இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
புதன், 10 பிப்ரவரி, 2010
சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் வளர்த்தெடுத்த, சீருடை அணிந்த இன்னொரு இனவாதி.
இலங்கையின் சிங்கள பௌத்த பேரினவாத அரசியல், இராணுவ வாதத்திற்குள் நேரடியாக பிரவேசித்துவிட்டது என்பதையே ஜெனரால் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை வெளிப்படுத்தி நிற்பதாக கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1930ஆம் ஆண்டுகளில் யப்பானில் இராணுவம் வேகமாகப் பெருத்து வளர்ச்சி அடைந்ததைப் போல, தமிழின எதிர்ப்பின் பெயரால் சிங்கள இராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் அதிதீவிர வளர்ச்சி அடைந்திருந்தது. அதிகம் அவமானகரமான, அபகீர்த்திமிக்க தமிழினப் படுகொலையின் மூலம் சிங்கள இராணுவம் ஊட்டி வளர்க்கப்பட்ட நிலையில், அதன் மிகப் பெரும் இராணுவத் தலைவராக சரத் பொன்சேகா காட்சியளித்தார்.
'வீரயா', 'சூரயா' எனச் சிங்கள மக்களால் போற்றப்பட்ட ஒருவர் இராணுவ ஆளுமையின் நிமித்தம் அரசியல் தலைவராகி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராய் போட்டியிட்டார். இலங்கையின் சிங்கள, பௌத்த, இராணுவ மயமான அரசியலில் இராணுவத் தலைவர் ஒருவர் போட்டியிட்டது என்பது வியப்பல்ல.
இனப்படுகொலை பற்றிய போர்க் குற்றங்களை தான் வெளிப்படையாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியம் அளிப்பேன் என கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகா கூறிய சில மணிநேரத்தில் அவர் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இங்கு, அவர் சிவில் பொலிஸாரால் கைது செய்யப்படாது, இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை இதன் தீவிரத்தை அதிகம் உணர வைத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பானர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களுடன் கூடவே பல போராளிகளும் சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துவிட்டு வெள்ளைக் கொடியுடன் இராணுவத்திடம் 'சரணடைய' முற்பட்ட போது, அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் காலத்தில் கொழும்பின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்பு சிங்கள, பௌத்த தீவிர இனவாதத்தின் முன் இதனை ஒரு துரோகமாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சித்தரித்த போது இவ்விவகாரம் குறித்து அவர் பின்வாங்கியிருந்தார்.
அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் சபையின் ஆணையாளர் திருமதி. நவநீதம்பிள்ளையிடம் சரத் பொன்சோகாவின் குற்றச்சாட்டுத் தொடர்பான மறுப்பைத் தெரிவிப்பதற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை இலங்கை அரசு அனுப்பி வைத்த பின்னணியில் இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா தனக்குத் தெரிந்த யுத்தமீறல் குற்றங்கள் அனைத்தையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன், மறைக்காது தெரிவிப்பேன் எனத் தெரிவித்த சில மணிநேரத்திற்குள் இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை இதன் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகிறது.
இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனாதிபதி, பிரதம நீதிபதி, இராணுவத் தலைமைத் தளபதி என மூன்று அடுக்குகள் உண்டு.
உத்தியோகபூர்வமாக தளபதி மூன்றாவது அடுக்கைச் சேர்ந்தவரானாலும், செயல்பூர்வ அர்த்தத்தில் இவர் இரண்டாம் அடுக்கைச் சேர்ந்தவர். எனவே ஜனாதிபதிக்கு அடுத்த இரண்டாவது பொறுப்பு வாய்ந்த பதவி நிலையைக் கொண்டிருக்கும் ஒரு தளபதியின் வார்த்தையும், சாட்சியமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றது.
ஜெனரல் சரத் பொன்சேகா யுத்தக் குற்றங்கள் குறித்து தேர்தல் காலத்தில் கூறியதை பின்பு மறுத்திருந்தாலும், இப்படி பொறுப்பு வாய்ந்த பதவியைக் கொண்டிருந்த ஒருவரின் மறுப்புச் செய்தி ஏற்படையதாக இருக்காது. ஆயினும் அவர் நேற்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் மீண்டும் தான் யுத்தக் குற்றம் பற்றிய உண்மைகளைச் சொல்வேன் என தெரிவித்ததும், அதிர்ச்சியடைந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அவரைத் திடீரெனக் கைது செய்துள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் 'ஒப்புதல் வாக்கு மூலம்' என்ற ஒரு மோசமான சட்ட ஏற்பாடு உண்டு. இச்சட்டத்தை பிரயோகித்து நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைதான இவரது இராணுவ உயர் அதிகாரிகளிடம் பெறக்கூடிய ஒப்புதல் வாக்கு மூலத்தின் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகா மீது கொலைக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும்.
இந்நிலையில், சரத் பொன்சேகாவின் விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதியைக் கொலை செய்ய முற்பட்ட இராஜ துரோக குற்றச்சாட்டின் கீழ் ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனைக்குரிய தீர்ப்பு வரை செல்ல இடமுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பின்னணியில் இலங்கையில் பெரும் அமைதியின்மை தோன்றும் எனவும் இவ்வாய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது இவருக்கு ஆதரவளித்த கட்சிகள் இலங்கையில் அடிப்படை வாக்கு வங்கிகளைக் கொண்ட பலமான கட்சிகளாகும். இதில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜே.வி.பி.யும் ஒன்று.
எனவே கொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அண்மித்து அமைதியின்மை பெரிதும் தலையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு ஜனநாயகவாதியோ அன்றி மனித நேயப் பண்பாளரோ அல்ல. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் வளர்த்தெடுத்த, சீருடை அணிந்த இன்னொரு இனவாதி.
செம்மணிப் படுகொலை முதல் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை யாவரும் அறிவர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமாகவிருந்து இராணுவத்துக்குள் துரிதகதியில் வளர்ச்சி பெற்றவர். இறுதியில் சிங்களப் பௌத்த தேசியவாதியான அவரை அதே சிங்களப் பௌத்த தேசிய வாதம் விழுங்கிவிட்டது என்பதே உண்மையாகும்.
கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது யார்?
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த பல்வேறு கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் குரலாக ஒலிக்கப் போகிறதா என்பது அதில் முதன்மையானது.
இதற்குக் காரணம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணிசார்ந்து நின்றதும் பிரசாரத்தில் இறங்கியதுமே.
சரத் பொன்சேகாவுக்கு சார்பாக- எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து களமிறங்கிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை தமிழ்மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படை. இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல்வேறு சவால்கள் இப்போது காத்திருக்கின்றன.
ஆதில் ஒன்று உட்கட்சிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. அடுத்தது தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்குவது. நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைக் காலமாக பல்வேறு குரல்கள் முரண்பாடான கருத்துகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் -அவர்களால் வழிநடத்தப்பட்ட கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் போக்கிலும் மாற்றங்கள் தென்படத் தொடங்கின. அதுபோலவே அதன் பல எம்.பிக்களின் போக்கிலும் மாற்றங்கள் தென்பட்டன. பலர் தமது உண்மை முகத்தைக் காண்பித்ததே இந்தக் காலப்பகுதியில் தான்.
முதலில் வன்னி மாவட்ட எம்.பியான வினோ நோகராதலிங்கம் அரசாங்கத்துக்கு ஆதரவாக இயங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. வவுனியாவில் இடம்பெயர்ந்தோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களைப் பற்றி சர்வதேசமே கவலையும் கண்டனமும் தெரிவித்துக் கொண்டிருந்த போது- அந்த முகாம்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் இவர் கருத்துகளை முன்வைத்திருந்தார். இதுவே அவர் பற்றிய செய்திகளுக்குக் காரணமாக அமைந்தது.பின்னர் அவர் ஒதுக்கிக் கொண்டார்.
அதற்குப் பிறகு மற்றொரு வன்னி எம்.பியான சிவநாதன் கிஷோர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அத்துடன் அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசுக்குச் சார்பாகவே வாக்களித்தும் வருகிறார்.
இன்னொரு வன்னி மாவட்ட எம்.பியான கனகரட்ணம. எட்டு மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்து அண்மையில் தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்குச் சார்பாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுயவிருப்பின் பேரிலோ அல்லது நிர்ப்பந்தத்தின் பேரிலோ மகிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக சில மேடைகளில் அவர் தோன்றியது உண்மை.
அதுபோலவே, வேறும் பல எம்.பிக்கள் அரசுக்கு சார்பாகச் செயற்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இன்னொரு பக்கத்தில் ஐதேகவுக்கு சார்பாக செயற்படும் அணியொன்றும் அண்மைய ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிப்பட்டது. அதுவே வலுவானதாக மாற்றம் பெற்றதால் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தது.
இந்த அணிகள் இரண்டுக்கும் நடுவே எந்தத் தரப்பையும் சார்ந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தும் ஒரு அணியும் கூட்டமைப்புக்குள் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் மூன்று முக்கிய அணிகளாக கூட்டமைப்பு பிரிந்து நிற்கிறது. இந்த மூன்று அணிகளும் இணைந்து அடுத்த தேர்தலில் போட்டியிட்டால் தான் அது வடக்கு,கிழக்கில் ஏனைய தரப்புகளுக்கு சவால் நிறைந்த ஒன்றாக மாற்றம்பெற முடியும்.
வடக்கு,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போதும் ஆதரவு குறைந்து போகவில்லை என்பது உண்மையே. என்றாலும் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகள் மக்களிடதில் கேள்விகளையும் அதிருப்திகளையும் ஏற்படுத்தி வருவது என்பது மறுக்க முடியாத விடயம்.
தற்போது மூன்று கருத்துகளுடன் இருக்கும் கூட்டமைப்புக்குள் இருக்கும் குழப்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கு முயற்சிகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.
அண்மையில் சிவாஜிலிங்கத்தையும் சிறிகாந்தாவையும் கூட்டமைப்பு ஒதுக்கி விட்டது. ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் சிவாஜிலிங்கமும், அவருக்குத் துணை நின்றதால் சிறிகாந்தாவும் ஓரம் கட்டப்பட்டனர். அடுத்த பொதுத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றும தகவல்.
தமது கட்சியின் முடிவுகளுக்கு முரணாக நடந்து கொண்ட இரு எம்.பிக்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பமாட்டாது என்று சம்பந்தன் ஏற்கனவே கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் யார் என்று அவர் கூறவில்லை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்த கூட்டமைப்பு கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிவநாதன் கிஷோர் குறித்து வாய் திறக்கவேயில்லை.
இந்தக் கட்டத்தில் மூன்று பிரிவுகளாகச் செயற்படும் கூட்டமைப்பு அடுத்த பொதுத்தேர்தலில் சந்திக்கப் போகும் சவால்கள் ஏராளம் உள்ளன. அதைச் சமாளிப்பதற்கு முன்னர் கட்சியில் உள்ள பிரச்சினைகளை அது சமாளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
குறிப்பாக உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது அதன் முன் உள்ள மிகமுக்கியமான சிக்கல். அதாவது வேட்பாளர் தெரிவு என்று வரும் போது நான்கு கட்சிகளுமே திசைக்கு ஒன்றாக நின்று கொண்டு ஒன்றையொன்று விழுங்கித் தின்னத் தயாராக இருக்கின்றன. அதைவிட கட்சி சாராத வேட்பாளர்களும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
பெரும்பாலான இடங்களில் அவர்களே அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றனர். அதற்கு விடுதலைப் புலிகளின் செல்வாக்கே காரணம் என்ற குற்றச்சாட்டும இருக்கவே செய்கிறது. விடுதலைப் புலிகள் இல்லாது போயுள்ள நிலையில் கட்சிசாராத அரசியல்வாதிகளின் நிலை என்னவென்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்துக்கு கூட்டமைப்பு வந்திருக்கிறது.
இந்த முடிவு எடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஏதாவதொரு பக்கத்தில் அதிருப்திகள் ஏற்படுமானால் அது கூட்டமைப்புக்குள் பெரும் குழப்ப நிலையை உருவாக்கும். கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதும் இதேபோன்ற சிக்கல்கள் வரவே செய்தன.
பல வேட்பாளர்களை நிறுத்துவதில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு புலிகள் தலையிட்டு தீர்வு காண நேரிட்டது. குறிப்பாக, தமிழ்க் காங்கிரசின் அப்பாத்துரை வினாயகமூர்த்திக்கு யாழ்ப்பாணத்தில் செல்வாக்கு இருந்தது . ஏற்கனவே யாழ்.மாவட்ட எம்.பியான இருந்தபோதும், அவருக்கு அங்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபோன்று பல விடயங்களில் புலிகளின் தலையீடுகள் இருந்தன. இப்போது அப்படியான பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காண்பதற்கு வெளியே இருந்து யாரும் வரப் போவதில்லை.
அது கூட்டமைப்புக்குள் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தச் சிக்கல்களை சமாளித்தால் தான் கூட்டமைப்பால் பொதுத்தேர்தலை சவால்களின்றிச் சந்திக்க முடியும். அதேவேளை அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டிருக்கும் சில கருத்துகள் தமிழ் மக்களிடத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தவும் தவறவில்லை. அவர் சிங்கள மக்களிடத்தில் நம்பிக்கையைப் பெறுவதற்காக வெளியிடும் சில கருத்துகள் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன.
இது முக்கியமானதொரு தருணம்.
தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றால் தான் அவர்களின் வாக்கு பலத்தில் மீளவும் நாடாளுமன்றம் செல்ல முடியும். சிங்களத் தலைமைகளுக்கு- சிங்கள மக்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய வகையில் பேசி அவர்களின் விசுவாசிகள் போன்று காண்பிக்க முனைந்தால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.
இந்தக் கட்டத்தில் உட்கட்சிப் பிரச்சினையாயினும் சரி- தமிழ் மக்களின் பிரச்சினையாயினும் சரி கூட்டமைப்பு எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறது என்பதில் தான் அதன் அரசியல் எதிர்காலம் அமையப் போகிறது.
இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன
இலங்கையில் பொலிசாரின் சித்திரவதைகள், பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் கொலைகள் ஆகியன தொடர்ந்தும் இடம்பெறுவதாக மனித உரிமைகள் சபை கூறியுள்ளது. தனது 50 பக்கம் கொண்ட அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் நீதிமன்றங்கள் எவ்வளவுதான் சட்டங்களையும் விதிகளையும் விதித்தாலும், அறிவுறுத்தல்களை மேற்கொண்டாலும் பொலிசார் அதனை கருத்தில் எடுப்பதில்லை எனவும் மாறாக தாம் நினைத்தபடியே செய்வதாகவும் கூறியுள்ளது.
இதனால் அங்கு பொலிசாரின் சித்திரவதைகள், கொலைகள் தொடர்கின்றன என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கையினை மனித உரிமை சபை இயக்குனர் சாமந்தி ஜெயமான அவர்களும் அதன் செயலாளர் புஞ்சிவேவ அவர்களும் தயாரித்துள்ளனர்.
கடுங்கோட்பாடும் ‘கால் பிடி’ வைத்தியமும்!
சென்ற பெப் 4 ந் தேதிக்குப்பின், இலங்கையில் இருந்து வெளியாகிய எல்லாப் பத்திரிகைகளிலும் அந்நாட்டின் அதிபர் கண்டி மாநகரில் ஆற்றியிருந்த உரை குறித்த விபரங்களும்,அதுபற்றிய ஆசிரியத் தலையங்கங்களும் வெளியாகியிருந்தன.
இலங்கையில் எந்தக் கட்சி அரசு அமைத்தாலும், அந்த அரசுக்குச் சாதகமான செய்திகளையும், அதன் திட்டங்களை ஆதரித்து தலையங்கங்களைத் தீட்டுவதிலும் ‘லேக் ஹவுஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான தமிழ்-ஆங்கில-சிங்கள ஏடுகள் என்றும் பின்னிற்பதில்லை. ஒருவகையில் அரசின் ‘ஊதுகுழல்’களாகச் செயல்படும் இப்பத்திரிகைகள் இந்த முறையும் தங்கள் கடமையினைச்(?) செவ்வனே நிறைவேற்றியிருக்கின்றன.
இக் குழுமத்தில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான ‘தினகரனு’ம் தன் பங்குக்கு ஆசிரியத் தலையங்கமும், செய்திகளும் வெளியிடத் தவறவில்லை.
தமிழ் நாட்டின் தினகரன் எவ்வாறு தி.மு.க வின் ‘புகழ் பாடுவதில்’ அதிக சிரத்தையுடன் செயல்படுகிறதோ அந்தளவு சிரத்தையுடன் இலங்கை அரசு செய்யும் அத்தனை செயல்களையும் ‘கண்ணை மூடிக் கொண்டு’ ஆதரிப்பது இந்தத் ‘தினகர’னின் கடமைகளில் ஒன்று!
இலங்கையின் பொருளாதாரம், சமூகச் சட்டங்கள், வெளியுலகத் தொடர்புகள் அல்லது நிர்வாக அலகுகள் தொடர்பான பிரச்சனைகளை எழுதும்போது, அவை அங்கு வாழும் இரு தேசிய இனங்களான தமிழ்-சிங்கள மக்களது பொதுவான எண்ணங்களைப் பிரதிபலிப்பனவாக அமைந்திருப்பதில் தப்பேதும் கிடையாது. அவை அவ்வாறு அமைவது தேவையானதுங்கூட.
ஆனால், ஓர் இனம் சம்பந்தப்பட்ட- அதுவும், ‘சிறுபான்மை’ இனம் எனச்சொல்லப்படும் ‘தமிழ்த் தேசிய இனம்’ பற்றிய சர்ச்சைகள் உருவாகும் சமயங்களில், ஒரு தமிழ் நாளிதழ் தனது தலையங்கத்தில், அரசினைத் துதிபாடுவதும், பாதிப்புற்றுக் கிடப்பவர்களுக்கு மட்டும் ஒற்றுமை குறித்து ஆலோசனைகளை வழங்குவதும் வேடிக்கையாக இருக்கிறது
பெப் 5 தேதியிட்ட தினகரனின் தலையங்கம்- மகிந்த ராஜபக்ஷவின் ‘சுதந்திர தின’ உரையினை… ஆஹா…ஓஹோ.. எனப் புகழ்ந்திருக்கிறது! நாட்டின் அதிபரது பேச்சினைப் புகழ்ந்து எழுதும் கடமை ஓர் இதழுக்குக் கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம் …….. தாராளமாக எழுதலாம்… அவரது உரையில் உள்ள நியாயமான கருத்துகளை வலியுறுத்தி எழுதுவது தவறல்ல. ஆனால், அவர் தமது உரையின்போது தெரிவித்த தமிழ்த்தேசிய இனம் குறித்த தகவல்களை, ஓர் தமிழ்ப்பத்திரிகை- அதுவும் தமிழர்களால் வாசிக்கப்படுவதற்காக அச்சிடப்படும் ‘தமிழ்ப் பத்திரிகை’ – அவரது உரையினை நேரடியாகக் கண்டித்து எழுதாவிடினும், அதனை மறைமுகமாகவேனும், சம்பந்தப்பட்டவருக்கும் அவரது இனத்தினருக்கும் உணர்த்தும் வகையில் எழுதுவதை யாரும் ஜனநாயக விரோதம் என்று கூறிவிடப் போவதில்லை.
இலங்கையின் பௌத்தமத பீடம் என வர்ணிக்கப்படும், தலதா மாளிகை இடம்பெற்றிருக்கும், கண்டியில் இலங்கையின் 62 வது சுதந்திர தினத்தினைக் கொண்டாடிய அதிபர் தமது உரையின்போது… இடையே தமிழிலும் உரையாற்றியதன் மூலம், தாம் தமிழருக்கு விரோதியல்ல(!) என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் எனக் குதூகலிக்கும் சிலர்.. அவர் சொன்னவற்றில் பொதிந்துள்ள உட்பொருளை ஆராயவோ அல்லது அது பற்றிக் கருத்துரைக்கவோ முன்வரவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ இதற்கு விதிவிலக்காகத் தனது தலையங்கத்தில், அதிபரது பேச்சு குறித்த வேதனையைத் தெரிவித்திருக்கிறது.
தனக்கெனத் தனி நாடு கேட்டுப் போராடிய ஓர் தேசிய இனத்துக்கு,’கிராம’ அபிவிருத்திமூலம் உரிமைகளை அளிக்கப்போவதாகக் கூறும் ஓர் நாட்டின் அதிபரால், அங்கு நிலவும் இனப்பிரச்னக்குத் தீர்வுகாண இயலுமா என்னும் சந்தேகத்தை அவ்வேடு வெளியிட்டிருக்கிறது!
இலங்கை அதிபர் தமது உரையில் – அந்நாட்டில் பல வருடங்களாக தமிழ் மற்றும் சிங்கள தேசிய இனங்களுக்கிடையில் நிலவிவரும் இன-அரசியல் முரண்பாடுகள் குறித்தோ அதனைத் தாம் எவ்வாறு தீர்த்துவைக்கப் போகிறார் என்பது பற்றியோ எந்தக் கருத்தினையும் கூறவில்லை.
மாறாக- அங்கு ‘சிறுபான்மை இனம்’ என்று ஓரினம் இல்லை என்றும் , அனைவரும் ‘இலங்கையரே’ என்றும்; முப்பது வருட காலமாக அந்நாட்டில் நிலவிவந்த ‘பயங்கரவாதத்தை’ ஒழித்து ( இதில் சரத் பொன்சேகாவுக்கும் கணிசமான பங்கிருக்கிறது என்பதை ஏனோ சொல்லாமல் விட்டுவிட்டார்) நாட்டை ஒற்றுமைப் படுத்திவிட்டதாகவும் கூறியவர், இனிமேல் கிராமங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கி அதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பப் போவதாகவும் பிரகடனஞ் செய்திருக்கிறார்.
இலங்கையில் சிறுபான்மையினர் என்று எவருமே கிடையாது என அடித்துக் கூறும் ராஜபக்ஷே, அங்கு சிங்களமும் பௌத்தமும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள மொழியும், மதமும் என்பதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துக் கொண்டு, இலங்கை ஒரேநாடு எனபதன் அர்த்தம்தான் புரியவில்லை.
அங்கு மூவாயிரம் வருடங்களாக – சிங்கள வம்சம் அந்நாட்டில் துளிர்விடுவதற்கு முன்பாகவே – அங்கு தனக்கெனப் பிரதேசத்தையும், மொழியினையும், பண்பாட்டினையும் கொண்டிருக்கும் ஓர் தேசிய இனம்; ஒன்றுபட்ட இலங்கை என்னும் பேரால்— சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் ஏற்றுக்கொண்டு சிங்கள – பௌத்தர்களாக மாறிவிடுவதே இனப்பிரச்னைக்குத் தாம் வைத்திருக்கும் தீர்வு என்கிறாரா அதிபர்?
இவற்றையெல்லாம்….. வெளிப்படையாக உரத்துக் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மை இனம் தமிழர்கள்மீது சீற்றம் கொண்டுவிடும், எனவே ‘அடக்கி வாசியுங்கள்’ என்று ஆலோசனை வழங்குகிறது அரசின் ‘ஊதுகுழ’லான தமிழ்ப் பத்திரிகை ஒன்று.
கடந்த முப்பது வருடங்களாகப் பயங்கரவாதம் இருந்தது என்று ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும் அதற்கு முன்னர், சுதந்திரம் பெற்றதிலிருந்து முப்பத்திரண்டு வருடங்களாக அங்கு ஜனநாயக வழிகளில்தானே தமிழர்கள் போராடிவந்தார்கள். அப்போதும், இன்று போலவே வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் யாவரும் ஓரணியில் நின்று, எமது அரசியல் உரிமைகள் சிங்கள அரசால் மறுக்கப்படுகின்றன. அவற்றுக்கு உரிய தீர்வினை ஆளும் பெரும்பான்மை அரசு வழங்கவேண்டும் என அரசியல் ரீதியாகப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில், இன்று சிங்களத்தை ஆள்வதற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கும், யூ.என்.பி யும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறிமாறி ஆட்சியில் இருந்தன.
அவை ஆட்சிபீடம் ஏறிய சமயங்களிலெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதும், பின்னர் அவற்றைக் கிழித்து வீசுவதும் என்றுதானே காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்?
அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அளித்த வேதனையாலும், மறுபக்கம் தமிழர்களது வாழ்வாதார உரிமைகள் படிப்படியாக மறுக்கப்பட்டு, காலத்துக்குக் காலம் நிகழ்ந்த இனக்கலவரங்களால் தமிழன் என்றாலே அஞ்சிவாழும் நிலையத் தவிர வேறு வழியேகிடையாது என்னும் நிலை உருவாகிய போது பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களால் வளர்த்தெடுக்கப்பட்டதே ஆயுதப் போராட்டம். உண்மையில், தமிழ்த்தேசிய இனத்தினை ஆயுதப் போராட்டத்தில் உந்தித்தள்ளியதில் பெரும்பான்மைச் சிங்கள அரசுகளுக்குச் சம்பந்தம் கிடையாதா?
தமிழ்ப் பயங்கரவாதம் இருந்த சமயத்திலா… 1956ல் உருவான ‘பண்டா-செல்வா’ ஒப்பந்தம் கிழித்து வீசப்பட்டு அதன் தொடர்ச்சியாக சிங்கள-தமிழ் இனக்கலவரம் வெடித்தது ?
1977 ல் மலையகத்தமிழர்கள் பல நூற்றுவர் கொல்லப்படக் காரணமாக விளங்கிய இனக்கலவரம், தமிழ்ப் பயங்கரவாதத்தினாலா நிகழ்ந்தது ?
1981ல் தமிழர்களது அரிய பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதற்குத் தமிழ்ப் பயங்கரவாதந்தான் காரணமா?
அதிகம் ஏன், 1983 ல் உலகமே அதிர்ச்சியடையும் இனக்கலவரத்தின் சூத்திரதாரிகள் தமிழ்ப்பயங்கரவாதிகளா?
இவற்றையெல்லாம் கேட்டுவிட்டால், சிங்களப் பெரும்பான்மையினம் தமிழர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்க முன்வரமாட்டாதாம். எனவே கடுங்கோட்பாட்டாளர்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் தீர்வு முயற்சியை முன்னெடுக்க வேண்டுமாம்!
”சிறுபானமை இனங்களின் உரிமைக் கோரிக்கைகள் யதார்த்தத்துக்கு அமைவாக இல்லாதிருக்கும் பட்சத்தில் அவை பலனளிப்பது சாத்தியமில்லை. கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இதனை உணர்த்தி நிற்கின்றன” என்னும் பொருள்பட எழுதப்படும் தலையங்கங்கள் தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் தன்மானத்துக்கு விடும் சவாலாகவே தோன்றுகின்றன.
இலங்கையில் இப்போது அரங்கேறிவரும் அரசியல் காட்சிகளைப் பார்க்கும் போது, சில வருடங்களுக்கு முன்னால், நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் அவர் மருத்துவ ரீதியாகக் கூறும் “கட்டிப்புடி” வைத்தியம் போன்று….. இலங்கை அரசியலிலும் இனப்பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்கு, அங்குள்ள சில அரசுசார்புத் தமிழ் அரசியல்வாதிகள் சொல்ல ஆரம்பித்திருப்பது போன்று “கால் பிடி” மருத்துவம் ஒருவேளை சரிப்பட்டு வருமோ தெரியவில்லை!
படத்தில் கமலஹாசனுக்கு ‘கட்டிப்புடி’ காட்சிகள் நடிப்பதற்குச் சுலபமாயும் அவருக்கு விருப்பமானதாயும்(?) இருந்திருக்கும்.
ஆனால், ஈழத்தமிஒழர்களுக்கு ‘கால் பிடி’ப்பதென்பது இலகுவில் சாத்தியமாகுமா? அதற்கு அவர்களது தன்மானம் இடந்தருமா
கோஸ்டாரிகா நாட்டின் முதலாவது பெண் அதிபர்
அமெரிக்கக் கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார்.
இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதி புதிய அதிபராகப் பதவி ஏற்கிறார்.
50 வயதான இவர், அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் தற்போது அதிபராக இருக்கும் அரியாஸ் அமைச்சரவையில் மந்திரி உள்ளிட்ட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்சிலாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது,
“நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். வார்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன்” என்று உறுதி அளித்தார்.
அவ்வை சொன்னதை டேனிசில் சொல்லும் எஸ்.எப் கட்சி
பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக சென்ற்றை தேகத்தில் ஊற்றிக் கொண்டு வருவதைத் தடை செய்ய வேண்டுமென டென்மார்க் எஸ்.எப் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை சோசல்டெமக்கிரட்டி, என்கில்ஸ்லிஸ்ற் போன்றவையும் ஆதரித்துள்ளன. கார்கள் விடும் புகை, சுவர்மைகளில் இருந்து வரும் நாற்றம் போன்றவைகளால் தினசரி 17.000 பேர் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை நோய்க்குள் சிக்குண்டு போகிறார்கள். இவற்றோடு வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், வைத்தியசாலைகளில் பணிபுரிவோர் வருவதால் மேலும் சிக்கலான ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆகவே வாசனைத் திரவியங்களை உடலில் ஊற்றி தீர்த்தமாடி வருவோர் அடக்கி வாசிக்க வேண்டுமென எஸ்.எப். கட்சியின் பியா ஊல்சன் டுக இன்று கேட்டுள்ளார். வாசனைத் திரவியங்களை அளவுக்கு அதிகமாக பூசுவதைவிட ஒழுங்காக குளித்து, பல்துலக்கி, காலைக்கடனை சரிவர முடித்து, தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து வேலைத்தலம் வாருங்கள் என்று பழைய கால அவ்வையார் சொன்னதையே எஸ்.எப் சொல்லுவது கவனிக்கத்தக்கது.
அரசியல் படிக்கும் அமெரிக்க அம்மையார்
கடந்தமுறை நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் எதிரணியின் உப அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர் சாரா பெலின் எதிர்வரும் 2012 அதிபர் தேர்தலுக்கு தன்னை தயார் படுத்தி வருகிறார். தேர்தல் கூட்டங்களில் உலக அரசியல், வரலாறுபற்றி எதுவும் தெரியாத பெண்மணியாக இருக்கிறார் என்று இவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஐந்து பிள்ளைகளின் தாயான இவர் அமெரிக்கத் தேர்தலில் ஒரு கவர்ச்சித் தோற்றமாகவே அறிமுகமானார். இப்போது தனது உதவியாளர் மூலம் உலக அரசியலை நன்கு கற்றுத் தேறிவருவதாகவும், அடுத்த அதிபர் தேர்தலுக்கு தான் தயாராகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அதிபராக இருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஸ் இந்திய ஜனாதிபதியின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டபோது பேந்தப் பேந்த முழித்தமை குறிப்பிடத்தக்கது. இவரே பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்டு உலகைக் காப்பாற்றப் புறப்பட்டதும் உலகம் அவரின் பின்னால் அணிவகுத்ததும் அவதானிக்கத்தக்கது.
மறுபடியும் அரிச்சுவடிக்கு போன இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சுக்கள்
நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்டு நாசமாகிப்போனது சிறீலங்காவின் அமைதித் தீர்வு. அது தற்போது கிராம மட்ட அதிகாரங்கள் என்று பழைய பிரேமதாசவின் கிராமோதய சபைகள் பற்றி பேசுமளிவிற்கு சிலிப்பார் சிரித்துக்கிடக்கிறது. இந்த இலட்சணத்தில் நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன பேச்சு வார்த்தையும் சிறீலங்கா போல மீண்டும் அரிச்சுவடிக்கு போயுள்ளது. பாலஸ்தீன தரப்பும், இஸ்ரேலிய தரப்பும் வெறும் அதிகாரிகள் மட்டத்தில் தமது பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக இன்றைய இஸ்ரேலிய பத்திரிகையான கா சுரற்ஸ் தெரிவித்துள்ளது. கடும் போக்காளரான நெற்றன் யாகு பதவிக்கு வந்த பின் ஓர் ஆண்டு காலமாக முறிவடைந்துள்ள பேச்சுக்கள் சர்வதேச அழுத்தம் காரணமாக அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பித்துள்ளதாகவும், இதற்கு அமெரிக்கரான ஜோர்ஜ் மிக்கேல் மத்தியஸ்த்தம் வகித்து நெறிப்படுத்தி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ஒப்பந்தங்களை எழுதும் கட்டத்திற்கு சென்று, பாலஸ்தீன சுயாட்சிவரை சென்ற பேச்சுக்கள் இப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரிகள் மட்டத்தில் ஆரம்பித்திருப்பது மிகப்பெரிய பின்னடைவாகவே கருதவேண்டுமென அது குறிப்பிட்டுள்ளது. மறுபடியும் மறுபடியும் முதலாவது படியிலேயே ஏறுவதுதான் மிகப்பெரிய சோகமாகும் என்பது புகழ் மிக்க பழமொழியாகும்.
அதிகரிக்கும் ஆப்கான் போரின் செலவு
ஆப்கானில் நடைபெறும் போர் டென்மார்க்கிற்கு மேலும் செலவை அதிகரித்து வருகிறது. 353 மில்லியன் குறோணரில் இருந்து ஒரு மில்லியாட் வரை இந்த செலவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர இந்த ஆண்டு மேலும் 500 மில்லியன் குறோணர் உதிரிச் செலவு ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆதங்கள், வெடி மருந்துகள், வாகனங்கள், கடும் யுத்தப் பிரதேசத்தில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் பல மடங்கு அதிகமான சம்பளங்கள் இந்தச் சுமையைக் கூட்டியுள்ளன. இது இவ்விதமிருக்க வரும் செப்டெம்பர் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நாவின் ஏழ்மையையும், இயலாமையையும் செம்மைப்படுத்தும் மாநாட்டில் கடந்த 2000 ம் ஆண்டு எடுக்கப்பட்ட எட்டு அடிப்படை விடயங்களையும் 2015ஐ நோக்கி விரிவு படுத்த இந்த அமைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போரும் வறுமையும் தோள்களின் இரு பகுதியையும் அழுத்துவதால் மேலை நாடுகள் திருதிருவென முழிக்கின்றன.
பயிற்சி உடலுக்கு நல்லது
ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.
சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.
பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.
எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.
ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.
வெளியானது பயர்பாக்ஸ் 3.6
உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது.
எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது.
இந்த புதிய தொகுப்பினை என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது.
ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது.
ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது.
இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது.
ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது.
இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது.
பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.
பெர்சனாஸ் காலரி சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது.
யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.
இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.
விமானம்
விமானவியற் தொழிநுட்பத்தில், ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு அதிகமான வேகத்திற் பயணிக்கவல்ல விமானங்கள் hypersonic விமானங்கள் என்றழைக்கப்படுகின்றன.
சாதாரண தாரை இயந்திரங்களின் (jet engines) மூலம் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்தினைப் பெறுவதென்பது இலகுவான காரியமில்லை. இதன் காரணமாக இவ்வகை விமானங்களுக்கு, அடிப்படையில் ramjet இயந்திரத்தின் தத்துவத்தில் இயங்கினாலும், அதனைவிட அதிகளவாக உந்துசக்தியைப் பிறப்பிக்கவல்ல scramjet இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினாற் (NASA) பரிசோதிக்கப்பட்ட X-43A என்ற விமானமே உலகின் அதிவேகமான விமானமாகும். பொதுப்பயன்பாட்டிற்கு வராது பரிசோதனையிலிருக்கும் இவ்விமானம் ஒலியைவிட 10 மடங்கு வேகத்திற் பறக்கவல்லது. அதாவது ஒரு மணித்தியாலத்தில் 6600 மைல்கள் அல்லது 10600 கிலோமீற்றர்கள் தூரத்தைக் கடக்கவல்லது. இவ்விமானத்தில் scramjet வகை இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக உந்துகணைகள் (rockets) அவற்றின் எரிபொருளை எரிப்பதற்குத் தேவையான எரியூக்கியையும் (ஒட்சிசன்) கொள்கலனிலேயே காவிச்செல்லும். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தினாற் பயன்படுத்தப்படும் விண்ணோடங்கள் 1 359 000 பவுண்ட் (pounds) நிறையுடைய 143 000 கலன் (gallons) ஒட்சிசனைக் காவிச்செல்கின்றன. எரியூக்கியையும் காவிச்செல்வதன் காரணமாக உந்துகணைகளால் புவியின் வளிமண்டலத்தைத் தாண்டியும் பயணிக்க முடியும் என்றபோதிலும் ஒட்சிசனுக்கான நிறை காரணமாக, அவற்றால் அதிகமாக சுமையினைக் காவிச்செல்ல முடியாது. X-43A விமானத்தினை நாசா நிறுவனம் விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இவ்விமானத்தில் scramjet வகை இயந்திரம் பயன்படுத்தப்படுவதனால் வளிமண்டலத்தினூடான பயணத்தின்போது இவ்விமானம் எரிபொருளை எரிப்பதற்கான ஒட்சிசனை வளியிலிருந்து பெற்றுக்கொள்ளும். அத்தோடு வளிமண்டலம் தாண்டிய பயணத்திற்கான ஒட்சிசனை மட்டும் தாங்கியிற் காவிச்செல்லும்.
hypersonic வகை விமானங்களிற் பயன்படுத்தப்படும் scramjet வகை தாரை இயந்திரங்கள் அவற்றின் அடிப்படை வடிவமைப்பில் ramjet வகை தாரை இயந்திரங்களை ஒத்திருந்தாலும் அதிகளவான உந்துவிசையைப் பெறுவதற்காக தேவையான மாற்றங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றன. ramjet இனைப் போன்றே scramjet இயந்திரமும் நகரும் பாகங்கள் (moving parts) எவற்றையும் கொண்டிருக்க மாட்டா. எனவே விமானத்தின் உயர் வேகத்தின்காரணமாகவே இயந்திரத்தில் வளியமுக்கம் ஏற்பட்டு எரிபொருள் எரிக்கப்படுகின்றது. இதன்காரணமாக, இவ்வகை விமானங்களுக்கான ஆரம்பநிலை உந்துவிசை தாங்கியில் நிரப்பப்பட்டிருக்கும் எரியூக்கியின் உதவியுடனேயே வழங்கப்படுகின்றது. ஆகவே இவ்வகை விமானங்னளால் சாதாரண விமானங்களைப்போன்று தரையில் ஓடி மேலெழ முடியாது. X-43A விமானம் ஆரம்பத்தில் மேலெழுவதற்காக ஊக்கி உந்துகணைகளைக் (booster rockets) கொண்டுள்ளது. இந்த X-43A விமானம் ஆரம்பத்தில் ஊக்கி உந்துகணையினால் உந்திச்செல்லப்பட்டு hypersonic வேகத்தை அடைந்ததும் உந்துகணைகள் தனியாகப் பிரிந்துவிட இயந்திரத்தின் மூலம் தொடர்ந்து பறக்கின்றது.
X-43A விமானம் இதுவரை பொதுப்பயன்பாட்டிற்கு வராது பரிசோதனை நிலையிலேயே காணப்படுகின்றது. இப்பரிசோதனை விமானங்கள் விமானிகளின்றித் முற்கூட்டிப் பதிவுசெய்யப்பட்ட நிரலுக்கேற்பவே பரிசோதனைப் பறப்புக்களை மேற்கொள்கின்றது (preprogrammed test flight).
இப்பரிசோதனைப் பறப்பிலுள்ள ஆறு படிநிலைகளும் வருமாறு.
ஊக்கி உந்துகணையினை விமானத்துடன் பொருத்தப்படுகின்றது.
ஊக்கி உந்துகணை பொருத்தப்பட்ட X-43A விமானத்தினை B-52 விமானம் ஒன்றின்மூலம் 20000 அடிகள் (6000 m) உயரத்திற்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.
20000 அடி உயரத்தில் X-43A விமானத்தை B-52 விமானத்திலிருந்து தனியாகக் கழற்றி விடப்படுகின்றது.
X-43A விமானம் ஊக்கி உந்துகணையினால் ஒலியின் ஐந்து மடங்கு வேகத்திற்கு (5 Mach) ஆர்முடுக்கப்பட்டு 100 000 அடி உயரத்திற்கு செலுத்தப்படுகின்றது.
100 000 அடி உயரத்தில் ஊக்கி உந்துகணைகள் விமானத்திலிருந்து கழற்றிவிடப்பட்ட பின்னர் விமானம் இயந்திரத்தின் உந்துசக்தியிற் தொடர்ந்து பறக்கின்றது.
சில நிமிடங்கள் கடலின் மேலாகப் பறந்து பின்னர் கடலினுள் இறங்குகின்றது.
தலைவர் பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா தரவில்லை
முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரும் தமிழீழ தேசியத் தலைவருமாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்திருந்தது.
முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவழக்கில் தலைவர் வே.பிரபாகரன் பெயர் இருப்பதால் இந்திய அரசு, அவர் மீதான வழக்கை முடிக்க வேண்டும். எனவே, அவரது மரண சான்றிதழை தாருங்கள் என்று சிறீலங்காவிடம் கேட்டு வருகிறது.
இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்று மிஸ்ரா அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் பேட்டி அளித்தபோது, தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு அனுப்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், தலைவர் வே.பிரபாகரனின் மரண சான்றிதழை சிறீலங்கா அரசு தரவில்லை என்று சி.பி.ஐ. இயக்குனர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
தமிழர் தாயகத்தில் எண்ணை அகழிவில் ரஸ்ய நிறுவனம்
ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் எண்ணெய் வளத்தை அபகரிக்க சிறீலங்கா அரசு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பல நாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய் படிமங்கள் உள்ளதாக கூறப்படும் பகுதிகளை குத்தகைக்கு விட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக இறுதியாக ரஸ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கஸ்பிரோமிற்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழும் அனுமதியை வழங்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சீனா இந்தியா போன்றவை தமக்கான அகழ்வுப் பகுதிகளை வரையறுத்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது ரஸ்யாவும் அதில் இணைந்துள்ளது.
முன்னர் அமெரிக்க அகழ்வு நிறுவனமாக சிவரோன் ரெக்சாக்கோவும் விருப்பத்தை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது
யாழ்ப்பாண இளைஞர்கள்
தமிழ் நாட்டு திரையுலகின் நடிகர் அஜித்குமாரின் ‘அசல்’ திரைப்படம், ஈழத் தமிழர்களின் “பண்பாட்டுத் தலைநகரான” யாழ்ப்பாணத்திலுள்ள மனோகரா திரை அரங்கில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது. அப்போது திரையரங்கிற்கு முன்பாக யாழ்ப்பாண ரசிகர்கள் தேங்காய் உடைத்து, வெடிகொளுத்தி, ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித்குமார் நடித்த “அசல்” திரைப்படம் யாழ். மனோகரா திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்படம் திரையிடப்பட்ட உடன் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த “அசல்” படத்தின் பதாகை (கட் அவட்) மீது மாலைகள் அணிவித்தனர். பின்னர் - தேங்காய்களை உடைத்து, பால் ஊற்றி அபிசேகம் செய்து, வெடி கொளுத்தி பெருத்த ஆரவாரத்தில் ஈடுபட்டனர். தமிழ் திரையுலகின் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றபோது இது போன்ற செயல்களில் அந்தக் காலத்து யாழ்ப்பாண இளைஞர்கள் ஈடுபட்டதைச் சிலர் நினைவு கூர்ந்தனர்.
இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்..
தங்களது எதிர்கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக இத்தாலியர்கள் ஜோதிடத்துக்காக அதிகம் செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் மீண்டும் தங்கள் பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஜோதிடர்களை நாடுகின்றனர். சீட்டு போட்டு பார்ப்பது, சோழியை உருட்டி எதிர்காலத்தை கணிப்பது என்பது போன்ற பல்வேறு முறைகளில் இவர்கள் தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கிட்டதட்ட 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோதிட பலனுக்காக செலவிட்டுள்ளனர். குறிப்பாக மிலன் மற்றும் லேசியோ பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் ஜோதிடம் பார்த்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதி ஜோதிடர்களுக்கு ஓராண்டில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.இதில், 40 வயதுகளில் உள்ள நபர்கள் தான் ஜோதிடம் அதிகம் பார்த்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கண்ணீர் விட்டு அழுத இங்கிலாந்து பிரதமர்.
லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பலமுறை உணர்ச்சி வசப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் இறந்த தனது மகள் ஜெனீபர் பற்றி கூறுகையில் கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் குழந்தையாக குறை பிரசவத்தில் ஜெனீபர் பிறந்தாள். ஆனால் பிறந்த 10 நாட்களிலேயே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக இறந்து விட்டாள்.
தற்போது இவரது 3 வயது மகன் பிரசாரும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். அவனது உடல் நிலையும் மோசமாக உள்ளது. எனவே தான் அவர் கதறி அழுதார்.
அப்போது அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். கணவர் பிரவுன் அழுவதை பார்த்து அவரும் கதறி கண்ணீர் விட்டார். இச்சம்பவம் டி.வி. நிலைய ஊழியர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)