிச்சை கேட்டு மன்றாடிக்கொண்டிருந்த சமயத்தில்; மெரீனா கடற்கரையில் ‘குளிரூட்டிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்’ சகிதம் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க மூன்று மணி நேர’ உண்ணாவிரதத்தை மேற்கொண்ட ‘தலைவர்’ இப்போது ‘ஈழத் தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படாவிடில், நாம் சும்மா இருக்கமாட்டோம்’ என்று புதிதாக எதையோ ‘சுமந்து கொண்டு’ அறிக்கை விடுகிறார். தமிழர்கள் அழிந்தாலும் பரவாயில்லை அவர்களது நிழல்களுக்கு ஆடைகட்டி அழகு பார்க்கும் கலையில் வல்ல கலைஞர் இப்போது ‘செம் மொழி’ ஆடையுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார். இதோ இப்போது, இலங்கையின் பொதுத் தேர்தலும் முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் பலரும் எதிர்பார்த்திருந்தது போன்று, அதிபரது கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. தகுதி பெற்ற வாக்காளர்களில் சுமார் அறுபது விழுக்காட்டினர் இந்தத் தேர்தலில் வாக்களித்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இலங்கை, சுதந்திரம் அடைந்ததில் இருந்து அங்கு நடைபெற்றுவந்த பொதுத் தேர்தல்கள் யாவற்றினையும் விடவும், இந்தத் தடவை வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது. சிங்களப் பகுதிகளில் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்றும்; எதிர்க் கட்சியினர் பல குழுக்களாக்ப் பிரிந்து நின்று போட்டியிட்டதால் அரசுக்கு எதிரான வாக்குகள் சிதறிப்போய் விட்டன எனவும் மக்கள் இவ்வாறான தேர்தல் ‘விளையாட்டுகளில்’ நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் இதற்குப் பலவாறான காரணங்களை அவரவர் சார்பு நிலைகளுக்குத் தக்கவாறு பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டியிட்ட சிங்களக் கட்சிகளுக்குச் சிங்களர்களது உரிமைக்காகப் போராடும் நிர்ப்பந்தம் ஏதும் கிடையாது. ஆங்கிலேயர் மூன்று நூற்றாண்டுகளாகச் சுரண்டிக் கொழுத்த இலங்கையை விட்டு, மூட்டைமுடிச்சுகளுடன் தங்கள் நாட்டுக்குத் திரும்பிய போது, ஜனநாயகத்தின் பேரால் தீவின் ஆட்சி அதிகாரத்தினை, ‘தலை’ எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சிங்களரிடம் விட்டுவிட்டுச் சென்றார்கள். எனவே, ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தின் வழியாகக் கிடைக்கவேண்டிய அத்தனை நலன்களையும், தீவின் பெரும்பான்மை இனம் பெற்றுக்கொள்வதில் எவ்வித தடைகளும் அதற்கு இருக்கவில்லை. ஆனால் ஆளப்படும் இனமாக மாறியிருந்த தமிழ்த் தேசிய இனம்; அந் நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு ஆட்சி அதிகாரத்துக்கான தேர்தல்களின் போதும், படிப்படியாகத் தனது வாழ்வுரிமைக்கான இருப்பினைப் பறிகொடுத்தே வந்துள்ளது. ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடிய பெரும்பான்மை இனத் தலைவர்கள், தாம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக நாட்டுக்கு எவ்வாறான நல்ல திட்டங்களை அளிப்போம் என்று கூறி வாக்குக் கேட்பதை மறந்து, தமிழர்களிடமிருந்து எவற்றை எல்லாம் பறிப்போம் என்னுமாப்போல் பேசிவந்ததும், தேர்தல் முடிவுற்ற பின்னர் செயல்பட்டதும், அந்நாட்டின் முதல் முப்பது வருடங்களைச் சிறுபான்மை இனத்தினை அரசியல் போராட்டங்களிலும்; அதனைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபடவைத்தது. இப்போது முடிவடைந்துள்ள தேர்தலின் பயனாய், அந் நாட்டில் உண்மையான அமைதியும், அதன் அதிபர் தமது வாயால் கூறும் தமிழர்-சிங்களர் என்ற பேதமற்ற சம உணர்வும் இனியாதல் நிலைபெறவேண்டுமானால்………. சில வருடங்களுக்கு முன்னால் ஓர் மனித உரிமைப் போராளியாகத் தன்னை இனங்காட்டிக் கொண்ட இலங்கையின் இன்றைய அதிபர், இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் ‘அசுரத்தனமான’ வெற்றியை நன்கு பயன்படுத்தி இனப்பூசலுக்கு ஏற்ற ஓர் தீர்வினை எட்ட இயலும். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த இரு இனங்களும் ‘நாம் இலங்கையரே’ என்று மார்தட்டிச் சொல்லும் நிலையை உருவாக்குவது ஆளுபவர்களது கைகளில்தான் தங்கியிருக்கிறது. நியாயத்துக்காகக் கூடப் போராடும் திராணியற்றுக்கிடக்கும் ஈழத்தமிழினத்தின் தன்மானத்துக்கும், சுக வாழ்வுக்கும் பாதுகாப்பளிக்கும் அரசியல் கடமை ஆளும் பெரும்பான்மை இனத்துக்கே உண்டு. இதனை மறுப்பதும், அந்த இனத்தையே ஒறுப்பதும் மானுட விழுமியங்களை அழிப்பதற்கு ஒப்பானதாகும். இவற்றை இனியும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசமும், அண்டை நாடுகளும்கூட ஒருவகையில் குற்றவாளிகளே.

இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு?

யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், விடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த வரைக்கும் எந்தவொரு இனத்துவேச நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத இலங்கை இனவெறி அரசு தற்பொழுது மிக வெளிப்படையாகவே தனது இனத்துவேச நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம் நீண்ட காலமாகவே இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்திருந்தாலும் விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களோ, திலீபனின் தூபியோ இடிக்கப்படவில்லை. மாங்குளத்தில் சிங்களக் குடியேற்றங்களும் மேற்கொள்ளப் படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்செயலாக இலங்கைக்கு விடுமுறையில் சென்று வந்தவர் ஒருவர் தனது ஒளிப்பட கருவியில் பிடித்துக் கொண்டு வந்த சில ஒளிப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவர் எடுத்து வந்திருந்த ஒளிப்படங்களில் நயினாதீவு நாகபூஷணியம்மன் ஆலயத்தில் பிடிக்கப்பட்ட ஒளிப்படத்தில் காணப்பட்ட அறிவிப்புப் பலகைகள் என்னை ஒருகணம் அதிர வைத்தது. அந்த அறிவிப்புப் பலகைகள் எல்லாமே சிங்களத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். அதாவது சிங்கள இனவெறி அரசு தற்பொழுது மிகவும் வெளிப்படையாகவே இலங்கை சிங்களவர்களுக்குரிய நாடு என்று சொல்லாமல் சொல்வதாகப் படுகிறது. 1956 இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்று அதை வெளிப்படையாகவே நடைமுறைப் படுத்துகிறார்கள். கொழும்பில், கண்டியில் ஏன் கதிர்காமத்தில் கூட ஆலயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் அறிவித்தல் பலகைகள் எழுதப்பட்டிருக்குமிடத்தில், யாழ்ப்பாணத்தில் அதுவும் தமிழ் மண்ணில் இருக்கும் ஒரு இந்துக்கோவிலில் சிங்களத்தில் மட்டுமே அந்த அறிவித்தல் பலகையில் எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது இலங்கையின் வெவேறு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள், வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் செல்லும் தமிழ்மக்கள், மற்றும் தமிழரோ, சிங்களவரோ அல்லாத வெளிநாட்டுப் பிரஜைகள் அந்த ஆலயத்திற்கு வழிபடவோ பார்வையிடவோ சென்றால், அந்த பலகையில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்கு ஒரு சிங்களவரையோ அல்லது சிங்களம் தெரிந்த ஒருவரையோ தான் உதவிக்கு நாடவேண்டும். எனவே இந்த இனவெறி அரசு என்னத்தை சொல்லவருகின்றது என்பதை தமிழ்மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் மிகவும் மனவருத்தம் என்னவென்றால், தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளோ, சிங்கள இனவாத அரசுக்கு துணைபோகின்ற தமிழ் கட்சிகளோ, அந்த பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்மக்களோ கண்டுகொள்ளாததும், கண்டிக்காததும் தான்.