சனி, 13 மார்ச், 2010

மீண்டும் உலகை ஏமாற்ற சுயாதீன நிபுணர் குழு அமைப்பு

உலகை ஏமாற்ற பல குழுக்களை அமைத்து இழுத்தடித்த மஹிந்த இப்போ மனித உரிமைகள் தொடர்பிலும் சுயாதீன குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளது. அரச சார்பற்ற பணியாளர்களின் முதூர் படுகொலை உட்பட பல கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதனை சர்வதேசம் மறந்தாலும் நிச்சயமாக தமிழர்கள் மறக்கமாட்டார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படபோகும் ஆலோசனைக்குழுவினை நிறுத்த அல்லது வலுவற்றதாக்கவே தற்போதைய சுயாதீன குழு அமைத்தல் நாடகம் அமையப்போகின்றது. இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரசிங்க கூறுகையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பன தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நாங்கள் வெளிநாடுகளில் இருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட தீர்வுத் திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தமாட்டோம். எமது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்னவென்று எமது 38 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் எமக்கே தனித்துவமான வேலைத்திட்டங்களுடன் நாட்டை முன்னெடுப்போம். சுயாதீன நிபுணர் குழு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி முறையாக மேற்கொள்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், "இம்மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐ. நா. செயலாளர் பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெற தான் ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால் அது தேவையற்றது என்று ஜனாதிபதி கூறிவிட்டார். தற்போது 124 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட அணி சேரா அமைப்பு ஆலோசனை குழுவை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பான் கீ. மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஐ.நா. வில் 194 உறுப்பு நாடுகள் உள்ளன. ஆனால் அணிசேரா நாடுகள் அமைப்பில் 124 நாடுகள் உள்ளன. இங்கும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ஆலோசனை குழு தேவையற்றது என்று நாங்கள் கருதுகின்றோம். இதனடிப்படையில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அதாவது இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்றை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். முக்கியமாக அல்பிரட் துரையப்பாவின் கொலையிருந்து அனைத்து விடயங்களும் ஆராயப்படும். யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற விடயங்களும் ஆராயப்படும்"

ஆர்வத்துடன் பங்குபற்றுகின்றனராம்...................

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தற்காப்புக்கலைப் பயிற்சி வழங்கப் பட்டு வருகின்றது. துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஒருதொகுதியினருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது பயிற்சி நாளை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். இந்தப் பயிற்சியைப் பெறவிரும்புபவர்கள் நேரடியாக அங்கு வந்து பயிற்சியில் இணைந்து கொள்ளலாம் என பலாலி படைத் தலைமையகம் அறிவித்துள்ளது. வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய நாள்களில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்றும் முதலாவது பயிற்சியில் பங்கு பற்றியவர்கள் படையினருக்கு நன்றி தெரிவித்தனர் என்றும் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்தத் தற்காப்பு பயிற்சிகளை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துறுசிங்க செய்துள்ளாராம்.

முன்னாள் விடுதலைப் புலிகள் குடும்பங்களுக்கு தனியான சிறப்பு முகாம்

சிறிலங்காப் படைகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குமான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பிலிருக்கும் கணவன், வெளியே இருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் குடும்பத்துடன் ஒரே கூடாரத்தில் தங்கவைப்பதற்கு ஏதுவாக மாணிக்கம் பண்ணையின் [மெனிக் பாம்] ஐந்தாவது வலயத்தில் சிறப்பு புனர்வாழ்வு மையத்தினை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற முதலாவது வசதி மல்வத்து ஓயாவின் ஓரத்திலிருக்கும் மாணிக்கம் பண்ணையின் வலயம் ஐந்தில் அமைக்கப்படவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொதுவாழ்வில் இணைவதற்கு வழிசெய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக இதுபோன்ற வசதிகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கின்றன. தங்களது குடும்பங்களுடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்திருந்தவாறே முன்னாள் போராளிகள் புனர்வாழ்வினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தினை இச்செயல்திட்டம் அவர்களுக்கு வழங்கும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்திருக்கிறார். கணவன் மாத்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனின், மனைவி மற்றும் பிள்ளைகள் சுதந்திரமாக வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் இப்புனர்வாழ்வுச் செயல்திட்டத்தினைத் தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கிருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப கணவன் இத்தகைய புனர்வாழ்வு நிலையங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார். அரசாங்கத்தின் இந்த முனைப்புக்களுக்கு IOM மற்றும் வேறுபல உள்ளுர், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கிவருகின்றன. அகில அலங்கை இந்து மாமன்றத்தையும் இதில் ஈடுபடச் செய்ததன்மூலம் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையைப் ஏற்படுத்த அமைச்சர் மொறகொட திட்டமிட்டுள்ளார். முன்பள்ளிகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனியான தொழிற்கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி மையங்களையும் இத்தகைய புனர்வாழ்வு மையங்களுக்குள் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மொறகொட தொரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னான இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்யெழுப்பும் முனைப்பாக இதுபோன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்து ஒருவருடம் கூட ஆகியவிடாத நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் அதிக வெற்றியினைத் தந்திருப்பதாக மொறகொட மேலும் தெரிவித்தார். இலங்கை இராணுவம், இதரபல அமைச்சுக்களின் துணையுடன் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. கணவன் மற்றும் மனைவி என இருவருமே புலிகளமைப்பின் முன்னாள் போராளிகளாக இருக்குமிடத்து அவர்களை ஒரேயிடத்தில் தங்கவைத்துப் புனர்வாழ்வாளிப்பதற்கு ஏதுவாக வவுனியாவில் சிறப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது. இதுபோன்ற 142 முன்னாள் போராளிக் குடும்பங்களும் குழந்தைகளுடனிருக்கும் 8 தாய்மாரும் இந்தப் புதிய முகாமிற்கு அனுப்பப்படவிருக்கிறார்கள். இந்த முன்னாள் போராளிக் குடும்பங்களுக்காக தனியான தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி வகுப்புக்கள் ஒழுங்குசெய்யப்படும் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார். திருகோணமலையின் அல்லைக்கந்தளாயிலுள்ள சூரியவேவ பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான கால்நடைவளர்ப்புத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கிறது. இலங்கை இராணுவமும் Ceylon Cold Stores என்ற நிறுவனமும் இணைந்தே இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கின்றன. Ceylon Cold Stores என்ற இந்த நிறுவனந்தான் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்குகிறது. பால் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக 1800 வரையிலான விவசாயிகள் வேலைக்கமர்த்தப்படவிருக்கிறார்கள் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதற்குத் தேவையான நிலத்தினை அரசகாணியிலிருந்து பெறுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். திருக்கோணமடுவின் கண்டல்காடுப் பகுதியில் அரசாங்கம் விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்தவிருக்கிறது. இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் இங்கு நிலைப்படுத்தப்படுவர். இது போன்ற ஆறு பண்ணைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பண்ணைகளிலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 போர் உள்வாங்கப்படுவார்கள்.

கொழும்பு யாழ்ப்பாண வெற்றிலைகளுக்கு இடையில் அரசியல் முறுகல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்கு நாள் முறுகல் நிலைகளும், கருத்து மோதல்களும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட குழுவினரும், அதே சின்னத்தில் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் அங்கஜன் இராமநாதன், மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனாலும் இரண்டு தரப்பும் வெற்றிலைச் சின்னத்தில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டே வந்துள்ளது. குறிப்பாக இரு தரப்பினரும் ஒரே பகுதி மக்களிடம் சென்று வெற்றிலைச் சின்னத்தில் தமக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்வது, மற்றும் சுவரொட்டிகள் மீது தமது சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையினை வலுப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்னாள் யாழ். நகரை அண்மித்த பகுதி ஒன்றில் அங்கஜன் இராமநாதன் பயணித்த சொகுசு வாகனத்தினைக் கலைத்துச் சென்ற ஈபிடிபி வாகனம் மோதியுள்ளது. இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைத்துப்பாக்கியினை எடுத்த ஈபிடிபியினர் அங்கஜன் இராமநாதன் உடனடியாக நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவீர் என்றும் எச்சரித்துள்ளனர். சம்பவத்தினை அடுத்து பதட்டமடைந்த அங்கஜன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். குறிப்பிட்ட அங்கஜன் வெளிநாட்டில் இருந்து தற்போதே இலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.