வெள்ளி, 12 நவம்பர், 2010

மாரி மழை பொழியும்,
மண் கசியும், ஊர்முழுதும்.
வாரியடித்து வெள்ளம் வான்பாயும்,
கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும்,.
துயிலுமில்ல சாமிகளுக்கான சந்தன நாள் வந்தடையும்.
மாவீர செல்வங்கள் மண் கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள்.
விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள்.
தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள்.
விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள்.
குன்றி குரல் நடுங்கி குற்றவேல் செய்த இனம்
இன்றிந்த நிமிர்வுக்கு இட்டமுதல் விதைப்பு.
சாவைக்கொடுத்தேனும் தமிழ்வாழ்வு என நிமிர்ந்து
பேசும்படியான புதுவாழ்வின் புலர்வுதினம்.
கார்த்திகை மாதமும் வந்துவிட்டதே எம் கண்மணிகள் துயில் எழுந்து பார்க்கப் போகின்றார்களே !! என் தாய் வந்து என்னை அணைக்கும் என்று அவர்களுக்குத் தெரியுமா? தாங்கள் துயில் எழும் கார்த்திகை நாளில் அவர்கள் விதானம் கூட களையப்பட்டுவிட்டதென்று......!!! ஆனாலும் எங்கள் மன விதான‌ங்களில் என்றென்றும் இருப்பார்கள். எவராலும் அசைக்கமுடியாத இடம் அது.......