ஞாயிறு, 28 மார்ச், 2010

பிள்ளையான் தலைமையில் தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவிலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற பொதுமக்கள் மீது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான குழு இன்று ( Sunday) பிற்பகல் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பிள்ளையாரடி கொக்குவில் பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் பொன்.செல்வராசாவும் வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமாரும் இன்று பிற்பகல் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு கொக்குவில் ஆலமரத்தடியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரசாரக்கூட்டம் இடம்பெற இருந்தது. பிற்பகல் 4மணிக்கு கூட்டம் ஆரம்பமாக இருந்த நிலையில் சுமார் 3மணியளவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் 13 வாகனங்களில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சென்ற குழுவினர் அங்கு கூடி இருந்த மக்கள் மீதும் கூட்ட ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கொக்குவில் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அங்கு கட்டப்பட்டிருந்த பனர்கள் மற்றும் கொடிகளையும் கிழித்து எறிந்ததுடன் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையையும் சேதமாக்கியுள்ளனர். பிள்ளையான்குழுவினர் சுமார் ஒரு மணிநேரமாக அந்த இடத்தில் நின்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அக்கூட்டம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். நேற்று கொக்குவில் பிள்ளையாரடி சத்துருக்கொண்டான் பகுதிகளுக்கு தேர்தல் பிரசாரங்களுக்கு சென்றவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஏசித்துரத்தியதாக தெரியவருகிறது. கடந்த காலங்களில் சத்துருக்கொண்டான் கொக்குவில் பகுதியில் சிறிலங்கா அரசாங்க படைகளே பெருந்தொகையான பொதுமக்களை படுகொலை செய்ததாகவும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் கருணா குழுக்களுக்கு தாம் வாக்கு வழங்கப்போவதில்லை என அப்பிரதேச மக்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இதற்கு பழிவாங்கும் முகமாகவே இன்று பிள்ளையான்குழு தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி: அன்றாட வாழ்க்கை போராட்டமே!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சி, சிறிலங்கப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அன்றாடப் போராட்டமாக உள்ளதென்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2008இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 90,000 மக்கள் வசித்து வந்தனர். 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் மக்களெல்லாம் வெளியேறிவிட்ட நிலையில் சிறிலங்க இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அங்கிருந்து மக்களனைவரும் புலிகளுடன் வெளியேறி முல்லைத் தீவில் - மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்தனர். போருக்குப் பின் வன்னி வதை முகாம்களில் அடைப்பட்டுக்கிடந்த அம்மக்களில் தற்போது 24,000 பேர் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும், அங்கு குடியிருக்கும் வீடுகள் என்றோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கோ எந்த ஒரு கட்டடமும் முழுமையாக இல்லை. சிறிலங்க படைகளின் தொடர் குண்டு வீச்சால் கடும் தாக்கதலிற்கு உள்ளான நகரம் கிளிநொச்சியாகும்.  மீள் குடியமர்த்தலிற்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முழுமையாக வீட்டை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அளித்த பொருட்களைக் கொண்டு தாங்கள் அமைத்துள்ள வீட்டின் மேற்கூரையைக் கூட முழுமையாக கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்று ஐரின் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனர். “அரசின் உதவியால் தாங்கள் கட்டிக்கொண்ட தற்காலிக வீட்டில் கூரை கூட உறுப்படியாக அமையவில்லை” என்று குமாரி தேவராசா என்ற பெண்மணி கூறியுள்ளார். குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என்று எந்த வசதியிமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும்போது அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக் குறியுடன் அம்மக்கள் உள்ளதாக ஐரின் தெரிவிக்கிறது. அரசு அளித்த தகரத்தையும், கட்டைகளையும் கொண்டு பலர் இந்த தற்காலிக வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் அளித்த கூடாரங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு அளித்துள்ள சொற்பமான நிவராண உதவியில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நளினி ஜபேசன், உழைத்து சம்பாதித்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.