ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

எரித்திரியா எமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது

எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாம் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கு முற்பட்டிருந்தோம். ஆனால் எரித்திரியா தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவது மிகவும் பின்னடைவான விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. எரித்திரியா தொடர்பில் நாம் சில கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளோம். எரித்திரியாவில் விடுதலைப் புலிகள் பலமான வலையமைப்பை கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஊடகங்கள் எமது நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் எம்மால் எரித்திரியாவின் ஆதரவை பெறமுடியவில்லை. தற்போது நாம் மீண்டும் அவர்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம். பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அது அந்த நாடுகளுக்கு தெரியாது. நாம் தான் அதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.சில நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவது பயனற்றது, ஏனெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. சில நாடுகள் தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர் என தெரிவிப்பதை விரும்புவதில்லை. இது தொடர்பில் எமக்கு உள்ள சிறந்த உதாரணம் எரித்திரியாவாகும். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகமாகும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அழுத்தங்களை மீறி எம்மால் மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நாடுகளின் உதவிகள் இன்றி விடுதலைப் புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது என்பது கடினமானது. இராணுவ மோதல்கள் மூலம் பெறமுடியாததை, சில நாடுகளின் உதவிகளுடன் அடைந்துவிட விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் பெரும்பாலான தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறீலங்காவுக்கு மீண்டும் வந்து வாழ விரும்புகின்றனர். குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு .....

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில் அமர்த்துவதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை அள்ளி வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்த நாடுகள் மறுத்துள்ள போதும்- அதை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மேற்குலகின் செல்லப்பிள்ளையாக வளரவிருந்த மற்றொரு ஜியா- உல்- ஹக் தான், சரத் பொன்சேகா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம். ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்க முடியாதபடி இருக்கிறது மேற்குலகம். சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட உரிமை பெற்ற ஒருவர். ஆனாலும் அவரை விடுதலை செய் என்று கோர முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா. ஐ.நாவும் சரி- வேறெந்த நாடும் சரி அவரை விடுவிக்குமாறு கோரவில்லை. அப்படிக் கோர முடியாத வகையில்- அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தார்- ஊழல்களில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் என்பதால்- அவர்களே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இதனால் வெளிநாடுகள் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து- குட்டையக் குழப்பி வந்த சர்வதேசத்தின் முகத்தில் கரியைப் பூசுகின்ற வகையிலான இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதோ- சரத் பொன்சேகா தோல்வியுற்றதோ பெரிய விடயமல்ல. ஆனால் தமிழ்மக்களில் பெரும்பான்மையினர் தமக்கும் இந்தத் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்ற செய்தியைக் கூறியது தான் முக்கியமானது. இது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்பட்ட அடி. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விரும்பியது. மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் தமது கைக்குள் நிற்கமாட்டார் தமது சொற்படி ஆடமாட்டார் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கு பெரும் முயற்சிளை எடுத்தது மேற்குலகம். ஆனால் விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சமாதானம்... சமாதானம்...என்று பேசிப்பேசிக் காலத்தைக் கடத்தியே போராட்டத்தை அழித்து விடுவார் என்பது அவர்களின் கணிப்பு. எனவே சண்டைக்காரனான மகிந்தவை ஆட்சியில் ஏற்றி தமது படைபலத்தின் மூலம் மேலாதிக்கத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக் வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்குலகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் ரணில் விக்கிரமசிங்க குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போது மேற்குலம், தமிழ்மக்களின் வாக்குகளைக் கணக்குப் போட்டுப் பார்ததது. இவர்கள் அத்தனை பேரும் வாக்களித்திருந்தால் நிச்சயம் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார் என்று கருதியது. அந்த வாய்ப்பை இழக்க செய்து-தேர்தல் முடிவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புலிகள் இயக்கத்தை தண்டிக்க முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்தது. இந்தத் தடையின் விளைவாகப் புலிகள் இயக்கம் சமாதான முயற்சிகளில் இருந்து புறம் தள்ளப்பட்டு- அதில் நம்பிக்கையிழந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு வகையில் நான்காவது கட்ட ஈழப்போருக்கு புலிகளை உந்தித் தள்ளியதற்கு காரணமாக இருந்தது மேற்குலகம் தான். புலிகள் போரின் மீது விருப்புக் கொண்டிருந்தார்களா என்பதை விட சாதானத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பதற்கு காரணமாக இருந்தது மேற்குலகமே. இன்று அதே மேற்குலகம் விரும்பிய சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஸ தோற்கடித்திருக்கிறார். அதுவும் முன்னரைப் போன்று இல்லாமல் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தோல்வி. இதிலிருந்து மேற்குலகுக்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது- தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்ற எந்த வேட்பாளரையும் சிங்கள மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது. அடுத்தது- கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல என்பது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருந்தால் கூட ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்தமுறை தமிழ்மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குப் புலிகள் இருக்கவில்லை. ஆனாலும் பெருமளவிலான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால் இது சிங்களதேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான தேர்தலே என்ற கருத்தில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. இந்தக் கருத்து இப்போதைய விட, 2005 இல் மிகவும் வலுவானதாக இருந்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே தமிழ் மக்களிடம் புலிகள் வாக்களிப்பைப் புறக்கணக்குமாறு கோரா-திருந்தாலும் கூட- ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இது மேற்குலகுக்கு இப்போது ஓரளவுக்கேனும் புரிந்திருக்கும். அதாவது 2005 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணித்த விவகாரத்துக்கு புலிகள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. அடுத்து இந்தமுறை சரத் பொன்சேகாவின் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற- அவர்களுடன் கூட்டு வைக்கத் தயாராக இருக்கின்ற-எவரையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை. இது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கிறது. இதுபோலவே கடந்த முறை ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கப் போவதாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் சிங்களப் பேரினவாதம் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கும். அது ரணிலுக்குத் தென்னிலங்கையில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்;டிருக்கும். வடக்கு,கிழக்கில் ரணிலுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதாக உணர்ந்திருந்தால் சிங்கள மக்கள் மகிந்தவின் பக்கம் முற்றாகச் சாய்ந்திருப்பர். இந்தக் கட்டத்தில் ரணிலின் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. தாம் விரும்பியது போன்று ரணில் ஜனாதிபதியாகவில்லையே என்ற ஆத்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அப்போது எடுத்த தான் தோன்றித்தனமான முடிவு தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை.

அணு ஆயுத பாதுகாப்பு கூட்டம் ,

அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டத்தை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கூட்டி இருக்கிறார். இது ஏப்ரல் 12-ந் தேதி அமெரிக்காவில் தொடங்குகிறது. இதில் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அணு ஆயுத கடத்தலை தடுப்பது போன்றவை பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். `அடுத்த 4 ஆண்டுகளுக்குள் அணு ஆயுத பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள், தீவிரவாதிகளின் கையில் சிக்காமல் தவிர்க்க முடியும்' என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

சிலியில் பயங்கர பூகம்பம்!

சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கான்செப்சியானில் இருந்து 115 கி.மீ. தூரத்தில் கடற்பகுதியில் மையங்கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.8 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சிலி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி, 85 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உருவான ஆழிப் பேரலை (சுனாமி) 9 அடி உயரத்திற்குக் கிளம்பி சிலி நாட்டைத் தாக்கியதாக பசுபிக் பெருங்கடலிலுள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. ஆனால், ஆழிப்பேரலை 40 மீட்டர் உயரத்திற்கு எழும்பி தாக்கியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து நேர் கிழக்காக சிலியின் கடலோரம் அமைந்துள்ள மாலே எனும் சிறு நகரத்தில் என்ன நிகழ்ந்தது என்பதோ அல்லது 2 இலட்சம் பேர் வாழும் கான்செப்சியானில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. ஆனால், பூகம்பத்தாலும், ஆழிப்பேரலைத் தாக்குதலாலும் பேரழிவு ஏற்பட்டுள்ளதென அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியிருந்தது. அதைவிட ஒரே ஒரு புள்ளி மட்டுமே குறைவாக இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தோனிஷிய பூகம்பத்தில் மூன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிலி நாட்டில் வீடுகள் தரைமட்டம்: பூகம்பசாவு 300ஆக உயர்வு தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று அதிகாலை 3.34 மணியளவில் திடீர் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்த இந்த பயங்கர பூகம்பத்தால் சிலியில் முக்கிய நகரமான கான்செப்சியன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. தலைநகரம் சான்டியா கோவிலும் பூகம்பம் தாக்கியது. இதில் கான்செப்சியன் நகரம் மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. அங்கு பெரும்பாலான கட்டிடங்கள், வீடுகள், இடிந்து விழுந்தன. இந்த நகரை சுற்றி பல சிறிய நகரங்கள் உள்ளன. அங்கும் அதோ போன்ற பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை 3.34 மணி என்பதால் மக்கள் அயர்ந்த தூக்கத்தில் இருந்தனர். பூகம் பம் ஏற்பட்டதை உணர்ந்து தப்பி ஓட செல்ல முடியாமல் ஏராளமானோர் இடி பாட்டுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களில் 300 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாட்டுக்குள் இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி கிடக்கின்றனர். அவர்களிலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கம் மையம் கடலை ஒட்டிய பகுதியில் இருந்தது. எனவே சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராவீன்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்த தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதம் அடைந்தன. இங்கு உயிர் சேதம் எதுவும் இல்லை. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியதும் அமெரிக்காவின் ஹவாய் தீவு, ஜப்பான், நியூசிலாந்து, ரவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள 16 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். எச்சரிக்கை விடுத்தது போல பூகம்கம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையை தாண்டி வந்தன. ஆனால் முன் எச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சில குட்டி தீவுகளிலும் சுனாமி ஏற்பட்டது. அங்கும் சேதம் எதுவும் இல்லை. நியூசிலாந்து, ஜப்பானில் எதிர்பார்த்தபடி சுனாமி தாக்கவில்லை. எனவே இங்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இங்கும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. சிலி நாட்டில் 15 பிராந்தியங்கள் உண்டு. இதில் 6 பிராந்தியங்கள் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பாலங்களும் இடிந்து விழுந்து விட்டன. இதனால் சிலி நாட்டில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல் நாடே துண்டு துண்டாகி கிடக்கிறது. பூகம்பத்தில் 15 லட்சம் வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும், 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலி மந்திரி மாரினோ பெர்னாண்டோ கூறினார். பல இடங்களில் மின் கோபுரங்கள், டெலிபோன் கோபுரங்கள் சரிந்து விழுந்து விட்டன. இதனால் தலைநகரம் சான்டியாகோ உள்பட நாட்டில் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. டெலிபோன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. கான்செப்சியன் நகரில் பூகம்பம் ஏற்பட்டதும் 12 கட்டிடங்கள் தீப்பற்றி கொண்டது. அதில் 15 மாடி அடுக்குமாடி குடியிருப்பும் ஒன்று. அங்கிருந்த மக்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நில நடுக்கத்துக்கு பிறகு அடுத்தடுத்து 51 தடவை அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.9ல் இருந்து 6.9 புள்ளிகள் வரை இருந்தது. 2-வது தடவை ஏற்பட்ட அதிர்வு 6.1 ரிக்டர் ஸ்கேல் அளவாக இருந்தது. அப்போது சிலியின் பக்கத்து நாடான அர்ஜென்டினாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு 2 பேர் பலியானார்கள்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல்

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை.கடந்த வாரம் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மாடயிரா தீவில் வீசிய புயலுக்கு பலர் பலியாகினர். இந்த நிலையில் இங்கு தற்போதும் புயல் வீசுகிறது. மரங்கள் வேரோடு சாய்கிறது. அதில் ஒரு சிறுவன் உயிர் இழந்தான். ஸ்பெயினில் கனேரி தீவுகளில் புயல் தாக்கியது. அங்குள்ள லா பால்மா, குரேன் கனேரியா, டெனேரிப் ஆகிய இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் சேதம் அடைந்தன. இங்கும் வீடு இடிந்ததில் ஒரு பெண் பலியானார். பிரான்ஸ் நாட்டிலும் இப்புயலின் தாக்கம் இருந்தது. புயல் காரணமாக மழை பெய்தது. தெற்கு பைரென்ஸ் பகுதியில் மரம் விழுந்ததில் ஒருவர் உயிர் இழந்தார். மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார்

ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த, குழந்தை குடி அகல்வோர் திட்டம் என்ற இந்த திட்டத்தின் அடிப்படையில், ஏழைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு மேலும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற உறுதிமொழியில் அனுப்பப்பட்டனர். ஆனால், இவ்வாறு அனுப்பப்பட்ட குழந்தைகளில் பலர் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு உள்ளானார்கள். இந்தச் சம்பவம் மிகவும் அவமானகரமான விஷயம் என்று வர்ணித்த பிரவுன், இவ்வாறு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சிறார்களது குழந்தைப்பருவம் அபகரிக்கப்பட்டது என்றார். இதே போன்ற ஒரு மன்னிப்பை ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அவர்களும் நவம்பர் மாதத்தில் கோரினார்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சிறீலங்காவும் – மாலைதீவும் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளும்

சிறீலங்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான புலனாய்வுத் தகவல்கள் பரிமாறிக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கை குறித்து மாலைதீவை எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகிதபோகல்லகம தெரிவித்துள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் வேறு வழிகளில் அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைப்புக் காட்டிவருவதாகவும் ரோகிதபோகல்லகமவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா மாலைதீவு போன்ற நாடுகளை மையங்கொண்டு இவர்கள் செயற்படக்கூடும் என்றும் எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிhந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாதிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் 4 ஆயிரம் விமானிகள் வேலை நிறுத்தம்

ஜெர்மனியில் ஏர்லைன் லுப்தான்சா விமான நிறுவனம் பிரசித்தி பெற்றது. இதில் சுமார் 4 ஆயிரம் விமானிகள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி 4 நாட்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 3 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் பல விமானங்களின் போக்குவரத்து தாமதமாகவும் நடைபெறுகிறது. எனவே பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டம் வருகிற 25-ந்தேதி வரை நடைபெறுவதால் இதில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்கள் வாபஸ் பெற்று வேறு விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு புதிய பாதுகாப்பு சோதனை

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் 10 நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு முகம் மற்றும் கைரேகை பரிசோதனைகள் உள்ளிட்ட புதிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் தெரிவித்தார். அதே சமயம் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்பட உள்ள பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெற்றுள்ளன என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருப்பதை கெவின் சூசகமாக தெரிவித்தார்.

103 சிறுமிகளை கற்பழித்த காமுக மருத்துவர்

அமெரிக்காவில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ஒருவர் கடந்த பல ஆண்டுகளில் 103 சிறுமிகளை கற்பழித்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உலகிலேயே நடந்துள்ள மிக மோசமான பாலியல் குற்றம் இது என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டேலவேர் மாகாணத்தில் குழந்தைகள் சிறப்பு மருத்துவராக இருப்பவர் எர்ல் பிராட்லி. இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டதால் இவர் 103 சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மீது 160 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெலவேர் மாகாணத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட வழக்காக இது உள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அந்த மருத்துவரின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1998ம் ஆண்டு முதல் இந்த படுபாதகச் செயலை அந்த மருத்துவர் செய்து வந்துள்ளார். அவ்வாறு குழந்தைகளை பாலியல் கொடுமைப்படுத்தும் போது அதனை அவர் வீடியோவிலும் பதிவு செய்து வைத்துள்ளார். இதனிடையே பிராட்லியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பாதிக்ப்பட்டவர்களோ அல்லது அவர்களின் பெற்றோர்களோ புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு.......................

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா? இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை. இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள். வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார். இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது. சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை. சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்? ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள். தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை. ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது. ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே. தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல. இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன? டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது.

அமெரிக்க நீதிமன்றில் இன்று வாதாடுகிறார் ருத்திரகுமாரன்

தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப் பட்ட அமைப்புகளுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இன்று நேரில் ஆஜராகி வாதிடவுள்ளார் என இணையத்தளத் தகவல்கள் கூறுகின்றன. மனிதாபிமான உதவிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தல் இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு களை தெளிவாக்கும்படி அவர் நீதிமன்றத் தில் வாதிடுவார் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையால் தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்ட இயக்கங்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது அந்நாட்டு தேசப்பற்றுச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்நிலையில், அது தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ருத்திரகுமாரன் வாதாடவுள்ளார் என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் முதல் தமிழர் அவர்தான் என்றும் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது?

இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். அதே சமயம் பிரிட்டனில் 'பர்கா' உடைக்கு தடைவிதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரான்ஸில் வேண்டுமானால் 'பர்கா'வுக்கு தடை விதிப்பது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் அதற்கு இங்கு (இங்கிலாந்து) தடை விதிப்பது சாத்தியமில்லை

புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்,

.விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசுடன் முரண்படாமல் கையாளுவதற்கு சிறிலங்காவில் அரசியல் அதிகாரம் படைத்த தமிழர் சக்தி ஒன்று இந்தியாவுக்கு அவசர தேவையாக உள்ளது. தனது இந்த தேவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே சரியான தெரிவாக இருக்கமுடியும் இந்தியா கருதுகிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தபோது, தனது திட்டம் கைமீறிப்போய்விட்டதாக இந்தியா பீதியுற்றபோதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வசமான களமாக தற்போது வந்து வாய்த்திருக்கிறது. இந்த தேர்தலில் தமது ஆளுகைக்குள் செயற்படக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்குவதன்மூலம் மட்டுமே சிறிலங்காவில் தனது ஏனைய திட்டங்களை முன்னகர்த்த முடியும் என்று இந்தியா நம்புகிறது. அவ்வாறு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடிய கூட்டமைப்பினில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தீவிர சக்திகள் இடம்பெறுமாயின், அது கூட்டமைப்பின் ஊடாக முன்னகர்த்த உத்தேசித்துள்ள எதிர்கால முயற்சிகளுக்கு பாரிய தடங்கலாக அமையும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கூட்டமைப்பினுள் நிச்சயம் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தமிழ் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு தாம் இடமளிப்பதாக கட்சியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது, அதற்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைமை ஒப்புதல் அளிக்காததிலிருந்து, கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரை வெளியகற்றவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைமை எவ்வளவுதூரம் உறுதியாக நிற்கிறது என்பது புலனாகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை இந்தியாவின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டால், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டின் அழுத்தத்துக்கு உள்ளாகவேண்டிய தேவையில்லை என்று சோனியா அரசு ஆழமாக நம்புகிறது. கருணாநிதி தலைமையிலான மாநில அரசு தனக்கு சார்பாக என்றென்றும் இருந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளபோதும், தெலுங்கானாவில் தற்போது தனிமானிலமாக அமைக்கக்கோரி மேற்கொள்ளப்படுகின்றன மக்கள் கிளர்ச்சி போல எனையா மாநிலங்களிலும் வேறு விடயங்களில் தலைதூக்குமா என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, எந்த ஒரு விடயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசினை பணயக்கைதியாக வைத்திருக்கக்கூடிய - சாத்தியமான - விடயங்களை விட்டுவைக்காமல் அவற்றை தானே நேரடியாக அணுகவேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக உள்ளார்கள். இதன் ஒரு நகர்வாகவே, சிறிலங்கா அரசியலையும் தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் அதனை தான் நினைத்ததுபோல வைத்திருக்கவும் இந்தியா தீர்க்கமான முடிவுடன் காய்நகர்த்திவருகிறது.

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல்,,,,

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள எவருக்காவது தெரியுமா? ஏன்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள். ஏன்பதும் உண்மையே. கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி சிவநாதன், கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதம் யாருக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலக்கியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது. என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும். என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது. இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே. சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மீண்டும் உருவாக்கப்படும் மனிதப் புதைகுழிகள்......

வவுனியா புறநகர்ப்பகுதியில் கொத்துக் கொத்தாக தமிழர்களது உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. வவுனியா செட்டிக்குளத்திற்கு அண்மையாக உள்ள பகுதியில் உள்ள சுடுகாட்டில் தினமும் 50,100 உடல்கள் கொண்டுவரப்பட்டு மண் அகழும் பாரிய இயந்திரங்கள்(பெக்கோ) மூலம் குழிகள் தோண்டப்பட்டு ஒன்றாகப் போட்டு புதைக்கப்படுவதாக நேர்கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இராணுவத்தினரால் கொண்டுவரப்படும் உடல்கள் புதைக்கப்படுவதை அடுத்து வவுனியாவில் பணியாற்றிவரும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்களிடம் விசாரணை நடாத்திவருவதாகவும் தெரியவருகின்றது. முள்ளிவாய்க் கால் பகுதியில் கடந்த மே மாதம் தமிழரின் வாழ்வு, கலை, கலாச்சாராம், பண்பாடு, சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட, சரணடைந்த பல இலட்சக்கணக்கிலான மக்கள் முட்கம்பி வதைமுகாமில் சிறை வைக்கப்பட்டும் சரணடைந்த போராளிகள், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சுமார் பதினோராயிரத்திற்கு மேற்பட்டோர்கள் சிறப்பு தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் அண்மை நாட்களாக வவுனியா புறநகர் பகுதியில் கொத்து கொத்தாக உடல்கள் புதைக்கப்பட்டு வருவதை அடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எதுவித தொடர்புகள் ஏதுமற்ற நிலையில் சிறப்பு முகாம் என்ற போர்வையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பதினோராயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளது குடும்பத்தவர்கள், உறவினர்கள் இதனால் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமது உறவுகளது நிலை தெரியாது இருக்கும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என பரிதவித்துக் கொண்டுள்ளனர். என்ன கொடுமை உலகுக்கு தமிழர்களே சொல்ல போராடுங்கள் எப்படி தமிழர்கள் மறைமுகமாக் எந்தவித ஆரவராம் இன்றி கொள்ளபடுகிறான் தமிழ்நாட்டு உறவுகளே புலம்பெயர் தமிழர்களே ஈழ தமிழர்களை காப்பாற்றபோராடுங்கள் ஈழமைந்தன்

மொழி காத்த தலைவன்

மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான். ஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது. தமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம். அவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது. அந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண். ஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமானது. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள். ஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக. சிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது. இன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது. தமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது. ஆனால் தமிழ் அப்படிப்பட்டதா? கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா? அதை எப்படி இழப்பது? அதை காப்பது நமது கடமையல்லவா? ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான். இனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது. காரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள். தமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான். இனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா? என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள். ஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா? இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா? தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா? நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா? கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது. நமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா? வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே! இதை நம்மால் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? ஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். ஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல. நம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான். எந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான். இப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம். தமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான். ஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம். -கண்மணி-

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நான் கிளி நொச்சிக்கு வந்திட்டேன் ....

அக்கா நாங்கள் கிளி நொச்சிக்கு வந்திட்டம். போன புதன் கிழமை வந்தனாங்கள் கோல் பண்ண ஏலாமல் போச்சு , பற்றி சார்ஜ் இறங்கிவிட்டுது. முந்த நாள் வீட்டுக்கு போயிட்டம். ரவுணுக்க இலவசமா சார்ஜ் போட்டு கொடுக்கிறாங்கள் அங்க வந்து சார்ஜ் பண்ணிட்டுதான் கதைக்கிறன். வீடுகள், இயக்கத்தின்ர கட்டடங்கள் எல்லாம் கள்ளர்களோ ஆமியோ ஆரெண்டு தெரியாது எல்லாம் உடைச்சு கொண்டு போயிட்டாங்கள். பத்தைகள் வளர்ந்து இருக்கு . இயக்கத்தின் காவல்துறை ஆமி பாவிக்கிறாங்கள். வெற்றி மனை மன நோயாளர் விடுதி ஆமி முகாம் போட்டிருக்கிறான்.வெண்புறா அமைப்பின் காணிதான் பெரிய புத்த கோயிலாக இருக்கின்றது. சமாதான செயலகம், அரசியல் துறை செயலகம் ஆமிதான் பாவிக்கிறான் போல இருக்கு. பொது கட்டடங்கள் எல்லாம் முதல் வந்த சனங்கள் உடைச்சு போட்டுது போல இருக்கு முதல் வந்த ஆட்கள் காணிகளுக்க கல்லுகுவியல்கள் கிடக்குது. மற்றும்படி ஒரு அரச மரமும் மிச்சம் இல்ல எல்லா இடமும் புத்தர் சில வைக்கப்பட்டு இருக்கு. சனங்கள் கூடுதலாக வந்திட்டுதுகள் இப்பதான் மூன்று கடை திறந்திருக்கினம். புத்த கோயில்களுக்கான பூசைகள்தான் இங்க கூட நடக்குது ஸ்பீக்கரில கூட பூசை கேட்கலாம். சிங்கள சனம் நிறைய வந்து புத்த கோயில்ல கும்பிட்டு போகுதுகள். குருகுலம் ஜெயந்தி நகர் பக்கம் போனோம் . அங்க சின்ன அக்காவின்ர காணிபார்த்தோம். அப்படியே இருக்கு வீட்டைதவிர. குருகுலம் கட்டடங்களையும் கள்ளர் வந்து இடிச்சு இருக்கிறாங்கள். பிறகு ஜி.எஸ் (கிராமசேவகர்) அந்த இடத்தில போட் போட்டிருக்கிறார். அந்த இடத்துக்கு உள்ளே யாரும் போனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று. குருகுலம் ஆட்கள் வந்திட்டினம் இல்லத்தினை திரும்ப ஆரம்பிக்க கதைச்சு கொண்டிருக்கினம். ஈழ நாதம் கட்டடத்தில் ஆமி முகாம் போட்டிருக்கிறான். எல்லாம் சிங்கள மயமாதான் இருக்கு . ஆனால் காணி பறிபோய்விடும் என்பதால் எல்லா சனமும் வந்து காணிபதிவுகளை செய்து காணிகளை துப்பரவாக்குதுகள். ஆமி இப்போ செக் பண்ணுவதில்லை. கந்த சாமி கோயில் பக்கம் புனர்வாழ்வு கட்டடத்தில இருந்த ஆமி வேற இடம் போயிட்டாங்கள். இனி கோயில் பூசை ஒழுங்காக நடக்கும் என்று நினைக்கிறன்.புனர்வாழ்வு கட்டிடம் மேல் மாடி இடிஞ்சு இருக்கு. ஆனால் இப்போ ஒருவரும் இல்லை. இப்போ காணிப்பதிவுதான் மும்முரமாக நடக்குது. தெரிஞ்ச ஆட்களுக்கு சொல்லுங்கோ காணி உரிமையாளர்களை வந்து பதிய சொல்லி பதிஞ்சு துண்டு எடுக்காவிட்டால் அதனை வேறு தேவைக்கு எடுத்து விடுவாங்கள்.ஸ்கூல் எல்லாம் நடக்குது. சென்றல் கொலிஜ் இல் நேற்று கொஞ்ச சனம், 55 ம் கட்டை சனங்கள் வந்திருக்குதுகள் நாளைக்கு விடுவாங்கள் போல இருக்கு. போன 12 ஆம் திகதி ஓமந்தைக்கு தம்பிய பார்க்க போனம் பிரச்சினை இல்லை எனக்கு தெரிஞ்ச போராளிகளையும் பார்த்தனான். எப்ப விடுவாங்கள் என்று எங்களிடம் கேட்டாங்கள். நாங்கள் என்ன செய்வது? கெதியா விடப்போறாங்களாம் என்று சொன்னேன். அடுத்த மாதம் 12 ஆம் திகதி போவேன். எங்கட வீட்டிற்கு பக்கத்தில சானங்களுக்க காணி சண்டை நடக்குது . இனி இஞ்ச அதுதான் நடக்க போகுது. எங்கட காணிக்க கூட சிலபேர் வந்து இருந்தவ ஆனால் நாங்கள் வந்ததும் போயிட்டினம். இஞ்ச சனங்களுக்குள்ள சண்டைகள் நடக்குது. இயக்கத்திற்கு வேலை செய்த ஒரு குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டு சனத்திற்கும் சண்ட நடந்து இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் திரும்பவும் வவுனியா போயிட்டினம். அந்த இயக்கத்திற்கு வேலை செய்த குடும்பம் முகாமில் ஆட்களை காட்டி கொடுத்தார்கள் தங்களின் சொந்த காரர்களை காட்டி கொடுத்தார்கள் என்றே மற்ற ஆட்கள் சொல்லுகினம். சனம் எல்லாம் ஒரு வித்தியாசமான சூழலில் இருக்கின்றார்கள். களவு, சண்டை, குடி வெறி, கூடாத வார்த்தைகள், சேட்டைகள், எல்லாம் மலிஞ்சு போய் இருக்கு.ஆமி காரங்களுக்கும் பொலிசுக்கும் நல்ல பொழுது போக்கு விளக்கம் தீர்க்குறதில அவங்களுக்கு வாழ்க்கை வெறுக்கும் போல இருக்கு. அவரையும் ( கணவர்) எல்லா இடமும் தேடி பாத்திட்டம் ஆனால் ஒரு இடமும் இல்ல, முள்ளிவாய்க்காலில இருந்து சனங்களோட வந்தவர் எண்டு தெரிஞ்ச ஆட்கள் எல்லாரும் சொல்லுகினம். ஆனால் காண இல்லை. எனக்கு பிறகு காயப்பட்டு கப்பலில வந்த ஆட்கள் சொன்னார்கள் இவரை தாங்கள் ஆஸ்பத்திரியில் கண்டது என்று. எல்லா இடமும் அறிவிச்சு இருக்கிறம் பார்ப்பம். ஆமி காரங்கள் நல்லா கதைக்க பழகிவிட்டாங்கள். இனிமேல் சமாதானமாக இருப்பம் உங்க பக்கத்திலையும் இழப்பு எங்க பக்கத்திலையும் இழப்பு இனிமேல் சமாதானமாக இருப்பம் என்று கதைக்கிறாங்கள். தமிழீழம் கிடைக்காட்டிலும் பரவாயில்ல எங்கட சனங்கள திருத்துறதுக்கு தலைவர் வரவேண்டும். இல்லாவிட்டால் எங்கட சனம் தங்களுக்கு உள்ளேயே அடிபட்டு சாகும் போல கிடக்கு. இப்பவே எடுத்தது எல்லாத்துக்கும் காசுகேட்க வெளிக்கிட்டங்கள். ஏதோ பார்ப்பம் .... வாற சனி கிழமை ஒருக்கால் எடுங்கோ.. ஒகே அக்கா

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்?

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும்: ஒபாமா அச்சம் அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில், “இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது. சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதையை மட்டுமே அமைத்து வருகிறோம். எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்பை நாம் உருவாக்க தவறிவிட்டோம். இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. தூய்மையான மின்சக்தி தொழில்நுட்பத்தை எந்த நாடு கண்டுபிடிக்கிறதோ அந்த நாடுதான் 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தலைமை தாங்கப் போகிறது. இந்தப் போட்டியில் நாம் காத்திருக்க முடியாது. ஏனெனில் இந்தியா காத்திருக்க போவதில்லை. சீனா காத்திருக்கப் போவதில்லை” என்றார்.

தாஜ்மஹால் என்றால் நினைவுக்கு வருவது ...............

தாஜ்மஹால் என்றதும் நினைவுக்கு வருபவன் சாஜகானே அன்றி, தாஜ்மகாலை கட்டிய கொத்தனார் அல்ல' . அதுபோல் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அழிக்கப்பட்டமைக்கு எமது முறையான தலைமையே காரணம் என மக்கள் நம்புகின்றார்கள். அதனால்தான் நாம் மறுபடியும் வெற்றி கொள்ள முடிந்தது' எனத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இந்திய ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'சிறிலங்காவில் சுமுகநிலை தோன்றுவதற்கு இந்தியா மிகுந்த பலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியா எமது உறவினர். உதவி புரிந்துவரும் மற்றைய நாடுகள் எமது நண்பர்கள் ' எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் வாக்குகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, தமிழ்மக்கள் தமக்கு வாக்களிக்காதது குறித்து தமக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் தாம் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், தமக்கு அந்த ஆச்சரியத்தைத் தந்திருப்பவர்கள் குறிப்பாக சிங்களக் கிராமமக்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை வாக்குகள் வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். தமிழ் அரசியற் தலைமைகள் உரிய உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், புதிய தமிழ்தலைவர்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதெனவும், அவவ்வாறு உருவாகும் புதிய தலைமைகளுடன், புதிய சிந்தனைகளின் அடிப்படைடயில் பேச்சுவார்த்தை மெற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தைப் பெற முடியுமா?

நாம் தெளிவாகச் சிந்தித்து அதன் அடிப்படையில் செயலாற்றும் காலம் வந்துள்ளது. நமக்கு என்ன வேண்டும்? தமிழீழம். அதைவிடக் குறைவான எதுவும் வேண்டாம். தமிழீழத்தைப் பெற முடியுமா? நிச்சயமாக நம்மால் முடியும். நிச்சயமாக நம்மால் முடியும். எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்கிறீர்கள்? யூதர்களிடம் இருந்துபடிப்பினை தான் ! முற்றுமுழுதாக அழிக்கப்பட்ட பின்னர், அவர்களது மொழி கிட்டத்தட்ட வழக்கற்றுப் போகும் தருவாயில் இருந்த போதும் அவர்கள் சாம்பல் மேட்டில் இருந்து எழுந்த பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்தார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? யூதர்களின் வரலாற்றைப் படிப்போம் ! அது எந்தப் பதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவை ஒரேமாதரியான வரலாற்றைத்தான் சொல்கின்றன. ஒருமுறை படித்து முடித்த பின்னர் செயலில் இறங்குங்கள்! நாம் யூதர்களாக முடியுமா? நம்மிடம் ஒற்றுமையில்லையே ! நாம் யூதர்களைப் போல் வரவேண்டும். அவர்கள் அய்க்கியமாக இருந்தார்கள் என்று யார் சொன்னது? நாம் வேறு வேறு நாடுகளில் வாழும் 7 கோடி மக்கள். நம்மிடம் எல்லா வளமும் இருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும்? வீண் பேச்சுப் பேசுவதையும் எதிர்மறையாகப் பேசுவதையும் சிந்திப்பதையும் நிறுத்த வேண்டும். உங்களிடமும் மற்றவர்களிடமும் நம்பிக்கையை ஊட்டுங்கள்! இலக்கில் கண் வையுங்கள். ஆனால் அந்த இலக்கை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகளை உருவாக்குங்கள்! பாதைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நமது இலக்குத் தவறக்கூடாது. பிரான்சுதமிழீழமக்கள்பேரவை , ஐரோப்பியதமிழ்மக்கள்அவை , அமெரிக்க தமிழர்களின் அரசியல் செயல் அவை, உலகளாவியதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் அவை, கனடிய தமிழர் பேரவை, பேர்ல் உள்ள அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் அமைப்புக்களை ஆதரியுங்கள். செயல் செய்யுங்கள், எண்ணங்களை, நேரம் மற்றும் வளங்களைவழங்குங்கள். புறக்கணிப்பு, ஆதரவுதேடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். எல்லோரும் அழைத்து நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கத் தொடங்கினால் நாம் வெற்றி பெறுவோம்! அழைப்புக்கு நீங்கள் காத்திருந்தால் நாம் வெற்றியடைய மாட்டோம்! ஓரு நாளில்ஒரு மணி நேரத்தையாவது செலவிடுங்கள்! எதைக் கொடுப்பது என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். மழையாகட்டும் வெய்யிலாகட்டும் தொடர்ந்து பங்களிப்புச் செய்யுங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக................

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியயான்று உருவாக்குவதற் குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலை மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி ருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுப் பருத்தித்துறையில் நடைபெற்ற இளைஞர் குழுவுடனான சந்திப்பில் மறை முகமாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலமும் என்ற தலைப்பில் பருத்தித்துறை இளைஞர் அணியினரால் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றுக்கு எனக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இளைஞர்களிடம் நான் ஒரு கருத்தை முன் வைத்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி கட்சி ஒன்று உருவாக்குவோமானால் அக் கட்சியிடம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் கிராமிய மட்டத்திலிருந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு வேட்பாளராகப் போட்டியிட்டால் நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என இளைஞர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்இன்று முடிபை அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு கூட்டமைப்பின் முடிபு அறிவிக் கப்பட்டால் நாளை எனது முடிபை அறிவிப்பேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை இளைஞர் அணியினரின் கலந்துரையாடல் நேற்று மாலை பருத்தித் துறை சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற் றது. இக் கலந்துரையாடலில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்றனர்.

அர்ஜனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி

நாடாளுமன்றத் தேர்தல் நாடுபூராகவும் சூடு பிடித்துள்ளது. எதிர்பார்த்திராத பலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். தேர்தல் களத்தில் இவர்கள் குதிப்பது கராம்பு போட்ட கறிபோல தேர்தலிலும் கமகம வாசம் வீசவே செய்யும். முன்னைய மூன்றாம் தரத் தமிழ்ப் புத்தகத்தில் ஒரு கதை. நிமால் பந்தையடி. பாலா பந்தைப்பிடி. அது அந்தக் கதையின் சாரம். சிங்கள நிமாலும் தமிழ்ப் பாலாவும் ஒற்றுமை யாக விளையாடுகின்றனர் என்பதை காட்டுவதற் காக அந்தக் கதை சோடிக்கப்பட்டது. கதைகதையாக இருந்தமையால் பாடம் பாதை மாறியது. நிமாலும் பாலாவும் பந்தை மட்டுமல்ல; வெடி குண்டையும் அடித்துப் பிடித்து விளையாடி பார் வையாளர்களை பரலோகத்திற்கு அனுப்பி வைத்தனர். நிமாலும் பாலாவும் சேர்ந்து பந்தை அடியுங் கள், பாகிஸ்தானையும், சீனாவையும் தோற்கடி யுங்கள் என்று பாடப்புத்தகத்தில் கதை எழுதியி ருந்தால் நிலைமை வேறாகி இருந்திருக்குமோ என ஏழை மனம் எண்ணுகிறது. விளையாட்டின் ஊடாக இன ஒற்றுமையை வலியுறுத்தியதெல்லாம் கடந்து இப்போது எல்லாம் விளையாட்டாக மாறிவிட்டது. இந்த விளையாட்டில் நாடாளுமன்றமும் விளையாட்டு மைதானமாக மாறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தல் ஏற்படுத்திக் கொடுக்குமென நம்பலாம். ஆம். எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக் கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெய சிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும். நாடாளுமன்றத்தில் அடிக்கப்படும் பந்து எங் கள் தமிழ் எம்.பிக்களின் தலைகளில் படாமல் இருக்க-சுசந்திகாவின் மூச்செறிந்த ஓட்டத்தால் எங்கள் மூத்த தமிழ் எம்.பிக்களின் இதயத் துடிப்பு தடைப்படாமல் இருக்க அந்த ஆண்டவன் தான் உதவவேண்டும்.

விசாரணை மே 14 ஆம் திகதிக்குள் நடத்தவேண்டிய நிலை

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் மேமாதம், 14 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய ஒருவர் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு இராணுவச்சட்டத்திற்கு உட்படுத்தப்படுவர் என்ற அடிப்படையில் இந்த வரையறை தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காலப்பகுதிக்குள் அவர், இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாவிட்டால்,சிவில் நீதிமன்றத்திலேயே அவருக்கு எதிரான விசாரணையை நடத்தமுடியும் என சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் எனினும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. சிரேஸ்ட படையதிகாரியான லெப்டினன்ட் ஜெயசூரிய மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரி ஜெனரல் தயா ரட்நாயக்க ஆகியோர் சரத் பொன்சேகாவின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சரத் பொன்சேகாவின் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், இராணுவத்தின் நீதிபதி சட்டத்தரணி ஜெனரல் இந்திர விஜயரட்ன, வழக்கு விசாரணை தொடர்பான திகதி உட்பட்ட தீர்மானத்தை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், ஊடக இணைப்பாளர், தங்குமி;ட வசதிகளை செய்து கொடுத்தவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைகளுக்கு கைதுசெய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வடக்கிலும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளது

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் போட்டியிடவுள்ளது. இத் தகவலை கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். வடபகுதி மக்களின் வேண்டுகோளின் பேரில் தமது கட்சி, வன்னி மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் வேட்புமனுத் தாக்கல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சி கிழக்கு பிராந்தியத்திற்கு மாத்திரம் உரித்தான கட்சி அல்ல. அது சகல பிராந்திய மக்களுக்கும் உரித்தான கட்சி என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

சனி, 20 பிப்ரவரி, 2010

சக்தி தொலைக்காட்சியில் மின்னல்.............

சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர். அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்மையை கூறுவதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மை மறுதலையானது, மகிந்த ராஜபக்சாவின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சாவின் அமைப்பான தருன்யட்ட ஹெடக் என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராக சிறீரங்கா செயற்பட்டு வருகின்றார். அவர் நமால் ராஜபக்சாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக சித்தரித்து நாமலை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் சிறீரங்கா ஈடுபட்டு வருகின்றார். சிறீலங்கா மகிந்தாவையோ அல்லது நாமாலையோ ஆதரிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது.

ஹமாஸ் தலைவர் கொலை .........?

ஹமாஸ் இயக்க தலைவர் மஹமூத் அல் மபூவாவைக் கொலை செய்தது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பினர்தான் என்பது நிரூபணமானால் மொசாத்தின் தலைவர் மெயர் டேகனைக் கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துபாய் போலீஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 20ம் தேதி துபாய்க்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர் மபூவா அவரது ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டார். ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அவரை எந்தவித ஆயுதமம் இல்லாமல், தரையில் தள்ளி மூச்சுத் திணறடித்துக் கொன்றனர். இந்தக் கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மொத்தம் 11 இஸ்ரேலியர்கள் இந்தக் கொலைச் சதியில் இடம் பெற்றிருந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பெண் ஆவார். இந்தக் கும்பல், 11 ஐரோப்பியர்களின் பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தி துபாய்க்கு வந்துள்ளது. அவர்களில் 6 பேர் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டுகளில் முறைகேடு செய்துள்ளனர். இந்த நிலையில், மபூவா கொலை வழக்கில் மொசாத்துக்குத் தொடர்பு இருந்தால், மொசாத் தலைவருக்கு எதிராக இன்டர்போர் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் காவல்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டாஹி கல்பான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மபூவா கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பது உறுதியானால், மெயர் டேகனுக்கு எதிராக இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்து துபாயிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கொலையில் இஸ்ரேலுக்குத் தொடர்பு இருப்பதாக 99 சதவீதம் நான் நம்புகிறேன். மொசாத் இந்த குற்றத்தின் பின்னணியில் இருந்தால் நிச்சயம் அது தண்டிக்கப்பட வேண்டும். அதன் தலைவர் கொலையாளியாக கருதப்பட வேண்டும் என்றார். இதற்கிடையே மபூவா படுகொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 11 இஸ்ரேலியர்களின் புகைப்படங்ளையும் துபாய் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்ய ரெட் அலர்ட் உத்தரவை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த 11 பேருமே தற்போது இஸ்ரேலில் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் இஸ்ரேல் நிராகரித்துள்ளது. சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும், துபாய் காவல்துறை தலைவர் மொசாத் குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமே இல்லை. அடிப்படையற்ற புகார் கள் இவை என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மபூவா முதலில்எந்தச் சூழ்நிலையில் இறந்தார் என்பதையே துபாய் காவல்துறை விளக்கவில்லை. வெறும் கண்காணிப்பு காமராவில் பதிவான சில வீடியோ படங்களை மட்டுமே அது காட்டி வருகிறது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர், சிலர் நடந்து கொண்டுள்ளனர். இதை ஆதாரமாக கருத முடியாது என்றார். இதற்கிடையே பாஸ்போர்ட்டில் மோசடி செய்தது தொடர்பாக இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உரசல்கள் தொடங்கியுள்ளன. சந்தேகப்படும் 11 பேரில் 6 பேர் இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆறு பேரும், பிரிட்டிஷ் இஸ்ரேலியர்கள் ஆறு பேரின் பாஸ்போர்ட்டுகளைத்தான் மோசடியாக திரித்து துபாய் போயுள்ளனர். இதுதவிர 3 அயர்லாந்து பாஸ்போர்ட்டுகள், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு ஜெர்மனி பாஸ்போர்ட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான விமான டிக்கெட்டை வாங்குவதற்கு அமெரிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்தும் துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடி செய்தது உண்மையாக இருக்குமானால் இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கும் என்று இங்கிலாந்து தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் நிவாரணம் என்ற பெயரில்...........

நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தி;ல் மீள்குடியமர்ந்துள்ள, மக்கள் மத்தியில் காணாமல் போனோரின் விபரங்களை பெற்றுக்கொடுத்தல், தொழில் வாய்ப்பு, நிவாரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே இந்த உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மற்றும் வன்னியின் அமைப்பாளர் திலக்குமார உடுகமவின் தகவல்படி இதுவரை யாழ்ப்பாணத்தில் 26 ஆயிரம் பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந்த விடயங்களுக்காக நிரப்பப்படும் விண்ணப்பம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்தோரிடம் இருந்து 20 ரூபா அறிவிடப்படுகிறது. இடம்பெயர்ந்தோரில் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை விண்ணப்பங்கள் எனத் தெரியாமல், தமது காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்கும் விண்ணப்பங்களாக அதனை கருதி அதில் கையொப்பமிட்டு கையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில், மக்களிடம் இருந்து பல்வேறு உறுதிமொழிகளின் அடிப்படையில் பணம் அறவிடப்பட்டு வருவதாக முறைப்பர்டுகள் கிடைத்துள்ளன.

கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி விட்டனராம் ..

கொழும்பில் கடந்த இருபது வருடங்களில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்தார்கள் என்றும் தற்போது 30 வீதமாகக் குறைந்து போய்விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் - 2001இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத் தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தின் சனத் தொகை 2,251,274 ஆகும். இதில் சிங்களவர்கள் 1,724,459 பேர். இங்கு இலங்கைத் தமிழர்கள் 247,739 பேரும், இந்தியத் தமிழர்கள் 24,821 பேரும் முஸ்லிம்கள் 202,731 பேரும் வாழ்கின்றனர். இந்த நிலையில் - மகிந்த ராஜபக்ச கொழும்பில் சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து விட்டதாகத் தவறான புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்தாகவும் இது அமைந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவை

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயம் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்தா கொக்னி ரெக் என்ன அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட கானொளிகள் உண்மையானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ?

இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடெலகியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவில் உள்ள அலுவலகம் துணை புரியும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் ஒரு அலுவலக்தை கூட இயங்கு நிலையில் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலேயே அலுவலகங்கள் வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கானதா அல்லது இந்தியாவிற்கானதா

அரசின் அடுத்த குறி ..........?

வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. “வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்கல்களு டன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள தனிப்பட்ட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்,

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள இரு ஆயுதக் குழுக்களின் முகாம்க ளையும் அகற்றி வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி வர்த்தகர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதேசத்தில் கடந்த ன்று மாத காலப் பகுதிக்குள் எட்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட் கள் கொள்ளையிடப்பட்டதையடுத்து வர்த்த கர்கள், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்கள் சூழ இருக்கின்ற செங்கலடிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது ஆயுதக்குழுக்களின் கைவரிசையே என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் செங்கலடி வர்த்தகர்களிடம் தொலைபேசி லமாக கப்பம் கோரப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எனினும் முறைப்பாட்டாளர்கள் பின்னர் தொலை பேசி மூலம் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரான் அணு ஆயுதம் தயாரிக்காது,,,,

இரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல என்றும், அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்றும் இரானின் அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனி கூறியுள்ளார். இரானின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நாசகாரி கப்பலின் வெள்ளோட்ட வைபவத்தில் உரையாற்றிய அவர், சில மேற்குலக அதிகாரிகள் காலாவதியான, அர்த்தமற்ற கருத்தை திரும்பத்திரும்பக் கூறிவருவதாக கூறினார். இரானின் தற்போதைய மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை தயாரிப்பதுடன் தொடர்பு பட்டவை என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முதல் தடவையாக கூறிய மறு தினம் அவரது இந்த அறிக்கை வந்துள்ளது

இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் படம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இயேசு கிறிஸ்து ஒரு கையில் சிகரெட்டையும், இன்னொரு கையில் பீர் டப்பா ஒன்றையும் வைத்திருப்பது போன்ற படங்களுடன் அச்சிட்டு வெளியான ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய மாநில கல்வி அமைச்சர் அம்பரீன் லிங்டோ அறிவித்துள்ளார். இவ்வாறு பாடப் புத்தகம் அச்சிடப்பட்டது, சர்வமதத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் இந்தியப் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கத்தோலிக்கத் தேவாலாய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட பதிப்பாளர், கத்தோலிக்கப் பள்ளிகளில் எந்தவிதப் புத்தகங்களையும் விற்பனை செய்வதற்கு இந்திய கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் பயங்கரவாதம் - மனிதாபிமானம் தொடர்பான பிரித்தறியும் வழக்கு,

அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அல்-ஹை டா, குர்திஸ் விடுதலை அமைப்பு, விடுதலைப்புலிகள் ஆகியன அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டன. ஆனால் குறித்த அமைப்புக்களுடன் தொடர்பான அல்லது அந்த இனம் மதம் சார்ந்த மனிதாபிமான அமைப்புக்கள் நிவாரணம், புனர்வாழ்வு, சமாதானம் தொடர்பில் பணிபுரிகின்றன. ஆனால் இந்த தன்னார்வ அமைப்புக்களை பயங்கரவாதத்திற்கு உதவியவர்கள் என்ற பேரில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மட்டுமன்றி பயங்கரவாத அமைப்புக்களிற்குள்ளும் மனிதாபிமான அமைப்புக்கள் பல பணிகளை செய்து வருகின்றன. ஆகவே இவைகளை இனம் கண்டுஇவர்களது தடைகளை நீக்கி செயற்படவைக்கவேண்டும் என இடது சாரிஅமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மனிதாபிமான சட்டங்களிற்கான திட்டம் என்ற அமைப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

வீட்டில் யாழப்பாணப் பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு

தெஹிவளை, களுபோவில ஜயசிறி மாவத்தையிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தமிழ் பெண் ஒருவரின் சடலத்தை தெஹிவளைக் காவல்துறையினர் நேற்று காலை மீட்டுள்ளனர். பெண்ணின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டபோது அவர் தனது கையில் கூரிய ஆயுதமொன்றை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான சின்னத்தம்பி கனகதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் அவரது மூளைவளர்ச்சி குன்றிய மகளுடன் தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்திய வீட்டில் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெஹிவளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

வணங்காமண்ணில் வந்தவையா?

அரசதலைவர் தேர்தலை நோக்கியதான ஏ-9 வீதி 24மணிநேரமும் திறக்கப்பட்டதனை அடுத்து யாழ்.குடாநாட்டிற்கான தென்னிலங்கை மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை வியாபாரிகளின் யாழ்ப்பாணத்திற்கான படையெடுப்பும் அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. தென்னிலங்கை வியாபாரிகளால் விற்கப்படும் பொருட்கள் இலங்கையின் வர்த்தக மையமான தலைநகரான கொழும்பு விலைகளிலும் அரைவாசி வீதம் குறைந்தவையாகவே காணப்படுவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பொதுமகன் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிகள், நல்லூர் ஆலயச் சூழல் உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரதான பகுதிகளில் சிங்களவர்களால் மலிவு விலைக்கு விற்கப்படுகின்ற பொருட்களின் விலைகள் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கொழும்பு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அவர் யாழ்ப்பாணத்தின் நிரந்தர வர்த்தகர்கள் இந் நடவடிக்கையினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவதனை தாம் உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட பொருட்களை விலைகொடுத்துப் பெறுவதில் யாழ்ப்பாண மக்களைவிடவும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா நோக்கில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த இடத்தில்த் தான் புலம்பெயர் மக்களால் வன்னியில் நெருக்கடிக்கு உட்பட்ட மக்களுக்கு என அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்கவேண்டிய நிலை எழுந்துள்ளது. மக்களுக்கு வழங்கவென நிவாரணப் பொருட்களைச் சுமந்தபடி பயணித்த வணங்காமண் கப்பலை நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்துநிறுத்திய சிங்கள அரசு அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. இந்த இடத்தில் தமிழ் மக்களின் உயிர்நாடி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி வணங்காமண் கப்பலின் கொண்டுவரப்பட்டிருந்த பொருட்களை இந்தியாவில் வேறு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைப் பரப்புரையாக்கினாரே தவிர அந்தப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்ந்தனவா? என்பது பற்றிய எந்த ஒரு அக்கறையினையும் அவர் வெளிப்படுத்தவில்லை. சர்வதேச ரீதியாக வன்முறைச்சூழலில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பதற்காகவே தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டுச் செயற்படும் செஞ்சிலுவைச் சங்கங்கள் பொருட்களைப் பொறுப்பேற்பதாகவும், பொறுப்புக் கொடுப்பதாகவும் இரண்டொரு அறிக்கைகளை விட்டதுடன் அந்தப் பொருட்கள் தொடர்பான முழுமையான விபரங்களும் தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது? அந்தப் பொருட்கள் பழுதடைந்திருந்தால் அது பற்றிய தெளிவினை செஞ்சிலுவைச் சங்கங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் அது குறித்த விபரங்களை வெளியிடும் என்றோ மனிதாபிமான ரீதியில் அது நடைபெறும் என்றோ எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. செஞ்சிலுவைச் சங்கம் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த பகிரங்க அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தான தகவலையாவது வழங்கியிருக்க வேண்டும். புலம் பெயர் தேசங்களில் அங்கிருக்கும் காலநிலைகளை எதிர்கொண்டு மிகவும் கடினங்களுக்கு மத்தியில் உழைத்த உழைப்புக்களைக் கொண்டே வன்னி மக்களுக்கென பொருட்களை வழங்குவதற்கென அவர்களால் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் மக்களது உழைப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பான சரியான தகவல்களை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிடவேண்டும். வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்காப்படாமைக்கும் யாழ்ப்பாண தெருவோர தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுகின்றது. தமக்கான பொருட்களை தென்னிலங்கையின் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒருவரின் முக்கிய வலது கையாகச் செயற்படும் தொழில் அதிபர் ஒருவரே வழங்கிவருவதாக தென்னிலங்கை வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர். புலம்பெயர் மக்களின் உடனடியான உதவிகளை இழிவு படுத்தும் வகையிலான செயற்பாடாக இது இருக்கலாம் என்று கருதப்படுகின்ற அதேவேளை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் வரையான மக்களது வாழ்வியல் என்பது குறித்த அரசின் அக்கறையீனமும் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளமை புலப்படுகின்றது. தனியாக அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட்ட பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது. அங்கிருக்கும் மக்கள் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் போர் அனர்த்த காலங்களில் தமக்கான குடும்பத்தினரில் பல உழைப்பாளர்களை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர். அதனை விடவும் உழைப்பாளர்கள் இருந்தாலும் சொந்த இடங்களில் இருந்து அவர்கள் பிடுங்கப்பட்டுள்ளமையால் அவர்களால் சுயமாக பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தமது பொருளாதாரத்தை ஈடு செய்வதற்காக சில பெண்கள் நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருவதாக முகாம் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் அந்த மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்த கட்ட ஆரோக்கியமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?

வாடகை வானூர்தி .,,

உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்தவண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும். இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும். இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால் சென்று குறித்த விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வானில் பறக்கவல்லதுமான ஒரு வாகனமே வாடகை வானூர்தியாகும். ஒரு நாட்டின் வான் எல்லைகளுக்குட்பட்ட வானூர்திப் பறப்பு என்பது அந்நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. சாதாரண தரைவழிப் போக்குவரத்துப் போன்று வான்வழிப் போக்குவரத்தினை பொதுப்பாவனைக்காகத் திறந்துவிடுவதென்பது, ஒரு நாடு தனது பாதுகாப்பைத் தானாகவே முன்வந்து முடக்குவதற்கு ஒப்பானது. இதன்காரணமாக தகுந்த பாதுகாப்பு உத்திகளுடன் இந்த வாடகை வானூர்தியினை பொதுப்பாவனைக்காகக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சிக்கின்றன. அமெரிக்காவின் இவ்வாறான வாடகை வானூர்தித் திட்டம் சிறிய விமான போக்குவரத்துத் தொகுதி (Small Aircraft Transport System) என்றழைக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கமைவாக அமெரிக்கா முழுவதும் 5000 வரையான சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு அவ்விமான நிலையங்களினூடாகவே இவ்வானூர்தித் தொகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்விமான நிலையங்கள் அனைத்தும் பொதுமக்களால் இலகுவில் அடையக்கூடியவாறு அவர்களின் குடியிருப்பு, வேலையிடம் மற்றும் நாளாந்தச் செயற்பாட்டு இடங்கள் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறாக தொகுதிகளை இயக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன. பிரதான பாரிய விமான நிலையங்களின் போக்குவரத்து நெருக்கடி குறையுவடையும். சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி குறையுவடையும். போக்குவரத்துத் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும். சிறிய விமானங்களை இயக்குவதற்கான பொருட்செலவு குறைவடையும். பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு வரும் உல்லாசப்பயணிகள் அந்நாட்டின் விமான நிலையத்திலிருந்து தொலைதூர இடங்களிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்குப் செல்வது கிடையாது. இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது. இருந்தபோதிலும் இங்கு பல்வேறுபட்ட பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. முதலாவதாக வாடகை விமானங்களுக்கான பொருட்செலவு. ஆரம்ப நிலையில் இவ்வகை வாடகை விமானங்களை குறைந்த விலையிற் பெற்றுக்கொள்வதென்பது இயலாத காரியமாகும். இவற்றுக்காக கொள்வனவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமானதாகவே காணப்படும். இதன் காரணமாக பெருமாபாலானோர் இவற்றைக் கொள்வனவு செய்வதிற் தயக்கம்காட்டுவர். அடுத்து, மேலே பறத்தற் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. குறித்தவொரு வான்பரப்பு பெரும்தொகையான சிறியரக விமானங்களின் பறப்பினைக் கொண்டிருக்கும்போது, அவ்விமானங்களின் பாதுகாப்பினைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதென்பது சிரமமான காரியமாக மாறலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்கு பெரும்தொகையான ஆளணி மற்றும் கண்காணிப்புக் கருவிகள் தேவைப்படும். தொடர்ந்து அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அனவே, இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிகளை இயக்குவதென்பது பொரும் பொருட்செலவைக் கொண்டதாகவே காணப்படுகின்றது. NASA நிறுவனம் தன்னியக்கமாக விமானப் பறப்புக்களைக் கட்டுப்படுத்தும் Robotic Air Traffic Controller என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளிற்கேற்ப அவை தரையிறங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தன்னியக்கமாக வழங்கும். இன்னொரு வகைக் கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் அவ்விமானங்களின் பறக்கும் உயரம், ஆள்கூறு என்பவற்றைப் பெற்று அவற்றுக்கான பதிற் தகவல்களை வழங்குவதுடன் அத்தகவல்களை ஏனைய விமானங்களுடனும் பகிர்ந்துகொள்ளும். இவ்வகைக் கருவிகளின்மூலம் ஆளணி எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைக்க முடியும். இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிக்கான திட்டத்தின் ஆரம்ப நிலையில், இத்திட்டத்தை 2015 இல் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் சிறியளவிலேயே அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வகை வானூர்திகள் பெருமளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டியேயிருக்கும்.

வழிமறிக்கப் போவது யார்?

நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பங்களை இம் முறை வழங்காது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இவற்றில் கணிசமான உண்மைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான் பாரிய அச்சுறுத்தல் நிலை எதிர்வரும் தேர்தல் ஊடாக எதிர்நோக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தேசியப் பற்றாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. கூட்டமைப்பின் கொள்கைகள் தமக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பிரதான கட்சி ஒன்றின் பொதுச்செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம் முறை தான் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கொள்கை தனி நாட்டை வலியுறுத்துவதாக அமைவதாகவும் அவர் தனது கொள்கையில் இருந்து இம்மியேனும் பிசகாது உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் ஏனைய பிரதான தலைமைகள் இலங்கை ஒரு நாடு அதற்குள் தான் தீர்வு அமையவேண்டும் என வலியுறுத்தி இதற்கு அவரை உடன்படுமாறு வலியுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் ஏற்படவுள்ள ஆபத்து நிலை குறித்து சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம். குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர் எடுத்திருக்கின்ற முடிவு அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அவர் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும் அவருடன் கூட்டுச் சேர ஏற்கனவே விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டு கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பலர் இவருடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் குதிக்கவுள்ளதாக அறியவருகின்றது. உண்மையில் குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களுடைய விசுவாசிகள் என்ற காரணங்களைக் காட்டியே மகிந்த அரசு அவர்களை தமது அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உடன்பட்டுச் செயற்பட வைத்தது. இந்த நிலையில்த் தான் நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று விதமான நகர்வுகளை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது என்பது அரசியல் அவதானிகளுக்கு நன்கு புலப்பட்ட விடயமாகும். இவற்றின் காரணமாகவே திசைமாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் இருந்து ஓரங்கப்பட்டதாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிகின்றது. இந்த நிலையில் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து போட்டியிட எத்தனிக்கும் கட்சித் தலைவருக்கு முண்டு கொடுத்து போட்டியில் தீவிரமாக ஈடுபடுவர் என்பது வெளிப்படை. இந்த இடத்தில் கூட்டமைப்பினைத் தீர்மானிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலைகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது தமிழ் மக்களின் அனைத்து விதமான பின்னடைவுகள் அல்லது அழிவுகள் தேசிய விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டமை அனைத்துக்கும் பிரதான காரணியாகச் செயற்பட்ட இந்தியாவின் அட்டவணைக்கு அமையவே அவர்களின் செயற்பாடுகள் அமைவதாகவும் ஒவ்வொரு முக்கிய நகர்வுகளையும் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகளுக்கு அமையவே முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாத விடத்து தமிழ்மக்களுக்கு இருக்கின்ற வாக்குப் பலம் என்பது சிதைவடைவதற்கான அதிக சந்தர்ப்பங்களே ஏற்பட்டுள்ளன. இதனை உணர்ந்து உடனடியான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய அல்லது மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகத் தலைமைகள் உட்பட்டுள்ளன. இரண்டு பிரதான தரப்புக்களாக பிரிந்து கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால் யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் பிரமாண்டமான பூதாகாரமாக வெளிப்படும். இந்த இடத்தில் மக்கள் முடிவெடுப்பதில் குழப்பம் அடைந்து கணிசமான வாக்களிப்பு வீதம் குறைவடையக் கூடிய அதேவேளை மக்களின் வாக்குகள் சிதைவடையும். அதன் போது அணில் ஏறவிட்ட நாய் போலக் காத்திருக்கும் ஏனைய சக்திகள் குறைந்த வாக்குகளிலேயே தொகுதிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன. தேசியம் என்பது ஒற்றைச் சொல்லால் ஆனது என்று மட்டும் கருதியதாகவே தற்போதைய அரசியல்த் தலைமைகளின் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் அமைகின்றன. யாரும் தூர நோக்கம் கொண்டவர்களாகவோ, ஏற்கனவே இறைக்கப்பட்ட தியாகங்களுக்கான பெறுமதி அறியாதவர்களாகவோ செயற்படுவதனைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மிக மூத்த தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை கூட்டமைப்பிற்கான போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் ஆலோசனைகளில் இன்னொரு அசிங்கமும் நிகழ்ந்து வருகின்றமையை சுட்டிக்காட்டுகின்றோம். தற்போது ஒரு கல்விச் சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் முன்மொழியப்பட்டுள்ளார். அவர் யார் என்றார் நீண்டகால அரச விசுவாசியாக விளங்கி வருகின்ற அமைச்சர் ஒருவரின் பிரதான புதிய ஆலோசகர் ஒருவரால் தேசியத்திற்கெதிரான எழுத்தளார்களில் ஒருவராக வளர்க்கப்பட்டு வருகின்ற ஒருவராவார். இவரையும் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கான முனைப்பினை கூட்டமைப்பின் பிரதான கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் முனைந்து செயற்படுவதாக அறிய முடிகின்றது. தமிழ் மக்களின் தற்போதைய கையறு நிலையில் மக்களின் தவிர்க்க முடியாத தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விளங்கிவருகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பின்னடைவுகளுக்கு பிரதான காரணங்களாக காட்டிக்கொடுப்புக்களும், விட்டுக்கொடுப்புக்கள் அற்ற தன்மையும் தான் என்ற கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இவ்வாறான இக்கட்டான சூழலில் கூட்டமைப்பின் வழிப்படுத்த யாராவது முன்வருவார்களா? இல்லையேல் தமிழ் மக்களின் அபிலாசைகள் ஒரு கோடி 38 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுடனும், வருடாந்த ஐம்பது இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியுடனும் போய்விடுமா? என்ற கேள்விகளை தமிழ் மக்கள் கேட்கத் தலைப்பட்டுவிடுவர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மக்களை நோக்கியோ தேசியத்தை நோக்கியோ நகரவில்லை என்பது மட்டும் புலனாகின்றது. இந்த இடத்தில் மற்றொரு விடயம் பற்றிய தெளிவான பார்வையை ஏனைய கட்சிகளுக்கும் முன்வைக்கின்றோம். கொழும்பில் அலரிமாளிகைக்கு நிகரான மாளிகை ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் கொழும்பின் நட்சத்திரவிடுதிகளின் ஊழியர்களின் உபசரிப்புக்களுடனும் வாழ்ந்து வருகின்ற உலகம் அறிந்த உலகம் சுற்றிய முன்னாள் முக்கியஸ்தர் தற்போது தமிழ்த்தேசியத்தை இலங்கையில் சிதைக்கும் நடவடிக்கையினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் அரசகுடும்பத்தின் சகோதரர்களை தோள்களில் கைபோட்டு அணைத்து மகிழ்கின்ற அளவிற்கான அதிகாரங்களைப் பெற்றுள்ளமை குறித்து அவரைத் தரிசிக்கச் சென்று தரிசனம் பெற்றவர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நபர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளையும் பூரணமாக ஒழிக்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறுவதாகவும், புதிதாக ஏதாவது செய்து புதிய தமிழ்த் தலைமைகளை முன்வைக்குமாறும் தொடர்ந்தும் கோரி வருகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கமைய கிளிநொச்சியில் முன்னாள் அரச முக்கிய அதிகாரி ஒருவர் வெற்றிலைச் சின்னத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதேபோல ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலில் நிற்குமாறு வற்புறுத்தல் விடுப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தச் செயற்பாட்டின் தொடர் நடவடிக்கை தான் தேர்தல்த் தொகுதிகளில் சுதந்திரக்கட்சியினை எதிர்கொள்ளும் நிலைக்கு அரசில் அங்கம் பெற்ற முன்னணி தமிழ் அமைச்சர்கள் இருவர் தள்ளப்பட்டுள்ளனர் என கருதமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் மட்டும் இம் முறை பத்திற்கு மேற்பட்ட கட்சிகள் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் இறுதியாக இருக்கின்ற ஒரே ஒரு தெரிவான வாக்கின் ஊடான ஒருமைப்பாடும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியங்களே தென்படுகின்றன. இன்னமும் பொறுமை காக்க வேண்டிய தேவை உரியவர்களுக்கு இருக்கின்றதா? காலம் கடந்த ஞானம் யாருக்கும் உதவாது?

பள்ளியில் புகுந்து ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன்

ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் லுட்விங்ஸ் கேபின் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொழிற்பள்ளி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அங்கு 23 வயதான முன்னாள் மாணவர் ஒருவர் புகுந்தார். அவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். பின்னர், திடீரென வகுப்பறைக்குள் புகுந்த அந்த நபர் 58 வயது ஆசிரியரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த ஆசிரியர் அவருக்கு சரியான முறையில் பாடம் கற்றுத்தரவில்லை. மாறாக அவரை தவறான முறையில் வழி நடத்தி உள்ளார். எனவேதான் அவரை பழிக்கு பழி வாங்க குத்திக்கொன்றது தெரிய வந்தது.

49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்

செட்டிகுளம் மெனிக்பாம் தடுப்பு முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து 10 பேரும், கிளிநொச்சியிலிருந்து 17 பேரும், முல்லைத்தீவிலிருந்து 14 பேரும், மன்னாரிலிருந்து 4 பேரும் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

தொடர்ந்தும் விளக்க மறியலில்,,

எல்லாளன் படை நடவடிக்கையான அனுராதபுரம் விமான படை விமான நிலைய தாக்குதலில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இன்று அனுராத புரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணைக்காக மேலும் தடுப்பு நாட்களை நீடித்து தருமாறு இரகசிய பொலிசாரினால் கோரப்பட்டதற்கு அமைவாக நாட்கள் நீடிக்கப்பட்டது. அனுராத புரம் தாக்குதலினை வெளியில் இருந்து படம் பிடித்து வன்னிக்கு சற்றலைட் தொலைபேசி ஊடாக அனுப்பியது.வன்னியில் இருந்து புலிகளின் விமானங்களை தாக்குதலிற்கு அனுப்புமாறு கட்டளை அனுப்பியது. வன்னியில் உள்ள தலைவர்களிடம் சற்றலைற் தொலைபேசி யூடாக தொடர்பினை மேற்கொண்டது ஆகிய குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. கிளி நொச்சியினை பிறப்பிடமாக கொண்ட இவர் இரகசிய தகவல்களின் அடிப்படையில் தடுப்பு முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

பெளத்த பீடங்களின் கீழ் உள்ள கோயில்களை பறிக்க போவதாக மிரட்டல்

பெளத்த பீடங்கள்தமது சொல்லை கேட்காவிட்டால் அதன் கீழ் உள்ள கோயில்களை பறித்து புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என ஆளும் தரப்பு மிரட்டியுள்ளது. மேற்கு மாகாணத்தில் உள்ள 500 வரையான கோயில்களை இவ்வாறு பிரித்து புதிய பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்படும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேல்மாகாண அரசியல் வாதிகள் பெளத்த பீடங்களை மிரட்டியுள்ளனர். ரோகண நிக்காய என்ற அங்கீகரிக்கப்படாத பெளத்த அலகு ஒன்றினை புனரமைத்து அதனை அங்கீகரித்து அதன் கீழ் பெளத்த கோயில்கள் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர் மஹிந்தவின் சகாக்கள். போகின்ற போக்கினை பார்த்தால் மஹிந்த மகா சங்கம என்ற புதிய பீடத்தினை உருவாக்கி அனைத்து பீடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார் என்ற பதட்டம் பிக்குகளுக்கு வந்துள்ளதாம். எது எப்படி இருப்பினும் இலங்கையில் ஐந்தாவது பீடம் ஒன்று உருவாகலாம் என விமர்சகர்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி....

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்காவின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவுடன் விடுதலைப்புலிகளால் கடந்த 2009 ஜனவரி இறுதியில் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் இணைந்து செயற்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரிடம் இருந்து எமக்குக் கிடைத்த செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன. விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர் என்றும் அவற்றில் பெருமளவானவற்றை தாங்கள் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் மேலும் தொடரப்பட வேண்டும் என்றும், அவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளராக தான் இருக்கும் நிலையில் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளதாகவும், எனவே வெளிநாடுகளில் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த முறியடிப்பிற்கு கோத்தபாய ராஜபக்சவினால் நேரடியாக இறக்கிவிடப்பட்டுள்ள குமரன் பத்மநாதன், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக சில வெளிநாடுகளுக்கு அவர் பயணங்களையும் மேற்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. தற்போது கொழும்பில் தங்கியிருந்துகொண்டு புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் இருக்கின்ற தனது ஆதரவாளர்கள் மூலம், விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கையில் இவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அவுஷ்திரேலியா நாடுகளில் இந்த கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலருடன் தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள குமரன் பத்மநாதன், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறி வருவதாகவும், அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவர்கள் குறித்து ஆராய்ந்து தனக்கு தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி வருவதுடன், மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணிகளையும் மேற்கொள்ளுமாறு இவர் தனது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தனக்கு நெருக்கமான சிலரது தொலைபேசி இலக்கம் கிடைக்காத நிலையில், பல்வேறு வழிகளினூடாக அவர்களின் தொலைபேசி இலக்கங்களை தேடிப்பெற்று இவர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும், இவ்வாறு தொடர்புகொள்ளப்பட்ட சிலர், தங்களுக்கு இந்தச் செயற்பாடுகளில் விருப்பமில்லையெனக்கூறி அவருடனான தொடர்புகளைத் துண்டித்து ஒதுங்கிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது. தற்போது தனது முன்னைய ஆதரவாளர்கள் ஊடாக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இவர், விடுதலைப் புலிகள் குறித்து ஆதரவான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை அச்சுறுத்தும் அல்லது அம்பலப்படுத்தும் வகையில் பிரத்தியேக இணையத் தளங்களை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. தற்போது தனிமனிதர்களை கொச்சைப்படுத்தும் இணையவலைகள் அதிகளவில் உருவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை, விடுதலைப் புலிகளின் இந்த சர்வதேச வலைப் பின்னலை சிதறிடிக்கும் நடவடிக்கையில் ஒருசில சர்வதேச கரங்களும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது கோத்தபாய ராஜபக்ச ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பாதுகாப்பு தரப்பின் முக்கியஸ்தர்களை கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் நடைபெறும் தெற்காசியாவின் மிகப் பெரிய ஆயுத தளபாட கண்காட்சியை பார்வையிடும் இவர், சிறீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகளை நவீன மயப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியில் ஈடுபட்டுள்ள ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து புதிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது. இதுஇவ்வாறிருக்க, இன்னொரு பக்கத்தில் சிறீலங்கா அரசின் நாச வேலைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறீலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில் அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறீலங்காவிற்கு வந்துள்ளனர் எனவும் இன்னும் சில தினங்களில் செயலிழந்துபோகும் இணையத் தளங்களில் இருந்து இவர்களது நடவடிக்கை தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் இயக்கப்படும் ஊடகங்களே பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு சிறீலங்காவினால் தடை விதிக்கமுடிகின்றபோதிலும் மாற்று வழிகளூடாக (தேடுதல் தளங்கள்) சென்று பார்வையிடுபவர்களை தடுக்க முடியாது இருப்பதனால், இவ்வாறான மாற்றுவழித் தேடுதல் தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் கூகிள் இணையத்தளம் இலங்கையில் செயற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா இறங்கியுள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தமிழீழ கனவு இன்னும் அப்படியே உள்ளது என்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாகவும் சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை இராணுவ முகாம்களுக்கு பயணம் செய்து இராணுவத்தினரிடம் பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மோசடி….

நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர். அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர். இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும். அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.

தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம்...

தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

இராணுவ ஆட்சி பிரகடனம். ......

நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கட்டடத்தில் விமானத்தை மோதி தாக்குதல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் ஒருவர் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 2 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமுற்றனர். டெக்சாஸ் மாகாண தலைநகரான ஆஸ்டின் நகரில், உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தையொட்டி, 7 மாடி கட்டடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், அந்த கட்டடத்தின் மீது நேற்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கட்டடத்தின் மீது குட்டிவிமானத்தை மோதச் செய்தவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் என்பது தெரிய வந்தது. ஜோசப் ஆண்ட்ருஸ்டேக் (வயது 53) என்ற அந்த நபர் ஆஸ்டின்நகரை சேர்ந்தவர்.விமானத்தை ஓட்டி வந்த இவர் கட்டடத்தின் மீது மோதிய போது இறந்து விட்டார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, அவரது `இணையதளத்தில்' ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், தனக்கும், வரிவசூல் செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை பழிவாங்க இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அமெரிக்க விமான நிலையங்கள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது,