ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார். அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது. உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள். இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது. இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன். சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. 1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு. இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார். இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது. பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி. யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது. முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன். இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. 18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது. இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம். அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.

ஒரு அணியாக செயற்படுமாறு தமிழ் தேசிய கட்சிகளுக்கு உலகத்தமிழர் பேரவை இறுதி நேர வேண்டுதல்!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக திடசங்கற்பம் பூண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் ஒரு அணியாக செயற்படுமாறு இறுதிநேர அழைப்பாக பெரிய வெள்ளி தினத்தை முன்னிட்டு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல் கேட்டுள்ளார்.


எதிர்வரும் ஏழாம் திகதி இலங்கைத்தீவு முழுவதும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உலகத்தமிழர் பேரவையின் தலைவர் வெளியிட்டுள்ள வேண்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அரச ஆதரவு வேட்பாளர்களையும் மற்றைய சுயேட்சை வேட்பாளர்களையும் போலன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வேட்பாளர்களும் தமிழ் மக்களின் விடுதலைக்காக இதயசுத்தியுடன் உழைத்துவருவதை உலகத்தமிழர் பேரவை நன்கறியும்.
எவ்வாறான வழிமுறையில் எமது இலக்குகளை அடையமுடியும் என்பதில்தான் வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால் சாதாரண வாக்காளர்களாகிய மக்கள் அதனை வேறுபடுத்தி அறிந்துகொள்ளமுடியாது.

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வயதிலிருந்தே பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனுடைய ஆழ அகலங்களை, அது பூகோள அரசியலில் செலுத்தக்கூடிய தாக்கங்களை, அதனால் புதிய உலக ஒழுங்கில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆக்கபூர்வமான முறையில் ஆய்வு செய்திருக்கவில்லை அல்லது செய்துகொள்ளப்பட்;ட ஆய்வுக்கமைய தமிழ்த் தேசிய அரசியல் நகரவில்லை என்ற சிந்திப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததாகிறது.

 கடந்த மே 18 ற்குப் பின்னர் பூகோள அரசியலில் இலங்கைத் தீவு காட்டிவரும் வகிபாகம் இந்த சிந்திப்பிற்கான வலுப்படுத்தல் காரணி. இதனடிப்படையில், எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை ஆய்வுக்குட்படுத்துவோம். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த கவனச்செலுத்தியே சமகால பூகோள அரசியலில், இலங்கைத் தீவானது பேசுபொருளாக மாறியிருப்பதற்கான காரணமாகிறது. பூகோள அரசியலில், பல்வேறு சர்வதேச சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இது பலதுருவ அரசியல் பொருளாதாரப் போட்டிகளுக்கு கால்கோலாகிறது. ஆனால், எல்லா ஆதிக்க சக்திகளும் தாம் மட்டும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு மைய அரசியலையே விரும்புகின்றன. அதற்காகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இதனடிப்படையிலேயே குறிப்பிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. பல சர்வதேச சக்திகளின் ஒரு மையக் வெளியுறவுக் கொள்கை முட்டிமோதும் களமாக இலங்கைத் தீவு மாறியிருக்கிறது. இன்றைய நிலையானது இராஜபக்ஸ நிர்வாகத்துக்கு குறுங்காலத்துக்கு சாதகமானதாக இருக்காலம். ஆனால், இலங்கைத் தீவினுடைய எதிர்காலத்துக்கான ஒரு புதைகுழி தோண்டும் நடவடிக்கையாகவே அரங்கேறி வருகிறது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொருதரப்புமே தத்தமது தனிப்பட்ட தேசியநலனை கருத்திற்கொண்ட செயற்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேசிய நலன்களுக்கிடையில் ஒரு பொதுமையப் புள்ளி உருவாகவில்லை. ஆதலால், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவருகின்றன. இந்த முரண்பாடென்பது இலங்கைத் தீவில் யார் செல்வாக்கு செலுத்துவதென்பது என்பதில் ஆரம்பமடைகிறது. ஏனெனில், இலங்கத் தீவானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு தேசமாக திகழ்கிறது. ஆபிரிக்காவினதும், அவுஸ்ரேலியாவினதும் தென்முனையில் 10000 கிலோ மீற்றர் விசாலமானதாக இந்து சமுத்திரம் பரிணமித்திருக்கிறது.

 இந்த இந்து சமுத்திரமானது அந்தமான் கடல், ஆபிரிக்கக் கடல், வங்காள விரிகுடா, ப்புளோரஸ் கடல், பெரிய அவுஸ்ரேலிய வளைவு, எதேன் வளைகுடா, ஓமான் வளைகுடா, ஜவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பெர்ஸ்சியன் வளைகுடா, செங்கடல், சவுகடல், மலாக்க நீரிணை மற்றும் தீமோர் கடல் போன்றவற்றை உள்ளடக்கி பிரமாண்டமாக பரிணமித்திருக்கிறது. நாற்பத்து ஏழு நாடுகள் இந்து சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக அல்லது கடல் எல்லைகளாக கொண்டுள்ளன. எட்டு நாடுகளிற்கு உரித்துடைய பிரதானமான பன்னிரெண்டு துறைமுகங்களை இந்து சமுத்திரம் உள்ளடக்குகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு பிரதான கடலாக இந்து சமுத்திரம் திகழ்கிறது. ஜப்பானுடைய 80 சதவீத எண்ணையும், சீனாவினுடைய 60 சதவீத எண்ணையும் மலாக்க நீரிணையூடாவே விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை விநியோகம் குறித்த நீரிணையூடாக இடம்பெற்று வருகிறது. அண்ணளவாக 40 சதவீத எண்ணை வளமானது இந்து சமுத்திர கரைகளுக்கு அப்பாலிந்தே உற்பத்தியாகிறது. உலகில் இடம்பெறும் பெரும்போர்களுக்கு எண்ணை ஒரு பிரதான காரணமாக இருப்பதையும், இந்து சமுத்திரத்தில் மலாக்க நீரிணை இருப்பதையும் நினைவிற்கொள்க. இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மஹான் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவினுடைய கேந்திரமுக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிபுப் பெறுமதியடைகிறது.