புதன், 3 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காணவில்லை

யாழ்ப்பாணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த 16 அகவையுடை விபுலானந்தறாஜா புவசாந்த் என்ற இளைஞன் கடந்த 26 ஆம் நாள்முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களினை கடத்தி கப்பம் பறிக்கும் செயல்களில் சிறீலங்காப்படை ஒட்டுக்குழுக்கள் ஈடுபட்டுள்ளதால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அச்சஉணர்வு தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்... சம்பந்தன் - பொய்மைந்தன்

தமிழீழத் தாய்மண்ணின் விலங்கொடிப்பதற்காக, தமிழ் மக்களின் விடிவிற்காக, தம்மையே தகர்த்துக்கொள்ளும் கரும்புலிகளையும், இரத்தமும் சதையும் பீறிட உயிர் நீர்த்த மாவீரர்களையும் விடுதலைப் போருக்கு உருவாக்கிய எம் தலைவனால், தமிழீழ அரசியல் போருக்காக, பிரிந்து நின்ற அமைப்புக்களையும், தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயத்துடனான தனித்தமிழீழ அரசுக்கோட்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எங்கள் தேசியத்தலைவரின் விருப்பிற்கிணங்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதால், அது தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அதற்குமுன் கூட்டமைப்பினரை யாரும் அடையாளம் கண்டதில்லை. அதிலும் சம்பந்தனை திருகோணமலையிலோ, அல்லது வேறெங்குமோ யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. அவர் மக்களால் தூக்கியெறியப்பட்டு, ஏற்கனவே தேர்தல்களில் முகம்கொடுக்க முடியாமல் இருந்தவர். மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர் மட்டும் சுகமாக இந்தியாவில் வாழ்ந்தவர். பதவிக்கும் புகழுக்கும் பேராசைகொண்டு கூட்டமைப்பில் இணைந்து, பழசு என்ற காரணத்தால் தலைமையையும் பெற்றுக்கொண்டவர். இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார். தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையான வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கிய சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நட்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். இவ்வாறு தமிழ் மக்களை சரத்திற்கு வாக்களிக்க வைத்து, இனவெறியன் மகிந்தவின் தீராத பகையாளியாக்கியுள்ளார். இதுதான் தமிழ்மக்களுக்கு அவர் ஆற்றியதொண்டு. இலங்கைச் சட்டசபையில் தனித்தமிழீழத்திற்காக குரல் கொடுக்கவேண்டிய சம்பந்தன், எமது தேசியத் தலைமை மீது பலமுறை சேற்றை வாரி இறைத்துள்ளார். சிங்களத்தின் கறுப்புப்பணம் அவர் பைகளை நிரப்பியதால், இனி தனிநாடு கேட்டுத் தனது சிங்கள நண்பர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறிச், சிங்களத்தின் வயிற்றில் பால் வார்த்துள்ளார். விலகித் தூரநின்று துரோகம் செய்பவன் கருணா என்றால் விலகாமல் கூட இருந்தே குழிபறிப்பவர் சம்பந்தன். தமிழ் மக்களின் தமிழீழத் தாகத்திற்கு ஆப்புவைக்கும் சம்பந்தன் போன்ற செயல் வீரர்கள் இருக்கும்வரை எங்கள் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும். சாக்கடை நீரானது கடல்நீரைச் சேர்ந்தால் அதற்குப் பெயரும் வேறாகிப் புண்ணிய தீர்த்தமாகிவிடும். கடல் பொங்கும்போது கடல்நீர் சாக்கடையில் புகுந்தால் மீண்டும் அது சாக்கடைநீராகி அருவருப்புக்குள்ளாகிவிடும். சம்பந்தனும் இனி சாக்கடைநீர்தான், இனி தமிழ்மக்கள் அருவருப்புடன்தான் அவரை அவதானிப்பர்.

பிழவுபட்ட சிறீலங்காப்படையினரை கட்டுப்படுத்த அரசு கடும் முயற்சி

சிறீலங்காப்படையில் இருந்து தப்பிச்சென்றவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் சிறீலங்காப்படையினரில் இருந்து பல ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் மீண்டும் இணைத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி தப்பி ஓடிய சிறீலங்காப்படையினர் அருகில் உள்ள படைமுகாம்களில் இணைந்து கொள்ளுமாறு சிறீலங்காப்படைத்துறைப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை இவ்வாறு சேராதவர்களை தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஒன்றிற்கு சிறப்பு படைப்பிரிவு ஒன்று ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இராணுவத்துள் பிழவு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்நிலமையை கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன

உங்களுக்கும் சுதந்திரம் இல்லை எங்களுக்கும் சுதந்திரம் இல்லை-சோமவன்ச

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 26 ம் திகதி நடைபெற்றது. அதன் பின்னர் வெளியான தேர்தல் முடிவுகளின் படி சுமார் 18 இலட்சம் மேலதிக வாக்குளினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். எனினும் இந்த தேர்தல் முடிவுகள் சுயாதீனமானதும், நேர்மையானதுமான தேர்தல் முடிவுகள் இல்லை என குற்றம் சுமத்தும் எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து பல்வேறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தன. இந்நிலையில் வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் கணனியின் தொழில்நுட்பத்துடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டும் அதேவேளை இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம், பொதுக்கூட்டம் என்பவற்றை நடத்தியது. மோசடி ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டம் என்பன இடம்பெற்றன. கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள லிப்படன் சுற்றுவட்டத்றிகருகில் இன்று மாலை 3.15 மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினால் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சுமார் 30 நிமிடம்வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குறித்த ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக ஹைப்பார்க் விளையாட்டரங்கை நேர்க்கி நகர்ந்தது. பொதுக்கூட்டம் நடத்துவதற்காக குறித்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரார்கள் கோஷமிட்டப்படி வந்தனர். இதன் போது மோசடியான ஜனாதிபதி முடிவுகளை ஏற்கமாட்டோம், பொய் குற்றம் சுமத்தி சட்டவிரோதமாக கைது செய்துள்ளவர்களை விடுதலை செய், ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே, சதித்திட்டங்களைத் தீட்டி அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதை நிறுத்து, மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு இடியமீன் சிந்தனையா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இவர்கள் ஒருபுரம் வந்து சேர கொழும்பு கொம்பனிவீதியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ம் இடம்பெற்றதுடன், அவர்களும் கோஷமிட்டப்படி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள விளையாட்டரங்கை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். மக்கள் விடுதலை முன்னணியின் சார்பிலும் அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொதுச்செயலாளர், பாராளுமன்றக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவரது கட்சியைச் சேர்நதவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர, ஜனாதிபதி வேட்பாளர்களான விக்ரமபாகு கருணாரத்தன, சரத் மனமேந்திர உட்பட பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த பொதுக் கூட்டத்தில் பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில் இலங்கை வரலாற்றிலேயே இந்த மாதிரியாக ஒரு தேர்தல் முடிவைக் கொள்ளைக் கொண்டதை கண்டிருக்க முடியாது என குறிப்பிட்டார். அத்துடன் தேர்தலுக்கு முந்தைய தினங்களில் இடிஅமீன் ஹிட்லர் ஆகியவர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்து சரத்பொன்சேக்கா வெற்றி பெற்றால் நாடு இவர்களின் ஆட்சியைப் போல் மாறும் என குறிப்பிட்டதாகவும் பாராளுமன்றக்குழுத் தலைவர் கூறினார். ஆனால் நாட்டில் தற்போது இடிஅமீனினை நேரடியாகக் காணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், இடியமீனைப் போலவே மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த அரசை கவிழ்க்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டு மக்களின் உரிமைகளை, அவர்களின் உன்மையான வெற்றியைப் பெற்றுக் கொடுக்க கட்சிப்பேதத்தினை மறந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளதாக கூறினார். மக்கள் வழங்கிய ஆணையை பிழையான நபர்கள் கையாள்வதைத் தடுப்பதற்காக இன்று கொழும்பில் ஒன்று திரண்டுள்ள மக்களை இலங்கையின் சகல பகுதிகளுக்கும் கொண்டு சென்று மக்கள் புரட்சியை ஏற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பயணத்தில் தமது உயிருக்கு அச்சுருத்தல் வருமாயின் அந்த அச்சுருத்தலை ஏற்று தாம் மரணிக்கவும் தயார் என குறிப்பிடும் சோமவன்ச அமரசிங்க தமது மார்பு மரணத்தைக் கண்டு ஒடுவதில்லை எனவும் மாறாக மரணத்திற்கு முன்வரும் மார்பு எனவும் குறிப்பிட்டார். எனினும் இப்பாடியான ஒரு நிலைமை ஏற்பாடுமாயின் அதற்கு அரசாங்கமே பொறுப்புகூறவேண்டும் எனவும், இந்த நிலைமை அரசையே மாற்றியமைக்கும் படி மாறும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த ஜெனரல் சரத்பொன்சேக்கா இந்த நாட்டில் தானே ஜனாதிபதி என மீண்டும் ஒருமுறை தெரிவித்தார். மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி தான் என குறிப்பிட்ட அவர் இலங்கை அரசின் லாவகமான சூழ்ச்சி மற்றும் மோசடியால் தனது வெற்றி பறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் தனக்கு விசுவாசமாக செயற்பட்ட இராணுவத்தினரை கைது செய்வதுடன் பலருக்கு கட்டாய ஒய்வு கொடுக்கப்படுவதை தான் அறிவதாகவும், இதற்கு முன்னால் இவர்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள் என தனக்கு தெரியாது எனவும், மக்கள் அலை மேலே எழுந்தது போல் உள்ளார்த்தமாகவும் தனக்கான ஆதரவு அலை வீசியுள்ளதை உணர்வதாக அவர் இதன் போது குறிப்பிட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கைது செய்யப்படுவதாக குறிப்பிடும் அவர், தன்னிடம் கடமையாற்றிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த கைதிற்கு தான் பயப்படபோவதில்லை என குறிப்பிட்ட அவர் தன்னை கைது செய்து சிறையிலடைத்தாலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆனாலும் பயப்படவேண்டாம் மக்களே நான் பெற்ற இந்த வெற்றியை கொள்ளையிட்ட இந்த அரசிடமிருந்து அந்த வெற்றியை மீளப்பெற்றுக்கொள்வோம் என தெரிவித்த அவர், இதனால் உயிரைத் தியாகம் செய்யவேண்டி ஏற்படுமாயின் உயிர்தியாகம் செய்தேனும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டம் நடத்தப்படும் ‐ எதிர்க்கட்சிகள்:‐ எச்சரிக்கைகளை மீறி இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், இது தொடர்பில் நியாயம் கிட்ட வேண்டும் எனவும் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நேரம் முதல் ஆளும் கட்சி பேரணிகளை நடத்தி வருவதாகவும், அரசாங்கமே இந்த சட்டத்தை மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், சட்ட ரீதியான முறையில் ஏழு தினங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும், இதில் சட்ட சிக்கல்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியான சத்தியக்கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சகல கட்சி தலைவர்களின் பங்களிப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக எவ்வாறு செய்றபடுவது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவுதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சமாதானத்தை சீர் குலைக்க முயற்சி செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார். கலகத் தடுப்பு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு

1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக..... 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக அடையாளப்படுத்தி சிறிலங்கா அரச பயங்கரவாத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவோம். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசிக் கொன்றும், அவர்தம் வாழ்வுரிமையைப் பறித்தும், அங்கு வாழும் ஈழத் தமிழர்களையே அழித்துவரும் இன ஒடுக்கல் கொள்கையை, சிறிதும் கூச்சநாச்சமின்றி பின்பற்றியும் வருகிறது இந்த கொடிய அரசு. 1948-முதல் (இலங்கை சுதந்திரம் அடைந்த வருடம்) தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர். 1956-ல் கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டம் கலாச்சாரப் (மொழி) படுகொலையின் தொடக்கமாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக்கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலையாகும். 1970-லும் அதன் பின்பும் தமிழ் மாணவரின் மேல்நிலைக்கல்வி முடக்கப்பட்டது. 1972 –ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்பட்டது. 1981-ல் அரசின் அமைச்சர்களும், இராணுவ போலிஸ் படையினரும் சேர்ந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரித்தமை, அரசின் இன அழிப்பு நடவடிக்கையின் உத்தேசத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டியது. இலங்கையை ஆண்டு வந்த பல் வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து வெவ்வேறு வகைகளில் நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளில், நாகர்கோவில் விமானக் குண்டுத் தாக்குதல், செம்மணிப் புதைகுழிகள் போன்ற எண்ணிலா நிகழ்வுகள் சாட்சி பகரும். அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, காணாமற்போதல் ஆகிய யாவும் ஓர் “சாதாரண நாளாந்தர நிகழ்வு” களாகின. இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு செல்லுகின்றது முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை. எமது பாசத்துக்கும் அன்புக்கும் உரிய புலம்பெயர்வாழ் மக்களே, இவ்வளவு காலமும் நாம் பட்ட துன்பங்கள் நீங்க நாம் அனைவரும் ஒன்றினைந்து உழைக்க வேண்டிய தருணம் இதுவே ஆகும். இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் எமது மக்கள் ஒரு செய்தியை சொல்லி தெளிவு படுத்தியிருக்கிறார்கள், அதாவது தமிழர்கள் வேறு சிங்களவர்கள் வேறு என்றும் நாம் ஒரு போதும் இணைந்து வாழமுடியாது என்பதுவே அதுவாகும். உறவுகளே எமது மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் ஆயுத முனையில் இருந்துகொண்டே அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்கள், புலம்பெயர்ந்து வாழும் நாம் இந்நாளில் தமிழர் என்ற ஒரு சொல்லிற்குள் ஒன்றினைவோம் என்று உறுதி எடுத்து கொள்வதோடு மட்டும் நிற்காமல் எங்களது தாயகத்தை மீட்க எமது அளப்பரிய பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம். புலம்பெயர் தேசங்களில் வியாபார, முதலீட்டு நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்களுக்கு அன்பு கலந்த மிகவும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து "ஸ்ரீலங்கா" என்ற வார்த்தை பிரயொகங்களை உங்கள் நிறுவனங்களில் எங்கும் பாவிர்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். நாம் தமிழர்கள் தமிழர்களாகவே இருப்போம், எமது இனத்தை அழித்த தேசத்தின் பெயரை உச்சரிப்பதால் எமது நாட்டுக்காக உயிர் நீர்த்த மாவீர செல்வங்களையும் எமது மக்களினது ஆத்மாவையும் நாம் இழிவு படுத்துவதற்கு சமனாகும். தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் நன்றி தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மார்க்கண்டு சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் திரும்பாததையடுத்து, நேற்றுக் காலை தேடுதலின்போது கிணறு ஒன்றிலிருந்து அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் கனவு மட்டுமே

எவளோ ஒருத்தி யாசிக்கிறாள் இருட்டில் இருந்து நான் யோசிக்கிறேன்… சங்கரக்குட்டி எவளோ ஒருத்தி தன்னை விரும்புவதாக கற்பனையில் உறங்கிக் கிடந்தபோதுதான் பரணில் கிடந்த பசுமாதி அரிசி மூட்டை முதுகுக் கும்பத்தில் விழுந்ததாக ஞாபகம். முள்ளந்தண்டு முறிந்துவிட்டது.. அந்த எவளோ ஒருத்தி மட்டும் அகப்பட்டால்… பற்களை நறுமிக் கொண்டபோது முதுகுவலி வானின் உச்சத்தைத் தொட்டது.. ஐயோ.. என்று அலறினார்.. வைத்தியசாலையில் இருந்த தாதி ஓடிவந்து ஊசியால் இடித்துவிட்டுப் போனாள்.. மீண்டும் துக்கம் கண்களைத் தழுவியது.. இப்போது சில கனவுகள் அங்குமிங்குமாக இடறிப் போயின.. பட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பழைய தலைவர் அ.சிங்காரலிங்கம் வந்து எதிராக வாக்குப் போடுவது போல, தமிழீழ தனியரசை தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொண்டுவந்து கொடுக்க அதை வாங்கவந்த சங்கரகுமாரன் வாழைப்பழத் தோலில் சறுக்கிவந்து கல்யாணத்திற்குப் பிறகு கற்புக்கரசியாக இருக்கும் மந்திரம் சொன்ன குஷ்புவின் வயிற்றில் இடிப்பதுபோலவும் பிறகு ஆரோ ஒரு நடிகையும் சங்கரக்குட்டியும் கயிற்றில் தொங்க ஏ.ரிவியின் செய்தி வர இற்றுப்போன கயிறு அறுவது போலவும் கனவுகள் நாசமறுத்தன.. சொற்ப நேரத்தில் கொசுறுக் கனவுகளில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த கனவுக்குள் நுழைந்தார். அப்போதுதான் ஆகாசத் தீவில் தேர்தல் நடக்கப் போவதும், வாக்குப் பெட்டிகள் ஏலத்தில் விடப்படுவதும் தெரிந்தது.. கறுப்புத் தொப்பி, கறுப்புக் கோட், கையில் மந்திரக் கோலுடன் ஒரு வித்தைக்காரன் வந்தான்.. ஒரு பெட்டியைத் திறந்து காட்டினான்.. அந்தோ அதற்குள் எதுவுமே இல்லை என்று சபையில் இருந்தவர்கள் கரகோஷம் வைத்தார்கள்… பின் மந்திரவாதி மந்திரக் கோலை எடுத்து பெட்டி மீது சுழற்றிக் காட்டினான்.. அண்ணா பார் அக்கா பார்.. என்று சுற்றிச்சுற்றிக் காட்டினான்… தமிழீழச் சங்கரக்குட்டி எழுந்தார்… இது மோசடி ஒரு சர்வதேச கண்காணிப்புக் குழு இல்லாமல் இதை அங்கீகரிக்க முடியாது என்று தனக்குள்ள ஏ.ரிவி அறிவை ஆதாரம் காட்டி வாதிட்டார்.. மந்திரவாதி சிரித்தான்.. ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா கண்காணிப்பாளர் அனைவரும் ஏற்கெனவே வந்து முன் வரிசையில் இருப்பதை சுட்டிக் காட்டினான்.. மந்திரவாதிக்குப் பக்கத்தில் பளபளக்கும் துடைகள் தெரியும்படி ஒரு குமரி வைன் கிளாசுடன் இருந்தாள்.. இதுவரை அவளைப் பார்த்து புகழ்ந்து கொண்டிருந்த கண்காணிப்பாளர் இப்போது தமது வரவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் விதமாக பதிவு செய்தனர்.. மந்திரவாதி பெட்டியை திறந்து கொட்டினான்… என்ன ஆச்சரியம் ஓர் இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் கொட்டுப்பட்டன… ஊழல் மோசடி எதுவும் இல்லாத வாக்குப் பெட்டி என்று கண்காணிப்பாளர் உறுதி செய்தார்கள்… கூட்டத்தில் இருந்து சால்வை போட்ட ஒருவன் எழுந்து தனது நாட்டிலும் தேர்தல் நடைபெற இருப்பதாகவும், இரண்டு லட்சம் வாக்குப் பெட்டிகளுக்கு ஓடர் கொடுப்பதாகவும் சொன்னான்.. திடீரென பக்கத்து நாட்டு மந்திரவாதி ஒருவன் மேடையில் தோன்றினான்… அவசரப்பட வேண்டாம்.. என்று கூறிவிட்டு தனது வித்தையை ஆரம்பித்தான்.. சங்கரக்குட்டிக்கு அவனை எங்கோ பார்த்ததுபோல இருந்தது.. அடுக்கு மொழியில் மந்திர உச்சாடனங்களை அவன் நடாத்தியபோது அவையே மெய் சிலிர்த்தது. பக்காக் கில்லாடியான அந்த ஆள் சங்கரக்குட்டியின் நினைவில் வந்தான்.. பழைய காலத்தில் மந்திரவித்தைகள் செய்யும் பூசாரிகளை விரட்டியடித்துவிட்டு ஆட்சிக்கு வந்த அடுக்குமொழி செம்மலே அந்த மந்திரவாதி என்றும் தெரிந்தது.. இப்போது பூசாரிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் பூசாரியாக அவன் மாறியிருந்தான்… மந்திரவித்தை ஆரம்பித்தது.. சட்டென மின்சார வெட்டு ஏற்பட்டது… யாருமே பார்க்க முடியாத கும்மிருட்டு… வாக்காளரிடம் அவன் தலையில் அடித்து சத்தியம் வேண்டிக் கொண்டு சிறு தொகைப் பணத்தைக் கொடுத்தான்… தேர்தல் நடந்தது… பளிச்சென விளக்குகள் எரிந்தன… கில்லாடி மந்திரவாதி வாக்குப் பெட்டியை சரித்துக் கொட்டினான்… இரண்டு இலட்சம் வாக்குகள் கொட்டுப்பட்டன.. வாக்குப் பெட்டிக்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் புறநானூறு கண்ட தமிழரே.. நமது கண்கட்டு வித்தை இருக்க வாக்குப் பெட்டி ஏன் வள்ளல்களே என்றான்… கண்காணிப்புக் குழு அடடா இதுவல்லவோ ஜனநாயகத்தின் வெற்றி என்று வாயை வாயை அடித்தது.. ஐ.நா செயலரின் பாராட்டு நாளை வெளியாகும் என்று யாரோ ஒரு விசுக்கோத்து முழங்கியது.. இடையில் வடதுருவத்தில் இருந்து வந்த ஓட்டை விழுந்த சங்கொன்றை எடுத்து ஊதினார்கள்… வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நேர்வே பிரதிநிதி மேடைக்கு வந்து மறுபடியும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டுமென்றார்… சங்கரக்குட்டிக்கு மண்டை கிறுகிறுத்தது.. விரைவில் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து சுவிசிற்கு போக வேணுமென எண்ணினார்… பக்கத்து வீட்டு நயினார்பிள்ளை ஊர்வலத்திற்கு போகாமல் இருப்பான்.. தான் ஊர்வலத்துக்குப் போய்.. நயினார்பிள்ளைக்கு துரோகிப்பட்டம் கட்ட எண்ணிக் கொண்டார்.. ஊர்வலத்துக்கு வந்த சனத்தில் ஒரு பகுதி ஏன் ஊர்வலத்துக்கு வந்தமெண்டதை மறந்து வராதவனுக்கு துரோகிப்பட்டம் கட்டத் துடிதுடிப்பதைப் பார்த்து அவருடைய தோள்கள் தினவெடுத்தன… காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியா டேய் நயினார்பிள்ளை என்று அலறினார்… மறுபடியும் மருத்தவத்தாதி ஓடி வந்தாள்.. அவளுக்கு நயினார்பிள்ளையையும் தெரியவில்லை, காக்கைவன்னியனையும் தெரியவில்லை.. மீண்டும் டோஸ்கூடிய ஊசியால் தொடையில் இடித்துவிட்டுப் போனாள்… சங்கரக்குட்டி ஆழ ஆழ போனார்.. ஆழக்கடலெங்கும் சோழ மகராசன்… ஆரோ ஒரு கவிஞர் பனாகொடவில் இருந்து பாடுவது கேட்டது… மறுபடியும் கில்லாடி மந்திரவாதி வந்தான்.. அப்போது ஈரானில் இருந்து வாக்குப் பெட்டி வாங்கிப்போனவன் ஒரு முறைப்பாட்டுடன் வந்தான்.. பத்தாயிரம் பேர் வாக்களித்த நகரத்தில் உங்கள் வாக்குப்பெட்டி இருபதாயிரம் வாக்குகளை கொட்டிவிட்டதென முறைப்பாடு செய்தான். அதையும் கண்காணிப்புக்குழு ஜனநாயகத்தின் வெற்றியாக பதிவு செய்துவிட்டதை சிலர் சுட்டிக்காட்டி அவனைச் சாந்தப்படுத்த முயன்றனர்… ஆனால் அவன் கோபம் ஆறவில்லை.. அணுகுண்டு ஒன்றைத் தடவி எச்சரித்தான்.. கோபம் வேண்டாம் கோமகனே என்றபடி எலக்ரோனிக் வாக்களிப்பு கருவியுடன் கில்லாடிக்கு கில்லாடி வந்தான்… விளக்குமாத்து சின்னத்தில் அழுத்த அழுத்த தும்புத்தடி சின்னத்தில் புள்ளடி விழும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினான்… அவையே கரகோஷத்தில் மகிழ்ந்தது.. ஈரான்காரன் அடுத்த தேர்தலுக்கு ஐந்து இலட்சம் கருவிகள் வேண்டுமென்றான்.. கண்காணிப்புக்குழு அடடா இதுவல்லோ ஊழலே நடைபெறாத தேர்தல் என்றது.. அவர்களின் வெற்று வைன் கிளாசில் யாரோ ஒருவன் ஜனநாயக பிரான்ட் சிகப்பு வைனை ஊற்றிவிட்டுப் போனான்.. ஜனநாயகத்தால் செத்த மண்டையோடுகள் ஐயோ இது எங்கள் இரத்தம் என்ற பாட்டுக்கு ஒரு குத்தாட்டம் போட்டன… அதற்கு இடையில் வந்த யாழ்ப்பாணத்து றப் வரிகள் 99 வீதமும் தேர்தலில் வெற்றியென முழக்கமிட்டன… இடையில் மறுபடியும் பங்களிப்பு என்ற கோலாட்ட ஓசையும் தூரத்தே கோரஸ் ஒலியாக புலம் பெயர் நாடுகளில் இருந்து கேட்டு மறைந்தது.. யாரோ ஒருவர் எழுந்து இராஜினாமா செய்ய எண்ணியதாகவும் இப்போது அதை மீள்பரிசீலனை செய்வதாகவும் அப்பாடலை றீமிக்ஸ் செய்தார்.. அப்போது சபையில் மீண்டும் கரவொலி பிறந்தது.. கணினியில் ஒரு புதிய புறோகிறாமுடன் ஒருவன் வந்தான்… வாக்களிப்பை எண்ணி இதற்குள் போட்டால் புதிய கணக்குகளைத் தரும் என்றான்… அடடா இது பேஷாக இருக்கிறதே… என எல்லோரும் கூத்தடித்தார்கள்… இடையில் ஒரு இன்ரசிற்றி றெயின் ஓடிவந்து கெளித்து நிற்க அதில் எல்லோரும் ஏறினார்கள்.. வேட்டைக்காரனை பகிஷ்கரிப்போம் என்று அதில் ஒரு புதிய திருக்குறள் எழுதியிருந்தது… இன்ரசிற்றி காலத்தில் வேட்டைக்காரன் வர.. அதைப் பகிஷ்கரிக்க… என்ன கோமாளிக்கூத்தடா என்று பிச்சைக்கார மாசிலாமணி யாருக்கோ ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான்.. எல்லோருடனும் இன்ரசிற்றி கிரேக்கம் வந்தது…. ஆகா உலக நாகரிகம் பிறந்த கிரேக்கம் இதுவல்லவா… மரத்தடியில் ஜனநாயகம் பிறந்த மண்ணல்லவா எல்லோரும் அதைத் தொட்டுக் கும்பிட்டனர். அங்கே மக்கள் முதல்முதலாக ஜனநாயக வாக்களிப்பு செய்த மரம் பல்லாயிரமாண்டு பழமையுடன் வானைத் தொட்டு வளர்ந்து நின்றது.. மந்திரவாதிகளையும், வாக்குப் பெட்டிகளையும், கண்காணிப்புக்களையும், ஐ.நா கட்டிடத்தையும் ஒருமுறை சுழன்று சுழன்று பார்த்தது.. ஓவென்று அலறியபடி இன்ரசிற்றிக்கு ஓங்கி அடித்தது… இன்ரசிற்றியின் பெற்றோல் தாங்கி வெடித்துச் சிதறியது.. அத்தோடு பழமைக்கெல்லாம் பழமையான கிரேக்கத்தின் ஜனநாயக மரம் தீயில் பொசுங்கி சாம்பலாகியது… ஐயோ நெருப்பு நெருப்பென்று சங்கரக்குட்டி கத்த மருத்துவத்தாதி மறுபடியும் ஊசியுடன் ஓடி வருகிறாள்… ஆமாம் இது வெறும் கனவு மட்டுமே…

எல்லாளன் சமாதியும் புதுமாத்தளன் சமாதியும்

மகிந்த ராஜபக்ஷவை நவீன துட்டகைமுனு என்று அடிக்கடி பலர் புகழ்பாடி வருகிறார்கள். மகிந்த ராஜபக்ஷவும் இதை என்றாவது மறுத்தது கிடையாது. துட்டகைமுனுவிற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. சிங்களப் பாமரரிடையே அவன் தமிழருக்கு எதிரான இனவெறியனாகவும், வரலாற்றைப் புரிந்தவரிடையே அவன் தமிழரை மதித்த ஒருவனாகவும் பார்க்கப்படுகிறான். இதில் மகிந்த ராஜபக்ஷ எந்தத் துட்டகைமுனுவாக தன்னை நினைத்திருக்கிறார் என்பதை உணர அவரது செயல்களும், அண்மையில் புதுமாத்தளனில் அவர் வைத்த சமாதியும் போதுமானது. துட்டகைமுனு என்ற சிங்கள இளவரசன் விகாரமாதேவி, காக்கவண்ணதீசன் ஆகியோருக்கு பிள்ளையாகப் பிறந்தவன். இலங்கைத் தீவை 44 வருடங்கள் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்த தமிழனான எல்லாளனுக்கு எதிராக ஒரு படையணியைத் திரட்டிப் போர் புரிந்தவன். கடைசியில் அனுராதபுரத்தில் எல்லாளனுடன் தனிச்சமர் புரிந்து அவனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன். இதுதான் துட்டகைமுனு என்ற அரசன் பற்றிய சுருக்கமான வரலாறு. எல்லாளன் என்றால் தமிழ் தேசியத்தின் வடிவம்போலவும், துட்டகைமுனு என்றால் சிங்களத்தேசியத்தின் வடிவம்போலவும் நோக்கப்படுவது சாதாரண மரபாக இருந்து வருகிறது. ஆனால் இந்த இரண்டு அரசர்களையும் இனவாதம் பேசுவோர் என்றுமே சரிவரப் புரிந்தது கிடையாது. அதனால்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற இனப்போர் எல்லாளன், துட்டகைமுனு இருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் வேலை என்பதை பலரால் விளங்க முடியாமல் போனது. எல்லாளன் தமிழ் மன்னனாக இருந்தாலும், சிங்களவருக்கு நல்லாட்சி வழங்கிய ஒருவன். அவன் புத்தவிகாரைகளுக்கு ஒழுங்காக நிதி வழங்கி, புத்தமதம் தழைத்தோங்க வழி செய்தவன். தான் வயோதிபனாக இருந்தாலும் தமிழர் – சிங்களவர் என்ற இரண்டு இனங்கள் அரசியலுக்காக மோதுவதை அடியோடு வெறுத்தவன். நடப்பது அதிகாரப் போட்டி, இதில் இனவாதம் தேவையில்லை என்ற தெளிவு அவனுக்கு இருந்தது. ஆகவேதான் வயோதிபனாக இருந்தும் தனிச்சமருக்காக அவன் அனுராதபுர வீதியில் இறங்கினான் வீரமரணம் அடைந்தான். அதேவேளை துட்டகைமுனு தமிழருக்கு எதிராக பெரும்பான்மை சிங்களவருக்காக போரிட்டாலும் எல்லாளனின் வீரத்தையும், தமிழ் ஆட்சித் திறனின் மேன்மையையும் உயர்வாக மதித்தான். அவனைப் போல எல்லாளனை தமிழர் கூட மதித்து ஒழுகியது கிடையாது. எல்லாளன் இறந்தவுடன் அவன் இறந்த இடத்தில் மிகப்பெரிய சமாதியை தானே முன்னின்று அமைத்தான். போரில் தோற்றவனை மதிப்பதே வெற்றிக்கு அழகு என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். போரில் மடிந்த சிங்களவருக்கு அவன் சமாதி அமைக்கவில்லை, தமிழனுக்கே அமைத்தான். அதன் பின்னர் சிங்களவருக்கு கடுமையான உத்தரவொன்றையும் பிறப்பித்தான். எல்லாளன் சமாதியை கடக்கும் போது எந்தவொரு வாத்தியங்களையும் எவரும் இசைக்கக் கூடாது என்று உத்தரவிட்டான். இலங்கைத் தீவின் அதி உயர் மரியாதைக்குரிய இடம் தமிழனான எல்லாளன் சமாதிதான் என்றும் தெரிவித்தான். அந்த உத்தரவை மீறிய பலர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். புத்தமதத்தின் ஊர்வலங்களும் எல்லாளன் சமாதிக்கு தலை வணங்கி விலகிச் சென்றன. போருக்குப் பின் எப்படி நடக்க வேண்டுமெனத் தெரியாதவர்கள் தமிழருக்கு எதிராகப் போருக்குப் போக வேண்டாம் என்பதை அவன் தனது செயலால் உணர்த்தினான். அதன் மூலம்தான் துட்டகைமுனு வரலாற்றில் மிகப்பெரிய பதிவு பெற்றான். துட்டகைமுனு தமிழனுக்காக மாவீரர் சமாதியை அமைத்தான் என்பது ஒரு செயல், ஆனால் அதன் தாக்கமோ பல நூற்றாண்டுகளாக தமிழரின் சிறப்பை அந்தத் தீவில் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அதை விளங்காத ஜே.ஆர்.ஜெயவர்தனா எல்லாளன் தூபி என்பது துட்டகைமுனுவின் சமாதி என்றார். அங்கிருந்த எதையோ சாம்பலென்று தோண்டி எடுத்து அதை அமெரிக்காவிற்கு அனுப்பினார். அந்தச் சாம்பல் துட்டகைமுனுவினுடையது என்று கதையைப் பரப்பினார். அவருடைய இனவாதக் கோமாளித்தனத்திற்கு சிங்கள வரலாற்று பேராசிரியர் பரணவிதானவும் துணை போனார். அன்றோடு துட்டகைமுனு அமைத்த சமாதியின் நோக்கம் சிதைந்தது. தமிழினத்திற்கு எந்த மரியாதையும் கொடுக்காத இனப்போர் உக்கிரமடைந்தது. எல்லாளனுடன் நடந்த போர் வரைதான் நாம் துட்டகைமுனுவை அறிகிறோம். ஆனால் போருக்குப் பின்னர் தமிழருக்கு எதிராக துட்டகைமுனு வேறெந்த இனவாத செயல்களையும் செய்ததாக வரலாற்று செய்திகளில் தகவல் இல்லை. போருக்கு முதல் மக்களை இனவாதத்தில் தள்ளக் கூடாது என்பதற்காக எல்லாளன் உயிர் கொடுத்தான். போருக்குப் பின் எல்லாளனை மதித்து இனவாதத்தை வளரவிடாது தடுப்பதற்காக துட்டகைமுனு தன் எஞ்சிய நாட்களைக் கொடுத்தான். துட்டகைமுனு அமைத்தது மண்மேட்டிலான சமாதியாக இருந்தாலும் அது இலங்கை மண்ணுக்கு பெருமை தேடித்தந்தது. ஆனால் அவனுக்குப் பின்னர் மலையில் ஒரு மாளிகை அமைத்தான் காசியப்பன், அதைத்தான் சிகிரியா என்று அழைக்கிறார்கள். தந்தையான தாதுசேனனை உயிருடன் சமாதிகட்டி கொன்றுவிட்டு, அந்த அவலத்தை மறந்து வாழ அவன் அமைத்ததுதான் சிகிரியா மலைக்கோட்டை. சிகிரியாவில் அஜந்தா குகை ஓவியங்களைப் போல அழகான ஓவியங்களை அமைத்து சாதனை படைத்தாலும், தந்தையைக் கொன்றவன் என்ற இழி சொல்லை அவனால் வெல்ல முடியவில்லை. சிகிரியா என்ற நினைவுச்சின்னம் உள்ளவரை அந்த அவப்பெயரை அவனால் அழிக்க முடியாது. அதே மலைக்கோட்டையில்தான் அவன் தம்பியான முகலாளன் அவனைக் கொன்று அண்ணனைக் கொன்ற தம்பி என்ற அவப் பெயரையும் பெற்றுக் கொண்டான். இந்த இரண்டு கதையையும் மகிந்தராஜபக்ஷ சரிவர உணர்ந்திருந்தால், சமாதிகளால் வரும் பின் விளைவுகளை விளங்கியிருப்பார். கொல்லப்பட்டவனை மறந்து கட்டப்பட்ட சிகிரியா அவமானக் கதையை சுமந்து நிற்பதையும், கொல்லப்பட்டவனை மதித்து கட்டப்பட்ட எல்லாளன் தூபி மதிப்பு மிக்க சின்னமாகப் போற்றப் படுவதையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். புதுமாத்தளனில் நாங்கள் அமைக்கப்போவது சிகிரியாவா இல்லை எல்லாளன் தூபியா என்பதை தராசில் போட்டுப் பார்த்திருக்க வேண்டும். மகிந்தராஜபக்ஷ வரலாற்றைப் பார்க்காவிட்டாலும் தன்னுடைய சொந்தப் பெயரையாவது திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். மகிந்த என்பவன் யார் என்று தன்னைத்தானே கேட்டுப்பார்த்திருக்க வேண்டும். கலிங்கத்திற்கு எதிராகப் போர் புரிந்து, அந்தப் போரின் முடிவில் யுத்த களத்திலேயே வாளைத் தூக்கிவீசிய சாம்ராட் அசோகனின் மகன்தான் மகிந்த. போரின் வெற்றியால் மனம் திருந்திய ஒரு குடும்பத்தில் பிறந்து, காவிவஸ்திரம் தரித்த ஓர் இளைஞனே அவன். வெள்ளரசு மரக்கிளையுடன் இலங்கை வந்திறங்கிய மகிந்ததேரர் புதுமாத்தளன் போய் இராணுவத்திற்கு சமாதி அமைப்பானா என்று எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். ஜீனியர் றிச்சாட் ஜெயவர்தனா என்ற பெயரைத் தாங்கியவர் செய்த செயலை மகிந்த என்ற பெயருடன் செய்யலாமா என்று தன்னைத்தானே கேட்டுப் பார்த்திருக்க வேண்டும். புலிகள் மீது பயங்கரவாதிகள் என்று மலிவான பட்டம் கட்டிவிட்டு எல்லாத் தவறுகளையும் செய்யலாமென எண்ணுவது தவறான செயல். புலிகள் பல இலட்சம் பேர் கொண்ட சிங்களப் படைகளுடன் மோதி உயிர் விட்டுள்ளார்கள். எதிரிகளாக இருந்தாலும் போரில் ஒருவர் வீர மரணம் அடையும்போது தலையில் உள்ள தொப்பியைக் கழற்றி மரியாதை கொடுப்பது உலக மரபு. நெப்போலியன், மகா அலெக்சாண்டர் போன்ற வீரர்கள் கூட தோல்வியை தழுவியவர்கள்தான். அவர்களை அவர்களின் எதிரிகளே அதிகமாகப் போற்றினார்கள், பூவோடு சேர்ந்த நார்போல தாமும் மணம் பெற்றார்கள். தோல்வியில்லாமல் போரை நடாத்த முடியாது. பிரபாகரன் முப்பதாண்டுகள் இந்தப் போரை வெற்றிகரமாக நடாத்தியவர். அவரிடம் இருந்த சக்தியைவிட ஆயிரம் மடங்கு அதிகமான உலகப் பெரும் சக்திகளுடன் மோதியிருக்கிறார். உண்மையில் அவர் சிங்களப் படைகளுடன் இந்தப் போரை நடாத்தவில்லை என்பது நம்மைவிட சிங்கள அரசுக்கே அதிகம் தெரியும். இலங்கையில் பிறந்த ஒரு தமிழன் உலகம் முழுவதையும் எதிர் கொண்டு இத்தனை பெரிய போரை நடாத்தியிருக்கிறான் என்றால், அதற்காக பெருமைப்பட வேண்டியது யார்.. சிங்கள மக்களே. துட்டகைமுனு உயிருடனிருந்திருந்தால் மடிந்த புலி வீரர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இன்னொரு தூபியை அமைத்திருப்பான் என்பதை உணர மகாவம்சமே போதுமானது. அதுபோல இறந்த தமிழ் வீரருக்காக அமைக்கப்பட்ட தூபிகளை சிங்கள அரசர்கள் எங்காவது இடித்தாக சரித்ததிரமிருக்கிறதா என்று மகாவம்சத்தில் தேடிப் பாருங்கள். மாவீரர் துயிலும் இடங்களை உடைக்க முன்னர் யோசித்துப் பார்த்திருக்க வேண்டிய பாரிய விடயம் இது. மாவீரர்கள் போரை முடித்துவிட்டார்கள், ஆயுதங்கள் உறங்க வைக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாகவே அறிவித்துவிட்டார்கள். மறுபடியும் போர் வராமல் தடுக்க வேண்டும் என்பதற்காக மாவீரர் சமாதிகளை உடைப்பது தவறான செயல். இரண்டாம் உலகப்போரில் மடிந்த வீரருக்காக கட்டப்பட்ட சமாதிகளை உடைத்தெறிந்தால் மூன்றாவது உலக யுத்தம் வராது என்று கருதுவதைப் போன்ற பாமரத்தனமான வாதம் அது. இயேசுநாதர் என்பவர் கொல்லப்பட்ட 300 வருடங்களின் பின்னர்தான் அவருடைய கதையைத் தோண்டி எடுத்தார்கள். அப்போது அவரைக் கொன்றவர்கள் யூதர்கள் என்ற மலினமான கதை ஒன்றையும் உருவாக்கினார்கள். அதன் விளைவு இரண்டாம் உலகப்போரில் சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொன்றொழித்தான். சிவபெருமானுக்கு மூத்திரம் கொடுத்தாகக் கூறி நம்மூரில் வாய்பேசாத ஓணான்களை அடித்துக் கொல்லும் அறியாமை மிக்க சிறுவர்கள் போல ஹிட்லர் நடந்தார். இதுபோல புதுமாத்தளன் சமாதியில் விட்டுள்ள தவறு எதிர் காலத்தில் பல ஓணானுக்கு மூத்திரம் கொடுத்த கதைகளை உருவாக்கலாம், அதனால் பெரும் அழிவுகளும் வரலாம். பயங்கரவாதம் என்று யாரைப்பார்த்தோ ஜோர்ஜ் புஸ் வடித்த நாறிய மூத்திரத்தை தமிழர்மீது ஊற்றியது போதும். இப்பொழுது அது சிங்களவரின் உடைகளிலும் பட்டு வெடிலடிக்கிறது. அந்த மணம் சர்வதேச நீதிமன்றின் நாசில் இடிக்கும்வரை வீசுகிறது. இதையெல்லாம் மகிந்த உணர வேண்டும். மாவீரர்கள் என்னும் தமிழ் மைந்தர்கள் இலங்கைத் தீவில் பிறந்தவர்கள் என்ற பெருமையை குலைக்க சிறீலங்கா முயலக்கூடாது. நீங்கள் ஒழுங்கான உரிமையை தமிழர்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் போராட வேண்டிய தேவையே இல்லை என்பதை புரிய வேண்டும். எல்லாவற்றுக்கும் அப்பால் போரில் மடிந்தவர்களை மரியாதைப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நீங்கள் தமிழரை எவ்வளவு மரியாதைப்படுத்தி நடக்கிறீர்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவர்கள் உங்களை மரியாதை செய்வார்கள். தமிழ் மக்களை போரால் வெல்வதைவிட அவர்களுடைய இதயங்களை வெல்வதே சரியான வெற்றியாகும்.

கூட்டமைப்பில் கொள்கையில் உறுதியாக இருப்போரை தேர்தலில் போட்டியிட தலைமைப்பீடம் அனுமதிக்காது

தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது. கடந்த 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதுடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் சிபார்சு செய்யப்பட்டவர்களாவர். கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதன் கொள்கைகளை முற்றாக கைவிட்டு தமிழ் தேசியம் பேசியபடி உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் இறைமையையும் ஏற்றுக் கொண்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரிக்க முற்பட்ட பொழுது அதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுவந்திருந்தனர் என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் திடீரென சனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் தேசிய எண்ணக்கருவை சிதைக்கும் நோக்கில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தபொழுது அந்த முடிவை கடுமையாக எதிர்த்து கூட்டமைப்பு தலைப் பீடத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக இருந்தனர் என்பது யாவரும் அறிந்தது. இவர்களில் சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தனித்து செயற்பட்ட காரணத்தினால் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்று சம்பந்தன் தீர்மானத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேவேளை தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடிய உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது என்று நம்பகமாக அறிய முடிகின்றது. அவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுக்கும் போது அதனால் பொது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமைப் பீடத்தின் மேல் ஏற்படக் கூடிய அதிருப்தியை சமாளிப்பதற்காக ஒரு தமிழ் ஊடகம் ஒன்றின் உதவியுடன் முன்கூட்டியே சில உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணம் இனிவரும் நாட்களில் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாகவும் 76 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாகவும், 77 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாக தயாரித்து வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தடையாக இருக்க கூடியவர்கள் என்று கருதப்படும் அரசியல் கட்சிகள் எதனையும் சாராத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களை இல்லாமல் தடுப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து தமது திட்டத்திற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சிறீலங்கா இராணுவத்துள் மோதல் - படையினன் பலி

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சுக்கான பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய்க்கும் மேலதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (1) நடைபெற்ற இந்த சம்பவத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கோப்ரல் சுஜித் குமார கொல்லப்பட்டுள்ளார். அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட படை சிப்பாய் உசான் மதுசங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மதுசங்கவை எதிர்வரும் 12 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு புறக்கோட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. இதேவேளை சிறீலங்காவின் அருசுத்தலைவர் தேர்தலின் பின்னர், இராணுவத்துள் இரு பிரிவாக பிளவடைந்தமையும், அடிக்கடி இராணுவத்துக்குள் சரத் மற்றும் கோத்தா அணிகளுக்கிடையில் அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார். அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள், அதாவது அரசு மேற்கொள்ளவுள்ள வர்த்தக அபிவிருத்திகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டுமெனவும் மற்றது வெளிவிவகார அமைச்சின் உதவிக் காரியாலயம் ஒன்று நிறுவ இருப்பதாகவும் தெரிவித்தார். இக்காரியாலயம் புலம்பெயர் தமிழரின் தொடர்பைப் பேணி அவர்களுடன் நல்லதொரு உறவை வளர்க்கும் எனவும் அறிவித்தார். ஆனால் தமிழர் அரசியல் நோக்கர்கள் அரசின் இந்த நடவடிக்கையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள். அரசாங்கத்தின் சூழ்ச்சி என்னவென்றால் யாழ் பிரதேசத்தை வர்த்தக மையமாக அறிவிப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர் தங்களது பணத்தை யாழில் முதலிடுவார்களென்றும் பின்னர் அந்தப் பணத்தை அரசாங்கம் தமது பிற சுய வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமென்றும் அத்துடன் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை தமது வெற்றிக்கு இந்த நடவடிக்கையை சாதகமாக்கிக் கொள்ளலாமென்றும் நப்பாசையுடன் களம் இறங்கியிருப்பதாகவும் தமிழர் அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அத்துடன் சிங்கள இனவெறி அரசு புலம்பெயர் தமிழருக்குள் ஊடுருவி பல நாசகார வேலைத்திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் மனங்களில் உள்ள தமிழ் ஈழ விடுதலைக் கனலை அணைத்து விடலாமென்றும் இதற்கு இப்படியான காரியாலயங்களை நிறுவி சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமிழரின் மனங்களை வென்று வெளிநாடுகளில் வதியும் ஈழத்தமிழரின் செயற்பாடுகளை சிதைக்கலாமென்ற மமதையுடன் களம் இறங்கியிருக்கின்றார்கள் போலும். எதற்காக வெளிவிவகார அமைச்சர் வர்த்தகத்தை பற்றி வக்காளத்து? வெளிவிவகார அமைச்சர் தனது இலாக்காவை விட ஏன் மற்றதொரு இலாக்காவான வர்த்தகத்தை பற்றி பேசியுள்ளார் என்று பல நோக்கர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். அதாவது வெளிவிகார உதவிக் காரியாலயம் ஒன்றை யாழில் தொடங்குவதற்கு ரோகித்தவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் வர்த்தகத்தைப் பற்றி பேசுவதற்கோ செயல் நடவடிக்கையை அறிவிப்பதற்கோ அவருக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருந்தும் யாழில் வர்த்தக மேம்பாட்டை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென அறிவித்திருப்பதன் நோக்கம் புலம்பெயர் தமிழருக்குள் தனது அமைச்சின் செல்வாக்கை பிரயோகிக்க முனைந்திருக்கின்றார் என்பது மட்டும் தெட்டத்தெளிவாக தெரிகின்றது. சிறிலங்கா அரசாங்கம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுகொண்டுள்ளது என்பது எல்லோரும் நன்கு அறிவார்கள். இதில் இருந்து மீளுவதற்கு பல நடவடிக்கைகளை செய்யவேண்டியுள்ளது. மிக முக்கியமானதொன்று என்னவென்றால் தமிழினத்தை தமது தலைமையின் கீழ் கொண்டுவந்து உலக நாடுகளுக்கு தமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அறியப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நட்பை சம்பாதிக்கலாமென்றும் பின்னர் பல கோடிக்கணக்கில் பணத்தை கடனாகவோ நன்கொடையாகவோ பெற்று தமது செல்வாக்கை நிலைநிறுத்தி பாராளுமன்ற தேர்தலிலும் தாம் வெற்றிபெற்று அரச நாற்காலியைத் தக்கவைத்து ஆட்சி புரியலாமென்ற முனைப்புடன் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதின் ஒரு வடிவமே இந்தப் பொருண்மிய அபிவிருத்தி நாடகம். உலக நாடுகள் பல சிங்கள அரச பயங்கரவாத ஆட்சியை வெறுத்தார்கள் என்றால் அது மிகையாகாது காரணம் மகிந்த அரசு தமிழருக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள். ஏன் ஐரோப்பிய ஒன்றியம் கூட பொருட்களுக்கான வரிச்சலுகையை நிறுத்தி தமது ஆட்சேபனையைக் காண்பித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை பல முனைகளில் இருந்து மகிந்த எதிர்கொண்டார். இருந்தும், அவர்களை அவமதித்து தனது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக இந்த நூற்றாண்டில் மனிதகுலமே கண்டிராத அவலத்தை அரங்கேற்றினார். பல வெளிநாடுகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழிகளின் மூலம் தீர்வுகாணும்படி வற்புறுத்தியும் சிங்கள அடக்குமுறை அரசுகள் செவிசாய்க்காமல் விடுதலைப் புலிகளின் மீது பழியை போட்டுவிட்டு பயங்கரவாதத்திற்கான யுத்தம் புரிவதாக மார்தட்டி உலக சமூகத்தை முட்டாள்களாக்கினார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆயுத முனையிலான தற்காப்பு யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் இந்த உலக சமுகத்தின் கண்மீது ஈழத்தமிழரின் போராட்டம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தில் எவ்வாறு புலிகள் தமது கொள்கையில் திடமாக இருந்து பின்னர் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களின் பாதுகாப்புக்காகத் தமது ஆயுதத்தை மௌனிக்க செய்ததானது நிச்சயம் பல வெளிநாடுகளின் நற்பெயரை பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது. இருந்தும் என்ன பலன்? சிங்கள ஆட்சி தமது இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்களை தொடந்தும் செய்துகொண்டுள்ளார்கள். இதற்கான களமே யாழில் நிறுவப்பட இருக்கும் வெளிவிகார அமைச்சின் உதவி காரியாலயம். தமிழ் இனத்தையே அழித்து முழுத் தீவையும் சிங்கள பௌத்த நாடாக கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருக்கும் மகிந்தவிடம் எப்படி நாம் எமக்கு சார்பாய் செயலாற்றுவார் என்று நம்புவது. இந்த நடவடிக்கைகளுக்கு சோரம் போகும் தமிழர்களும் நிச்சயம் தமிழர் துரோக கும்பல் வழிப்பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பது தான் உண்மை. வவுனியா வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 80,000 மக்கள் யாழ் கொண்டு செல்லப்பட்டு இன்றும் அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் தமது உறவினர் வீடுகளில் இருக்கின்றார்கள், மற்றவர்கள் வெளி நிலங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் முகாம்களில் இருந்து விடுவிக்கும்போது அரசாங்கம் கூறியது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது வாழ்வை மீழ ஆரம்பிக்க பணம் கொடுப்பதாக, ஆனால் இன்று வரை அரசாங்கம் ஒரு சதம் காசு கூட கொடுக்கவில்லை. ஆனால் உலக நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் தாம் இம்மக்களுக்கு பணம் கொடுப்பதாக. ஆக இதிலிருந்து தெரிகிறது இந்த இனவெறி சிங்கள அரசாங்கம் எப்படி தமிழரின் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை காட்டுவார்களென்று. புலம்பெயர் தமிழர் சிங்கள சதி வலையில் சிக்குவார்களா? யாழ்ப்பாணத்தில் வதியும் ஈழத்தமிழரில் பலர் தங்களுக்குள் நடக்கும் சதிவலைகளை கண்டும் காணாதவர்களாக இருக்கின்றார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. தமது இரத்த சொந்தங்கள் ஏதோ வெளிநாடுகளில் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் என்ற மாயையில் பல ஊதாரித்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உண்மை. அவர்கள் தங்கள் சொந்தங்கள் கடும் குளிரிலும் பலர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்து தமது குடும்பத்துடன் சில மணி நேரத்தையாவது கழிக்காது கடினமாய் உழைத்து பணத்தை தமது சொந்தங்களுக்கு அனுப்ப இவர்களோ பொறுப்பற்று செயலாற்றுகின்றார்கள் என்பது உண்மை. "எருமை ஈண முன் நெய்யுக்கு விலை பேசியது" என்ற பழ மொழிக்கு ஏற்ப தாயகத்தில் வாழும் தமிழர் பல வேலைகளில் ஈடுபடுகின்றார்கள். இந்திய இராணுவம் அழித்துவிட்டுப் போன பின் சில மாதங்களில் தமது கட்டடங்களை நிர்மாணித்து செயல்பட, பின்னர் சிங்களவன் வந்து அதை அழித்து விட, பின் மீள கட்ட அவைகள் பின்னர் எப்போது அழியும் என்று தெரியுமுன்னரே தமிழரின் கெட்ட நடவடிக்கைகளில் ஒன்றான அதாவது ஒருவர் செய்யும் எந்தவொரு காரியத்துக்கும் மேலாக தனது இயலாமைக்கு எட்டாத நடவடிக்கையில் இறங்கி தன்னையும் அழித்து மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருந்து தமிழரின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பது போன்று இந்த சிங்கள அரசின் அறிவிப்புகளுக்கு நிச்சயம் தாயகத்தில் நிற்கும் சிங்கள ஆக்கிரமிப்பு ஆயுத படைகள் தமிழர்களின் ஆதரவை சில சலுகைகளின் ஊடாக அல்லது ஆயுதமுனையில் தம் பக்கம் இழுத்து வெளிநாடுகளில் வதியும் தமிழரை தம் வசம் கொண்டுவரலாம் என்று கணக்கு போட்டு செயலாற்றிக் கொண்டுள்ளார்கள். இதற்கு புலம்பெயர் தமிழர் தமது ஆதரவை நல்கி தாம் இன்று வரை தாயக விடுதலைக்காக உழைத்த உழைப்பையும் கனவையும் ஈடு வைப்பார்களா என்பது தான் நமது மனங்களில் எழும் கேள்வி. புலம்பெயர் தமிழர் பல வேற்று இன மக்களுடன் பழகி தமது நோக்கங்களை ஒரு சிறு வட்டத்துக்குள் வைத்திருக்காமல் இன்று பரந்த மன ஓட்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது. ஆனால் அவர்கள் சிங்கள அரசாங்கத்தின் சதி வலையில் நிச்சயம் விழ மாட்டார்கள் என்று நம்பினாலும் சிலர் தமது தாயகத்தை வளப்படுத்துவதாக எண்ணி சிங்கள சூழ்ச்சி வலையில் சிக்கி தமிழினத்தை அடகுவைத்து அவர்களின் விடுதலையை முற்றிலுமாக இல்லாதொழிக்க உறுதுணையாக இருந்து விடக்கூடாது என்பது தான் நம் அனைவரினதும் அவா. சிங்கள ஆட்சியாளர்களின் தந்திரோபாயங்களை முறியடிக்க வேண்டுமாயின் நிச்சயம் அது புலம்பெயர் தமிழரின் கைவசம் தான் உள்ளது. காரணம் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் சிங்கள அரசையே கடுகலங்க வைத்தது. ஏன் அவர்களின் நடவடிக்கைகள் இன்றும் ஒரு சின்ம சொர்ப்பனமாகவே சிங்கள அரசினால் பார்க்கப்படுகின்றது. மகிந்த மற்றும் அவரின் சகோதரர்கள் செய்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் ஒரு நாள் வஞ்சிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். இவர்களைக் கூண்டில் ஏற்றும் பலம் இந்த புலம்பெயர் தமிழர் வசம் தான் உள்ளது. ஆகவே மகிந்த தனது ஆட்சியில் தமிழரை தன் வசம் கொண்டு வர என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டார். மகிந்தவிடம் புரையோடிப் போயிருக்கும் கவலை என்னவென்றால் ஜனாதிபதியாக வந்தால் போதுமானதல்ல. வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் தான் வெற்றி கொண்டு தான் விரும்பியது போன்று வேலைத் திட்டங்களை கொண்டு வந்து தனது அரசியல் இருப்பை தக்கவைப்பது தான் அவரின் அவா. தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி எப்போது பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதென்று ஆலோசித்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9ம் திகதி தேர்தலை வைக்க தீர்மானித்துள்ளார்கள். பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டதாகக் கூறி தேர்தலை அறிவித்து வெற்றியும் ஈட்டிய கையுடன் பாராளுமன்றத்திற்கான தேர்தலையும் வரும் ஏப்ரல் மாதத்தில் நடாத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் மகிந்த காய் நகர்த்தலை மேற்கொண்டு உள்ளார். ஈ.பி.டி.பியின் திடீர் பல்டி நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கில் பெரும்பான்மையான வாக்குகள் மகிந்தவிற்கு கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்த சமூக சேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஒரு நாடகத்தையே யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றினார் அதாவது இவரின் பதவி விலகலை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி சமூக அமைப்புகள் இணைந்து என்ற பொருள்பட இவரின் அடியாட்கள் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த ஹர்த்தால் படுதோல்வியில் முடிய 24 மணி நேரத்திற்குள் ஒரு அறிக்கை விட்டார் டக்ளஸ். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜினாமா செய்யத் தீர்மானித்தனர். இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். "மகிந்தவும் ரோகித்த போகொல்லாகமயை திடீரென யாழ்ப்பாணம் அனுப்பி ஒரு கல்லில் பல மாங்காய் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு அடியில் பல திட்டங்களுடன் யாழ் சென்று பல அறிவிப்புக்களுடன் டக்ளஸ்சையும் சந்தித்து தம்மோடு சேர்ந்து இயங்குமாறு வேண்டிக்கொண்டார். டக்ளஸ் மீண்டும் தனது வழமையான பல்டியடிக்கும் தொனியில் இன்னொரு அறிக்கை விட்டார். அதில் அவர் தனது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு, திட்டமிட்டவாறு மாநகர சபையின் அனைத்து ஆசனங்களையும் கைப்பற்றமுடியாமல் போனது. இதனையடுத்து, அரச தலைவர் தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் சென்ற மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச அமைச்சர் டக்ளசின் ஈ.பி.டி.பியுடன் சேர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கான பல வியூகங்களை வகுத்தார். ஈற்றில், அரச கூட்டணியின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் மகிந்த படுதோல்வியடைந்தார். இந்நிலையில், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சிச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு யாழ்ப்பாணத்தில் பெரு வெற்றியடையப்போவதாக அவர் சூளுரைத்திருக்கிறார். இதேவேளை, ஈ.பி.டி.பி. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பெப்ரவரி 5, 2010 - இலங்கையின் சுதந்திர தினத்திற்கு மறுநாள் - நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் வட்டாரத்தினால் நம்பகரமாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எது என்னவென்றாலும் ஒட்டுக்குழுக்கள் எப்பொழுதும் ஓட்டிக்கொண்டேயிருப்பார்கள், ஆனால் சிங்கள ஆட்சியாளர் புலம்பெயர் தமிழரின் மீது ஒரு பகிரங்கப்படுத்தாத ஒரு யுத்த களமுனையை திறக்க தீவிரமாக முனைப்பெடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இதன் மூலம் எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தாயக கனவை தகர்த்தெறிந்து அவர்களின் ஒற்றுமையை உலக மட்டத்தில் சிதைத்து அவர்களுக்குள் உட்பூசல்களை ஏற்ப்படுத்தி தமிழ் இனமே தரம் கெட்ட இனமாக வர்ணிக்கவைத்து உலக சமூகத்திடம் இருந்து பிரித்து சிங்கள தேசம் உலக சமூகத்திடம் நற்பெயரைப் பெற்று மகிந்த அவர் தன் சகோதரர்களை மனித உரிமை மீறல் குற்றங்களில் இருந்து விடுதலை பெற முழு மூச்சுடன் இறங்கியிருப்பதன் ஒரு செயலே வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமயின் யாழ் பயணமும் யாழ்ப்பாணத்தை வர்த்தக மையமாக உருவாக்குவதென்பதும், அதன் நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக வெளிவிவகார உதவி காரியாலயம் யாழில் நிறுவுவதென்பதும்.

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது. பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை. தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க 55 நாடுகள் உறுதிமொழி: ஐ.நா.

உலக சுற்றுச்சூழல் மாசுபாடை தடுப்பதற்காக 2050 ஆண்டுக்குள் 78 சதவீத கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதாக 55 நாடுகள் ஐ.நாவிற்கு உறுதிமொழி அளித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் உலகச் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் பெரும் அங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா 17 சதவீத கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளது. மீண்டும் அந்த நாடுகள் உறுதியளித்தது. கோபன்ஹேகன் மாநாட்டில் உலக தலைவர்களுக்கிடையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் இந்த உறுதி மொழி எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது

அன்பார்ந்த சிலோன் தமிழ் மக்க(ர்க)ளே

..என்னாடா இது ஈழத்தமிர் எண்டும் எழுதாமல் சிறீலங்கா தமிழர் எண்டும் எழுதாமல் சிலோன் தமிழர் எண்டு எழுதிறனெண்டு யோசிக்க வேண்டாம்..அது ஏனெண்டால்..சிறீ லங்கா என்கிற சேத்தில் இன்னமும் வாழுகின்ற முட்டாள் தமிழர்கள் நீங்கள்..வெளிநாடுகளில் அந்தந்ந நாட்டு குடியுரிமையையோ அகதி அந்தஸ்த்தையோ வாங்கி வைத்துவிட்டு ஈழத்தமிழர் என்று பெருமை பேசுகிறவர்கள் நாங்கள்..எனவே உங்களை நான் சிறீலங்கா தமிழர் என்று அழைத்தால் நான் இங்கு துரோகியாகி விடுவேன். உயிரிற்கு உத்தரவாம் உண்டு .அதே போல நீங்கள் உங்களை ஈழத் தமிழர் என்றழைத்தால் உங்கள் உயிரிற்கு உத்தரவாம் இருக்குமா என்பது சந்தேகமே. .எனவேதான் பொதுவாக ஒரு காலத்தில் வெள்ளைக்காரன் ஆட்சியிலும்..பின்னர் 70கள் வரை சிலோன் தமிழர் என்று சொல்லிக் கொண்டு வெள்ளைக்காரன் காலை தடவி கல்வியை பெற்றுக்கொண்டு சிங்களவனை மடையன் என்றும் ..மட்டக்களப்பாரை மந்திரம் செய்யிறவங்கள் எண்டும்.வன்னி மக்களை காட்டான்கள் என்றும்.. மலையகத்தவரை வடக்கத்தையாணென்டும்.. அதே நேரம் உள்ஊரிலே பல்வேறு சாதிகளின் பிரிவினைகளிற்குள்ளும் என்னை முதன்மையானவனாக காட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் ஒரு புத்தி ஜீவியான யாழ்ப்பாணத்தான் நான் சொல்வது என்னவெனில்.. பிழைக்கத் தெரியாத புறம்போக்குகள்தான் இனியும் வன்னியில் வாழ்வார்கள்..முப்பத்தைஞ்சு லச்சத்துக்கும் மேலான தமிழ்மக்களிற்கு வன்னியிலையிருந்த வெறும் மூண்டு லச்சம் மக்கள் உங்களை பலி குடுத்தாவது தமிழீழத்தை எடுத்திடலாமெண்டு கனவுகண்டம்..அந்த கனவை நீங்கள் கலைச்சுப் போட்டியள்..நாங்கள் உங்களிற்கு என்ன குறை விட்டம்..ஆனையிறவு விழுந்த கையோடையே 50 யுரோவை இயக்கத்திற்கு குடுத்துப் போட்டு அரைப் போத்தல் வி்ஸ்கியை யையும் அடிச்சுப்போட்டு விசிலடிச்து மகிழ்ந்தனாங்கள்..அடுத்ததாய்யாழ்ப்பாணமும் பிடிக்கவேணுமெண்டுதானே காசை காசெண்டும் பாராமல் ஆயிரம் இண்டாயிரம் எண்டு வட்டிக்கும் கிரெடிட்டும் எடுத்து குடுத்தனாங்கள்...இப்ப அந்த வட்டி கட்டேலாமல் நாங்கள் ஓடித்திரியிறம்..ஆனால் அதை வாங்கினவை AUDI காரிலை ஓடித்திரியினம் எண்டிறது வேறை கதை...இப்பிடியெல்லாம் செய்து போட்டு யாழ்ப்பாணம் விழேக்குள்ளை அடிக்கிறதுக்கெண்டு விலை கூடின சிவாஸ்..விஸ்க்கியையும் வாங்கி வைச்சிட்டு..கிளாலியிலை அடி தொடங்கேக்குள்ளை கிளாசை கழுவினால் கெக்குவில் கோண்டாவில் தாண்டேக்குள்ளை கோழிப் பொரியல் ..பலாலி விழேக்குள்ளை பாதிப் போத்தல் முடிஞ்சிடும்..காரைநகர் கடற்படைத்தளம் அடிக்கேக்குள்ளை கோமாவுக்கு போனால் காத்தாலை எழும்பி தலையிடியோடை தமிழ் தேசிய ஊடகங்களை பாத்தால் யாழ்ப்பாணம் விழுந்திட்டுது தமிழீழம் கிடைச்சிட்டுதெண்டு ( எங்களிற்கு யாழ்ப்பாணம் மட்டும்தானே தமிழீழம்)செய்தியள் வருமெண்டு நாங்கள் போட்டு வைச்சிருந்த திட்டமெல்லாம் அடிச்ச தண்ணி மாதிரியே முறிஞ்சு போச்சுது..ஆனாலும் என்ன செய்ய வாங்கி வைச்சிருந்த விலை கூடின சிவாசை முள்ளி வாய்க்கால் முடிஞ்ச கவலையை நினைச்சு அடிச்சாச்சு..வாங்கின போத்தல் வீண் போகேல்லை.. இப்பிடியே எங்களை நீங்கள் பேக்காட்டி போட்டீங்கள்..பரவாயில்லை ஆனால் இனியாவது நீங்கள் எங்கடை ஆக்கினையளிற்கு ஆளாகாமல் நிம்மதியாய் இருந்கிறதெண்டால் என்னாலை முடிஞ்ச சில யோசனையளை மட்டும்தான் சொல்ல முடியும்.. ஆலோசனை 1) ஒட்டுமொத்தமாக நீங்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு அகதியாய் வந்து குடியேறுங்கோ.பிரச்சனை தீர்ந்திடும்..அதுக்கு உங்களிட்டை பணவசதி இருக்காது எனவே ஆலோசனை 2) நீங்கள் திரும்பவும் வட்டுக் கோட்டையிலையோ அல்லது அதுக்கடுத்த அராலியிலையோ ஒரு மேடையை போட்டு இரண்டு தீர்மானங்களை நிறைவேத்தலாம்.. தீர்மாம் 1) புலம்பெயர் தமிழ் மக்களே எங்கள் எதிர் காலத்தை நாங்களே தீர்மானிக்கிறம்..எங்கடை வாழ்க்கையை நாங்களே பாக்கிறம்..எங்களிற்கு எது தேவையோ அதை நாங்களே தீர்மானிக்கிறம் எனவே நீங்கள் பொத்திக்கொண்டிருங்கோ..முடிஞ்சால் உதவி செய்யுங்கோ உபத்திரவம் தராதையுங்கோ தீர்மானம் 2) புலம் பெயர் தமிழ் மக்களே வட்டுக் கோட்டை தீர்மானத்துக்கு வாக்கெடுப்பு நடத்தாமல் புலம்பெயர் தமிழர்கள் அனைத்து நாடுகளிலிருந்தும் அனைத்து தமிழர்களும் அந்ததந்த நாட்டு குடியுமை வைச்சிருக்கிறவை உட்பட அனைவருமே உடனடியாக ஊருக்கு திரும்புங்கோ அல்லது திருப்பியனுப்பும்படி அந்தந்த நாடுகளை கேட்டுக்கொள்கிறோம். எல்லாரும் வாருங்கள் இஞ்சையிருந்து போராடுவம் என்று இரண்டு தீர்மானத்தை நிறைவேத்துங்கோ …. .கப் சிப்..சத்தம் வாராது அப்பிடியும் சின்ன சத்தம் ஏதாவது வந்தால் நீங்கள் நிறைவேத்தின தீர்மானத்தை வடக்கு கிழக்கு எல்லா ஊரிலையும் மறுவாக்கெடுப்பு நடந்துங்கோ..வாக்கெடுப்பிலை எத்தினை ஓட்டு விழுகிறதெண்டெல்லாம் கவலை வேண்டாம்..வாக்கெடுப்பிலை 99.9 வீத வாக்குகளால் வெற்றி எண்டொரு அறிக்கையையும் விட்டுப்பாருங்கோ..அதுக்கு பிறகு நாங்கள் உங்களைப்பற்றி வாயே திறக்கமாட்டம்...அதே நேரம் இஞ்சை சும்மாயும் இருக்கமாட்டம்..இருக்கிறார் எண்டும் இல்லையெண்டும் கட்டுரையள் வந்துகொண்டிருந்தாலும்..அவர் இருந்த காலத்திலை அவரை முருகன் எண்டனாங்கள் இப்ப அவரை யேசுநாதராக்கிப் போட்டம்...இனி அல்லே லூயா என்றபடி அதைவைச்சு பாட்டெழுதி சிடி அடிச்சசு விக்கிற திட்டத்திலை இருக்கிறம்..பல்லாயிரம் சிடி வித்தோ..கரப்பட்டு கலண்டர் வித்தோ புலத்திலை தேசியத்தை வாடவிடாமல் வளர்த்துக்கொண்டுதான்இருப்பம்.. கடிதத்தை முடிக்க முதல் கடைசியாய் ஒரு விசயம்.. எங்களுக்கு முல்லைத் தீவு முத்தையன் கட்டிலை 3 ஏக்கர் காணி இருந்தது (சிறிமா காலத்திலை கள்ள உறுதி முடிச்சதுதான்) அதுகளின்ரை எல்லை கல் இப்ப இருக்கோ இல்லையோ தெரியாது..அதை பாக்கிறதுக்கு இந்த சமர் லீவுக்கு சிறீலங்கா வாறதுக்கு ஏயார் லங்காவிலை றிக்கெற்போட்டு வைச்சிருக்கிறன்..ஒரு கஸ்ரமும் இல்லாமல் கட்டுநாயக்காவை விட்டு வெளியேனால் கதிர் காமகந்தனிட்டை போய் மொட்டையடிக்கிறதாய் வேண்டுதல் வைச்சிருக்கிறன்..மொட்டையடிக்கிறதுக்கு என்ரை மண்டையிலை மயிர் இல்லை அதாலை எனக்கு பதிலா உங்கை யாராவது மொட்டையடிக்க சம்மதித்தால் அவரிற்கு 50 தோ 100 அவரின் மண்டையின் அளவைப்பார்த்துத் தராலம்..

நாங்கள் ஒதுங்கியிருந்தா நாட்டை காக்குறது ஆர்?

கதிர்கள் அறுத்த வயல்வெளி,தேங்கி நிற்கும் மழைதுளிகளில் தெரிகிறது வானம். நாரைகள் நடைபயில காளைகள் வீறு நடைபோட்டன. கலப்பையும் கையுமாக வயலில் பிரசாத். தம்பி டேய் .. உன்ட தங்கச்சி பெரியபிள்ளையாயிட்டாளாம். வரம்பில் நின்று பசுபதி உரத்து சொன்னார். அப்பிடியா ..? பிரசாத்துக்கு மகிழ்ச்சி. டே...சிவலை நீதான் குழப்படி. நான் வரும் வரை இதிலே நிற்கவேணும். என்ன கறுப்பா பார்க்கிறாய்? நீ நல்ல பெடியன். அண்ண போயிட்டு வாறன். இரு மாடுகளையும் பார்த்து சொல்லிவிட்டு வீடு செல்கிறான். தந்தை குடிகாரன். தாய் இல்லை.ஆனாலும் அம்மாவி்ன் இடத்தை நிரப்ப அங்கே பலர் இருந்தனர். மல்லாவி மலர் அக்கா. மாங்குளம் மணியம் சித்தி,அக்கராயன் அன்னம் ஆச்சி,வன்னேரி வதனம் மாமி, இவர்கள் எல்லோரும் இடம்பெயர்ந்து வந்தவர்கள். பிரசாத்தின் காணியில் குடும்பம் குடும்பமாக கொட்டில் அமைத்து குடி இருக்கின்றனர். பிரசாத் வருகிறான். வேப்பம் குழை வாசலில். தந்தை கள்ளுப்போத்தலோடு முற்றத்தில். அங்கு மாறி இங்கு மாறி வதனம் மாமி ஓடித்திரிகிறாள். கால்முகம் கழுவி வாசற்படி மிதிக்கிறான். பொங்கல் பானை அடுப்பில். அடுப்படியில் அன்னம் ஆச்சி. ஓலைப்பாயில் ஒதுக்குப்புறமாக தங்கச்சி. வெள்ளை துணியால் முக்காடு. பக்கத்தில் வருகிறான். வெற்றிலை பாக்கு நெல்லுடன் ஆயிரத்து ஒரு ரூபா அண்ணனின் கைவிசேடம். தலைதொட்டு ஆசிர்வதித்தவன் சுவரில் மாட்டப்பட்டிருந்த தாயின் படத்தை பார்க்கிறான். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா போல வருமா? நெஞ்சம் நெகிழ்கிறது. * * * பிரசாத் நில்லு நானும் வாறன். வழி மறித்த பசுபதி ஏறுகிறார் ஈருளியில். அவன் வேகமாக ஓட்டத்தொடங்கினான். கள்ளுத்தவறணை கடந்தது தம்பி..தம்பி..நிறுத்தடா.உனக்கு ஞாபகம் வரும் எண்டு நினைச்சன் வர இல்ல ஈருளி நின்றது. பிடரி சொரிந்தவாறு பிரசாத்தின் சட்டைபையை பார்க்கிறார். அண்ண..இதுதான் வேண்டாம் எண்டுறது. சாமத்திய வீட்டை சாட்டி வாங்கினியள்.அந்த கொண்டாட்டமும் முடிஞ்சுது. தம்பி..தம்பி என்னடா..?பதினொண்டுதானே கழிஞ்சது முப்பத்தொண்டு முடிய இல்லைதானே.அதுவரைக்கும் என்னோட சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளுமன். ச்ச..உயிரை வாங்கிறியள் அண்ண...இந்தாங்கோ நூறு ரூபா. எடுத்து அவரிடம் கொடுத்தான். சரி கண்ணா போயிட்டு வா செல்லம். சொன்ன பசுபதி தவறணை பக்கம் திரும்புகிறார்.பிரசாத்தின் ஈருருளி சூரியின் ஈருருளி திருத்தும் கடையை நோக்குகிறது.அங்கே அவர் துருப்பிடித்த சில்லுக்கு மண்ணெண்னை தடவிக்கொண்டிருந்தார். பிரசாத் இறங்காமல் வீதியில் நின்ற படியே என்ட சயிக்கிளும் கழவி பூட்டவேணும். எப்ப கொண்டு வரலாம். சூரிக்கு கதை சொன்னபடி அவரது வீட்டையும் காணியையும் அலசுகிறான். சோபா விழுந்த தென்னோலைகளை அடுக்கி கொண்ட நின்றாள். ஈருருளி மணிச்சத்தம். நிமிர்ந்து பார்க்கிறாள்.நேற்று குடுத்து விட்ட கடிதம் கிடைச்சதே..?பிரசாத் கைகளால் பேசினான். அவளுக்கு விளங்கவில்லை. அரை லூசு பொழுதுபட மாட்டுபட்டியடிக்கு வாறன். வா கதைப்பம். அவள் மீண்டும் என்ன..? என்று கையால் கேட்டாள். அந்த வேலிக்கரைக்கு போ.. நான் அதால வாறன். அவனது கைகளும் வாயும் மெளனமாக போராடியதை சூரி கண்டு விட்டார். என்ன தம்பி உங்க ஆரோட கதைக்கிறீர். அது வந்து .... தென்னையில் சோமு. பசுபதி அண்ண கள்ளுக்கு வாறதா சொல்லிவிட சொன்னவர் அதுதான்...பிரசாத் மழுப்பினான். அப்ப நாளைக்கு சையிக்கிள் கொண்டு வாறன். ஈருருளி இறக்கை விரி்த்தது. * * * அண்ண பயிரை பார்த்தியளே. சும்மா கலகலக்குது.வளர்பிறைக்கு தங்கச்சிமார் தலைகுனிவினம். பிரசாத் தனது வயலைப்பார்த்து பெருமிதம் அடைந்தான். பசுபதி விடுவாரா என்ன ? அட போடா. என்ட பெடிச்சியள்தான் முதல் வெட்கப்படுவாள்கள்...அவரும் அதற்கு மேலாக. இருவரும் பேசிக்கொள்ள இடையில் நின்ற காளைகள் இரண்டும் தலையசைத்து ஆமா போட்டன. சிவலை ஒற்றை காலை தூக்கி அடிப்பதும் பிரசாத்தை பார்ப்பதுமாக நின்றது. சரி கதையை முடிப்பம். சிவலைக்கு பொறுமை இல்லை. கிடுகும் ஏத்தவேணும். பிரசாத் வண்டில் ஏறத்தயாராகினான். ஓமடா தம்பி நானும் கூட வாறன் பசுபதியும் ஏறிக்கொண்டார். காளைகள் இரண்டும் கால்களை எட்டி எட்டி வைத்தன. சலங்கை சத்தம் சரமாரி. பிரதான வீதியில் வண்டில ஏறுகிறது. தீர்த்த மாட செல்வது போல திரள்திரளாக மக்கள். ஆடு மாடுகளும் தமது சொந்த பந்தங்களுடன். மாட்டு வண்டில்கள்,ஈருருளிகள் ஆமை வேகத்தில் ஊர்ந்தன. இடையிடையே பாரவூர்திகள் உறுமின. பக்தர்கள்தான் நேர்த்திக்கடனுக்கு தூக்கு காவடி எடுப்பார்கள்.கோழிகளுமா ? பாவம் உழவு இயந்திரங்களில் தலை கீழாக தூங்கியபடி கூடவே அதன் கூடுகளும்.கோணாவில்,பூனகரி,முட்கொம்பன் எல்லாமே இடப்பெயர்வு. வானத்தில் வண்டு சத்தம். கிபிர் வருவதற்கான அறிகுறி. படுபாவி இங்கையும் இருக்க விடான் போல. பிரசாத் வண்டிலை அந்த மரத்தின் கீழ் விடுகிறான். சிங்கள விமான படையின் ஆளில்லா வேவு விமானத்தை வன்னி மக்கள் வண்டு என்றுதான் அழைப்பார்கள். அதன் ஒலி கிட்டத்தட்ட கருவண்டின் சத்தம் மாதிரி. அது வந்து ஜந்து நிமிடம் கூட ஆகவில்லை. வந்தது கிபிர். அந்த இடம் அல்லோலகல்லோலம். அண்ண இறங்கி ஓடுங்கோ.. சொன்னபடி குதிக்கிறான்.அதற்கு முன்பே பசுபதி ஆளில்லை. * * * இராணுவம் ஊடுருவி முறிகண்டி காட்டில் நிலை கொண்டுவிட்டது. அயல் கிராமங்களில் பரபரப்பு. சூரிவீடும் சும்மாவா இருக்கும். இனி இங்க இருக்கிறது கஸ்ரம். அடுத்தடுத்து கிபிர் அடி. ஆட்டிலறியும் வேலியால் வரவா. கூரையில் வரவா என்பது போல அங்கையும் இங்கையும் விழுந்து வெடிக்குது.மூட்டை முடிச்சுக்கள கட்டி வையுங்கோ. சொன்ன சூரி தன் வழுக்கல் தலையை தடவுகிறார். இதற்கிடையில்" வீட்டுக்கொரு வீரர் நாட்டை காக்க முன் வாருங்கள்."தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சேர்ப்பு மையத்தில் இருந்து ஓர் கடிதம். மாவீரர், போராளி அல்லாத குடும்பங்கள் அனைத்துக்கும் அனுப்பப்பட்டிருந்தது. சூரி வீட்டில் மூத்த பிள்ளை சோபா. வயது பத்தொன்பது அவளுக்கு கீழே நான்கு பேர். போகவேண்டியவள் சோபாதான். பொழுதுபட்டால் வாசற்படி தாண்டாதவள் எப்படி எதிரியை இரவில் கண்காணிப்பது. சோளகம் அடித்தால் அவ்வளவுதான் சோளம் பயிர்போல் உடம்பு. கடிதத்தை கண்டவுடனே காற்றில் படபடக்கும் கடதாசியானாள். சூரி யோசிக்கிறார். நல்ல விசயந்தான் எத்தின பிள்ளைகள் தாமா முன்வந்து போராடி விதையாயிட்டுதுகள் எத்தின பிள்ளைகள் களத்தில நிக்குதுகள். ஆட்கள் இல்லாதபடியால்தானே கேட்கிறாங்கள். சூரியின் மனம் உருகியது. சிந்தித்தார் உதித்தது உபாயம். * * * வீழ்ந்து வெடித்த குண்டு போராளிகளின் பயிற்சி முகாம் சுக்குநூறு. பொதுமக்களும் சிலர் கொல்லப்பட்டதோடு காயமும் அடைந்தனர். விமானம் சென்று விட்டது. விழுந்தும் உருண்டும் புரண்டும் கிடந்த மக்கள் தலை நிமிர்ந்து நின்றனர். வாய்க்காலுக்குள் .அமிழ்ந்திருந்த பிரசாத் எழுந்து வருகிறான். தலை முதல் கால்வரை எல்லாமே ஈரம் வண்டிலை பார்க்கிறான். கறுப்பன் மரத்திற்கு கீழே ஒதுங்கியபடி அவனை கண்டு கத்தியது. சிவலையை காணவே இல்லை. பயத்தில் எங்கோ ஓடிவிட்டது. அங்கும் இங்கும் தேடுகிறான். பாலத்துக்குள் இருந்து பசுபதி சாரத்தை சிரைத்தவாறு முழங்கைகளில் காயம். கிபிர் தாக்குதலில் அல்ல. பாலத்தின் குழாய் உரசி. பிரசாத்துக்கு சிரிப்பு உடைந்த குடத்தில் இருந்து வரும் நீர் போல. கையால் வாயை மூடுகிறான். எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினியள் காணாது போடா..மடப்பயலே..இறங்கடா வண்டிலால எண்டு சொல்லியிட்டுதான் பாய்ஞ்சனான். கிபிர் சத்தம். அதைவிட சனத்தின்ர கூக்குரல்கள். அதால உனக்கு கேட்கயில்ல. இருவரும் பேசுகின்றனர். இதனிடையே நெரிசல் நிறைந்த அவ்விடத்தில் ஒரு பெண்ணின் அலறல். அங்கு நின்றவர்கள் திரண்டனர். அது பொம்பிளையள் சாமாச்சாரம்.ஆண்கள் விலகுகின்றனர். பிரசவம் நடைபெறுகிறது. கூடி நின்ற பெண்கள் தாவணிகளால் மறைக்கின்றனர். அந்த பிள்ளைக்கும் வீதியில் பிறக்கின்ற தலை எழுத்தது. இனிமேல் உள்ள காலம் என்னென்னவெல்லாம் நடக்கப்போகுதோ ? பசுபதியர் நெஞ்சை தடவுகிறார். களைத்து வந்த சிவலை தான் வந்து விட்டேன் என பிரசாத்தை உரசுகிறது. * * * பகலவன் விடைபெறும் நேரம். மாட்டுப்பட்டியை நோக்கி நாய் குரைத்தது. வீட்டினுள் இருந்த சோபாவின் தாய் வெளியே வருகிறாள். குரைத்த நாய் பட்டிப்பக்கமாக ஓடியது. அவளும் அதுக்கு பின்னால். இந்த மனிசி எதுக்கு வருது. பேசாமல் மாடுகளுக்க மறைவம். பிரசாத் பதுங்குகிறான். நாயோ விடவில்லை அவன் கிட்டே சென்று உரத்து உரத்து குரைத்தது. சோபாவின் தாய் குனிந்து குனிந்து பார்க்கிறாள். ஆள் ஒன்று குந்தியிருப்பதை கண்டு விட்டாள்.இருள் கவிழும் நேரமாகையால் அடையாளம் தெரியவில்லை. மாடுபிடிக்க கள்ளன் வந்திருக்கிறான் ஓடி வாருங்கோ உரத்த குரலில் கணவனையும், பிள்ளைகளையும் அழைத்தாள். ஓடுவதா ? விடுவதா ? பிரசாத்துக்கு இரு மனம். ஓடினால் உண்மையாகவே கள்வனாகிவிடுவன். எல்லாம் அந்த வெட்டுக்கோம்பையாலதான் வாறது. சோபா மேல் கோபம் வந்தது. அங்கே எல்லோரும் கூடி விட்டனர். சூரியின் கையில் பெரியதொரு கிழுவங்கதியால். என்ன கள்ளன் எண்டு நினைச்சிட்டீங்களே..நான் பிரசாத் எங்கட மாடு ஒண்டை காண இல்ல. அதுதான் தேடி வந்தனான். சொன்னவாறு சூரிக்கு பக்கத்தில் வருகிறான். அட நீரே ? நல்ல காலம் கிழுவங்கதியால வாங்கப்பார்த்தீ்ர்.. சரி மாடு நிக்குதே.. சூரி கேட்கிறார். இல்ல..இங்க வராது விட்டால் பெரும்பாலும் கந்தசாமியற்ற பட்டிக்குத்தான் போயிருக்கும். அங்க போய் பார்ப்பம். பிரசாத்தின் பதில். அதுசரி தம்பி...போராளியாக இணையசொல்லி உமக்கும் கடிதம் வந்ததே..? ஓம் கிடைச்சது. போகத்தானே வேணும். நாங்கள் ஒதுங்கியிருந்தால் நாட்டை காக்கிறது ஆர்? அவனுடைய வீர வசனத்தின் முன்னால் சூரியி்ன் வாய் மெளனமானது. கண்ணாடி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சோபாவின் முகம். அவன் பேச்சை கேட்டு கண்கள் உருண்டு புரண்டன. * * * தவில் அடிப்பதுபோல ஊரெங்கும் மக்கள் தம் கூரைகள், வளைகள் கழற்றும் சத்தம். நாதஸ்வர ஓசைக்கும் பஞ்மில்லை. எறிகணைகள் தொடர்ந்து கூவிய வண்ணம் இருந்தன. சந்தைக்கு சென்ற வதனம் மாமி திரும்பி வருகிறாள். கச்சேரி, பள்ளிக்கூடங்கள், நிறுவனங்கள், கடைக்காரர் எல்லாருமே பொருட்கள் ஏத்துறாங்கள்... மாமி அழாத குறையாக. இடப்பெயர்வு என்றால் சும்மாவா? தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான தெரியும். எல்லோர் முகங்களும் மாலை நேர பூக்களாகின.இனியென்ன நாங்களும் வெளிக்கிட வேண்டியதுதான். வதனம் மாமி சுளகு பெட்டிகளை தட்டி அடுக்கினாள். அன்னம் ஆச்சியின் தனித்தேட்டம் ஒரு மூட்டை முடிச்சில் அடங்கியது. மணியம் சித்தப்பா குடும்பம் தடல்புடல்பட்டது. குஞ்சு குருமன்கள் தலையில் ஒவ்வொரு முடிச்சுப்பை. கால் நடையாக உடனே வெளியேறினர். தங்கச்சியை தந்தையின் சையிக்கிளில் அனுப்பி வைத்த பிரசாத் மின்னல் வேகத்தில் செயற்பட்டான். வதனம் மாமியாக்களோடு அன்னம் ஆச்சியும் உழவு இயந்திரத்தில், பிரசாத்துக்கு கையசைத்தனர். பொருட்களால் வண்டில் நிரம்பியது. சிவலைக்கும் கறுப்புக்கும் நிலைமை விளங்கிவிட்டது போல தமக்குரிய இடங்களில் வந்து நின்றன. வருமானம் தரும் தென்னந்தோப்பு, பழங்கள் தரும் மா, பலா, வாழைகள், வீட்டை அழகொளிரச் செய்த மலர்ச்செடிகள் பிரசாத் வெளிக்கிடுவதை கண்டு சோர்வுற்றன. வளர்பிறை பார்த்து தேதி குறித்து அப்பா, அம்மா ஆசையால் கட்டுவித்த வீடு. அவன் தொட்டிலில் ஆடியதும் அதிலேதான். இப்போ வெறுமையாக மனதில் பாரம். கண்களில் ஈரம் பிரசாத் வண்டிலில் ஏறுகிறான். * * * காடு, மேடு, பள்ளம் எதுவும் மிச்சம் இல்லை. வட்டக்கச்சி, தர்மபுரம், விசுவமடு மக்கள் வெள்ளம். மடு தொடங்கி திருவையாறு. புளியங்குளம் இருந்து இயக்கச்சி. இடப்பெயர்வு என்றால் கொல்லைத்தெருவும் எஞ்சுமா? சோபாவின் வீட்டை பிரசாத் கண்டு பிடித்துவிட்டான். புல்வெளியில் மாட்டுப்பட்டி அதுக்கு சற்று தொலைவில் உள்ள கொட்டில்களில் ஒன்று. பக்கத்தில் பசுபதியரின் கொட்டில். மண்வீட்டு வாசம் அறியாதவரும் மழை பெய்தால் ஒழுகும் ஓலை கொட்டில்களில். கீழ்த்திசை அடிவானில் சூரியன். பால் கறக்கும் குடம் இடையில். சோபா பட்டிக்குள் செல்கிறாள். புல்வெளிகளில் பட்டுத் தெறிக்க வெள்ளொளி அவள் அழகை நூறு வீதமாக்கியது. பிரசாத்தை கண்ட அவள், ஆயுதம் தூக்குற போராளி நாட்டை காக்கிற வீரர் ஊரை விட்டே ஓடிவந்திட்டார். கண்ணா ! பார்த்து ரெண்டு கேள்வி கேளடா..சிறிய வெள்ளை கன்றை தடவியபடி சொல்கிறாள். களத்துக்கு போனால் கட்டபொம்மன்தான் முன் வைச்ச அடி பின் வைக்கமாட்டான் . கண்ணா....! அவவுக்கு விளக்கமாக சொல்லு என்றான் பிரசாத். சோபா உள்ளம் பூரிப்படைந்தது. ஆனாலும் தற்போது போர்ச்சூழல் அவன் போராளியானால் தனது நிலை என்னாகும். மனம் சோர்வடைகிறாள். இயக்கத்துக்கு போறது எண்டு முடிவு எடுத்தாச்சா..? போய் ஏதாச்சு..... அவள் மேற்கொண்டு பேசவில்லை. நீ யோசிக்காத நான் போனால் தங்கச்சிக்கு ஆர் ஆறுதல். நிலைமை தெரிஞ்சு இயக்கம் விலக்கழிப்பு கடிதம் தந்திட்டு எண்டாலும் பதினைஞ்சு நாள் பணிக்கு போகவேண்டி வரும். இருவரும் பேசிக்கொண்டிருக்க பசுபதியர் இலக்கு வைக்கிறார். பசுபதியண்ண வாறார் பிறகு சந்திப்பம். அவசரமாக கூறியவன் ஈருருளியை திருப்புகிறான். * * * விசுவமடு பாதுகாப்பு வலயம். மார்கழி திங்களில்(2008) அரசாங்கத்தின் அறிவிப்பு. வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தை அடித்து சென்ற கதை. வட்டக்கச்சி வட்டாரமும் வாலை கிளப்பியது. விசுவமடுவோ பாரந்தாங்காமல் விம்மியது. வாய்க்கால் ஓரங்களும் சதுப்பு நிலங்களும் மக்கள் குடியிருப்புகளாக மாறின. மார்கழி மாதம் மயிர் நனையாத தூரல். அது ஒரு காலம். இந்த மார்கழி வானம் இம்மக்களுக்கு என வாரி இறைத்தது. வெள்ளத்தால் குடிசைகள் அடித்து செல்லப்பட, குழந்தைகள் உருட்டி செல்லப்பட, இளசுகள் பழசுகள் செய்வதறியாது தி்ண்டாடினர். ஓடி வந்த மக்கள் கால் ஆறவில்லை. விசுவமடு நீக்கப்பட்டு உடையார்கட்டு தொடக்கம் தேவி புரம் வரை பாதுகாப்பு வலயம். அரசாங்கத்தின் இரண்டாவது அறிவிப்பு தை மாதம்(2009) வெளியானது. மக்கள் நகர்கின்றனர். கொட்டும் மழை....ஓடும் வெள்ளம்....சேறு....சுரி....எல்லாம் கடக்கின்றனர். நெடுந்தூர, குறுந்தூ எறிகணைகளின் கொண்டாட்டம். கும்மாளங்கள் அளவு கணக்கில்லை. சாகிறவர்கள் தப்புகிறவர்கள் தப்ப எடுக்கின்றனர் ஓட்டம். பசுபதியர் தவளுவதும் எழுந்து ஓடுவதுமாக சூரி குடு்ம்பம் உருள்வதும் புரள்வதும் நடப்பதுமாக . பிரசாத் தங்கையை விடாமல் பிடித்து கொண்டான். இருவரும் விழுந்து படுப்பதும் எழுந்து நடப்பதுமாக. இப்படித்தான் எல்லா மக்களும். பட்டாசு சத்தம் போல மக்கள் கூட்டங்களுக்கு இடையிடையே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அவலக்குரல்கள் அந்த யமனுக்கும் கேட்டிருக்கும். பசுபதியரின் தலையில் ஒரு முண்டமில்லாத தலை வந்து மோதியது. கண்டதும் தேகம் பதறியது. தொண்ணூறு பாகையில் காய்ச்சல். வண்டு சுத்துறான். வெளிச்சம் போடாதையுங்கோ. ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மக்களின் எச்சரிக்கை. இருட்டில் உறவுகள் சிதறுண்டு முன்பின்னாக தவளுகின்றனர். * * * சுதந்திபுரத்தில் புற்தரை கொண்ட சிறிய காணித்துண்டு. பசுபதி, சூரி குடும்பங்கள் காப்பகழிகள் வெட்டி அதற்குமேல் கொட்டில் அமைத்து இருந்தனர். பாதுகாப்பு வலயம் என்ற பெயர்தான். அங்கேயும் விமானப்படை தன் சாகசத்தை காட்டியது. எறிகணைகளும் முழங்கின. தங்கச்சி பசுபதி வீட்டில். பிரசாத் காணாமல்போன தந்தையை தேடி செல்கிறான். இருவாரங்கள் ஆகியும் அகப்படவில்லை. புலிகளின் குரல் உறவுப்பாலம் அறிவித்தலிலும் கொடுத்துப்பார்த்தான். அவரோ வரவில்லை. குடிகாரன் என்றாலும் பி்ள்ளைகளுக்கு அவர் தொந்தரவு கொடுப்பதில்லை. அப்பாவை காணாமல் தங்கச்சி ஒப்பாரி. பிரசாத்துக்கு பத்து வயதின் பின்புதான் அவள் பிறந்தாள். அதனால் செல்லம் அதிகம். அவளை ஆற்றுப்படுத்தி பார்த்தான். அவளோ கேட்கவில்லை அப்பாவை கூட்டி வா. விடாப்பிடியாக நின்றாள். மக்கள் ஓடிவந்த சாலைகளில் அநாதரவாக கிடக்கும் சடலங்களை எடுத்து தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அடக்கம் செய்யுதாம். பிரசாத்தின் காதிலும் அந்தச்செய்தி. அப்பாவும் ஒரு ஆளாய் இருக்குமோ? அவனுக்கு நா வறண்டது. உங்கட அப்பாவுக்கு ஒண்டம் நடக்கயில. அவர் உயிரோட இருக்கிறார். உங்கள தேடி கட்டாயம் வருவார். சோபா தேற்றுகிறாள். ஆறுதல் அடைந்தவன் பசுபதியரின் கொட்டிலுக்கு வருகிறான். அங்கே அவர் வானொலிப்பெட்டியை முறுக்கி கொண்டிருந்தார். அண்ண..நான் களப்பணிக்கு போறன். சண்டை உக்கிரம் எப்ப திரும்புவன் எண்டு...சொல்ல ஏலாது. தங்கச்சியை கவனமாக பாருங்கோ. ம்....இன்னொரு விசயம். நான் சோபாவை... பிரசாத் வார்த்தையை நீட்டித்தான் தெரியும்..தெரியும்...நீ சூரியிண்ட கடைப்பக்கம் அடிக்கடி போய் வரவே எனக்கு விளங்கியிட்டு. சரி அவளையும் இடக்கண் வலக்கண் பார்க்கச் சொல்லுறாய் அப்பிடித்தானே. பசுபதியர் சொல்ல அவன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு தலையாட்டினான். * * * மாசி மாதம் தேதி பன்னிரண்டு இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு. அரசாங்கத்தின் மூன்றாவது அறிவிப்பு. புது மாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பாதுகாப்பு வலயம். பசுபதியருக்கு பொங்கி வந்தது கோபம். வானொலிப்பெட்டியை தூக்கி மண்மூடைக்குமேல் வீசினார். இந்த மனிசன் ஏன் அதைப்போட்டு உடைக்குது மனைவி பாக்கியம் கத்தினாள். வாயைப்பொத்து. அங்க போ, இஞ்ச வா எங்களை ஆரெண்டு நினைச்சாங்கள். மனைவி மறுபடியும் புறுபுறுத்தாள். கதைக்காத எண்டு சொன்னனான். பல்லைக்கடித்தபடி பசுபதியர் அவளை நெருங்கினார். ஓடிஓடி களைத்த மக்கள் இப்படித்தான் ஒருவர் மீதுள்ள கோபத்தை இன்னொருவர் மீது சாதித்து தொட்டதுக்கு எல்லாம் சண்டை வந்து விடும். போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்பிரதேசத்துக்குள் முடங்கினர். களப்பணிக்கு போன பிரசாத் ஒரு மாதம் ஆகியும் வீடுதிரும்பவில்லை. பசுபதி,சூரி குடும்பங்கள் முள்ளிவாய்க்கால் சென்ற கதை. தங்கச்சி காயப்பட்டு கப்பலில் வவுனியா அனுப்பிய விடயம். காப்பகழிக்குள் எறிகணை வீழ்ந்து வதனம் மாமி குடும்பம் சிதறிய சம்பவம். விசுவமடுவில் இருந்து ஓடி வந்தபோது தந்தை இறந்த உண்மைச்செய்தி. எதுவுமே அவனுக்கு தெரியாது. பசுபதியின் கொட்டிலுக்கும், சூரியின் கொட்டிலுக்கும் உள்ள இடைவெளி ஒரு அடி மட்டுமே. ஒரு நாள் சோபா பசுபதியரின் காப்பகழிக்குள் ஓடிவந்தாள். கண்ணீர் ஆறாக. அவள் பின்னால் சூரி. பசுபதியர் இருவரையும் மாறிமாறி பார்க்கிறார். ஒண்டில் நாட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும் அல்லது வீட்டில பிரச்சனை இல்லாம இருக்கவேணும். ரெண்டிலும் எண்டால்.....பட்டினிக்களைப்பில் பசுபதியர் கொதித்தார். அண்ண....நான் பின்தளப்பணிக்கு போறன் இப்ப போறவங்கள் திரும்புறதில்ல. எனக்கும் அப்பிடி நடந்தால்.... அதுக்கு முதல்....சூரி கண்களை துடைக்கிறார். எண்ட மருமகன் பெடியன் பக்கத்திலதான் இருக்கிறான். நல்லவன். அவனுக்கும் பிள்ளைமேல விருப்பம். கலியாணம் செய்து வைச்சா எண்ட மனமும் ஆறும். கடமையும் முடிஞசதாகுது. இவள் மாட்டாளாம். பிரசாத் எழுதின கடிதங்களை காட்டுறாள் அவன் செத்து 1 மாதம் ஆகியிட்டண்ண...சூரி வாய்விட்டு அழுதார். பசுபதியருக்கு வார்த்தையே வரவில்லை. * * * கடும்போர் ஓய்ந்தது. வைகாசி மாதம் மூன்றாம் வாரம்(2009) முள்ளிவாய்க்கால் இராணுவத்தின் கையில். எறிகணைகள், துப்பாக்கி ரவைகளுக்கு இரையான மக்கள் ஆங்காங்கே வீழ்ந்தும் சிதறியும் கிடந்தனர். எஞ்சியவர்களை இராணுவம் பேரூந்தில் ஏற்றிக்கொண்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்து ஒரு பாரவூர்தி பொருட்களோடு வெளியேறிய பசுபதியரின் கையில் இப்போ ஒரு சொப்பின் பை மட்டும். மீதி இருந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டன. காலில் காயம் ஊன்று கோலின் உதவியோடு பிரசாத் மக்களோடு மக்களாக வருகிறான். பிரசாத் நில்லு....உன்னை இல்லை எண்டெல்லோ கதைச்சாங்கள்.....பசுபதியர் கட்டியணைத்து அழுகிறார். அவனோ பட்ட பாலைமரம்போல் அப்படியே நின்றான். ஒவ்வொரு சம்பவங்களையும் விடாமல் சொன்னவர் கண்ணீரையும் மூக்கையும் துடைத்துவிட்டு மேலும் தொடர்ந்தார். சோபாவுக்கு கலியாணம் முடிஞ்சுதடா. தகப்பண்ட பரிதாபத்தை பார்த்து அவள் சம்மதிச்சுட்டாள்....களத்துக்கு போன சூரி உயிரோட திரும்பவில்ல. ஓலமிட்டு கத்தினார். உறவுகளை இழந்தவர்களின் ஒப்பாரிகளோடு அவர் குரலும் சேர்ந்தது. போர்க்கள கோலம். உறவுகளை இழந்த துயரம். அதிர்ச்சி, ஏக்கம் எல்லாமே அவன் மனதை தெளிவாக்கியது. பசுபதியரின் தலையை வருடி கண்ணீரை துடைக்கிறான். எதுவுமே எங்கட கையில் இல்லை அண்ண...எது நடக்குமோ அதுதான் நடக்கும். இருவரும் பேரூந்தில் ஏறுகின்றனர். சில நாட்களின் பின் நலன்புரி நிலையத்தில் சோபாவை சந்திக்கிறான். அவனை கண்டதும் நிலைதடுமாறினாள். அவனோ மலர்ந்த முகத்துடன் உன்னில எந்தப்பிழையும் இல்ல. நீ கவலைப்படாமல் சந்தோசமாக இருக்கவேணும். இப்ப நான் உன்மேல வைச்சிருக்கிறது அன்பு மட்டுந்தான். காதல் இல்ல இருவர் மனங்களில் இருந்தும் மாயத்திரை விலகுகிறது. பிரசாத் ஊனமடைந்த ( போரினால்) தன் தங்கையை தாய் போல் கவனித்து வருகிறான். பள்ளியில் படிக்காத பாடம் அனைத்தும் காலம் அவனுக்கு கற்று கொடுத்து விட்டது. இப்போ அவன் ஒரு ஞானி.