திங்கள், 15 பிப்ரவரி, 2010

மறுபடியும் பிரபாகரன்..

சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்று சிந்திக்க வேண்டிய பருவம் இதுவாகும். பிரபாகரன் விவகாரத்தை தொடர் குழப்பகரமாகவே வைத்திருக்க இந்திய ஆட்சியாளர் எதற்காக முயல்கிறார்கள் என்பது பலத்த சந்தேகங்களை உருவாக்குகிறது. இது தொடர்பாக ஐந்து சிந்தனைகள் இங்கே தரப்படுகின்றன. 01. பிரபாகரன் மரணம் தொடர்பாக குழப்பமான நிலை நிலவுகிறது என்று கூறிக்கொண்டே, காலத்தை கடத்துவதே இந்திய – இலங்கை அரசுகளுக்கு வசதியானது. 02. பிரபாகரன் கடந்த ஆண்டு மே 17ம் திகதியே தப்பிவிட்டார், சிறீலங்கா அரசால் காட்டப்பட்டது போலியான உருவம் என்று வாதிடுவோருக்கு ஒரு பிடிமானத்தை வழங்க வேண்டும். அவர்கள் பிரபாகரன் வரும்வரை காத்திருப்போம் என்று வீர முழக்கமிட, அனுமதிப்பது புத்திசாலித்தனமானது. போராட்டத்தின் வெப்பத்தை மெல்ல மெல்ல தணிப்பதற்கு அவர் இருக்கிறார் என்ற கருத்து அவசியமென இந்தியா கருதலாம். பிரபாகரன் வருவார் என்ற கொள்கையை காரணம் காட்டி, எல்லாவற்றையும் பின்போடுவது தமிழரைவிட தமிழர் எதிர்ப்பு சக்திகளுக்கே அதிக இலாபமானது. 03. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பதை – இருக்கிறார் ! இல்லை ! – என்ற இரு வேறுபட்ட குழப்பான பின்னணியோடு உறுதி செய்தால், கலவரங்கள் வெடிக்காது. இந்திய அரசும் அந்தப்பழியில் இருந்து தப்பிவிடலாம். மேலும் பிரபாகரனை புதுமாத்தளினில் வைத்துக்கொன்றது உண்மையானால், அந்த வரலாற்றுப் பழியை காங்கிரஸ் சுமக்க நேரிடும். அப்படியான பழியோடு தமிழகத்தில் காங்கிரஸ் தலை நிமிர்ந்து நடப்பது கடினம். மேலும் அதைக் காரணம் காட்டியே வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்தளவு ஆசனங்களை கொடுத்து மிளகாய் அரைத்துவிடுவார் கலைஞர். ஆகவே காங்கிரஸ் தெற்கே வண்டியோட்ட இப்படி இருவிதமான கருத்துக்கள் அவசியமாகிறது. ( தமிழ்நாடு காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே யுத்தத்தை இரண்டு தினங்கள் நிறுத்தியதாக சிங்கள அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியது தெரிந்ததே. ) 04. இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானது சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு. இந்த முரண்பாட்டின் மையப்புள்ளியாக இருப்பதே பிரபாகரன்தான். உயிராபத்தை பார்க்காது உண்மையை வெளியிடுவேன் என்று சரத் பொன்சேகா கூறிவருவது பிரபாகரன் தொட்ர்பான மர்மமேயாகும். 05. மேலும் சரத் பொன்சேகா பிரபாகரன் தொடர்பான தகவலை வெளியிடமாட்டார் என்று கருதுவது தவறு, இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட ஒளிநாடா ஒன்று இதுவரை வெளியாகவில்லை என்ற சந்தேகம் நிலவுகிறது. அதை அவர் எங்காவது கொடுத்திருக்கலாம். அது வெளியானால் இந்திய அரசுக்கும் சிறீலங்கா அரசுக்கும் பெரும் சிக்கல் ஏற்படும். மேலும்… சரத் பொன்சேகா பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறினால் ப.சிதம்பரம் சொன்னது சரியாகும். இருக்கிறார் என்று கூறினால் சி.பி.ஐ சொன்னது சரியாகும். ஆகவே இரண்டுக்கும் தயாராக இந்தியா திட்டமிடுகிறது என்று எண்ண இந்த இரு வேறுபட்ட அறிக்கைகளே சான்றாகும். இடையில் ஒன்று.. அரசியலில் குதித்த சரத் பொன்சேகாவை ஏன் இராணுவ நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என்று சிறீலங்கா துடிக்கிறது.. ஆம்.. ! அவர் கூறுவதை எல்லாம் இரகசியமாக வைக்க இராணுவ நீதிமன்றமே தேவை. சாதாரண நீதி மன்றில் விசாரித்தால் அவர் ஏதாவது உண்மைகளை தாறுமாறாக வெளியிட்டால் அது பெரும் அரசியல் சங்கடங்களை ஏற்படுத்தும். அத்துடன் நின்றுவிடாது கோத்தபாய ராஜபக்ஷ, உட்பட மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் இரகசியங்களை உண்மையும் பொய்யுமாகக் கலந்து தாறுமாறாக வெளியிட வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு ஆபத்தும் உள்ளது. சரத் பொன்சேகா வேண்டுமென்றே பிரபாகரன் தப்பிவிட்டார் என்று கூறினால், மகிந்தவின் திட்டங்கள் எல்லாமே நாசமாகிவிடும். பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் தப்பிவிட்டார் என்று ஒரு பொய் சொன்னால் போதும், பாரிய சிக்கல் ஏற்படும். வரும் தேர்தலில் மகிந்த மண் கவ்வ நேரிடும்.. மறுபுறம் இப்படியான உறுதியற்ற நிலை இருக்கும்போது மரண அறிக்கை கிடைத்துவிட்டதாக இந்தியா ஒப்புக் கொண்டால் அது இந்தியா முழுவதும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே ஒரு பக்கம் சி.பி.ஐயும் மறுபக்கம் ப.சிதம்பரமும் இரு வேறு அறிக்கைகளை விடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவர்கள் குழம்புவதற்கு உண்மையாகவே பிரபாகரன் காரணமல்ல, சரத் பொன்சேகாவே காரணமாகும். இது குறித்து புலம் பெயர் தமிழர் வீறு கொண்டு எழுந்துவிட யாதொரு முகாந்திரமும் இல்லை. சி.பி.ஐயும் ப.சிதம்பரமும் ஈழத்தமிழருக்கு வாய்ப்பான எந்த அறிக்கையையும் வெளியிடமாட்டார்கள் என்ற அடிப்படையை விளங்கினால் அதுவே போதுமானதாக இருக்கும். உண்மையான அறிக்கை எது ? சரத் பொன்சேகா கைது விவகாரம் சடையப்படும்போது அது வெளிவரும்…

நேட்டோ படையினர் பெரும் தாக்குதல்

ஆப்கானிஸ்தா‌னி‌ன் தென் பகுதியில் தாலிபான்கள் பலமாக உள்ள மர்ஜா நகர் மீது நேட்டோ, அமெரிக்கப் படைகள் பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தானுக்கான நேட்டோ படை கமாண்டர் நிர் கார்ட்டர் கூறுகையில், 60 ஹெலிகாப்டர்களுடன் நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மர்ஜா நகருக்குள் முன்னேறிச் செல்வதில் எந்தத் தடையும் இல்லை. இதுவரை எங்கள் தரப்பில் உயிரிழப்பும் இல்லை. நேட்டோ படையில் அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டின் வீரர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

எங்கு சென்றாலும் மிக கவனமாக இருங்கள்

“அமெரிக்க நாட்டவர்களுக்கு உலக அளவில் அச்சுறுத்தல் உள்ளதால், குறிப்பாக அல்-குவைதா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்பதால், உஷாராக இருக்க வேண்டும்’ என, தங்கள் நாட்டவர்களுக்கு அதிபர் ஒபாமா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, தன் குடிமக்களுக்கு உலகளவிலான பயண எச்சரிக்கை விடுத்துள்ளது; குறிப்பாக, அல்-குவைதா இயக்கத்தினர் தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல் மற்றும் குண்டு வைத்தல் போன்ற சம்பவங்களை நிகழ்த்தலாம்’ என, அந்நாடு அறிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:அமெரிக்க குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில், அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த, அல்-குவைதா பயங்கரவாத இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தற்கொலைப் படை தாக்குதல், கடத்தல், படுகொலைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்தல் போன்ற செயல்கள் மூலம், அவர்கள் அமெரிக்கர்களுக்கு பிரச்னை உண்டாக்கலாம். இதற்கு அவர்கள் எந்த வகையான ஆயுதங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், விடுமுறை நாட்களில் அமெரிக்கர்கள் அதிகளவில் கூடும், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக வளாகங்கள், ஓட்டல்கள், கிளப்கள், உணவு விடுதிகள், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்கள் போன்ற எந்த இடத்தை வேண்டுமானாலும், பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கலாம்.கடந்த டிசம்பரில், அமெரிக்க விமானம் ஒன்றில் குண்டு வைக்க நைஜீரியர் ஒருவர் முயன்றார். இச்சம்பவத்திற்கு அல்-குவைதாவினர் பொறுப்பேற்றுள்ளனர். அதே போன்று, கடந்தாண்டு ஆகஸ்ட் 25ல், டில்லி ரயில் நிலையத்தில் வெடி பொருட்களுடன் வந்த ஒருவரை, போலீசார் கைது செய்தனர். அன்றைய தினமே, ஒரிசா ரயில் நிலையத்தில் மாவோயிஸ்ட்கள் ஏராளமான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். கடந்த 2008ம் ஆண்டு, இலங்கையில் பயணிகள் பஸ்சிலும், 2006ம் ஆண்டு இந்தியாவில் ரயிலிலும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே, அமெரிக்கர்கள் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.அமெரிக்கர்களுக்கு உலகளாவிய அச்சுறுத்தல் உள்ளதால், எங்கு சென்றாலும் கவனமாக இருப்பது நல்லது.இவ்வாறு எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், “மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலித் ஷேக் முகமதை நீதியின் முன் நிறுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன அதிபரின் சகா பதவியிலிருந்து நீக்கம்

பாலஸ்தீனிய அதிபர் மஹ்முத் அபாஸ், அவரது மூத்த சகாவான ரபீக் ஹுசைனியை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ரபீக் ஹுசைனி பாலியல் உறவு குறித்து வெளிப்படுத்திய கருத்துப் பற்றி வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக இஸ்ரேல் செயற்படுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பற்றி விசாரிப்பதற்கு பாலஸ்தீன அதிகாரிகள் குழுவொன்றை நியமித்துள்ளனர். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் வெளியான வீடியோ பதிவில் ரபீக் ஹுசைனி ஆடைகளைக் களைவது போலவும் பெண்ணொருவரை அழைப்பது போலவும் காட்சி வெளியாகியிருந்தது.

ஹெலிகாப்டர் மலையில் மோதி 10 பேர் மரணம்

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டது. தற்போது அவர்களுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏமன் நாட்டின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அங்குள்ள வடக்கு மலைப்பகுதிக்கு நேற்று புறப்பட்டு சென்றது. அதில் ராணுவ வீரர்களும் இருந்தனர். திடீரென இந்த ஹெலிகாப்டர் சானா நகர் பகுதியில் உள்ள கஹியன்மலையில் மோதி நொறுங்கியது. எனவே, இதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 10 பேர் அதே இடத்தில் பலியானார்கள். இந்த விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருந்தாலும் இது கலவரக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க வேண்டும்

விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும் என சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவில் மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு செயலாளராகிய நான் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளேன். விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர். அவற்றில் பெருமளவானவற்றை நாம் முறியடித்துள்ளோம், எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்பட வேண்டும். எமது படையினர் எவ்வளவு தரமானவர்கள் என்ற புரிந்துணர்வுகள் மக்களிடம் இல்லை. கிழக்கு மாகாணத்தில் இராணுவம் நிலைகொணடிருக்க வேண்டும் என பெருமளவான மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினர் அங்கு நிலைகொள்வதை விரும்பவில்லை. நாம் பயிற்சி பெற்ற இராணுவத்தை கொண்டுள்ளோம் அவர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகம் பங்குகொள்ள முடியும். நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. பொன்சேகாவை நாம் கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்துள்ளோம். அவரை சிறையில் அடைக்கவில்லை, அவருக்கு ஒரு வீடு வழங்கப்பட்டுள்ளது. அது முன்னர் கடற்படை தளபதியால் பயன்படுத்தப்பட்டது. அது ஒரு ஆடம்பரமான மாளிகை. பொன்சேகா அரச தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கூட எமக்கு இவ்வாறான வசதிகளை தந்திருக்கமாட்டார், ஏன் மகிந்தா ராஜபக்சாவுக்கும் வழங்கியிருக்கமாட்டார். பொன்சேகாவும், அவரின் மனைவியும் பொய்கூறுகின்றனர். பொன்சேகாவின் ஆதரவாளர்களும் பொய் கூறுகின்றனர். பொன்சேகா மீதான இராணுவ விசாரணைகள் உடனயடியாக மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இரண்டு மாணவர்கள் பலி

யாழ்ப்பாணம் இலந்தைக்குளம் பிரதேசத்தில் வெடிக்காத நிலையில் இருந்த எறிகணையொன்றை எடுத்து விளையாடியதாகக் கூறப்படும் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அது வெடித்ததால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இலந்தைக்குளம் புளியடிச்சந்தி பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலையை விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள் இந்த பிரதேசத்தில் கிடந்ததாக கூறப்படும் எறிகணையை எடுத்தவேளையிலேயே அது வெடித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அரியாலை ஏ.வி. பாதையைச் சேர்ந்த 9 வயதான ஏ.லக்ஷன், 10 வயதான ஆர்.ராம்சிங் என இனங்காணப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.