ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

குடும்ப அரசியலிற்குள் மறைந்திருக்கும் வியூகங்கள் .......?


ஆசிய நாடுகளில் இராஜ குடும்பம், இராணி, இளவரசன், இளவரசி என்ற மகாராஜா குடும்ப மனப்பான்மை இன்றைய அரசியலிற் கூட குடும்ப ஆதிக்கம் தொடர இடமளித்து வருகிறதெனலாம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் குடும்ப அரசியல் வலுவிழந்து மாற்றங்கள் சில தோன்றி விட்டபோதும், மீண்டும் மீண்டும் பிரபல்யம் என்பது அதே குடும்ப அரசியலை மீள நிலைநாட்ட உதவுகிறது. பிரித்தானியாவில் அரச குடும்பம் கௌரவிக்கப்படும் அதே பாணியில், பாரதத்தில் மேலே கொண்டு வரப்பட முயலப்பட்ட “பிரியங்கா” இந்திரா போன்ற தலைமைத்துவம் உடையவர் என்று பேசப்பட்டது. 1997 காலப்பகுதியில், அதற்காக கழுத்தும் , மூக்கும் , அந்த மிடுக்கும் துணைக்கு இழுத்து வரப்பட்டன. ஆனால் நளினியைச் சந்தித்த பின்னர் பிரியங்கா தெரிவித்த எங்கள் அப்பா நல்லவர் என்ற பேதமைமிக்க கற்றுக் குட்டித் தன வாக்கு மூலம் அவரின் அறிவுப் பஞ்சத்தைப் பறை சாற்றியது. சம கால நிகழ்வுகளையோ, அன்றில் மறுதரப்பு நிலைப்பாட்டையோ புரிய முயலாத, ஒரு அரசியல் மழலையாக அவர் விலகினாலும், அவரை அழ வைத்ததுடன் ஆரம்பித்ததே முள்ளி வாய்க்கால் முடக்கமாகும். ராகுல், பிரியங்கா, சோனியா ஆகிய மூவரையும் பழி வாங்கல் ஊடாகத் திருப்திப்படுத்த இந்திய நடுவண் அரச, உளவு மற்றும் அரசியல் துறை பிரமுகர்கள் எடுத்த பெரு முயற்சியின் விளைவே முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பாகும். காந்தியைச் சுட்ட போது அவர் கோட்சேயை மன்னிக்கச் சொன்னார். ராகுலோ என் தந்தை தொடர்பான நீதியான தீர்ப்பு தங்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து இந்த இன அழிப்பிற்கு எண்ணை வார்த்தார். இதனால் சட்டத்தை தன் கையிலே எடுத்த இந்தியா, ஒரு பேட்டை ரவுடி போல், உலக வழக்கம், சர்வ தேச மரபுகள், போர் விதி முறைகளை எல்லாம் தானே மீறி ஒரு பாரிய இன அழிப்பை நடாத்தி முடித்தமை தான் நீதியான தீர்ப்பா என்பதே மே 18 இல் இந்தியாவை நோக்கி எழுப்பப்படவேண்டிய கேள்வியாகும். இலங்கைத் தீவில் நிலவும், இந்த இன முரண்பாட்டிற்கு என்ன காரணம் என்று ராகுல் என்ற அழகிய இளைஞனோ அன்றில் நல்லவர் என்ற கணிப்புள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கோ சிந்திக்கவில்லை. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் இயேசுவின் வாக்கியம் இத்தாலியப் பெண்மணியிடமிருந்து வரவில்லை. இவற்றை எல்லாம் அவதானித்த, இலங்கை அதிகாரிகள் புலிகளிற்கு எதிராக இந்தியத் துணையுடன் ஒரு பெரிய போரை நடத்தலாம் என்பதை கணித்துக் கொண்டு காரியத்தில் இறங்கி தமிழ் இனத்தையே வீழத்தி விட்டனர். ராகுலினதும், பிரியங்காவினதும், சோனியாவினதும் முயற்சி ராஜீவை திருப்பி பெற உதவுவதற்கு மாறாக ஒரே நாளில் ஆயிரக் கணக்காணவர்களை கொல்லவே உதவியது. சகிப்பும், விட்டுக் கொடுக்கும் பரந்த மனப்பான்மையும் இந்தியாவிற்கு தலைமை தாங்குபவரிற்குத் தேவை. பல இன மக்களையும், சுற்றி வர பல்வேறு நாடுகளையும் கொண்ட பாரதத்தை நிர்வகிக்கும் போது, ராகுல் இதே “றிற் போ றைற்” தன்தைக் காட்டுவாரேயானால், பொற்கோயிலைத் தொடர்ந்து வந்த இந்திராவின் முடிவு தான் திரும்ப வாய்ப்புண்டு. இவரது புலியைப் பலி எடுக்கும் முனைப்பு இன்று சோனியாவின் கை வாளாக மாறி விட்ட கலைஞரின் ஊடக மற்றும் அரசியல்க் கதிர்களால் காக்கப்பட்டாலும் “கிஸ்றி ரிப்பீடஸ் இற் செல்வ்” என்பதற்கு இணங்க 20 ஆண்டுகளின் பின்னரோ என்னமோ ராகுல் இதற்கான விணை விலையை செலுத்த வேண்டும் என்பது இயற்கையின் நியதியாகலாம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இன்றைய பிரதமர் ஜனாப் அலி பூட்டோவின் மகளின் கணவராக காணப்படுகிறார். பூட்டோவின் மகள் பெனாஜீர் கொல்லப்பட இவர் பதவிக்கு வந்தார். இவ்வாறே இந்திரா அம்மையார் சுடப்பட, சஞ்சய் ஏற்கனவே விமான விபத்தில் கொல்லப்பட்டதால் வேறு எவரும் அற்ற நிலையில் குடும்ப அடிப்படையில் ராஜீவ் இழுத்து வரப்பட்டார். இவ்வாறு இதே குடும்ப அரசியல் உண்மையான இராஜ குடும்பத்திலிருந்து அதிகாரத்தை இத்தாலிக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டதை இராம இராஜ்ஜியப் பாணி மக்கள் உணர்ந்ததாக இல்லை. இனி , நாம் நமது இலங்கைக்கு வந்தால், இதுவரை சகோதரர்களை சூழ வைத்திருந்த மகிந்த தற்போது, தனது மைந்தனையும், மூத்த சகோதரரையும் அவைக்கு இழுத்து வந்துள்ளார். புலி இயக்கத்திடமிருந்து பல விடயங்களைக் கற்றுக் கொண்ட மகிந்த, தனக்கு வேண்டிய நம்பிக்கையை உறுதி செய்ய கோத்தபாயாவை பாதுகாப்புச் செயலாளராக்கினார். சந்திரிகா அம்மையார் தனது மாமனை அமர்த்தியதைப் பிரதி செய்த மகிந்த பிறரிடமிருந்து கற்றுக் கொண்டதே மிக அதிகம். இன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இந்த ஆண்டு இறுதியில் பதவிப் பிரமாணம் செய்யும் போதோ, அன்றில் தனது பதவி வலுக் குறைய ஆரம்பிக்கும் பிந்திய காலப்பகுதியிலோ ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமராக தான் பாராளுமன்றத்துள் நுழையும் போது, பாதுகாப்பாக சபாநாயகராக இன்றே நியமிக்கப்பட்டிருப்பவரே சமல் ராஜபக்ச ஆவார். திரு பிரேமதாசா அரச தலைவராக இருநத போது, எச் எம் முகமட் நம்பிக்கைகக்குரிய சபாநாயகராக இருக்காமையால் ஒரு ஆபத்தை பிரேமதாசா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சந்திரிகா அம்மையார் இரண்டாந்தடவை பதவிப் பிரமாணம் எடுத்தமை தொடர்பாக சட்டச் சிக்கலை மனதில் கொண்டு, பிரதம நிதியரசர் நியமனத்தை கையாண்ட அதே பாணியில் மகிந்த வகுக்கும் வியூகம் அவதானிப்பிற்குரியது. இவ்வாறே இந்திராவை என்றுமே எங்கும் அழைத்துச் சென்று அரசியலையும் அறிமுகத்தையும் நேரு ஏற்படுத்தினார். அதே பாணியில் வெற்றி பெற்ற தன் மைந்தனிற்கு பிரதி அமைச்சர் பதவியைக் கூட உடனடியாக வழங்காமல், தனது மாளிகையிலேயே உடன் அமர்த்தி அரசியலை போதிப்பதுடன், உலகத் தலைவர்களின் அறிமுகத்தையும் எற்படுத்துவதே மகிந்தவின் திட்டமாகும். அதே சமயம் தனது பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் செயராளராகத் தொடர்ந்தும் கோத்தபாயாவை வைத்திருப்பதும், சமாதானப் பேச்சில் ஈடுபட்ட உலகத்தால் அறியப்பட்ட, போராசிரியர் திரு ஜி எல் பீரிஸ் அவர்களை வெளிநாட்டு அமைச்சராக்கியிருப்பதும், தன்னைச் சமாதானப் பிரியராகக் காட்டி, புலம் பெயர் தமிழர்கள் மீது வைக்கும் குறிக்கு சான்றாகின்றன. ஆயுதப் பிரயோகப் போராட்டம் என்பது தாயகத்தில் சாதகமான நிலையை தோற்றுவித்த அதே சமயம் சர்வதேசப் பரப்பில் புலிகளை பயங்கரவாதிகளாக்க மிகவும் உதவியதுடன் அவர்களை முறை வகையின்றிக் கொல்லவும் உதவி விட்டது. இந்த நிலையில் திரு வி உருத்திரகுமாரன் அவர்கள் ஆயதம் இனி எங்கள் அகராதியிலே இராது என்பது விவேகமான வாக்கு மூலமாகும். இலங்கைத் தீவில் கண்டிச் சிங்களவரின் ஆதிக்கம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன் அடிப்படையில் கூச்சல் போட்ட கண்டியர்களைத் திருப்திப்படுத்தவே டி எம் ஜெயரட்ண பிரதமராக்கப்பட்டுள்ளார். இந்தக் கண்டிப் பாராம்பரியத்துள்ளும் மறைந்து கிடப்பது பரம்பரைக் குடும்ப ஆதிக்கம் தான். இலங்கைத் தீவில் பெண்கள் ஆண்களிற்கு சமனாக மதிக்கப்பட்டதாலேலே உலகின் முதற் பெண் பிரதமராக சிறீமாவோ பண்டாரநாயக்கா வர முடிந்தது என்று இந்த உலகமே எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் சந்திரிகா அடங்கலாக இந்த பெண் எழுச்சி எல்லாம் நான் ஆரம்பத்தில், குறிப்பிட்ட இராணி இளவரசி மனப்பான்மை குடும்ப அரசியலின் வெளிப்பாடுகள் தான். எது எப்படியிருப்பினும், ருக்மன் சேனநாயக்கா, பிரேமதாசா குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், ராஜபக்ச குடும்பம் என்று பல குடும்பஙகள் இன்று தோன்றி விட்டதால் தனி ஒரிரு குடும்ப ஆதிக்கம் என்பது தீவில் வலுவிழந்து விட்டது என்ற திருப்தியுடன் நிறைவு செய்வோம்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிகப்படவுள்ள நிபுணர்கள் குழுவை நியமிக்க வேண்டாம் என இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸினால் இறுதியாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகளின் செயலாளரை சந்தித்த போது மொஹான் பீரிஸ் இதனைக் கோரியுள்ளார். ஐ.நா பொதுச் செயலாளருக்கும் இலங்கையின் சட்ட மா அதிபருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீ தெரிவித்துள்ளார், எனினும் எவ்வாறான தகவல்கள் வெளியிடப்பட்டன என்பது குறித்து தெரிவிக்கவில்லை. ஐக்கிய நாடுகளின் இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹணேவுடன், நிபுணர்கள் குழு நியமனம் குறித்து பல சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஆணைக்குழுவின் அறிக்கை இந்த மாத இறுதியில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது.

நீ எப்படி தலைவன் ஆனாய்? பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்

எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல் தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு அரசியல் தலைவரின் விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு, உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்.


இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும்; மேலே சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதவன் நீ.


இவ்வாறு ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு அழைக்கிறார்கள்.


இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை, ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும்தான்.


அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல் பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை. ஆடம்பர மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே. அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.


அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே! இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச் சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு மனைவிகள் ; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.


இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின் மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில் எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.


இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில் இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன், மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில் நின்றதை உணர்த்துகிறது.


இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?


நீ எப்படி தலைவன் ஆனாய்?


சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு நின்றுவிட வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!


அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே உண்ணாவிரதம் இருக்கலாம்! ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர் நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி நடத்த வேண்டும்.


அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன? தாய்த்தமிழகத்தில் தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன் மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!


எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு, பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி! அனைவருக்கும் ஒரு அடைமொழி! இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப் படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக் குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.


இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள் என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள் எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம் யார் கேட்டார்கள்? பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத் தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு இருக்கிறது.


போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும், தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!


எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.


ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன விடுதலைக்காய், தன் இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை “மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.


ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப் போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!


வாழ்க நீ எம்மான்!


கிளர்ச்சியாளன்


வழக்கறிஞர்-சேசுபாலன்


மற்றும் குழுமம்.




“தாய்த் தமிழ்நாடு"

மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை.


மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலைகலையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் கலைஞர்கள் இல்லை. இவை அனைத்தையும் உலகிற்கு எடுத்து செல்பவர்கள் தான் உண்மையான மக்கள் கலைஞர்கள் குர்திசு இன மக்களின் விடுதலைக்காக போராடிய ஒச்சலான் கைது செய்யப்பட்டபோதும்,ஸ்பெயின் சர்வாதிகாரி பிராங்கோவுக்கு எதிராக போராடியதும் வியட்நாமிய யுத்தத்திற்கெதிராக குரல்கொடுத்ததும்,இலத்தீன அமெரிக்கப் புரட்சியில் கலந்து கொண்டதும்,கலைஞர்கள் தான் இன்னும் சொல்ல போனால் இட்லரின் செய்கைகளை தன்னுடைய திரைபடங்களின் மூலம் வெளிபடுத்தியவர் சார்லின் சாப்லின். இதே வழியில் வந்த கலைஞர்கள் இன்று ஒரு இனபடுகொலையை,மாபெரும் மனித அவலத்தை நடத்திய இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு துணை போக போகிறார்களா? இரண்டு லட்சம் மக்களை கொன்றொழித்தது மட்டுமில்லாமல் இன்றும் முள்வேலி முகாமிற்க்குள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை அடைத்து வைத்து அடிப்படை வசதிகூட செய்து கொடுக்காமல் ,அங்கு தமிழ் பெண்களை இலங்கை ராணுவத்தினர் மூலம் பாலியியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கி இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களை நிரந்தர ஊனமாக்கி மனித நேயம் உள்ள எந்த மனிதனும் ஏற்று கொள்ள முடியாத செயல்களை செய்த செய்து கொண்டு இருக்கிற இலங்கை இனவெறி அதிபர் கொடுங்கோலன் ராஜபக்ச தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுக்க எவ்வித முன்னெடுப்புகளையும் மேற் கொள்ளவில்லை என்பதையும் தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங் களையும் ,போரின் இறுதி காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டிய தார்மீக பொறுப்பை UN நாடுகள் மற்றும் அவை யின் உறுப்பு நாடுகளுக்கு நிறை வேற்றாது விட்டன.என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கூறுகிறது இந்த தீர்ப்பை ராஜ பக்சே மதிக்க வில்லை ஏனென்றால் அவரோடு துணை போவதற்கு சில நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. 400க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய மீனவர்கள் இந்திய கடல் எல்கையில் இலங்கை கடற்படையினரால்சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட மீனவர்களின் நீதிக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இந்திய அரசின் வழக்கறிஞர் “சர்வதேச கடல் எல்லையில் கொல்லப்பட்ட மீனவனுக்காக இந்தியா பொறுப்பேற்க முடியாது ” என்கிறார். அவர்கள் இந்திய எல்லையில்தான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரம் அளிக்கப்பட்ட போது “ இதற்காக இலங்கையின் மீது போரா தொடுக்க முடியும்” என்றும் பதிலளிக்கிறார். மேலும் இந்திய தமிழக கடலோர எல்லை பகுதிகளில் இந்தியா எதிரியாக நினைக்கும் சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகள் காலுன்றி விட்டன. இவர்கள் என்றுமே இலங்கையின் மிக நெருங்கிய நண்பர்கள். இப்படி எல்லாவிதத்திலும் இந்தியாவிற்கு எதிராக செயல் படும் இலங்கைக்கு எதற்கு பல மில்லியன் டாலர்களை பெற்றுத்தரும் சர்வதேச இந்தியத்திரைப்பட விழா ? என்பதுதான் கேள்வி சர்வதேச இந்தியத்திரைப்பட விழா துபாயில் நடந்த பொழுது துபாய்க்கு நேரடியாக கிடைத்த வருமானம் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.இதனால் துபாயின் சுற்றுலாத்துறை வருமானம் ஒரு வாரத்தில் 30% அதிகரித்தது. இதே போன்றுதான் இங்கிலாந்தில் யார்க்ஷயரிலும் நடந்தது. அயர்லாந்தில் உள்ள டப்ளினில் இந்த விழா நடந்தால் அயர்லாந்திற்கு 800 மில்லியன் வர்த்தக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இத்தகைய காரணங்களினால்தான் தென்கொரியா, கனடா, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்த விழாவை தங்கள் நாட்டில் நடத்துவதற்காக போட்டிபோடுகின்றன. இதே வேளையில் ராஜபக்சேவின் நல்வாழ்விற்காக கொழும்புவில் விழா நடத்தத் துடிக்கும் இந்திய அரசாங்கமும், அதிகார வர்க்கமும் தமிழ்மக்களையும் தமிழகமக்களின் உயிரை உண்ர்வை துச்சமாக மதிக்கிறார்கள்.

இன்றைய பதிவு ..........................


நாடு கடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் எங்கே?


மலேசிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விடுதலைப்புலிகள் எங்கே?. அவர்களுக்கு என்ன நடந்தது?.தமது நாட்டில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் கடந்த காலத்தில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக மலேசிய உள்துறை அமைச்சர் நிஷாமுதீன் உசெய்ன் விடுத்துள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். மலேசியாவில் விடுதலைப் புலிகள் தளம் அமைப்பதை தடுப்பதாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியதாகவும் விடுதலைப் புலிகளின் தலைவர்களான இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியதாகவும் அந்த அறிக்கையில் நிஷாமூதீன் கூறியுள்ளார். சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள் மலேசியாவை தளமாகக் கொள்வதைத் தடுப்பதே தமது நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த விடயம் சம்பந்தமாக பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவினால் இவ்விதமாக சர்வதேச ரீதியில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தால் அந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சம்பந்தமாக இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாகும். நாடொன்று ஒருவரை நாடு கடத்தும்போது அந்த நபரை பொறுப்பேற்கும் நாடு அந்த நபரை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பதே வழமையாகும். இந்த நிலையில், மலேசியாவில் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் மலேசியா இதுதொடர்பான அறிக்கையை வெளியிடும் வரை இலங்கை அரசாங்கம் இதுகுறித்து எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்களா அல்லது விடுவிக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த காலத்தில் வெளிநாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலரை இலங்கை அரசாங்கத் தரப்பினால் சட்டவிரோதமான முறையில் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு பல நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மலேசியாவிலிருந்து கடந்த காலத்தில் நாடு கடத்தியவர்கள் சம்பந்தமாக இலங்கை அவர்களை என்ன செய்தது, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எவ்விதமான தகவல்களை வெளியிடவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனையும் மலேசியாவில்வைத்து இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா வெளியிட்டுள்ளது

சூரியன் தொடர்பான புதிய படங்களை நாஸா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதிஉயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கமரக்களினால் குறித்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூரியனில் பல்வேறு வெடிப்புக்கள் இடம்பெற்று வருவதாகவும், வாயு வெளியேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி சூரிய சக்தி மற்றும் சூரிய குடும்பம் பற்றிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என நாஸா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சோலர் டைனமிக் ஒப்சர்வேர்ட்டி எனப்படும் விசேட கமராவைக் கொண்டு சூரியனின் படங்கள் எடுக்கப்பட்டுள்ளதகாவும், ஐந்து வருடங்களுக்கு இந்த கமரா படங்களை விநியோகிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், சூரியன் பற்றிய ஆய்வுகளை பூரணப்படுத்த இன்னும் நீண்டகாலம் தேவைப்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த கமரா மிகவும் துல்லியமான படங்களை பல கோணங்களிலிருந்து எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகநாடுகளின் நகர்வாக ........................

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக் கொண்டு அரசாங்கம் எதைச் செய்யப் போகிறது என்பது அடுத்த கேள்வியாக உள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் சரி- கிடைக்காது போனாலும் சரி- அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கப் போவது தமிழர் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தான். சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை வாழ்த்தியதற்கும் வரவேற்றதற்கும் பின்னால் இருக்கின்ற இரகசியம்- இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளதே என்பதற்காகத் தான். அதாவது இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேசத்துக்கு சில சாட்டுப் போக்குகளைச் சொல்லி வந்தன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை- மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை, அது இருந்தால் தான் துணிவோடு மாற்றங்களைச் செய்யலாம்- அதிகாரங்களைப் பகிரலாம் என்ற நியாயங்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இப்போது இப்படிச் சாட்டுகளைச் சொல்லும் வாய்ப்புகள் இல்லாது போயுள்ளன. இந்தநிலையில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்ப்பது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைத் தான். வாழ்த்துச் செய்திகளின் ஊடாக சர்வதேசம் இந்தச் செய்தியையும் இலங்கை அரசுக்குச் சொல்லியிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் சர்வதேசம் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறதே தவிர தமிழர்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி நாம் கற்பனை செய்வது மிகையானதொரு நிலைப்பாடாக இருக்கும். சர்வதேச சமூகத்தைப் பொறுத்த வரையில் நியாயமான நீதியான தீர்வாக அது வலியுறுத்துவது ஆகக் குறைந்த அரசியல் தீர்வாகவே இருக்க முடியும். அவர்களுக்குத் தேவை இலங்கையில் அமைதி. சமஷ்டி முறையில் தீர்வு அமைவது பற்றியோ அல்லது வேறெந்த வடிவிலான தீர்வு பற்றியோ அவர்களுக்குக் கவலையில்லை. இந்தக் கட்டத்தில் அரசாங்கம் தமக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பெரும்பான்மை மக்களினது என்று கூறி எப்படி சர்வதேசத்தை சமாளிக்கிறதோ அதுபோலவே தமிழ் மக்களும் ஜனநாயக ரீதியாக தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் பொதுத்தேர்தலை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்களா என்பது சந்தேகமே. வடக்கிலும், கிழக்கிலும் பிரதான கட்சிகளுக்கு கிடைத்துள்ள ஆசனங்கள் இந்தக் கேள்வியை எழுப்புவதற்கு வசதியாக அமையும். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக வந்திருப்பதால் அவர்களை சர்வதேசம் புறக்கணிக்க முனையாது என்று நம்பலாம். தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வந்துள்ள நிலையில் அதனுடன் அரசு பேச்சு நடத்துவதையே சர்வதேசம் விரும்பும். இது இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடியாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை பொதுத்தேர்தலில் மட்டுன்றி அடுத்து வடக்கில் நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலையும் சர்வதேசம் உன்னிப்பாக அவதானிக்கப் போகிறது. இதில் வெற்றிபெறும் தரப்புகள் இனப்பிரச்சினைத் தீர்வில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். எனவே சர்வதேசத்தின் அணுகுமுறைகளைத் தமக்கு சார்பாக வைத்திருக்க தமிழ்மக்கள் விரும்பினால்- வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும்; தமது அபிலாசையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலுவான சக்தியாக மாகாணசபைத் தேர்தலில் உருவெடுக்க வேண்டியது அவசியம். இந்தச் சந்தர்ப்பதை அவர்கள் தவறவிடுவது- சர்வதேச ஆதரவைத்தக்க வைக்கும் முயற்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும்

“நம்பிக்கை ஒளி” – புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் அரிய திட்டம்(RAY OF HOPE)

தாயகத்தில் போரினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களிற்கு புலம்பெயர்ந்த மக்கள் நேரடியாக உதவி செய்யும் வகையில் “நம்பிக்கை ஒளி” என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு (பயனாளிகளுக்கு) புலம்பெயர்ந்த உறவுகள் நேரடியாக தமது உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உளவளத்தினை மேம்படுத்தும் அரிய வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் நியமிக்கப்பட்டுள்ள இணைப்பாளர்கள் மூலம் தாயகத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்களைப் பெற்று, அவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, புலம்பெயர்ந்த மக்கள் உதவி செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக “நம்பிக்கை ஒளி” இணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள விபரக்கோவையின் உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது. நம்பிக்கை ஒளி இலங்கைத்தீவில் தமிழினம் கொடும் யுத்தத்தினால் காலம் காலமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த மே 2009இல் நடைபெற்ற யுத்த அழிப்பினால் காலகாலங்களுக்கும் மாறமுடியாத பேரழிவைத் தமிழினம் சுமந்து கொண்டிருக்கிறது. தற்போது உறவினர்களை இழந்தும் உடமைகளை இழந்தும் தமிழினம், சீர்குலைக்கப்பட்டு சிதைந்துள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்டு முகாம்களிலும், வைத்தியசாலைகளிலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமலும், மீளக்குடியமர்த்தப்படாமலும் தங்கள் சொந்த நிலங்களில் உணவு, உடை, வாழ்விடம், மற்றும் வாழ்வாதார நம்பிக்கைகள், தொழில் வாய்ப்புகள் எதுவுமில்லாமல் வாழ்கின்றனர். “இவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தியாக்கவும், உளவளத்தினை மேம்படுத்தவும், சிதைந்து, பிரிந்த உறவுகளைத் தொடர்புபடுத்தவும் புலத்தில் உருவாக்கம்பெற்றுள்ள நிறுவனமே நம்பிக்கை ஒளி (RAY OF HOPE).” இதன் முதலாவது திட்டம் “ஒரு குடும்பம் ஒரு தேசம்”( CONNECTING FAMILIES) என்னும் திட்டம் உருவாக்கம் பெற்றுள்ளது. போரின் பேரவலத்திலிருந்து தம்மை மீட்டு வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உடனடி உதவிகளை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தற்போது தமிழர் தாயகத்தில் உள்ளனர். உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தமது சொந்த இடங்களுக்கு மீளச் செல்லும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது . தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கான உதவியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். திட்ட முன்னோட்டம் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும், குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர். திட்ட முன்னோட்டம் புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள குடும்பம் ஒன்றுடன் தாயகத்தில் உள்ள ஒரு பாதிக்கப்பட்ட குடும்பத்தை இணைத்து விடுவதன் மூலம் எமது உறவுகளுக்கான, உதவிகளை நேரடியாக வழங்குவதுடன் அவர்களுக்கான உளவள ஆலோசனைகள், மற்றும் உதவிகளை வழங்குதலே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். முகாம்களில் இருந்தும் மருத்துவமனைகளில் இருந்தும் வெளியேறியுள்ள மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளத் தொடங்குவதற்கான ஒரு வழிமுறையாக இதைப் பார்க்கலாம். தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் அனைத்தும் போரினால் தமது குடும்ப அங்கத்தவர்கள் பலரை இழந்தவர்களாகவும்,குடும்பத்தலைவர்களை இழந்தவர்களாகவும், போரினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்களாகவும், தமது சொத்து உடைமைகளை இழந்து நிர்க்கதியாக உள்ளவர்களாகவும் உள்ளனர். நிர்வாக ஒழுங்கு நம்பிக்கை ஒளி நிறுவனம் அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்களுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும், தனிநபர்களுடனும் இணைந்து செயற்படும். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் கட்டமைப்புக்கள். தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பங்காக:- •இத்திட்டத்தில் பொதுவான தகவற் தொடுப்பில் இருந்து குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் விபரங்களையும் எடுத்து தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள உதவிசெய்ய விரும்பும் குடும்பத்திடம் வழங்குதல். •உதவி வழங்கிவரும் ஒருவரால் தொடர்ந்து உதவி செய்ய இயலாதவிடத்து அதை மீளத் தொடுப்பில் இணைத்துக் கொள்ளுதல். இந்த முயற்சிக்கு முழுமையான பங்களிப்பையும் வழங்கி உதவி வழங்குபவர்களையும் பெறுபவர்களையும் இணைத்து விடுதல். உதவி வழங்குவதற்கான தகுதிகள் என்ன? •18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல். •மாதாந்தம் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி கொடுக்கக் கூடியவராக இருத்தல். •பணம் பெற்றுக் கொள்ளும் குடும்பத்தைச் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்வதற்கான தொலைபேசித் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடியவராக இருத்தல். ஐயங்களும் பதில்களும் நாங்கள் தெரிவு செய்யும் குடும்பத்திற்கு எவ்வாறு உதவி புரியலாம்? நீங்கள் தெரிவு செய்த குடும்பத்தின் நிலை, அக்குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, அவர்களின் தேவை (உணவு, உடை, உறையுள், வைத்திய செலவு) போன்றவற்றினைப் பொறுத்து மாதாந்தம் ஒரு தொகையை வழங்கலாம். இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்? •தாயகத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமானது. •உறவுகளை இழந்த சிறுவர்கள் •மாற்றுவலு உள்ளோர் •கணவனை இழந்தோர் •ஆதரவு இல்லாத முதியவர்கள் •வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் உதவிப் பணம் வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதலுக்கு எந்த நிறுவனம் இடை நிலையில் இருக்கிறது? உதவிப் பணக் கொடுப்பனவில் பயன்பெறுவோருக்கு இடையில் எந்த நிறுவனமோ அல்லது தனி மனிதரோ இருக்கப் போவதில்லை. உதவிப் பணம் கொடுப்பவரும் உதவி பெறுபவரும் நேரடித் தொடர்பின் மூலம் இவ் உதவியினைப் பரிமாறிக் கொள்வர். இந்தத் திட்டத்தில் யார் பங்குபற்றுகின்றனர்? புலம்பெயர் மக்கள் கட்டமைப்புக்கள், தமிழ் ஊடகங்கள், ஊர்ச்சங்கங்கள், தமிழ் பாடசாலைகள், பழைய மாணவர் சங்கங்கள், சமய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், விளையாட்டு ஒன்றியங்கள் போன்றவை இத்திட்டத்தில் நம்பிக்கை ஒளியுடன் இணைந்து செயலாற்றும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை “நம்பிக்கை ஒளி” எவ்வாறு அடையாளம் காண்கின்றது? தாயகத்தில் உள்ள நலன்புரிச் சங்கங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் உதவி நிறுவனங்கள், தனிநபர்களின் உதவியோடு பெறப்படும் உதவி நாடுவோரின் விபரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தி மத்திய தரவுத் தொடுப்பில் இணைக்கப்படும். நாங்கள் உதவி செய்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து எங்களால் உதவ முடியாது போனால் என்ன செய்யலாம்? அப்படியான சூழ்நிலை வரும்போது மீண்டும் அக்குடும்பம் சர்வதேச ரீதியில் ஒருங்கமைக்கப்பட்ட தகவல் தொடுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பதியப்படும். உங்களைப் போன்ற யாராவது பின்னர் அக் குடும்பத்தினைத் தெரிவு செய்யலாம். எனது குழந்தைக்கு 4 வயது. அதே வயதுள்ள ஒரு குழந்தை உள்ள ஒரு குடும்பத்துக்கான உதவியை நான் செய்வதற்கு விரும்புகின்றேன். இது சாத்தியமா? நீங்கள் எத்தகைய குடும்பத்துக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்னும் விபரத்தை அந்தந்த நாடுகளில் இத்திட்டத்தினை முன்னெடுக்கும் அமைப்புக்களில் நீங்கள் கொடுத்தால் அதற்கு ஒத்த குடும்பத்தைத் தெரிவு செய்து எம்மால் வழங்க முடியும். இத் திட்டத்தில் இணைந்து உதவி வழங்குவதால் சட்டச் சிக்கல்கள் ஏதும் ஏற்படுமா? நீங்கள் செய்யப் போகும் உதவி உங்கள் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கு நீங்கள் செய்யும் உதவி போன்றது. நீங்களே நேரடியாகத் தொடர்பு கொண்டு அந்தக் குடும்பத்துக்கு உதவப் போகின்றீர்கள். எந்தவித சட்டச் சிக்கல்களும் இதில் வருவதற்கில்லை. நிதி உதவி ஒவ்வொரு மாதமும் உரியவர்களைச் சென்றடையும் என்பதை நம்பிக்கை ஒளி எவ்வாறு உறுதிப்படுத்தும்? மேற்குறிப்பிட்ட பொதுநல அமைப்புக்களைச் சேர்ந்தோர் தாயகத்தில் உதவிபெறும் மக்களிடம் நேரடியாக மாதாந்தம் உதவி சென்றடைவதை உறுதி செய்து கொள்வார்கள். அப்படி உதவி சென்றடையாதவிடத்து அவ்விடத்தில் உள்ள இவர்கள் மூலம் தகவல் எமக்குத் தெரிவிக்கப்படும். நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் ஊடாகப் பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விபரங்களிலிருந்து எவ்வளவு பேர் பயன்பெற்றுள்ளனர்? தற்போது 418 பயனாளிகள் புலத்தில் உள்ள குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எத்தனை காலத்துக்கு நிதியுதவியை மாத்திரம் மக்களுக்குக் கொடுப்பது என்பது இந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது? தற்போது எமது மக்கள் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்களுக்கென்று எந்தவித வருமானமுமின்றி உள்ளார்கள். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்குவது இந்தத் திட்டத்தின் முதற்கட்ட நிலையாகப் பார்க்கலாம். தொடர்ந்து எமது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப சுயதொழில் அல்லது தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதே எமது எதிர்காலத்திட்டமாகும். புலம்பெயர்ந்து வாழும் அனைத்து உறவுகளும் இத்திட்டத்தில் இணைந்து எம்முறவுகளுக்கு நம்பிக்கையொளியேற்றுவோம். நிர்வாகம் நம்பிக்கை ஒளி தொடர்புகளுக்கு: 0044 2033769352 Email – iniyavan@rohmay2009.com Email – kavian@rohmay2009.com திட்ட ஒருங்கிணைப்பு - கே.ஜே. அருள்நேதன் kj.nathan@rohmay2009.com தொலைபேசி – 001 416 670 4220 நாடுகள் வாரியான தொடர்பாளர்கள் கனடா – ஏ. காந்தன் தொலைபேசி – 001 416 659 5196 kanthan@rohmay2009.com பிரித்தானியா – பி. சிறீகாந்த் 0044 79479 52773 யேர்மனி – எஸ். சிறீசங்கர் – 0049 176 248 37466 பிரான்ஸ் – பி. தனம் visu@rohmay2009.com ஹொலன்ட் – எஸ். ஜஸ்லின் 0031 634397002 அனைத்து நாடுகளிலிருந்தும் நம்பிக்கை ஒளி நிறுவனத்தோடு இணைந்து செயற்பட அனைவரையும் அழைக்கின்றோம்.

சிவில் நிர்வாகம் இன்னமும் சிங்கள மொழியில் !

வடபகுதியில் காவல்துறை நீதி நிர்வாகத்துறை ஆகியன முழுமையாக சிங்கள மொழியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ் பொதுமக்களது வாக்கு மூலங்கள் சிங்களமொழியில் பெறபட்டு வருவதாகவும் இதனால் சிங்களமொழி தெரியாத பெரும்பாண்மை தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரியவருகிறது. யாழ் மாவட்ட நீதி மன்றங்கள் இதுதொடர்பில் சிறீலங்கா காவல்துறையினருக்கு அறிவுறுத்தியபோதும் அவர்கள் இதனை புறக்கணிப்பதாக தெரியவருகிறது. வடபகுதியில் கடமையாற்றும் காவல்துறையினருக்கு தமிழ்மொழி தெரியாததும் இங்கு தமிழ்மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிப்பதாக அரசு தெரிவித்தபோதும் எதுவுமே நடைபெறவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதேநடைமுறையே கிழக்கிலும் காணப்படுவதாக தெரியவருகிறது. இதேவேளை வடபகுதி காவல்துறை அதிகாரி தமிழ் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதுதொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். வடபகுதியில் தமிழ்காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் நோக்குடன் விண்ணப்பங்களை கோரியிருந்தபோதும் பலர் விண்ணப்பித்தநிலையில் அரசு பின்னர் அதனை கைவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலை போராட்ட, உலக வல்லரசான விடுதலைப்புலிகளை உலக வல்லரசுகள் இருபது நாடுகளின் உதவிஉடனும் துரோகங்களாலும் அழித்து அதனை தாம் செய்ததாக மார் தட்டும் பாதுகாப்பு செயலர் ...................


இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதற்கு முக்கிய பங்குவகித்த காரணிகளை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். இந்திய செய்தியாளர் சி.கே.சசிகுமாருக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திடசங்கற்பம் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மிக உதவியாக இருந்தது. துணிச்சலான பல தீர்மானங்களை அவர் மேற்கொண்டார். அந்தச் செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ இது தொடர்பாக கூறியுள்ளதாவது: பொதுவாக சண்டைகளில் படையினர் சண்டையிடுவது, இராணுவ வாகனங்கள் முதலானவற்றையே சண்டைக்களத்துக்கு வெளியே உள்ளவர்கள் காண்பர். ஆனால் சண்டைக் களத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு யுத்த தந்திரோபாயங்கள் தென்பட மாட்டாது. நான்கு ஜனாதிபதிகளின் கீழ் 8 அரசாங்கங்கள் புலிகளை தோற்கடிப்பதற்குத் தவறின. அந்த நான்கு ஜனாதிபதிகளின் கீழும் சிறந்த இராணுவத் தளபதிகளும் படையினரும் இருக்கவில்லை என்று கூறமுடியாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபோது ஏற்கெனவே 26000 படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்திருந்தனர். அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் ஆலோசகர்களும் 1987ஆம் வடமராட்சி நடவடிக்கை முதல் கினிஹிர 9 நடவடிக்கை வரையான முந்தைய யுத்த நடவடிக்கைகளை நன்கு ஆராய்ந்தனர். புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால யுத்தத்தின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய்வதே இதன் நோக்கமாக இருந்தது. தோல்விக்கான ஒவ்வொரு காரணிக்கும் ஒரு தீர்வை நாம் கண்டுபிடித்தோம். உண்மையில் இராணுவத்துடன் தொடர்பான தோல்விக் காரணி எதுவும் இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்தால் முந்தைய 30 வருடகாலமாக புலிகளுக்கு எதிராக போராடிய அதே இராணுவத்தைக் கொண்டே போரிட வேண்டியிருக்கும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எமது இராணுவத்திலும் விசேட படையினரிலும் நாம் நம்பிக்கை கொண்டிருந்தோம். ஆனால் முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் நாட்டின் இராணுவத்தின் முழுப் பலத்தை வினைத்திறனுடன் பயன்படுத்த முடியாமைக்கான காரணம் என்ன என ஆராய்நதோம். இதற்குத் தீர்வாக படையினரின் பலத்தை அதிகரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தோம். ஆயுதப் படையால் யுத்தத்தை முடிப்பதற்கு முடியாதிருந்தமைக்கான காரணம் எண்ணிக்கை குறைபாடே என்பதையும் இராணுவத்தை விஸ்தரிப்பது புலிகளுக்கு நிச்சயமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்தோம். எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முந்தைய இரு தோல்விக் காரணிகளை தீர்க்க ஆயுதப் படைகளால் முடிந்தது. கிழக்கு மாகாணத்தை நாம் சுத்திகரித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் தோற்கடிக்கப்படவில்லை எனவும் தாம் தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டதாகவும் கூறினர். கிழக்கு மாகாணத்தைத் தக்கவைப்பதற்கு இலங்கை ஆயுதப் படைகளிடம் போதிய துருப்புக்கள் இருக்கமாட்டாது என புலிகள் நம்பினர். முந்தைய காலத்தைப் போல தாம் வடக்கில் போர்முனையொன்றைத் திறந்தால் இலங்கைப் படையினர் வடக்கிற்கு நகர்த்தப்பட வேண்டிருக்கும் எனவும் அதன் மூலம் தாம் மீண்டும் கிழக்கை கைப்பற்றிவிடலாம் எனவும் புலிகள் நம்பினர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர்கூட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காத்திரமானதாக இருக்கமாட்டாது என பகிரங்கமாகக் கூறினர். நாம் உண்மையில் பரந்தளவிலான போர்முனையிலும் பல் போர்முனையிலும் போரிடுவதற்குத் தயராக இருந்தோம் என்பதை புலிகள் குறைவாகவே அறிந்திருந்தனர். படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒரே இரவில் சாத்தியமாகாது என்பதை அறிந்திருந்தோம். அதனால் கடற்படை, விமானப் படையினரையும் தரை யுத்த நடவடிக்கைளில் ஈடுபடுத்தினோம். அதற்கேற்ப நாம் அவர்களுக்கு பயிற்சியளித்தோம். ஆகவே நிலத்தை தக்கவைப்பதற்கான எமது பலம் திடீரென அதிகரித்தது. யுத்தத்தின் கடைசி மாதத்தின் இரு வாரங்களில் நாம் சிவில் பாதுகாப்புப் படைக்கு 5000 பேரை சேர்த்தோம். ஒவ்வொரு மாதமும் 5000 படையினரை இணைத்ததன் மூலம் இராணுவத்தின் எண்ணிக்கை மூன்று வருடங்களில் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக அதிகரித்தது. படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட எமது நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாது எனக் கருதி முந்தைய நான்கு ஜனாதிபதிகளும் துணிச்சலான தீர்மானங்களை மேற்கொள்ளத் தயங்கினர். 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கையை இயன்றவரை விரைவாக 500 000 ஆக அதிகரிக்க வேண்டும் என நான் கூறினேன். படைகளின் உயர் தலைவர்கள் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் இராணுவ நடவடிக்கைள் குறித்து அலசினர். எந்த படைத்தளபதியும் தேவையான ஆயுதத்தையோ அல்லது வேறு எதையுமோ கேட்கக்கூடிய நிலை இருந்தது. படைகளின் இழப்புக்கள் குறித்த அழுத்தங்களை எதிர்கொள்வதிலும் ஜனாதிபதி உறுதியாக இருந்தார். மூன்றரை வருடகாலத்தில் ஏறத்தாழ 6000 படையினர் கொல்லப்பட்டனர். இது குறித்த அரசியல் அழுத்தத்தை உங்களால் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவின் அழுத்தத்தை ஜனாதிபதி எதிர்கொண்ட முறையும் யுத்த வெற்றிக்கு முக்கிய காரணியாகும். இந்தியாவை எமது தரப்பில் இணைத்து வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி உணர்ந்தார். 1987 ஆம் ஆண்டின் ஒபரேஷன் லிபரேஷன் படை நடவடிக்கையின்போது இடம்பெற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை ஜனாதிபதி விரும்பவில்லை. 2005 முதல் 2009 வரை இந்தியா எமது படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நிர்ப்பந்திக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. புதுடில்லிக்கு நாம் முறையாக விளக்கமளித்து வந்ததன் மூலம் அவ்வாறன நிலை ஏற்படுவதை நாம் அனுமதிக்கவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் ஒரு கூட்டு அரசாங்கம் என்பதால் தனது பங்காளிக்கட்சிகளின் குறிப்பாக தி.மு.கவின் கரிசனைகள் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானவை என்பதை நாம் உணர்ந்திருந்தோம். பொதுமக்களின் இழப்புகள் தொடர்பாக தமிழ்நாட்டில் ஏற்படும் உணர்ச்சிமய நிலையை நாம் உணர்ந்திருந்தோம். ஆகவே இந்தியத் தலைமைக்கு நிலைமையை விளக்குவதை ஜனாதிபதி உறுதிப்படுத்தி வந்தார். எமது தரப்பில் பசில் ராஜபக்ஷ, லலித் வீரதுங்க மற்றும் நான் ஆகியோர் இந்தியாவின் எம்.கே. நாராயனன், சிவ்சங்கர் மேனன், விஜய் சிங் ஆகியோருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம். ஏதேனும் முக்கிய விவகாரம் எழும்போது நாம் சந்தித்து அதை தீர்த்துக்கொண்டோம். இதன் மூலம் எமது படை நடவடிக்கைகள் இடையூறின்றித் தொடர்ந்தன. இந்த யுத்தத்திற்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டிக்கொள்ள முடிந்தமையும் வெற்றிக்கு பங்காற்றியது

பலமான சக்தியாக புலம் பெயர் சமூகமே உருவெடுக்கவுள்ளது


இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 144 ஆசனங்களையும், ஐ.தே.க 60 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. வேல்ஸிலிருந்து அருஷ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு இலங்கை அரசுக்கு 6 ஆசனங்களே குறைவாக உள்ளது. இந்த ஆசனங்களை எதிர்த்தரப்பில் இருந்து பெறுவது அரசுக்கு அதிக சிரமமாக இருக்கப்போவதில்லை என்பது வெளிப்படையானது. அதற்கான அறிகுறிகள் கடந்த வியாழக்கிழமை ஏழாவது நாடாளுமன்றம் முதன் முதலாக கூடியபோதே தெரிய ஆரம்பித்துள்ளது. கொழும்பு மற்றும் நுவெரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசியக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தமது ஆதரவுகளை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர். தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். தேசியப் பட்டியல் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ததில் ஏற்பட்ட முறுகல்களே இந்த நிலைமைக்குக் காரணம். எனவே இவ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு ஆறு ஆசனங்களை பெற்றுக்கொள்வதில் அதிக நெருக்கடிகள் இருக்கப்போவதில்லை. எனினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறப்போகும் அரசு அதன் மூலம் எதனை நிறைவேற்றப்போகின்றது? என்பதற்கான விடைகளை அனுமானிப்பது கடினமானதல்ல. இலங்கையில் தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் கடந்த 17ஆம் திகதி வழங்கிய நேர்காண ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டத்தை இலங்கையில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமே இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான மனித உரிமை மீறல்களுக்கு காரணம் என அச்சபை மேலும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது ஐ.ம.சு.கூ. தற்போது பெற்றுக்கொண்டுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதில் மேற்குலகம் தீவிரமாக குரல்கொடுத்து வருகின்றது. மேற்குலகத்தின் இந்த கோரிக்கைகளுக்கு பின்னால் பூகோள அரசியல் நலன்சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும் போதும், அதனை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது என்றே கூறலாம். எனினும் மேற்குலகத்தை வெளியேற்றிய ஆசிய பிராந்திய வல்லரசுகள் இலங்கையில் அதிக அழுத்தங்களின் ஊடாக தமது ஆளுமைகளை அதிகரித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தென்னிலங்கையை தனது முழுமையான ஆளுமையின் கீழ் கொண்டுவந்துள்ள சீனாவின் வடபகுதி நோக்கிய நகர்வை தடுப்பதற்கு இந்தியா கடுமையாக முயன்று வருகின்றது. யாழில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் இருந்து, இந்தியாவுக்கான நுழைவு அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அலுவலகத்தை திறக்கும் வரையிலும் வடபகுதியில் இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசு விரும்பியோ அல்லது விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஈழத்தமிழ் மக்களின் மனங்களை வெல்லாது நிலத்தை ஆக்கிரமிக்கும் இந்திய அரசின் முயற்சிகள் எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானது என்பதை காலம் விரைவில் உணர்த்திவிடும். சிங்கள மக்களின் பெருமளவானோர் இந்தியாவின் தலையீடுகளை விரும்பப்போவதில்லை. இந்த நிலையில் தான் இந்திய அரசு திருமலையில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அனல் மின்நிலையத்தின் பணிகளும் நான்கு வருடங்கள் பின்போடப்பட்டுள்ளதாக இந்திய என்.ரி.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடிகளை காரணமாக இந்த நிறுவனம் முன்வைத்துள்ள போதும், உண்மையான காரணங்கள் வேறு என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதாவது இத்திட்டத்துக்கான சில ஒப்பந்தங்கள் இன்னும் பூர்த்தியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் காலூன்றும் இந்திய அரசின் திட்டத்திற்கு விழுந்த முதல் அடியாக இது கொள்ளப்பட்டாலும், வடக்கிலும் வருங்காலத்தில் இவ்வாறான புறம்தள்ளும் முயற்சிகள் நடைபெறலாம் எனவும் கருதப்படுகின்றது. அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா இருக்கும் போது திருமலையில் இந்தியா காலூன்றுவதை சீனா விரும்பப்போவதில்லை. மேலும் புலம்பெயர் தமிழ் சமூகத்தை புறம்தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் நடைமுறைக்கு சாத்தியமா என்பதும் கேள்விக்குறியானது. எனினும் அதனை மேற்கொள்ளும் முயற்சிகள் தாயகத்தில் பலமாக மேற்கொள்ளப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியத்திற்கு சார்பான ஊடகங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் அரசியல் பிரதிநிதிகளுக்கு தமிழ் மக்கள் தரப்பின் ஊடாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது தொடர்பாக புலம்பெயர் தமிழ் சமூகம் தயாராகி வருகின்றது. வளமான ஊடகத்துறை, பலமான அரசியல் கட்டமைப்பு என தெளிவான ஒரு கட்டத்தின் ஊடாக மீண்டும் பயணத்தை தொடரவேண்டும் என்ற உந்துதல்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் செறிந்துள்ளன. அதுவே தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பேரம்பேசும் ஒரு பலமான சக்தியை தமிழ் மக்களுக்கு வழங்கப்போகின்றது என்பதை நாம் மறுக்க முடியாது.

யாழில் பாடசாலை மாணவியை கடத்த முயற்சி!


யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மாணவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டனர். அப்போது அம்மாணவி கூக்குரல் இடவே கூடியிருந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். அங்கிருந்த பொது மக்கள் திரண்டு கடத்தல்காரர்களை வழிமறித்தனர். அவ்வேளையில் கடத்தல்காரர்கள் மாணவியை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கடத்த முற்பட்ட மாணவி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தும்புத்தடியை வைத்தாலும் கூட்டமைப்புக்கே மக்கள் வாக்களிப்பார்கள்

ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதனைத் தான் பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் நம்புகிறார்கள். இதனை மாற்ற முடியாது என்பதனை இப்போது புரிந்து கொண்டேன். ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர்காமர் தங்கேஸ்வரி தெரிவித்தார். தேர்தல் காலத்தில் எனது மாவட்டமான மட்டக்களப்பில் எனக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்தபோது நான் தான் இந்த மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவேனென நினைத்தேன்.அதுதான் உண்மையும்.ஆனால், என்ன நடந்தது..? வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளில் பலர் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் குளறுபடி செய்து எனது வெற்றியை இல்லாமல் செய்து விட்டார்கள். அவர்கள் என்னைத் திட்டமிட்டு நீக்கிவிட்டார்கள். இது தொடர்பில் நான் தேர்தல் ஆணையாளருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான தேர்தல் அதிகாரிகளுக்கும் உடனடியாகவே அறிவித்திருந்தேன். இருப்பினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் நான் வழக்கு ஒன்றினையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளேன். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைப்பதிலேயே முனைப்பாக இருந்தனர். எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகளுக்கு என்ன நடந்தது? மங்களகம என்ற சிங்களக் கிராமத்தில் கூட எனக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாக எனக்குத் தகவலும் கிடைத்திருந்தது. ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறினாலும் மக்கள் அதனை நம்பி அவர்களுக்கே வாக்களித்து வந்தனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றே புறப்பட்டேன். ஆனால், அது நடக்க வில்லை. ஒரு தும்புத் தடியைத் தூக்கி வைத்து இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றால் அதனைத் தான் பெரும்பாலான மக்கள் தொடர்ந்தும் நம்புகிறார்கள். இதனை மாற்ற துடியாது என்பதனை இப்போது புரிந்து கொண்டேன். இது தவிர, இன்னும் சில விடயங்களைக் குறிப்பிடுகிறேன். படுவான்கரையிலுள்ள பெரியபுல்லுமலை என்ற பிரதேசத்தை எடுத்துப் பாருங்கள். இந்தப் பகுதிகளில் எல்லாம் மேலோட்டமான அரசாங்கம் அபிவிருத்தியும் தான் காணப்படுகிறது. ஆனால், உள்ளே ஒன்றுமே இல்லையே? கட்டுமுறி என்ற கிராமத்துக்குச் சென்று பார்த்தபோது அரசாங்கம் பல விடயங்களை வெறும் அறிக்கைகள் மூலம்தான் செய்து வருகிறதென்பதனையும் என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. கஷ்டப்பட்ட மக்களுக்குத் தேவை அபிவிருத்தி தான். அதனை அரசு செய்தாலும் சரிதான் மாகாண சபை செய்தாலும் சரிதான். ஆனால் உள்ளே எல்லாம் ஓட்டையாக அல்லவா உள்ளன?