செவ்வாய், 16 மார்ச், 2010

தமிழீழம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்!

இலங்கைத் தீவில் நடைபெறும் நம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தமிழீழம் மீதான தனது இறுதித் தாக்குதலை இந்தியா ஆரம்பித்து விட்டதாகவே தெரிகின்றது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், கேலிக்குரியதாகத் தோன்றலாம். நம்ப முடியாததாகக் கருதலாம். ஆனாலும், கள யதார்த்தம் இதையே எடுத்துரைக்கின்றது. தமிழீழம் மீதான இறுதித் தாக்குதல் என்பதால், விமானங்கள் குண்டு வீசுகின்றன, பீரங்கிகள் குண்டுகளைப் பொழிகின்றன, கிளாஸ்ரர் குண்டுகள் வீழ்ந்து வெடிக்கின்றன, எரி குண்டுகள் வீழ்ந்து அனைத்தையும் பஸ்பமாக்குகின்றன என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளோடு இதனைப் பார்க்க முற்படாதீர்கள். தற்போது, ஆயுதம் எடுத்துத்தான் தமிழர்களை அழிக்கவேண்டும், சிதைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவுக்கும் கிடையாது. ஆயுதம் எதுவும் இல்லாமலே ஈழத் தமிழர்களை அழிப்பதற்கும், புதைப்பதற்கும் அரசியல் என்ற பேராயுதம் உள்ளதே... அதை வைத்து நடாத்தும் இறுதி யுத்தம். சிங்களத்திற்கு இந்தியா கொடுக்க விரும்பும் இறுதி மரியாதைக்கு ஈழத் தமிழர்களின் 'தாயகக் கோட்பாடு' குறி வைக்கப்படுகின்றது. அங்கே இந்தியாவின் சிப்பாய்களாக மாற்றப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களத்தில் இறங்கி வியூகம் வகுக்கின்றது. இங்கு மகிந்த சகோதரர்களுக்கு அதிகம் வேலை கிடையாது. இந்த யுத்த களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்ல வேண்டும் என்பதற்காகவே, தனது வளர்ப்பிற்குரியவரின் வீணையைப் பிடுங்கிக்கொண்டு வெற்றிலையில் நிற்க வைத்துள்ளார். இந்தியா எதைச் செய்யவேண்டும் என்பதை மகிந்தவே தீர்மானிக்கிறார். இந்தியா எதைச் செய்யக் கூடாது என்பதையும் மகிந்தாவே முடிவு செய்கிறார். இந்தக் களத்தில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய சிங்கள அதிபர் தேர்தலிலும் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று மகிந்தவே முடிவு செய்திருந்தார். அதற்காகவே, சிங்கள மக்களுக்கு உருவேற்றும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்பட்டு, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற உத்தரவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. மகிந்த வெல்லவேண்டும் என்று இந்தியா விரித்த வலையில், அரசியல் கத்துக்குட்டியான சரத் பொன்சேகாவும் சிக்குண்டு, தற்போது கம்பி எண்ணிக் கொண்டுள்ளார். இது கற்பனையான கதை அல்ல, நடைபெற்று முடிந்த அரசியல் கணக்கு. இந்தியாவின் சொல்லை மீறாத, இப்போதும் தமிழர்களின் இரட்சகர் இந்தியாதான் என்று கைநீட்டிக் காட்டும் பக்குவத்தைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயமாக சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை எடுத்தார்கள் என்பது பொருந்தாத வாதம். ஈழத் தமிழர்கள் மீதான இறுதி யுத்தத்தின் இராணுவ வெற்றிப் பங்காளர்களான மகிந்தவும், சரத் பொன்சேகாவும் சிங்கள மக்கள் மத்தியில் சம பலத்துடன் இருந்தபோதே அவசரமாக மகிந்த தேர்தல் அழைப்பை விடுத்திருந்தார். யுத்த வெற்றியின் அரை நாயகனான மகிந்தவை எதிர்த்துப் போராட எதிரணிக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு மற்றைய அரை வெற்றியாளனான சரத் பொன்சேகா மட்டுமே. அவர் களம் இறக்கப்பட்டால் மகிந்தவுக்கு வெற்றி நிச்சயமில்லாமல் போகலாம் என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும்படியான கட்டளை இந்திய தரப்பால் விடுக்கப்பட்டது. அந்த ஆதரவைப் பெறுவதன் மூலம் சரத் பொன்சேகா தமிழர்களுடன் சமரசம் செய்ய முற்படுகிறார் என்ற வதந்திகளும், கருத்துக்களும் சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது. சிங்கள தேசத்து அரசியலில் காலா காலமாக இனவாதமே வெற்றியைத் தீர்மானித்தது என்பது இந்தியாவுக்குத் தெரியும். அதனாலேயே மகிந்தவை வெல்ல வைக்கும் துருப்புச் சீட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா தேர்தல் களத்தில் பயன்படுத்திக் கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கூட்டுச் சதியை உடனடியாகப் புரிந்து கொள்ள முடியாத ஈழத் தமிழர்களும் தேர்தல் முடிந்து, மகிந்த மீண்டும் தெரிவானபோதுதான் தாங்கள் இன்னுமொரு ஏப்ரல் 1 ஐ கடந்து வந்ததாக உணர்ந்தார்கள். இந்தியா தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை ஆயுதம் ஏந்த வைத்தது, தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை பணிய வைத்தது, தான் நினைத்தது போலவே, ஆயுதக் குழுக்களிடையே மோதல்களை உருவாக்கி விரிசலை ஏற்படுத்தியது. தான் நினைத்தது போலவே, தமிழீழ மண்ணில் கால் கதித்தது. தான் நினைத்தது போலவே, வரதராஜப்பெருமாள் என்ற தலையாட்டிப் பொம்மையை வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக்கியது. தான் நினைத்தது போலவே, எமது மக்களை அழித்தது, சிதைத்தது, மானபங்கப்படுத்தியது. தான் நினைத்தது போலவே, மேற்குலகால் மேற்கொள்ளப்பட்ட சமாதானப் பேச்சுக்களில் தீர்வுகள் கிட்டவிடாது தடுத்தது. தான் நினைத்தது போலவே, யுத்த நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. தான் நினைத்தது போலவே, ஈழத் தமிழர்களை முள்ளிவாய்க்கால்வரை விரட்டிச் சென்று கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு உதவி வழங்கியது. தான் நினைத்தது போலவே, சிங்கள தேசத்தை யுத்தக் குற்றச்சாட்டில் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றியும் வருகின்றது. இங்கு, முள்ளிவாய்க்காலின் அவலங்களை உங்கள் கண்களின் முன்னால் நிறுத்திப் பொருத்திப் பாருங்கள் அத்தனை உண்மைகளும் உங்கள் நெஞ்சில் அறைந்து சொல்லும். இந்த நினைவுகளுடன், இப்போதைய யுத்த களத்திற்குச் செல்வோம். முள்ளிவாய்க்கால் யுத்த களத்தைப் பின்நின்று இயக்கிய அதே சாட்சாத் இந்தியாவே இந்த யுத்த களத்தின் பின்னாலும் நிற்கின்றது. அதற்குக் காரணம்... புலம்பெயர் தமிழர்கள். சிறிலங்காவாலும், இந்தியாவாலும் நெருங்க முடியாத, கடத்திச் செல்ல முடியாத நிலையில் விசுவரூபம் கொண்டு தமிழ்த் தேசியத்திற்கான போராட்டத்தை மேற்கொண்டுவரும் புலம்பெயர் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பெற்ற வெற்றியைத் தோற்கடிக்கத் தொடங்கிவிட்டார்கள். புலம்பெயர் தமிழர்களின் எழுச்சி சிங்கள தேசத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்து வருகின்றது. ஆயுதும் ஏந்திக் களத்தில் நிறைவு செய்ய முடியாத 'தமிழ்த் தேசியம்' என்ற இலட்சியத்தை புலம்பெயர் நாடுகளில் அமைதி வழிப் போராட்டங்கள் மூலமாகப் பெற்றுவிடப் போகிறார்கள் என்பதே அந்த அச்சம். அதற்கு, அவர்களுக்கு உள்ள ஒரே குறி தமிழீழ மக்களது அரசியல் தலைமை. அந்த அரசியல் தலைமையை அவர்கள் தங்களுக்கானதாக மாற்றிக் கொண்டுவிட்டால், அவர்கள் மூலமாக பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரமற்ற மாகாணசபையை ஏற்கப்பண்ணிவிட்டால்... முடிந்தது பிரச்சினை. ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமையுடன் நாங்கள் உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக்கொண்டு விட்டோம். எங்களுக்கு வெளியார் யாரும் சமரசம் பேசி வரத் தேவையில்லை என்ற வார்த்தைகளுடன் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும், அதனூடான புலம்பெயர் நாடுகளின் அரசியல் நகர்வும் தடுத்து நிறுத்தப்படும் என்பதே இந்தப் போர்க்களத்தின் கணக்கு. அந்தக் கணக்கில் சறுகல் வரக் கூடாது என்பதனாலேயே தமிழ்த் தேசியத்தை விட்டு நகரமுடியாத கஜேந்திரனும், பத்மினியும் வெளியேற்றப்பட்டனர். அதை உணர்ந்து கொண்டதனால் கஜேந்திரகுமாரும் வெளியேறினார். இந்தத் தேர்தல் போர்க் களத்தில் இந்திய தேசத்தால் இறக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுத் துரோகம் அரங்கேற்றப்பட விடாமல் களத்தில் பின்புலமற்ற நிலையிலும் போராடுகின்றார்கள். இந்த இடத்தில், உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், 'இந்த இடத்தில் இந்தியா எங்கே நிற்கிறது?' என்று. இங்கேதான், இந்திய ராஜதந்திரம் தோற்றுப்போய், சிங்களத்திடம் சரணாகதி அடையும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு வழிக்கும் இந்தியாவின் பரிதாப நிலை புரியும். ஈழத் தமிழர்களது இனப் பிரச்சினை ஊடாக இலங்கையில் கால் பதிக்க இந்தியா நினைத்த காலத்தில் இருந்த களநிலை வேறு. இப்போதைய கதை வேறு. தங்களை மிரட்டும் அரசியலைத் தொடரும் இந்தியாவுக்கு செக் வைக்க சிங்களம் காலத்தை நோக்கிக் காத்திருந்தது. சோவியத் ரஷ்யா சிதைவடைவதற்கு முன்னர், இரு தரப்பு இராணுவ ஒப்பந்தங்களுடன் தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாக எண்ணி இறுமாந்திருந்த இந்தியாவுக்கு ரஷ்யச் சிதைவு பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது. இந்த வரலாற்றுச் சிதைவினால் ஏற்பட்ட நெருக்கடிகளை ஈடு செய்ய இந்தியா அமெரிக்காவை நெருங்க வியூகம் வளர்த்த வேளையில், அயல்நாட்டு அரசியல்களில் மூக்கைச் செலுத்தி அடிவாங்கும் அவலத்தை விரும்பாத சீனா, தன்னைப் பொருளாதாரப் போரில் முற்றாக ஈடுபடுத்தியது. அதற்கு உலகின் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியது. சீனாவுக்குத் தேவை உலக பொருளாதாரத்தை வென்றெடுப்பது மட்டுமே. அந்தப் பொருளாதாரப் போரில் சீனா பெற்ற வெற்றி மகத்தானது. அளவுக்கதிகமான பொருளாதார பெருக்கத்தையும், உற்பத்தித் திறனையும் கொண்ட சீனாவுக்கான சந்தை வாய்ப்புக்கள் உலகெங்கும் விரிந்து சென்றன. சீனாவின் உற்பத்திக்கான மூலப் பொருட்களின், மசகு எண்ணைகளில் தேவையும் அதிகரித்தது. அந்தத் தேவையின் அடிப்படையில் பெருகிய கடற் போக்குவரத்துப் பாதையில் அமைந்துள்ள இலங்கைத் தீவு சீனாவைக் கவர்ந்தது. சீனாவின் காதலைப் புரிந்து கொண்ட சிறிலங்கா, இந்தியாவின் மிரட்டும்பாணி அதிகாரக் காதலை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறிலங்கா சீனாவுக்கு சீதனமாக வழங்கியது. இந்தியா முறைத்துப் பார்த்தது. 'இந்தா! உனக்கும் தருகிறேன் திருகோணமலையை, வைச்சுக்கோ' என்றது. பேரம் படிய மறுத்ததால் குடியிருந்த தமிழர்களின் வாழ்விட மண் பறிக்கப்பட்டு, சாம்பூரும் வழங்கப்பட்டது. இந்தக் கதை இப்படியெ தொடர்வதால், இப்போதைக்கு இதை விட்டு விடுவோம். வடக்கும் - கிழக்கும் ஒன்றிணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாடு சிங்கள நீதிமன்றத்தால் உடைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டாகிவிட்டது. அதை, இனி எந்தக் காலத்திலும் பலப் பிரயோகமின்றி இணைப்பது சாத்தியமே இல்லை. திட்டமிட்ட குடியேற்றங்களினாலும், யுத்தப் படுகொலைகளாலும், விரைவான புலம் பெயர்தல்களினாலும், தமிழ் மக்களின் கறாரான குடும்பக் கட்டுப்பாட்டினாலும் தென்தமிழீழத்தில் தமிழர்களின் மக்கள் தொகை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. கிழக்கை வடக்குடன் இணைப்பதில் இஸ்லாமியத் தமிழர்கள் விருப்பம் கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது. மகிந்த சிந்தனை மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கில் மகிந்த விரும்பியே பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தினார். பெரும்பாலும், இவரே கிழக்கின் கடைசித் தமிழ் முதல்வராகவும் இருப்பார் என்பதே பலரது கணிப்புமாக இருக்கின்றது. கிழக்கு, தமிழர்களின் கைகளை விட்டு வெகு வேகமாகச் சென்று கொண்டுள்ளது. இருப்பது வடக்கு மட்டுமே. அங்கேதான் இந்தத் தேர்தல் உச்சவத்தின் தேர்த் திருவிழா நடைபெறப் போகின்றது. இத்தனை அழிவுகளையும், இழப்புக்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது வட தமிழீழ அரசியல் களம் மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக அதனைக் கைப்பற்றி, இன்னொரு அரை வரதராஜப்பெருமாளாக சம்பந்தரை முதல்வராக்கினால் மட்டுமே இலங்கையிலிருந்து வழுக்கிச் செல்லும் தன் கால்களைப் புதைத்து நிற்க முடியும் என்பதே இந்தியாவின் இறுதிக் கணிப்பு. சீனாவுடன் பொருளாதார உதவிகளை வலுப்படுத்திவரும் சிறிலங்காவை மிரட்டி அடிபணிய வைக்கும் நிலை தற்போது இல்லை. அடித்துப் பணியவைக்க இந்தியாவின் ஆயுதங்களைக் கையேற்கவும் அங்கே இளைய தலைமுறை இல்லை. இந்தியாவுக்கு இப்போதுள்ள ஒரே இலக்கு வட தமிழீழம் மட்டுமே. அவர்களது அரசியல் பலம் மட்டுமே. அதற்காகவே இந்த இறுதிப் போர். தமிழீழ மக்கள் மீது தொடுக்கப்படும் இந்தப் போரில் 'தமிழ்த் தேசியம்' சிதைக்கப்படும். இந்த இறுதி யுத்த வெற்றிக்குப் பாடுபட்ட இந்தியாவை மகிந்த கைவிட்டுவிடப் போகிறாரா, என்ன? வடக்கிற்குள் சீனா நுழையாது என்ற உத்தரவாதத்துடன், இந்தியா வளமாக அங்கே காலூன்ற அனுமதிக்கப்படும். இதுதான் தமிழீம் மீதான இந்தியாவின் இறுதித் தாக்குதல்! இதைப் புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொண்டால் மட்டுமே தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும் காப்பாற்ற முடியும்.

முட்டாள் தவளையும் கருணாவின் முடிவும்

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது. இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படுத்திக் கொண்டன. நமக்கு இயல்பாகவே இலக்கியங்களும், கவிதைகளும், கதைகளும் நீதிநெறியை போதிப்பவையாகவே இருக்கின்றன. நாம் கட்டுரைகளாக வாசித்துக் கொண்டிருந்ததில் இருந்து சற்று மாறி, ஒரு கதை கேட்போம். ஒரு ஊர். பெயரை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அங்கே அழகிய காடு ஒன்று இருந்தது. அந்த காட்டிற்கு நடுப்பகுதியில் குளம், வற்றாத் தண்ணீருடன் எப்போதும் நீராதாரத்துடன் குளிர்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அந்த குளத்திலே ஆயிரக்கணக்கான தவளைகள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருந்தன. தவளைகளின் வாழ்வு, அதன் ஒவ்வொரு தன்மையும், அடையாளமும் அந்த தவளைகளுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த குளத்தில் வசித்த தவளைகளுள் ஒன்று மிகத் தவறான பாதைகளுக்கு செல்ல தீர்மானித்தப் போது, தவளைகளின் கூட்டம் ஒன்றிணைந்து, தவறான பாதைக்குச் சென்ற அந்த தவளையை குளத்தைவிட்டு விலக்கி வைக்க முடிவு செய்தன. அதை தலைமையும் ஏற்றுக் கொண்டது. கெட்ட எண்ணம் கொண்ட அந்த தவளை குளத்தை விட்டு வெளியேறும்போது மனதிற்குள் சொல்லிக் கொண்டது. என்னையா வெளியேற்றுகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் எனக்கு உறக்கம் இல்லையென. பாசம் மிகுந்த அந்த கூட்டத்தைவிட்டு வெளியேறிய தவளை, காட்டுப்பாதை வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் எண்ணமெல்லாம் தம்மை கூட்டத்தைவிட்டு வெளியேற்றிய அந்த தவளைக்கூட்டத்தை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தது. அது காட்டை கடந்து கொண்டிருந்தபோது அதன் எதிரே ஒரு பாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தவளை பரபரப்படையாமல், பாம்பின் நேர்எதிரே நின்று நீங்கள் மிக நல்லவராக தெரிகிறீர்கள். உங்களைப் போன்று திறன் வாய்ந்த, ஆற்றல் மிக்க ஒருவரை காண முடியாது. ஆனால் உங்களைப் பார்த்தால் பலமுறை தோல்விக் கண்டவர்களின் வாரிசாக தெரிகிறீர்கள். உங்களின் பட்டினித் தோற்றமே அதை வெளிப்படுத்துகிறது. வாருங்கள். எனக்குத் தெரிந்த ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தை நான் காட்டுகிறேன். அந்த குளத்திற்கு போகும் வழியையும் காட்டுகிறேன். அந்த குளத்தில் தாங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தால் அங்கிருக்கும் தவளைகளை எல்லாம் பிடித்துக் கொல்லலாம் என்பதையெல்லாம் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல் தவளைகளை கொன்று தின்னலாம். தவளைகளின் ரத்தத்தை நீங்கள் எவ்வளவாவது குடிக்கலாம் என்று சொன்னது. பாம்பிற்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. சரி, வா என்று அழைத்துக் கொண்டு, குளத்திற்கான வழியை தவளையோடு சென்று அறிந்து கொண்டது. அது, தாம் தங்கும் இடத்தை தவளையிடம் கேட்டு தெரிந்து கொண்டது. பின்னர், ஒவ்வொரு நாளும் அந்த பாம்பு குளத்தில் இருந்த தவளைகளை தம் விரும்பிய வண்ணம் கொன்று, தின்று தீர்த்தது. குளத்தில் தவளைகள் ஒட்டுமொத்தமாய் ஒழிக்கப்பட்டது. பாம்பிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அக்குளத்தைவிட்டு வெளியேறி மீண்டும் காட்டு வழியே திரும்பி வந்துக் கொண்டிருந்தது.வரும் வழியில் தமது இனத்தையும் அந்த இன வாழ்வின் அடையாளத்தையும் காட்டிக் கொடுத்த தவளை அந்த பாம்பைப் பார்த்து, என்னய்யா, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிறைவாக சாப்பிட்டீர்களா? அனைவரையும் கொன்று தீர்த்தீர்களா? என்று பாம்பை பாராட்டும் முகமாக வாழ்த்தியது. ஆனால் அனைத்தையும் கொன்று தீர்த்த பாம்புக்கு பசி மீண்டுமாய் தூண்டியது. அது எங்கே சென்று இறை தேடுவது என்று புரியாமல் இருந்தபோது அந்த துரோகத் தவளை பாம்பிடம் வந்து செய்திகளை கேட்டவுடன் பாம்பிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஒரே தாவலில் அந்த தவளையை கவ்வி, விழுங்கத் தொடங்கியது. பாம்பின் வயிற்றுக்குள் இறங்குவதற்கு முன்னால் அந்த தவளை நினைத்துக் கொண்டது. ஐயோ, நம் இனத்தை காட்டிக் கொடுத்தோமே? அந்த துரோகத்திற்கு விலையாக நமது உயிரே பறிப்போகிறதே? என்று கதறியபடி செத்துப் போனது. இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ. நிச்சயம் கருணாவுக்குப் புரியும். ராஜபக்சேவுக்கு புரியும். வாசிக்கும் உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். -கண்மணி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை நிவாரணமே அன்றி ......!?

கடந்த சனிக்கிழமை பிரித்தானியாவில் தாஜ்மஹலுக்கு சொந்தக்காரரும்,எவரும் கட்டிய வீட்டை உரிமைகோருபவரும் வசிப்பவரும் ஆகிய இருவராலும் இடம்பெயர்ந்தமக்களுக்கான நிவாரணம் வழங்கல் பற்றி கூட்டப்பட்ட கூட்டத்தில் இவர்கள் தங்களின் ஊடாகத்தான் நிவாரணம் அம்மக்களுக்கு சென்றடையவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.இதனை கூடியோர் நிராகரிக்க முடியாத நிலையில் முடிவு பெற்றது இம் மக்குகளின் கருத்தரங்கு.விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் நிதி இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவர்கள் மக்களைக் காரணம் காட்டி பணம் கறக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களின் அவசியமும் அவசரமாகிய கடமையாதெனில்.... போரால் பாதிக்கப்பட்டு நாதியற்ற எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்பெற, உலகத்தின் எத்திசையில் உள்ள தமிழர்களையும் வெளிநாட்டு உதவி வழங்கும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதே சாலச்சிறந்தது. கூட்டமும் கருத்தரங்கும் கூட்டி பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதற்குப் பதில் உடனடி நடவடிக்கையில் இறங்குவதே பதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் செய்யும் பேருதவி. நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரியது என்று வாழ வேண்டும் - தேசியத்தலைவர்

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாக செயற்படுவதல்ல

அரசியல் இராசரீகம் என்பது கைப்பொம்மைகளாகச் செயற்படுவது அல்லது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்தியாவின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்ட காரணத்தினால், உள்ளிருந்து சம்மரசம் செய்ய அவகாசமற்று அதிலிருந்து வெளியிற்றப்பட்டதால், அடிப்படைத் தேசியக் கொள்கைகளைக் காப்பாற்றும் வகையில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளதன் மூலம், தாயக மீட்புக்காக இழக்கப்பட்ட உயிர்களுக்கு துரோகம் இழைத்து வருவதாகவும், கொள்கை பிறளும் தலைமையுடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் தேசிய நலன் சார்ந்தோர் இணைந்து கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முற்றிலும் முரணாக இந்தியாவின் விருப்பிற்கு இணங்க தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரித்த கூட்டமைப்பின் தலைமை, அதனை இந்தியா உட்பட சில நாடுகளின் தூதரகங்களுக்கும் இரகசியமாக வழங்கியிருந்ததாகக் கூறிய கஜேந்திரன், அந்தத் தீர்வுத் திட்டத்தின் பிரதியை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஒஸ்லோ உடன்படிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது பற்றி கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களே நேரடியாகக் கூறியிருந்த போதிலும், தேசியத் தலைமையின் முடிவுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது தேர்தல் வெற்றிக்கான பொய்ப்பரப்புரையுடன் களமிறங்கியிருப்பதாக இந்த செவ்வியில் அவர் கூறினார். தனது குடும்ப அங்கத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தன்மீதும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய அங்கத்தவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தாயகத்தில் பத்திரிகைகளும், புலம்பெயர் நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு இணையத்தளமும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

சிறீலங்கா புலனாய்வுத்துறையினரின் தாக்குதல் பட்டியல்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பு 35 பேர் மீதான தாக்குதல் பட்டியலை கொண்டுள்ளது. அதில் முன்னனி ஊடகவிலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளன. உறுப்பினர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியில் வெளிவந்துள்ளது. அரசு அவர்களை துன்புறுத்தலாம் என்ற அச்சங்களை தோற்றுவித்துள்ளது. இந்த பட்டியிலை வெளியிட்டதன் மூலம் அரசு அவர்களை மறைமுகமாக எச்சரித்து அடக்கிவைக்க முயல்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஊடகப்பிரிவுத் தலைவர் மைக் பிளேக்மோர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஊடக சுதந்திரத்தை மதித்து, மனித உரிமை செயற்பாட்டளர்களை அவர்களின் கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த 35 பேரின் பாதுகாப்புக்கள் குறித்து எல்லா தரப்பினரும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். மனித உரிமை செயற்பாட்டாளர்களான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஜே சி வெலியமுனா ஆகியோருக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களுக்கு முன்னர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் தற்போது இந்த பட்டியலில் முன்னனி நிலையில் அவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்தியா குறித்து உளவு பார்த்தாராம்!

ஜிஹாத் ஜேன் என்ற பெயரில் இந்தியா வுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தகவல்களைத் திரட்டி வந்த அமெரிக்கப் பெண்ணை அந்த நாட்டு எப்பிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலும், தெற்காசியாவிலும், ஐரோப்பாவிலும் பெரும் தீவிரவாத சதிச் செயல்களை இவர் உள்ளிட்டோர் தீட்டி வந்தது தெரிய வந்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கான ஆளெடுப்பிலும் ஜிஹாத் ஜேன் ஈடுபட்டு வந்துள்ளார். இவருடைய உண்மையான பெயர் கொலீன் லாரோஸ் என்ற பாத்திமா லாரோஸ். பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் தற்போது வெள்ளையர்களை ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர் தீவிரவாதிகள். இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆண்டு டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற அமெரிக்கர் கைது செய்யப்பட்டார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் இவருக்கு மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வரிசையி்ல் இன்னொரு அமெரிக்கப் பெண் பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதாகும் கொலீன் லாரோஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலடெல்பியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலகெங்கிலும் உள்ள பல்வேறு தீவிரவாதக் குழுக்களுடன் நல்ல தொடர்பு உள்ளதாம். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் தீவிரவாதக் குழுக்களுக்காக பணியாற்றி வந்துள்ளார். நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அவை - தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, வெளிநாடு ஒன்றில் கொலைச் செயலை செய்ய திட்டமிட்டது, அடையாளத் திருட்டில் ஈடுபட்டது, போலி வாக்குமூலம் அளித்தது. கொலீன் லாரோஸ் குறித்த வழக்கில், பிலெடல்பியா கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் மைக்கேல் லெவி கூறுகையில், தீவிரவாதிகள் தற்போது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. பார்த்தவுடன் இவர் தீவிரவாதி என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழாத வகையில் ஆட்களை இவர்கள் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் தீவிரவாதிகளுக்குத் துணை போக ஆரம்பித்து பிடிபட்டிருப்பது இதையே காட்டுவதாக உள்ளது என்றார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த முதல் பெண் தீவிரவாதி கொலீன் லாரோஸ் என்று கூறப்படுகிறது. இவருடைய கூட்டாளி இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவருடைய பெயரை எப்.பி.ஐ. குறிப்பிடவில்லை. டென்மார்க்கைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட்டைக் கொல்ல கொலீன் லாரோசுக்கு இந்த நபர் உத்தரவிட்டிருந்தாராம். இந்த வில்க்ஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் வரைந்ததால் சர்ச்சைக்குள்ளானவர். வில்க்ஸ் கொலைச் சதி தொடர்பாக அயர்லாந்து போலீஸார், 4 ஆண்கள், 3 பெண்களை கைது செய்துள்ளனர். இவர்கள் மூலம்தான் கொலீன் லாரோஸ் குறித்த தகவல் வெளியானதாம். வில்க்ஸ் கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிலரை தேர்வு செய்திருந்தார் கொலீன் லாரோஸ். மேலும் இதற்காக நிதியும் கூட திரட்டி வைத்திருந்தார். தெற்காசியா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சில தீவிரவாதிகளுடன் அவர் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளார். இருப்பினும் எந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்திற்காகவும் இவர் தனியாக செயல்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் தீவிரவாத திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான சதியும் கொலீன் லாரோசிடம் கொடுக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த தீவிரவாத செயல்களில் கொலீன் லாரோசுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை.

பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ்

சண்டே லீடர் பத்திரிகையில் கடந்த 28ம் திகதி எழுதப்பட்டிருந்த கட்டுரையில் பிரதி பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இக்கருத்துக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டுரையின் உரிமையாளர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் மன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் தவறை உணர்ந்துள்ளதாகவும் , தவறுக்காக எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டுரையில் உள்ள பாரதூரமான விடயங்களை அவர் பின்னரே உணர்ந்துள்ளதாகவும் கூறினர். அவருடைய மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மன்னிப்புகோரும் விடயத்தினை சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதற்பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் கட்டுரையில் உள்ள தவறுகளைத் திருத்தி அவற்றை முன்பக்கத்தில் பிரசுரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ், அவ்வாறு அவர் அதை தெரிவித்தார் என்பதற்கான ஒலிப்பதிவு தன்னிடம் உண்டு என தெரிவித்தபோதும் இதுவரை அவர் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது!

இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 000 இற்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு அமைப்பு 10 781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் ஏனைய 1000 பேர் அளவான பற்றிய விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் வெளியிடப்பட்டவர்களில் 19 – 24 அகவைக்குட்பட்டவர்கள் 4580 பேர்கள் எனவும் 25 – 34 அகவைக்குட்பட்டவர்கள் 4220 பேர்கள் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் 19 அகவைக்குட்பட்டவர்கள் பற்றிய தொகையை வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது வெளிவிடப்பட்ட தகவல்களின் படி 8791 ஆண்களும் 1990 பெண்களும் உள்ளடங்குவதாகவும் அவர்களில் 1422 பேர் ஊனமடைந்தவர்களாகும். குறித்த 1422 மாற்றுவலு தேவைப்படுவோரின் மேலதிக விபரங்கள் வருமாறு: முழுமையாக காது கேட்கும் திறன் இழந்தவர்கள் – 04 காது கேட்கும் திறன் பாதிப்படைந்தவர்கள் – 01 முழுமையான கண் பார்வை இழந்தவர்கள் - 03 கண் பார்வை இழந்தவர்கள் - 144 இரண்டு கால்களும் முழுமையாக இழந்தவர்கள் - 05 ஒரு கால் இழந்தவர்கள் - 686 இரண்டு கைகளையும் இழந்தவர்கள் - 17 ஒரு கை இழந்தவர்கள் - 387 ஏனைய உடல்உறுப்புகளை இழந்தோர்கள் - 175 மார்ச் மாதம் முதலாம் திகதி கணக்கெடுப்பின்படி இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் 17 தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 108 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருந்தவர்கள் எனவும் 150 பேர் அளவில் பல்கலைக்கழக கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுரை 900 சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் இன்னும் 11 000 இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதும் அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானார் இப்பதிவுகளில் உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னர் வெளியாகியிருந்த செய்திகளின்படி 11000 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும் பண்ணைகளை அமைத்து அங்கு தடுத்துவைத்து பண்ணை வேலைகளில் ஈடுபடவைத்து தொடர்ந்தும் தடுத்துவைக்கும் சிறிலங்கா அரசின் திட்டம் ஊடகங்களில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி திருமணம் செய்துள்ளவர்களையும் குடும்பமாக தடுப்புமுகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புதுமுறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மிலிந்த மொறகொட தகவல் வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி தமிழீழத் தேசியத் தலைவரால் ஒரு தேவைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிறிது காலத்திற்கு இல்லாமல் செய்திருந்தது. தற்பொழுது ஆயுதங்கள் மௌனித்துள்ள நிலையில் இந்தக் கட்சியின் தேவை மீண்டும் ஏற்பட்டுள்ளது. தேசியத் தலைவர் காட்டிய பாதையில் எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தை தாம் தொடர இருப்பதாக பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிவரும் புலம் பெயர் அமைப்புக்களுடன் இணைந்து தாம் போராட்டத்தை முன்கொண்டு செல்வோம் என்று பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார். புலிச்சின்னமே தமது கட்சியின் சின்னமாக பிரித்தானியாவில் பதியப்பட்டுள்ளதாகவும், புலிக்கொடியேற்றப்பட்ட தமது கட்சி அலுவலகம் Unit G11, Lombard Business Park 2 Purley Way, Croydon, Surrey, CR0 3JP என்ற விலாசத்தில் விரைவில் திறக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் 1989ம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. புலிகளின் அந்த அரசியல் கட்சியின் தலைவராக மாத்தையாவின் பெயரே பதியப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த யோகரட்ணம் யோகி அவர்கள் விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் செயலதிபராக நியமிக்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சிறிலங்காவின் தேர்தல் திணைக்களத்தில் தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்து கொண்டது. இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு இலங்கையின் ஜனாதிபதி பிரேமதாசவினால் 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி கூட்டப்பட்ட அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். விடுதலைப் புலிகளின் அந்த அரசியல் கட்சியின் முதலாவது மாநாடு மட்டக்களப்பு வாகரையில் 1990ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி முதல் மார்ச் மாதம் 1ம் திகதி வரை நடைபெற்றது. 1990ம் ஆண்டு ஆனி மாதம் ஆரம்பமான 2ம் கட்ட ஈழ யுத்தத்தைத் தொடர்ந்து இந்தக் கட்சியின் செயற்பாடு முற்றாகவே இடைநிறுத்தப்பட்டிருந்தது. இன்றைக்கும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் கட்சியாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவிலும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.