புதன், 21 ஏப்ரல், 2010

"விடுதலைப்போரின் விருட்சமே நாடு கடந்த தமிழீழ அரசு"


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை என தாய்த் தமிழகத்துக்கு அறைகூவல் விடுத்திருக்கும் உருத்திரகுமாரன் தனது வேண்டுகோளில் ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எனத் தெரிவித்திருக்கும் அவர் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகத் தாய்த் தமிழகத்துக்கு அவர் எழுதிய மடல் வருமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா) வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா) சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா) பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா) சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்) பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா) கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா) இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிக்கை இனைப்பில் PDF நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை 2010 மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம். விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது. அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம். இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன். தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம். என அவர் தனது மடலில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டவர்கள் 85,000 பேர் தவிப்பு.

ஐஸ்லாந்தில் எரிமலை ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான்பாதையில் இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்ற உல்லாசப் பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து.




குறிப்பாக இந்தியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பதாகவும், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத கவலையில் பிரான்ஸ் மக்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதே வேளையில் பொருளாதாரப் பிரச்னையாலும் அவர்கள் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து 5 நாட்களாக தமது விமானச் சேவைகளை நிறுத்தியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



விமானச் சேவைகள் யாவும் மீண்டும் மெதுவாக சேவைக்கு திரும்பியுள்ள போதும் ஆசனங்களைப் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளதாக விமானச் சேவை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.



யாழில்............?

கடந்த திங்கட்கிழமை யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலீயல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்வந்தபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலீயல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் இவர் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்ததாகவும் அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அக்குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் தற்போது காவல்துறையினரின் கண்காணிப்பில் யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது. 24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.