செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழனின் நிலை,!புத்தனின் நிலை,! இனி வரும் காலங்களில் பதில் கூறும் மனித தர்மம் ..........................

இனப்பிரச்சனை தீர்வுக்கான வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு இனமோதல் வெடிக்கும்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், அது இன்னொரு இனமோதல் உருவாவதற்கு வழிவகுத்து விடுமென எச்சரித்துள்ளார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி.

விரிவுரையாளர் நிர்மல் தேவசிறியை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினை ஒன்றிணைத்து செயற்படுவதில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவும்படி தேர்தல் பரப்புரையின்போது மகிந்த ராஜபக்ச மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற ஆசனங்களின் அடிப்படையில் மக்கள் அவரது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர் எனக் கருதினாலும், நாட்டின் சுமார் 55 சதவீதமான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளமையானது, நாடு தனக்குப் பின்னால் நிற்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துவரும் கருத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் ஏ.எவ்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள இவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தினை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டமை அரசியல் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளரான விக்ரர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதோடு, நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய பெரும் சவால் மகிந்த ராஜபக்சவின் முன்னால் உள்ளதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் மீது மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியின் வெளிப்பாடே இது எனத் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக, மக்களின் ஆணையற்ற ஒரு நாடாளுமன்றம் நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் தமிழ் மக்களும் மிகக் குறைந்தளவே வாக்களித்துள்ளார்கள். நாடு இன்னமும் பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞை இது, ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேசியவாதக் கொள்கை குறித்து தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெரும் சந்தேகத்தின் வெளிப்பாடே இது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிதைந்து போன இப்பகுதிகள் பல பில்லியன் டொலர் செலவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற உறுதி வழங்கியிருந்தார்.

ஆனால், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில் கூட மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முழு வெற்றி பெறவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு சுயாட்சி வகையிலமைந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலரான நிமல்கா பெனாண்டோ தெரிவிக்கின்றார். இலங்கை இன்னமும் பிளவடைந்திருப்பதை தேர்தல் முடிவுகளைக் காட்டும் மாவட்ட ரீதியான வரைபடம் தெளிவாகக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பலமான நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து தப்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் கூறிவிட முடியாது.

அவர் வாக்குறுதி அளித்ததைப் போல நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அமைதியினையும் ஏற்படுத்துவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நிமல்கா பெனாண்டோ குறிப்பிடுகின்றார்.

நீதியனதும், நியாயமானதுமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதோடு, தமக்கு மறுக்கப்படடுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் இவ் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான பலம் தமக்கு இல்லை என்று இப்போது தட்டிக் கழிக்க முடியாது. மகிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க விரும்பினால், அதற்குத் தேவையான மேலதிக அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் தற்போது உள்ளது.

தமிழ் வாக்காளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் தமிழீழ மக்களுக்கான அரசியல் பலமாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காலம் அதிக அளவு கடமைகளைச் சுமத்தியுள்ளது. முன்பு போல அவர்களை நேர் வழியில் பயணிக்க வைக்க களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற இலட்சிய தாகம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் கனலாகக் கனன்று கொண்டே உள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஒட்டு மொத்தமாக 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் தற்போது அளவுக்கு அதிகமாக நம்பிக்கையைத் தொலைத்து விட்டு மௌனித்துப்போய் உள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களிடம் எதிர்கால நம்பிக்கை ஊட்டும் பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத் தடுமாற்றமே புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. புலம்பெயர் தமிழர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களது விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் கடுமையாகப் போராடி வருகின்றார்கள். அவர்களது ஆத்மார்த்தமான உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தமிழீழம் குறித்த அக்கறைகளையும், அர்ப்பணிப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கான பலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இனியாவது நெருக்கமான உறவினைப் பேண முயல வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே, ஈழத் தமிழர்களின் பலமாக உருவாகிவரும் மக்கள் பேரவைகள், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவை ஈழத் தமிழர்களுக்கான மேற்குலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தி வருகின்றன. புலம்பெயர் தேசம் எங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்பில் 98 வீதத்திற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழமே ஒரே தீர்வு' என்ற தமது விருப்பை நிலைநாட்டியுள்ளனர். எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் நிராகரித்த இந்தத் தேர்தல் மூலம் சிங்கள நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு மாறான ஒரு தீர்வை ஈழத் தமிழர்களிடம் திணிக்க முயலக் கூடாது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மட்டுமே தமிழீழ மக்களின் ஆணைக்குட்பட்டது. மாறாக, வேறு எந்தத் தெரிவானாலும் அவர்களிடம் மீண்டும் ஆணை பெற்றே தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமான அமைதி வாழ்வு வாழ்ந்த தமிழர்கள் தான் புயலாகச் சினந்து புலியாக மாறினார்கள். இப்போதும் அவர்களது அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் சிங்கள இனவாதிகளால் அதிகரிக்கப்பட்டே வருவதால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திசை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களது இந்த மௌனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜபக்ஷக்களின் இந்த அரசியல் வெற்றிகள் ஈழத் தமிழர்கள் மீது இன வன்முறையையே தொடர்ந்தும் பிரயோகிப்பதற்குப் பயன்படுமானால், மீண்டும் அவர்கள் புலியாக எழுவது தவிர்க்க முடியாமல் போகும். அது, சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படிப் பயணிக்கப் போகின்றது என்பதில்தான் தங்கியுள்ளது

படையினரின் நடமாட்டத்தால் வன்னியில் பெண்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

வன்னியில் படையினரின் நடமாட்டத்தினால் தமிழ்ப்பெண்கள் அச்சத்துடன் வாழ்து வருகின்றார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான அகதிள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அரசின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளை வன்னியில் பார்வையிட சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு, அபிவிருத்தி மற்றும் ஒத்திசைவிற்குமான சுவிசின் பிரதிநிதிகள் இணைந்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்கள். வன்னியில் தமிழ்ப்பெண்கள் மீள்குடியேற்றப்பட்ட பின்பு தமது நாளந்த வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பாக இருப்பிடங்களை அமைப்பதற்கும் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக்கொள்வதிலும் மற்றவர்களில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருசதாகவும் தெரிவிக்கப்டப்டுள்ளதுஇவ்வாறு பலதமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ள நிலையிலும், துணைவன்மார்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்டப்டுள்ள நிலைகளில் இருப்பதால் படையினரின் அதிகளவான நடமாட்டத்தினால் இவ்வாறு ஆண்துணையின்றி வாழும் பெண்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப்போரின் போது இடம்பெயர்ந்த மக்கள பல இன்னல்களை சந்தித்து வதைமுகாம்களுக்கு வந்தபோது ஐக்கிய நாடுகள் சபையினால் ஒருதொகை உதவிக்கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்கள் தமக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் தற்போது பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.