
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியடைய அரசியல் அபிலாசை ஒன்றும் வர்தகப் பண்டமல்ல
““தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பது கிடைக்காது அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண் டும்.'' இப்படி உபதேசம் செய்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் எல்லாவெல மேத் தானந்த தேரர். பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்றதை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்க முடியாது. அது புலிகளின் கோக்கைகளே. தமிழ்மக்களுக்குத் தமிழீழம் தேவையில்லை. அவர்களுக்கு தமிழீழம் தேவை என்று கூறி நாட்டைப் பிரிக்க முனையக் கூடாது. தமிழ்மக்களின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுக்கின்ற தீர்வை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் மேத்தானந்ததேரர் கூறியிருக்கிறார். எல்லாவெல மேத்தானந்த தேரர் உள்ளிட்ட சிங்களத் தேசியவாதிகள் அனைவருமே தமிழ்மக்களின் உரிமைக் கோரிக்கைகளை எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்காவது ஓரிடத்தில் தனிநாடு பற்றிய கருத்தை முன்வைத்திருக்கிறதா? இல்லவே இல்லை. ஆனாலும் எல்லாவெல மேத்தானந்த தேரர் ஆகட்டும் ஏனைய சிங்களத் தேசியவாதிகள் ஆகட்டும் எல்லோருமே அப்படிப் புரிந்து கொண்டிருப்பது அவர்கள் எந்தளவுக்கு கிணற்றுத் தவளைகளாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், புலிகளின் கோரிக்கையும் ஒன்றே என்று அவர் கூற வருவது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற திம்புக் கோட்பாட்டைத் தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒன்றும் தனிநாட்டுக்கான கோரிக்கை அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதோ தனிநாட்டுக் கோக்கையைக் கைவிட்டு விட்டதாக இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். ஆனாலும், சிங்களத் தேசியவாதிகள் இன்னமும் கூட்டமைப்பை புலிகளாவே பார்க்க முனைவது தான் வேடிக்கை. இந்தத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எஞ்சியிருக்கும் புலிகள் எனக் கூறிக்கொள்வோரின் ஆதரவு கூடக் கிடைக்கவில்லை. ஆனாலும் சிங்களத் தேசியவாதிகள் கூட் டமைப்பை புலிகளின் விம்பமாகப் பார்ப்பது ஆச்சரியம் தான். வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் கூட்டமைப்பையே ஆதத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தான் காரணம். எனவே கூட்டமைப்பின் கொள்கைகளைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்று நியாயம் கூறுவது யதார்த்தத்துக்கு முரணானது. புலிகளின் கோரிக்கை, கூட்டமைப்பின் கொள்கை, தமிழ் மக்களின் நிலைப்பாடு இவை அனைத்தும் ஒரே புள்ளியில் இருந்து தான் தொடக்கம் பெற்றவை. இதைச் சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான அடிப்படைகளையும் புரிந்து கொள்வது அவசியம். 1977ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் தனிநாடு அமைக்கும் கோரிக்கைக்கு ஆதரவாகவே பெருவாரியாக வாக்களித்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அங்கிருந்துதான் புலிகளின் ஆயுதப் போராட்டமாயினும் சரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இன்றைய அரசியலாயினும் சரி வீரியம் பெற்றன. வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கான மக்களின் அங்கீகாரம் தான் இந்தக் கோரிக்கைகள், கோட்பாடுகளின் ஆணிவேர். அப்படியொரு தீர்மானத்துக்கு தமிழ்மக்கள் வருவதற்குக் காரணமாக இருந்தது இலங்கையில் காலாகாலமாக ஆட்சியில் இருந்து வந்த அரசுகளும் சிங்களத் தேசியவாதிகளுமே என்பதையும் மறந்து போக முடியாது. எத்தனை தீர்வு முயற்சிகள், பேச்சுக்கள், அகிம்சைப் போராட்டங்களையெல்லாம் தமிழ்மக்கள் சந்தித்தார்கள். சிங்களத் தேசியவாதிகளும் அவர்களின் கையில் இருந்த அரசுகளும் எதற்குமே இணங்காமல் மசியாமல் நின்றதன் விளைவாகவே தனிநாடு பற்றியதொரு தீர் மானத்தை தமிழ் மக்கள் அன்று எடுக்க நேரிட்டது. அது மட்டுமன்றி 1958, 1977, 1983 என்று காலாகாலமாகத் தொடர்ந்த தமிழ்மக்கள் மீதான இன வன்றைகளின் வெளிப்பாடாகவே தனிநாட்டுக் கோரிக்கை தீவிரமடைந்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு தமிழ்மக்கள் தனிநாட்டுக் கோக்கையை மறந்து விட வேண்டும் என்ற பாணியில் கருத்து வெளியிட்டிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். ஏன் கடைசியாக நடந்த பேச்சுக்களின் போதும் அமைதி நிலையை உருவாக்கப் புலிகள் முன்வந்த சந்தர்ப்பங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு முறியடித்தது யார்? சுனாமி நிவாரணப் பொதுக்கட்டமைப்பை ரத்துச் செய்ய உத்தரவிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா சொல்லியிருக்கிறார் அதன் தலைமையகம் கிளிநொச்சி யில் இருப்பதை தான் விரும்பவில்லை என்பதால் அதை ரத்துச் செய்ய உத்தரவிட்டதாக. இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை ஒன்றை நிறுவும் யோசனையை புலிகள் முன்வைத்த போது அதைக் குழப்பியடித்து தீர்வுகாண முடியாது தடை போட்டது யார்? அமைதிக்கான குறைந்தபட்சத் தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்கத் தயாராக இருந்த போதெல்லாம் அதற்கு சிங்களத் தேசியவாதிகளிடத்தில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. அதன் விளைவாகவே அனைத்து சமாதான வாய்ப்புகளும் கருகிப் போனது வரலாறு. இது பண்டா செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான வரைபு வரைக்கும் நடந்த வரலாறு. தமிழ்மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதற்கு நியாயமான உரிமைகளை வழங்குமாறு கேட்டபோது அரசாங்கம் எதைக் கொடுத்தது? ஆரம்பத்தில் மாவட்டசபைகளை கொடுப்பதாக கூறினார் ஜே.ஆர். பின்னர் ஏதோ இந்தியாவின் வற்புறுத்தலினால் மாகாணசபைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இன்று மாகாணசபைகளுக்குய அதிகாரங்களைக் கூடத் தரமுடியாது என்கிறது அரசாங்கம். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தமிழ் மக்களுக்கு தரப் போகும் தீர்வு என்னவாக இருக்கப் போகிறது? கிராமசபைகளையே அவர் தீர்வாகக் கொடுக்கப் போகிறாராம். இதைத்தான் வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழக வேண்டும் என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் எல்லாவெல மேத்தானந்த தேரர். கிடைப்பதை வாங்கிக் கொண்டு திருப்தி யடையுமாறு அவர் கூறுவதற்கு இது ஒன்றும் வர்த்தகப் பண்டம் அல்ல. தமிழ்மக்களின் உரிமைகள் அபிலாஷை கள் சம்பந்தப்பட்ட விடயம். இன்றும் கூட வடக்கு,கிழக்கில் 13 ஆசனங்களை கூட்டமைப்பு வென்றிருக்கிறது என்றால் அங்குள்ள மக்களின் உணர்வுகள் எப்படியிருக்கின்றன என்பதை சிங்களத் தேசிய வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்கள் தமக்கென அரசியல் அதிகாரங்கள் தேவை என்று உணர்கிறார்கள் என் பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் இது தனியே கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இது தமிழ்மக்கள் அவர்களுக்குக் கொடுத்த ஆணையே. மேத்தானந்த தேரர் கூறுவது போல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுப்பதை வாங்கிக் கொண்டு திருப்தியாக வாழப் பழகினால் தமிழ்மக்கள் கூட்ட மைப்பை நிராகத்து விடுவார்கள். தமிழ்மக்களின் அபிலாஷைகளை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை அவர்கள் தேர்தலில் நிராகத்துள்ளார்கள். இதிலிருந்தாவது தமிழ்மக்களின் அபிலாசைகள் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு இடையில் வேறுபாடுகள் எவையும் இல்லை என்பதை சிங்களத் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்
வீழ்ந்தவர்களைத் தூக்குதல்
புலம்பெயர் தமிழர்களின் கவனத்துக்காக ஒரு முக்கிய குறிப்புரை
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் எதுவும் தீரவேயில்லை. அவை இப்போதைக்குத் தீரப்போவதுமில்லை. அதற்குரிய களச்சூழலும் அரசியல் நிலைமையும் இலங்கையில் இப்போதில்லை. அதை முன்னெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகள்கூட தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் இன்றில்லை என்பது சகலருக்கும் தெரிந்த உண்மைகள்.
'பிரச்சனைகள் தீரவில்லை என்றால், போராட்டம் தொடரும். அதுதானே விதி?' என்று சிலர் சொல்கிறார்கள். 'அந்தப் போராட்டம் வெவ்வேறு ரூபங்களில், வெவ்வேறு திசைகளில் நடக்கிறது' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் சொல்கிறார்கள் 'அதுதான் நாடுகடந்த தமிழீழம்' என்று. இன்னும் சிலர் சொல்கிறார்கள் 'இந்தப் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் தமிழ்ச் சனங்களுடைய அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தவும்தான் வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்புகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்துகிறார்கள்' என்று.
வேறு சிலரோ இதை வேறு விதமாக நோக்குகிறார்கள். 'இனித் தமிழ் பேசும் மக்களுடைய போராட்டம் என்பதும் அரசியல் என்பதும் இதுகாலவரையிலான அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, புதிய உபாயங்களின் அடிப்படையில் அமையவேண்டும்' என்பது இவர்களுடைய அபிப்பிராயம். பத்திரிகைள், இணையத் தளங்கள் எல்லாம் இந்தமாதிரிச் செய்திகளை எழுதித் தள்ளுகின்றன் விவாதிக்கின்றன.
இதைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதோ அல்லது இதுபற்றி அபிப்பிராயம் சொல்வதோ இங்கே நோக்கமில்லை. இதையெல்லாம் விட மிக அவசிய, அவசரமான பல விசயங்கள் இப்பொழுது இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் குறிப்பு இங்கே எழுதப்படுகிறது.
இங்கே குறிப்பிடப்படும் விசயங்கள் மிகவும் முக்கியமானவை. எந்தவிதமான அபிப்பிராய பேதங்களுமில்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை மட்டுமல்ல, மனிதாபிமான ரீதியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள வேண்டியவையும் கூட.
வன்னிப் போரின் பாதிப்புகள் உலகறிந்தவை. வன்னியிலிருந்த மூன்று லட்சத்து முப்பதினாயிரம் சனங்களும் போருக்குள் சிக்கிப் பெரும்பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இதில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் மட்டும் (ஒரு ஆயிரம் பேர்வரை இருக்கலாம்) எப்படியோ இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். ஏனையவர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில்தான் தொடர்ந்தும் இருக்கப்போகிறார்கள். வேண்டுமானால் இதிலும் மிகக் குறைந்தளவானவர்கள் இலங்கையை விட்டு வெளியேறலாம்.
அப்படி அவர்கள் வெளியேறுவதாக இருந்தாலும் அது ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பேர்வரையில்தான் இருக்கும். எனவே இலங்கையில் இருக்கப்போகின்ற இந்த வன்னி மக்களின் நிலை எப்படி இருக்கப் போகிறது? இப்போது அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிறது இந்தக் குறிப்பு.
வன்னியிலிருந்த சனங்கள் தனியே, வன்னியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்களல்ல. ஒரு குறிப்பிட்ட வீதத்திலான சனங்களைத் தவிர, ஏனையவர்கள் வடக்கு, கிழக்கின் பல இடங்களிலிருந்தும் போராட்டத்தின்பால் வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்ததால் பாதுகாப்புத் தேடி வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்கள். 1985 தொடக்கம் இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 1990 களில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மக்கள் பெருவாரியாக வன்னிக்கு வந்தார்கள்.
அதுவும் காட்டுப்பாதைகளின் வழியாக பெரும் சிரமங்களைப் பட்டே இவர்கள் வந்திருந்தனர். வருகின்ற வழியில் நோயாலும் பாம்புக்கடி போன்ற அபாய நிலைமைகளினாலும் பலர் இறந்திருந்தனர். 1985 க்குப் பின்னரும் 1990 களிலும் கிழக்கில் நடந்த படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் மிகக் கொடியவை. அதையெல்லாம் சந்தித்தே இந்த மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் நகர்ப்பகுதியிலிருந்தும் பலர் - குறிப்பாக போராட்டத்துடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்திருந்தோர் - வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்கள் எல்லாம்; எந்தப் பொருட்களையும் எடுக்க முடியாமல்; வெறுங்கையுடன் வன்னிக்கு வந்தவர்கள். அப்போதே அகதிகளாகவே வந்தவர்கள். அப்போதே தங்கள் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தின் படுகொலையிலோ அல்லது போராட்டத்திலோ இழந்திருந்தவர்கள்.
இதைப்போல யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏறக்குறைய இரண்டு லட்சம் மக்கள் 1995 – 1996 காலப்பகுதியில் (யாழ்ப்பாண இடம் பெயர்வு) வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். ஆனால் கிழக்கிலிருந்து வந்த மக்களைப் போலல்லாமல், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ கொஞ்சப் பொருட்களையாவது எடுத்துவந்தார்கள்.
கிழக்குச் சனங்களைப் போல யாழ்ப்பாணத்தில் பெரும் படுகொலைகள் நடக்கவில்லை. யாழ்ப்பாணம் ஏற்கனவே போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படியால் அத்தகைய அனர்த்தங்கள் குறைவாக இருந்தது. ஆகவே இவர்கள் குறைந்தளவு பாதிப்புகளுடன் இடம்பெயர்ந்திருந்தார்கள்.
எனவே வன்னியிலிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ வகையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் வன்னியில் நடந்த 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை ஏற்கனவே பாதிப்புகளைச் சந்தித்திருந்த வன்னி மக்களில் பெரும்பாலானவர்களை மீண்டும் அகதிகளாக்கியது.
அத்துடன் அந்தப் போரை இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுதான் நோர்வேயுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னான வெற்றியைப்பெற்றவர்கள். இதற்காக இந்தச் சனங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். தவிர, பொருளாதாரத் தடைகள், போக்குவரத்துத் தடைகள் என்று ஏராளம் நெருக்குவாரங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் இந்த மக்கள்.
ஆக மொத்தத்தில் வன்னி மக்கள் இறுதி யுத்தத்தில் மட்டும் துன்பங்களைச் சந்திக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் மட்;டும் தங்கள் வாழ்க்கையை இழந்து போகவில்லை. அதற்கு முன்னரே பல தடவைகள், பல விதமான பேரிழப்புகளைச் சந்தித்தவர்கள். இறுதியாகச் சந்தித்த இழப்பு அவர்களை முற்றாக நிர்க்கதிக்குள்ளாக்கியது.
இந்த நிர்க்கதி என்பது இதுவரையிலும் தாங்கள் சந்தித்த இழப்புகளும் பாடுகளும் எதற்கும் பயனற்றுப் போனதே என்ற துக்கத்தினாலானது. அவர்களுடைய நம்பிக்கையே தகர்ந்து போனதால் ஏற்பட்ட நிர்க்கதி நிலை. மனிதர்கள் நிர்க்கதி ஆகுவது எப்போதென்றால், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை இழக்கும் போதும் அவர்களுடைய நம்பிக்கைகள் சிதறும் போதும்தான். அத்தகைய நிலையோடுதான் அவர்கள் அந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டார்கள்.
வன்னியை விட்டு இந்த மக்கள் வெளியேறும்போது வெறுங்கையுடன், காயப்பட்டவர்களாக, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களாக, கண்ணீர் சிந்தியவர்களாக, ஒட்டியுலர்ந்தவர்களாக, போக்கிடமற்றவர்களாக, போர்க்கைதிகளாக, தோற்கடிக்கப்பட்டவர்களாக எனப் பலவிதமான மிகக் கடினமான நிலைகளில்தானிருந்தார்கள்.
இவர்கள் வெளியேறிய காட்சிகளை இப்போது மீண்டும் ஒரு தடவை யாராவது நினைவிற் கொண்டு வந்து பாருங்கள். இதை நீங்கள் விரும்பாது விட்டாலும் அவசியங்கருதி இதைச் செய்யுங்கள். எப்படியான நிலையில் இந்தச் சனங்கள் வெளியேறினார்கள் என்பது தெரிகிறதல்லவா?
மூன்று லட்சத்து முப்பதினாயிரம் பேரையும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் போது அவர்கள் உடுத்த உடுப்பைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் கொண்டு வரவில்லை என்பது உலகறிந்த விசயம். பின்னர் மிகக் கடினமான முகாம் வாழ்க்கை. இப்போதும் அரைவாசிப் பேருக்கு மேல் முகாம்களில்தானிருக்கின்றனர். மிகுதிப்பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மீளக் குடியமர்வு மிக மோசமானது. (இதைப் பற்றித் தனியாக இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்).
மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் எந்தவகையான உதவிகளுமில்லாமல், வெறுங்கையுடன் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதாவது எல்லாவற்றையும் வன்னியில் போர்க்களத்தில் இழந்து விட்டு, வெறுங்கையுடன் வெளியேறிய மக்கள் மீண்டும் வெறுங்கையுடன் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்படி இந்த மக்கள் வெறுமனே அனுப்பப் படுவதையும் உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. இதையும் எங்கள் தமிழர்களும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் இப்படித்தான் செய்யும். அதற்கு இந்த மக்களைப் பற்றி என்ன கவலையுண்டு? ஆனால், இந்த மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி, இவர்களுக்கான தேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கிறது என உணர்த்துவதற்கோ நெருக்கு வாரங்களைக் கொடுப்பதற்கோ எத்தகைய பொறிமுறைகளையும் தமிழர் தரப்பிலிருந்து யாரும் செய்யவேயில்லை.
இதில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் கருணா, பிள்ளையான் தரப்பும் பிற தமிழ்க்கட்சிகளும் அடங்கும். அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பவர்களாலும் இந்த மக்களின் நிலைமைக்கு உதவ முடியவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு வெளியே நிற்பவர்களாலும் எதனையும் செய்ய முடியவில்லை. ஆகவே சனங்கள் எதையுமே செய்ய முடியாத பெரும் அவலநிலையில்தான் இருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் தாயக வேட்கைக்காகவும், எல்லாத் தமிழர்களினதும் விடுதலைக்காகவும் பாடுகளைச் சுமந்த மக்கள், உச்சமான தியாகங்களைச் செய்த மக்கள் இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இந்த மக்களை இன்னும் புலிகளுடன் நின்றவர்கள் என்ற நோக்கில்தான் பார்க்கிறது. எனவே இவர்கள் இன்னுமின்னும் பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் சந்திக்கப் போகிறார்கள்.
அந்த வகையில்தான் இந்தச் சனங்கள் இப்போது பன்னிரண்டு தகரங்களுடன் கைவிடப் பட்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் மீண்டும் மரநிழல்களின் கீழே, சுவரில்லாத கூரைகளின் கீழே இரவையும் பகலையும் கழிக்க வேண்டியிருக்கிறது. இறைக்க வசதியில்லாத நிலையில் பாழடைந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து துணியால் வடித்துக் குடிக்கிறார்கள். அதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?
இவர்கள் வேறு யாருமல்ல. விடுதலைக்காக தங்கள் வாழ்வைக் கொடுத்தவர்கள். தாயகக் கனவோடு வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் உறவுகள். எனவே சர்வதேசத்தின் அன்பும் கருணையும் இவர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவே முடியாது. மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கூட இந்த மக்களுக்கு உதவ முடியாது. அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை.
இந்தப் பெரிய அநீதியை, அநியாயத்தை, இந்த மாபெருங்கொடுமையை எல்லோரும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர். சர்வதேச சமூகத்துக்கு இதைப் பற்றி என்ன கவலை இருக்கப்போகிறது? மனித உரிமை அமைப்பினர் வேண்டுமானால் ஏதாவது அறிக்கையை விடுவார்கள். ஆனால், அவர்களும் இந்த விசயத்தைப் பற்றிக் கவனித்ததாக இல்லை.
வன்னிக்கு வெளியேயான தமிழ் மக்களும் சரி, தமிழ் அமைப்புகளும்சரி இது குறித்து அக்கறைப்பட்டதாகவும் இல்லை. உருப்படியாக எதையாவது செய்ததாகவும் இல்லை. இதை இங்கே குறையாகவோ குற்றச்சாட்டாகவோ சொல்லவில்லை.
போராட்டத்தின் போது நிறையப் பங்களித்தவர்கள் புலம் பெயர் மக்கள். உபாயங்கள் தொடர்பான குறைபாடுகள் இருந்தாலும் இறுதிக் கட்டத்தில் கூட அவர்களின் பங்கேற்பு மதிப்புக்குரியதாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிற்பாடு சில தனிப்பட்ட உதவிகள், அக்கறைகளைத் தவிர பொதுவாக வன்னி மக்களுக்கு சரியான உதவிகள், ஆதரவு எதுவும் இதுவரையில் கிட்டவேயில்லை.
வன்னியில் இருப்பதற்கு வீடுகளில்லை. செய்வதற்குத் தொழில் இல்லை. காணிகளைத் துப்புரவாக்குவதற்கே பெருமளவு காசு தேவை. சாப்பிடுவதற்கு, பிள்ளைகளைப் படிப்பிப்பதற்கு, உடுப்பு வாங்குவதற்கு என்று அடிப்படையான தேவைகளை நிறைவேற்றவே முடியாத நிலையில்தான் இந்தச் சனங்களிருக்கிறார்கள்.
வரலாற்றில் எத்தனையோ இடப்பெயர்வுகளைச் சந்தித்த போதும் நிமிர்ந்தவர்கள். பெரும் இழப்புகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டவர்கள். எந்த நெருக்கடியான நிலையிலும் தளர்ந்து விடாமல் நிமிர்ந்து நின்று தாக்குப்பிடித்தவர்கள். இன்று எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிவாசிகளைப் போல, இந்த மாபெரும் உலகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களாக, திக்கற்றவர்களாக, சொந்த வீட்டிலேயே அகதிகளாக, எந்தக் குற்றமும் செய்யாமலே தண்டனையை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர்.
இப்போது தமிழர்கள் செய்ய வேண்டிய அவசிய உதவி இவர்களுக்கானதே. முதற்பணியும் தலையாய கடமையும் அதுவே. வீழ்ந்தவர்களைத் தூக்குதல். காயமடைந்தவர்களைக் குணப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாயிருத்தல். தனித்தவர்களுக்குத் துணையாயிருத்தல். இது முதற்பணி. முதலுதவி என்பார்களே அதுதான்.
இந்த முதலுதவிகூட இவ்வளவு நாட்களாகச் செய்யப்படாமலிருக்கிறதே! இதை நினைக்கும் போதுதான் நாங்கள் எல்லாம் பிரச்சினைகளிலிருந்தும் தேவைகளிலிருந்தும் உண்மைகள், யதார்த்தங்களிலிருந்தும் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதையிட்ட கவலைவருகிறது.
எல்லோருடைய விடுதலைக் கனவுக்காகவும் பாடுகளைச் சுமந்தவர்களையிட்டு, சர்வதேச தேசத்துக்கு என்ன கவலைகள் இருக்க முடியும்? அதைப்போல இலங்கை அரசிடமும் நற்சகுனங்களை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் இந்த மக்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புண்டு. அதைப்போல புலத்திலிருக்கிற அத்தனை மக்களும் இந்த விசயத்தைக் குறித்து பாரபட்சமில்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளிலில்லாமல் ஒன்று பட்டு இந்த மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
வேண்டுமானால், அதற்கு முன்னர் வரக் கூடியவர்கள் வந்து ஒரு தடவை இந்த மக்களைப் பார்த்துச் செல்லுங்கள். அப்போது இதைப் போல இன்னும் குறிப்புகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. இப்படிக் கோரிக்கைகளை விடவும் தேவையிருக்காது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)