இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
வீட்டில் யாழப்பாணப் பெண் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு
தெஹிவளை, களுபோவில ஜயசிறி மாவத்தையிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த தமிழ் பெண் ஒருவரின் சடலத்தை தெஹிவளைக் காவல்துறையினர் நேற்று காலை மீட்டுள்ளனர்.
பெண்ணின் கழுத்துப் பகுதியில் பாரிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டபோது அவர் தனது கையில் கூரிய ஆயுதமொன்றை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 58 வயதான சின்னத்தம்பி கனகதேவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தப் பெண் அவரது மூளைவளர்ச்சி குன்றிய மகளுடன் தற்காலிகமாக வாடகைக்கு அமர்த்திய வீட்டில் வசித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெஹிவளைக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
வணங்காமண்ணில் வந்தவையா?
அரசதலைவர் தேர்தலை நோக்கியதான ஏ-9 வீதி 24மணிநேரமும் திறக்கப்பட்டதனை அடுத்து யாழ்.குடாநாட்டிற்கான தென்னிலங்கை மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை வியாபாரிகளின் யாழ்ப்பாணத்திற்கான படையெடுப்பும் அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. தென்னிலங்கை வியாபாரிகளால் விற்கப்படும் பொருட்கள் இலங்கையின் வர்த்தக மையமான தலைநகரான கொழும்பு விலைகளிலும் அரைவாசி வீதம் குறைந்தவையாகவே காணப்படுவதாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பொதுமகன் ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிகள், நல்லூர் ஆலயச் சூழல் உட்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரதான பகுதிகளில் சிங்களவர்களால் மலிவு விலைக்கு விற்கப்படுகின்ற பொருட்களின் விலைகள் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கொழும்பு வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார். அவர் யாழ்ப்பாணத்தின் நிரந்தர வர்த்தகர்கள் இந் நடவடிக்கையினால் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவதனை தாம் உணர்ந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பிட்ட பொருட்களை விலைகொடுத்துப் பெறுவதில் யாழ்ப்பாண மக்களைவிடவும் தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா நோக்கில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொள்ளும் மக்களே கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த இடத்தில்த் தான் புலம்பெயர் மக்களால் வன்னியில் நெருக்கடிக்கு உட்பட்ட மக்களுக்கு என அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை கேட்கவேண்டிய நிலை எழுந்துள்ளது. மக்களுக்கு வழங்கவென நிவாரணப் பொருட்களைச் சுமந்தபடி பயணித்த வணங்காமண் கப்பலை நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்துநிறுத்திய சிங்கள அரசு அதனை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியது. இந்த இடத்தில் தமிழ் மக்களின் உயிர்நாடி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கருணாநிதி வணங்காமண் கப்பலின் கொண்டுவரப்பட்டிருந்த பொருட்களை இந்தியாவில் வேறு கப்பலில் ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனைப் பரப்புரையாக்கினாரே தவிர அந்தப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்ந்தனவா? என்பது பற்றிய எந்த ஒரு அக்கறையினையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
சர்வதேச ரீதியாக வன்முறைச்சூழலில் சிக்கியிருக்கும் மக்களைக் காப்பதற்காகவே தோற்றம் பெற்றதாகக் கூறப்பட்டுச் செயற்படும் செஞ்சிலுவைச் சங்கங்கள் பொருட்களைப் பொறுப்பேற்பதாகவும், பொறுப்புக் கொடுப்பதாகவும் இரண்டொரு அறிக்கைகளை விட்டதுடன் அந்தப் பொருட்கள் தொடர்பான முழுமையான விபரங்களும் தற்போது மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட பொருட்களுக்கு என்ன நடந்தது? அந்தப் பொருட்கள் பழுதடைந்திருந்தால் அது பற்றிய தெளிவினை செஞ்சிலுவைச் சங்கங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் அது குறித்த விபரங்களை வெளியிடும் என்றோ மனிதாபிமான ரீதியில் அது நடைபெறும் என்றோ எதிர்பார்ப்பது சாத்தியமற்றது. செஞ்சிலுவைச் சங்கம் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த பகிரங்க அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை. மாறாக மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தான தகவலையாவது வழங்கியிருக்க வேண்டும். புலம் பெயர் தேசங்களில் அங்கிருக்கும் காலநிலைகளை எதிர்கொண்டு மிகவும் கடினங்களுக்கு மத்தியில் உழைத்த உழைப்புக்களைக் கொண்டே வன்னி மக்களுக்கென பொருட்களை வழங்குவதற்கென அவர்களால் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அந்தப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் மக்களது உழைப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பான சரியான தகவல்களை செஞ்சிலுவைச் சங்கம் வெளியிடவேண்டும்.
வணங்காமண் கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்காப்படாமைக்கும் யாழ்ப்பாண தெருவோர தென்னிலங்கை வியாபாரிகளின் விற்பனை நடவடிக்கைகளுக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் பரவலாக எழுகின்றது. தமக்கான பொருட்களை தென்னிலங்கையின் அரசியலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒருவரின் முக்கிய வலது கையாகச் செயற்படும் தொழில் அதிபர் ஒருவரே வழங்கிவருவதாக தென்னிலங்கை வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களின் உடனடியான உதவிகளை இழிவு படுத்தும் வகையிலான செயற்பாடாக இது இருக்கலாம் என்று கருதப்படுகின்ற அதேவேளை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் வரையான மக்களது வாழ்வியல் என்பது குறித்த அரசின் அக்கறையீனமும் இன்னமும் தொடர்ந்தவண்ணமே உள்ளமை புலப்படுகின்றது. தனியாக அரிசி, மா, சீனி, பருப்பு உட்பட்ட பொருட்களை மட்டும் வைத்துக் கொண்டு அங்கிருக்கும் மக்களால் வாழ்க்கை நடத்த முடியாது. அங்கிருக்கும் மக்கள் தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் போர் அனர்த்த காலங்களில் தமக்கான குடும்பத்தினரில் பல உழைப்பாளர்களை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.
அதனை விடவும் உழைப்பாளர்கள் இருந்தாலும் சொந்த இடங்களில் இருந்து அவர்கள் பிடுங்கப்பட்டுள்ளமையால் அவர்களால் சுயமாக பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தமது பொருளாதாரத்தை ஈடு செய்வதற்காக சில பெண்கள் நிர்ப்பந்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு சமூக சீர்கேட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருவதாக முகாம் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் அந்த மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கான அடுத்த கட்ட ஆரோக்கியமான நடவடிக்கைகள் குறித்து சர்வதேசம் புரிந்து கொள்ளுமா?
வாடகை வானூர்தி .,,
உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்தவண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும். இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும்.
இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால் சென்று குறித்த விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வானில் பறக்கவல்லதுமான ஒரு வாகனமே வாடகை வானூர்தியாகும். ஒரு நாட்டின் வான் எல்லைகளுக்குட்பட்ட வானூர்திப் பறப்பு என்பது அந்நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. சாதாரண தரைவழிப் போக்குவரத்துப் போன்று வான்வழிப் போக்குவரத்தினை பொதுப்பாவனைக்காகத் திறந்துவிடுவதென்பது, ஒரு நாடு தனது பாதுகாப்பைத் தானாகவே முன்வந்து முடக்குவதற்கு ஒப்பானது. இதன்காரணமாக தகுந்த பாதுகாப்பு உத்திகளுடன் இந்த வாடகை வானூர்தியினை பொதுப்பாவனைக்காகக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சிக்கின்றன.
அமெரிக்காவின் இவ்வாறான வாடகை வானூர்தித் திட்டம் சிறிய விமான போக்குவரத்துத் தொகுதி (Small Aircraft Transport System) என்றழைக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கமைவாக அமெரிக்கா முழுவதும் 5000 வரையான சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு அவ்விமான நிலையங்களினூடாகவே இவ்வானூர்தித் தொகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்விமான நிலையங்கள் அனைத்தும் பொதுமக்களால் இலகுவில் அடையக்கூடியவாறு அவர்களின் குடியிருப்பு, வேலையிடம் மற்றும் நாளாந்தச் செயற்பாட்டு இடங்கள் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறாக தொகுதிகளை இயக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
பிரதான பாரிய விமான நிலையங்களின் போக்குவரத்து நெருக்கடி குறையுவடையும்.
சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி குறையுவடையும்.
போக்குவரத்துத் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
சிறிய விமானங்களை இயக்குவதற்கான பொருட்செலவு குறைவடையும்.
பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு வரும் உல்லாசப்பயணிகள் அந்நாட்டின் விமான நிலையத்திலிருந்து தொலைதூர இடங்களிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்குப் செல்வது கிடையாது. இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது.
இருந்தபோதிலும் இங்கு பல்வேறுபட்ட பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. முதலாவதாக வாடகை விமானங்களுக்கான பொருட்செலவு. ஆரம்ப நிலையில் இவ்வகை வாடகை விமானங்களை குறைந்த விலையிற் பெற்றுக்கொள்வதென்பது இயலாத காரியமாகும். இவற்றுக்காக கொள்வனவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமானதாகவே காணப்படும். இதன் காரணமாக பெருமாபாலானோர் இவற்றைக் கொள்வனவு செய்வதிற் தயக்கம்காட்டுவர். அடுத்து, மேலே பறத்தற் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. குறித்தவொரு வான்பரப்பு பெரும்தொகையான சிறியரக விமானங்களின் பறப்பினைக் கொண்டிருக்கும்போது, அவ்விமானங்களின் பாதுகாப்பினைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதென்பது சிரமமான காரியமாக மாறலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்கு பெரும்தொகையான ஆளணி மற்றும் கண்காணிப்புக் கருவிகள் தேவைப்படும். தொடர்ந்து அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அனவே, இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிகளை இயக்குவதென்பது பொரும் பொருட்செலவைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.
NASA நிறுவனம் தன்னியக்கமாக விமானப் பறப்புக்களைக் கட்டுப்படுத்தும் Robotic Air Traffic Controller என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளிற்கேற்ப அவை தரையிறங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தன்னியக்கமாக வழங்கும். இன்னொரு வகைக் கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் அவ்விமானங்களின் பறக்கும் உயரம், ஆள்கூறு என்பவற்றைப் பெற்று அவற்றுக்கான பதிற் தகவல்களை வழங்குவதுடன் அத்தகவல்களை ஏனைய விமானங்களுடனும் பகிர்ந்துகொள்ளும். இவ்வகைக் கருவிகளின்மூலம் ஆளணி எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைக்க முடியும்.
இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிக்கான திட்டத்தின் ஆரம்ப நிலையில், இத்திட்டத்தை 2015 இல் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் சிறியளவிலேயே அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வகை வானூர்திகள் பெருமளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டியேயிருக்கும்.
வழிமறிக்கப் போவது யார்?
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள்.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பங்களை இம் முறை வழங்காது என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. இவற்றில் கணிசமான உண்மைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தான் பாரிய அச்சுறுத்தல் நிலை எதிர்வரும் தேர்தல் ஊடாக எதிர்நோக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தேசியப் பற்றாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் கொள்கைகள் தமக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிவித்து கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பிரதான கட்சி ஒன்றின் பொதுச்செயலாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம் முறை தான் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது கொள்கை தனி நாட்டை வலியுறுத்துவதாக அமைவதாகவும் அவர் தனது கொள்கையில் இருந்து இம்மியேனும் பிசகாது உறுதியாக இருப்பதாகவும் கூட்டமைப்பின் ஏனைய பிரதான தலைமைகள் இலங்கை ஒரு நாடு அதற்குள் தான் தீர்வு அமையவேண்டும் என வலியுறுத்தி இதற்கு அவரை உடன்படுமாறு வலியுறுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் ஏற்படவுள்ள ஆபத்து நிலை குறித்து சில விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.
குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர் எடுத்திருக்கின்ற முடிவு அவரது தனிப்பட்ட முடிவு அதனால் அவர் தனித்துப் போட்டியிடுவது வரவேற்கப்பட வேண்டிய விடயம் என்றாலும் அவருடன் கூட்டுச் சேர ஏற்கனவே விடுதலைப்புலிகளால் தெரிவு செய்யப்பட்டு கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட மக்கள் மத்தியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பலர் இவருடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் குதிக்கவுள்ளதாக அறியவருகின்றது.
உண்மையில் குறிப்பிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் அல்லது அவர்களுடைய விசுவாசிகள் என்ற காரணங்களைக் காட்டியே மகிந்த அரசு அவர்களை தமது அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உடன்பட்டுச் செயற்பட வைத்தது. இந்த நிலையில்த் தான் நடைபெற்ற ஜனாபதித் தேர்தலில் கூட்டமைப்பின் மூன்று விதமான நகர்வுகளை அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுக்கக் காரணமாக அமைந்தது என்பது அரசியல் அவதானிகளுக்கு நன்கு புலப்பட்ட விடயமாகும். இவற்றின் காரணமாகவே திசைமாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் இருந்து ஓரங்கப்பட்டதாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னின்று முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக தெரிகின்றது. இந்த நிலையில் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து போட்டியிட எத்தனிக்கும் கட்சித் தலைவருக்கு முண்டு கொடுத்து போட்டியில் தீவிரமாக ஈடுபடுவர் என்பது வெளிப்படை.
இந்த இடத்தில் கூட்டமைப்பினைத் தீர்மானிக்கின்ற முக்கிய உறுப்பினர்கள் குறித்த அதிருப்தி நிலைகளும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. அதாவது தமிழ் மக்களின் அனைத்து விதமான பின்னடைவுகள் அல்லது அழிவுகள் தேசிய விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டமை அனைத்துக்கும் பிரதான காரணியாகச் செயற்பட்ட இந்தியாவின் அட்டவணைக்கு அமையவே அவர்களின் செயற்பாடுகள் அமைவதாகவும் ஒவ்வொரு முக்கிய நகர்வுகளையும் அவர்கள் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகளுக்கு அமையவே முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஒருமித்த முடிவு எடுக்கப்படாத விடத்து தமிழ்மக்களுக்கு இருக்கின்ற வாக்குப் பலம் என்பது சிதைவடைவதற்கான அதிக சந்தர்ப்பங்களே ஏற்பட்டுள்ளன. இதனை உணர்ந்து உடனடியான தலையீட்டை மேற்கொள்ளக்கூடிய அல்லது மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகத் தலைமைகள் உட்பட்டுள்ளன. இரண்டு பிரதான தரப்புக்களாக பிரிந்து கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால் யாரைத் தெரிவு செய்வது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் பிரமாண்டமான பூதாகாரமாக வெளிப்படும். இந்த இடத்தில் மக்கள் முடிவெடுப்பதில் குழப்பம் அடைந்து கணிசமான வாக்களிப்பு வீதம் குறைவடையக் கூடிய அதேவேளை மக்களின் வாக்குகள் சிதைவடையும். அதன் போது அணில் ஏறவிட்ட நாய் போலக் காத்திருக்கும் ஏனைய சக்திகள் குறைந்த வாக்குகளிலேயே தொகுதிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன.
தேசியம் என்பது ஒற்றைச் சொல்லால் ஆனது என்று மட்டும் கருதியதாகவே தற்போதைய அரசியல்த் தலைமைகளின் தேசியத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் அமைகின்றன. யாரும் தூர நோக்கம் கொண்டவர்களாகவோ, ஏற்கனவே இறைக்கப்பட்ட தியாகங்களுக்கான பெறுமதி அறியாதவர்களாகவோ செயற்படுவதனைப் பார்க்க அருவருப்பாக இருப்பதாக மிக மூத்த தமிழ்ப் புத்திஜீவி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டமைப்பிற்கான போட்டியாளர்களைத் தெரிவு செய்யும் ஆலோசனைகளில் இன்னொரு அசிங்கமும் நிகழ்ந்து வருகின்றமையை சுட்டிக்காட்டுகின்றோம். தற்போது ஒரு கல்விச் சமூகத்தின் பிரதிநிதி ஒருவரும் முன்மொழியப்பட்டுள்ளார். அவர் யார் என்றார் நீண்டகால அரச விசுவாசியாக விளங்கி வருகின்ற அமைச்சர் ஒருவரின் பிரதான புதிய ஆலோசகர் ஒருவரால் தேசியத்திற்கெதிரான எழுத்தளார்களில் ஒருவராக வளர்க்கப்பட்டு வருகின்ற ஒருவராவார். இவரையும் கூட்டமைப்பில் வேட்பாளராக நிறுத்துவதற்கான முனைப்பினை கூட்டமைப்பின் பிரதான கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் முனைந்து செயற்படுவதாக அறிய முடிகின்றது.
தமிழ் மக்களின் தற்போதைய கையறு நிலையில் மக்களின் தவிர்க்க முடியாத தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விளங்கிவருகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பின்னடைவுகளுக்கு பிரதான காரணங்களாக காட்டிக்கொடுப்புக்களும், விட்டுக்கொடுப்புக்கள் அற்ற தன்மையும் தான் என்ற கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். எனவே இவ்வாறான இக்கட்டான சூழலில் கூட்டமைப்பின் வழிப்படுத்த யாராவது முன்வருவார்களா? இல்லையேல் தமிழ் மக்களின் அபிலாசைகள் ஒரு கோடி 38 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுடனும், வருடாந்த ஐம்பது இலட்சம் ரூபாய் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டு நிதியுடனும் போய்விடுமா? என்ற கேள்விகளை தமிழ் மக்கள் கேட்கத் தலைப்பட்டுவிடுவர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மக்களை நோக்கியோ தேசியத்தை நோக்கியோ நகரவில்லை என்பது மட்டும் புலனாகின்றது. இந்த இடத்தில் மற்றொரு விடயம் பற்றிய தெளிவான பார்வையை ஏனைய கட்சிகளுக்கும் முன்வைக்கின்றோம். கொழும்பில் அலரிமாளிகைக்கு நிகரான மாளிகை ஒன்றில் அனைத்து வசதிகளுடனும் கொழும்பின் நட்சத்திரவிடுதிகளின் ஊழியர்களின் உபசரிப்புக்களுடனும் வாழ்ந்து வருகின்ற உலகம் அறிந்த உலகம் சுற்றிய முன்னாள் முக்கியஸ்தர் தற்போது தமிழ்த்தேசியத்தை இலங்கையில் சிதைக்கும் நடவடிக்கையினை முழு மூச்சுடன் முன்னெடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட நபர் அரசகுடும்பத்தின் சகோதரர்களை தோள்களில் கைபோட்டு அணைத்து மகிழ்கின்ற அளவிற்கான அதிகாரங்களைப் பெற்றுள்ளமை குறித்து அவரைத் தரிசிக்கச் சென்று தரிசனம் பெற்றவர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பிட்ட நபர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈபிடிபி, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உட்பட்ட அனைத்துக் கட்சிகளையும் பூரணமாக ஒழிக்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறுவதாகவும், புதிதாக ஏதாவது செய்து புதிய தமிழ்த் தலைமைகளை முன்வைக்குமாறும் தொடர்ந்தும் கோரி வருகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கமைய கிளிநொச்சியில் முன்னாள் அரச முக்கிய அதிகாரி ஒருவர் வெற்றிலைச் சின்னத்திற்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது. அதேபோல ஏனைய பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலில் நிற்குமாறு வற்புறுத்தல் விடுப்பதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்தச் செயற்பாட்டின் தொடர் நடவடிக்கை தான் தேர்தல்த் தொகுதிகளில் சுதந்திரக்கட்சியினை எதிர்கொள்ளும் நிலைக்கு அரசில் அங்கம் பெற்ற முன்னணி தமிழ் அமைச்சர்கள் இருவர் தள்ளப்பட்டுள்ளனர் என கருதமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் அதாவது வடக்கு கிழக்கில் மட்டும் இம் முறை பத்திற்கு மேற்பட்ட கட்சிகள் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ் மக்களின் இறுதியாக இருக்கின்ற ஒரே ஒரு தெரிவான வாக்கின் ஊடான ஒருமைப்பாடும் சிதைக்கப்படுவதற்கான சாத்தியங்களே தென்படுகின்றன. இன்னமும் பொறுமை காக்க வேண்டிய தேவை உரியவர்களுக்கு இருக்கின்றதா? காலம் கடந்த ஞானம் யாருக்கும் உதவாது?
பள்ளியில் புகுந்து ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவன்
ஜெர்மனியின் மேற்கு பிராந்தியத்தில் லுட்விங்ஸ் கேபின் நகரம் உள்ளது. அங்கு ஒரு தொழிற்பள்ளி உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் அங்கு 23 வயதான முன்னாள் மாணவர் ஒருவர் புகுந்தார். அவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார்.
பின்னர், திடீரென வகுப்பறைக்குள் புகுந்த அந்த நபர் 58 வயது ஆசிரியரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவத்தை தொடர்ந்து பள்ளியின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. போலீ சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று அந்த மாணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த ஆசிரியர் அவருக்கு சரியான முறையில் பாடம் கற்றுத்தரவில்லை. மாறாக அவரை தவறான முறையில் வழி நடத்தி உள்ளார். எனவேதான் அவரை பழிக்கு பழி வாங்க குத்திக்கொன்றது தெரிய வந்தது.
49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்49 பெண்கள் பூசாக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்
செட்டிகுளம் மெனிக்பாம் தடுப்பு முகாம், பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 14ஆம் திகதி வவுனியா சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து 10 பேரும், கிளிநொச்சியிலிருந்து 17 பேரும், முல்லைத்தீவிலிருந்து 14 பேரும், மன்னாரிலிருந்து 4 பேரும் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அத்துடன் வவுனியா, புத்தளம், அம்பாறை, திருகோணமலை ஆகிய இடங்களிருந்து தலா ஒருவர் பூசா சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தொடர்ந்தும் விளக்க மறியலில்,,
எல்லாளன் படை நடவடிக்கையான அனுராதபுரம் விமான படை விமான நிலைய தாக்குதலில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் இன்று அனுராத புரம் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். விசாரணைக்காக மேலும் தடுப்பு நாட்களை நீடித்து தருமாறு இரகசிய பொலிசாரினால் கோரப்பட்டதற்கு அமைவாக நாட்கள் நீடிக்கப்பட்டது.
அனுராத புரம் தாக்குதலினை வெளியில் இருந்து படம் பிடித்து வன்னிக்கு சற்றலைட் தொலைபேசி ஊடாக அனுப்பியது.வன்னியில் இருந்து புலிகளின் விமானங்களை தாக்குதலிற்கு அனுப்புமாறு கட்டளை அனுப்பியது. வன்னியில் உள்ள தலைவர்களிடம் சற்றலைற் தொலைபேசி யூடாக தொடர்பினை மேற்கொண்டது ஆகிய குற்றசாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கிளி நொச்சியினை பிறப்பிடமாக கொண்ட இவர் இரகசிய தகவல்களின் அடிப்படையில் தடுப்பு முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
பெளத்த பீடங்களின் கீழ் உள்ள கோயில்களை பறிக்க போவதாக மிரட்டல்
பெளத்த பீடங்கள்தமது சொல்லை கேட்காவிட்டால் அதன் கீழ் உள்ள கோயில்களை பறித்து புதிய அமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என ஆளும் தரப்பு மிரட்டியுள்ளது.
மேற்கு மாகாணத்தில் உள்ள 500 வரையான கோயில்களை இவ்வாறு பிரித்து புதிய பீடம் ஒன்று உருவாக்கப்பட்டு அதன் கீழ் கொண்டுவரப்படும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேல்மாகாண அரசியல் வாதிகள் பெளத்த பீடங்களை மிரட்டியுள்ளனர்.
ரோகண நிக்காய என்ற அங்கீகரிக்கப்படாத பெளத்த அலகு ஒன்றினை புனரமைத்து அதனை அங்கீகரித்து அதன் கீழ் பெளத்த கோயில்கள் கொண்டுவரப்படும் என கூறியுள்ளனர் மஹிந்தவின் சகாக்கள்.
போகின்ற போக்கினை பார்த்தால் மஹிந்த மகா சங்கம என்ற புதிய பீடத்தினை உருவாக்கி அனைத்து பீடங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவார் என்ற பதட்டம் பிக்குகளுக்கு வந்துள்ளதாம். எது எப்படி இருப்பினும் இலங்கையில் ஐந்தாவது பீடம் ஒன்று உருவாகலாம் என விமர்சகர்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க கோத்தபாயாவுடன் கே.பி....
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை முறியடிக்க சிறீலங்காவின் பாதுகாப்பு செயலரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவுடன் விடுதலைப்புலிகளால் கடந்த 2009 ஜனவரி இறுதியில் வெளிவிவகாரத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின்னர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும் இணைந்து செயற்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகளும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரிடம் இருந்து எமக்குக் கிடைத்த செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
விடுதலைப்புலிகள் வெளிநாடுகளில் மிகப்பெரும் வலையமைப்பை கொண்டுள்ளனர் என்றும் அவற்றில் பெருமளவானவற்றை தாங்கள் முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, எனினும் அதனை முறியடிக்கும் பணிகள் மேலும் தொடரப்பட வேண்டும் என்றும், அவை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளராக தான் இருக்கும் நிலையில் நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளதாகவும், எனவே வெளிநாடுகளில் அதனை முறியடிக்கும் பணிகள் தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இந்த முறியடிப்பிற்கு கோத்தபாய ராஜபக்சவினால் நேரடியாக இறக்கிவிடப்பட்டுள்ள குமரன் பத்மநாதன், இதுதொடர்பாக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக சில வெளிநாடுகளுக்கு அவர் பயணங்களையும் மேற்கொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
தற்போது கொழும்பில் தங்கியிருந்துகொண்டு புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் இருக்கின்ற தனது ஆதரவாளர்கள் மூலம், விடுதலைப் புலிகளின் வலையமைப்பை தகர்க்கும் நடவடிக்கையில் இவர் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அவுஷ்திரேலியா நாடுகளில் இந்த கட்டமைப்பு உடைப்பு நடவடிக்கை தற்போது துரிதகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தற்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலருடன் தொலைபேசியூடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள குமரன் பத்மநாதன், மகிந்தவிற்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுரை கூறி வருவதாகவும், அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவர்கள் குறித்து ஆராய்ந்து தனக்கு தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி வருவதுடன், மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச ரீதியாக வலுப்பெற்றுவரும் எதிர்ப்பலைகளை தணித்து, புலம்பெயர்ந்த தமிழர்களின் மகிந்த அரசிற்கு எதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் பணிகளையும் மேற்கொள்ளுமாறு இவர் தனது ஆதரவாளர்களிடம் கோரியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தனக்கு நெருக்கமான சிலரது தொலைபேசி இலக்கம் கிடைக்காத நிலையில், பல்வேறு வழிகளினூடாக அவர்களின் தொலைபேசி இலக்கங்களை தேடிப்பெற்று இவர் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தாகவும், இவ்வாறு தொடர்புகொள்ளப்பட்ட சிலர், தங்களுக்கு இந்தச் செயற்பாடுகளில் விருப்பமில்லையெனக்கூறி அவருடனான தொடர்புகளைத் துண்டித்து ஒதுங்கிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
தற்போது தனது முன்னைய ஆதரவாளர்கள் ஊடாக செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இவர், விடுதலைப் புலிகள் குறித்து ஆதரவான கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டவர்களை அச்சுறுத்தும் அல்லது அம்பலப்படுத்தும் வகையில் பிரத்தியேக இணையத் தளங்களை இயக்குமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தற்போது தனிமனிதர்களை கொச்சைப்படுத்தும் இணையவலைகள் அதிகளவில் உருவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை, விடுதலைப் புலிகளின் இந்த சர்வதேச வலைப் பின்னலை சிதறிடிக்கும் நடவடிக்கையில் ஒருசில சர்வதேச கரங்களும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில், தற்போது கோத்தபாய ராஜபக்ச ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பாதுகாப்பு தரப்பின் முக்கியஸ்தர்களை கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில் நடைபெறும் தெற்காசியாவின் மிகப் பெரிய ஆயுத தளபாட கண்காட்சியை பார்வையிடும் இவர், சிறீலங்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகளை நவீன மயப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சியில் ஈடுபட்டுள்ள ஆயுத உற்பத்தியாளர்களிடம் இருந்து புதிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்தைகளிலும் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
இதுஇவ்வாறிருக்க, இன்னொரு பக்கத்தில் சிறீலங்கா அரசின் நாச வேலைகள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறீலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில் அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறீலங்காவிற்கு வந்துள்ளனர் எனவும் இன்னும் சில தினங்களில் செயலிழந்துபோகும் இணையத் தளங்களில் இருந்து இவர்களது நடவடிக்கை தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்களால் இயக்கப்படும் ஊடகங்களே பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேரடியாகச் சென்று பார்ப்பதற்கு சிறீலங்காவினால் தடை விதிக்கமுடிகின்றபோதிலும் மாற்று வழிகளூடாக (தேடுதல் தளங்கள்) சென்று பார்வையிடுபவர்களை தடுக்க முடியாது இருப்பதனால், இவ்வாறான மாற்றுவழித் தேடுதல் தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் கூகிள் இணையத்தளம் இலங்கையில் செயற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்கா இறங்கியுள்ளதாகவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகள் சீனாவிடம் இருந்து சிறீலங்காவிற்கு கிடைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தமிழீழ கனவு இன்னும் அப்படியே உள்ளது என்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாகவும் சிறீலங்கா இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா எச்சரித்துள்ளார். தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிலைகொண்டிருக்கும் கல்லடி, தொப்பிகல, வாகரை, புனானை இராணுவ முகாம்களுக்கு பயணம் செய்து இராணுவத்தினரிடம் பேசியபோது இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மோசடி….
நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.
ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.
இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர்.
அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர்.
இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும்.
அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.
தென்னிலங்கைப் பயணிகளுக்கு வயிற்றோட்டம்...
தென்னிலங்கையில் இருந்து A9 பாதையூடாக வடபகுதிக்குச் சுற்றுலாச் சென்ற பயணிகளில் 75 பேர் வயிற்றோட்டம் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இப்பயணிகள் நேற்றிரவு கிளிநொச்சியில் தங்கியிருந்தனர். கிளிநொச்சியில் சுத்தீகரிக்கப் படாத தண்ணீரை அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைக் காலமாக தென்னிலங்கையிலிருந்து வடபகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் தொகை அதிகரித்து வருவது தெரிந்ததே. சரியான தங்குமிட வசதிகளோ அடிப்படை வசதிகளோ வடபகுதியில் அற்ற நிலையில் பாரிய தொகையில் பயணிகளின் வருகை சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இராணுவ ஆட்சி பிரகடனம். ......
நைஜீரியாவில் அதிபர் மமாடோ தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதாகவும், இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாலு டிஜ்போ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கையெழுத்திட்ட அறிவிப்பை இராணுவ அதிகாரி ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்தார். அரசு நிர்வாகம் அமைச்சர்களின் செயலர்கள் மற்றும் உள்ளாட்சி அரசு நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தெருக்களில் இராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கட்டடத்தில் விமானத்தை மோதி தாக்குதல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டடத்தில், கம்ப்யூட்டர் என்ஜினியர் ஒருவர் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினார். இதில் 2 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமுற்றனர். டெக்சாஸ் மாகாண தலைநகரான ஆஸ்டின் நகரில், உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தையொட்டி, 7 மாடி கட்டடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில், அந்த கட்டடத்தின் மீது நேற்று இலங்கை நேரப்படி இரவு 9.30 மணியளவில் `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த கட்டடம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த கட்டடத்தின் மீது குட்டிவிமானத்தை மோதச் செய்தவர் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினியர் என்பது தெரிய வந்தது. ஜோசப் ஆண்ட்ருஸ்டேக் (வயது 53) என்ற அந்த நபர் ஆஸ்டின்நகரை சேர்ந்தவர்.விமானத்தை ஓட்டி வந்த இவர் கட்டடத்தின் மீது மோதிய போது இறந்து விட்டார்.
அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, அவரது `இணையதளத்தில்' ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில், தனக்கும், வரிவசூல் செய்யும் அதிகாரிகளுக்கும் இடையே தகராறு இருந்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை பழிவாங்க இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து அமெரிக்க விமான நிலையங்கள் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது,
மாணவி ஒருவரைக் காணவில்லை
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்கும் 18 வயதான மாணவி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். யாழ் நகரிலுள்ள தனியார் கல்விநிறுவனத்தில் கல்விகற்பதற்காக அன்றையதினம் மாலையில் தனது சைக்கிளில் வீட்டைவிட்டு கிளம்பிய அவர் பின்னர் திரும்பி வரவில்லை என யாழ்ப்பாண போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோரால் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவரின் பெயர் லங்கேஸ்வரன் குணதீபா. இவர் கொக்குவிலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவராவார்.
தமது மகளைக் காணவில்லை என்றும் அவர் குறித்து தகவல் தெரிந்தவர்களைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களிலும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)