புதன், 3 பிப்ரவரி, 2010

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்... சம்பந்தன் - பொய்மைந்தன்

தமிழீழத் தாய்மண்ணின் விலங்கொடிப்பதற்காக, தமிழ் மக்களின் விடிவிற்காக, தம்மையே தகர்த்துக்கொள்ளும் கரும்புலிகளையும், இரத்தமும் சதையும் பீறிட உயிர் நீர்த்த மாவீரர்களையும் விடுதலைப் போருக்கு உருவாக்கிய எம் தலைவனால், தமிழீழ அரசியல் போருக்காக, பிரிந்து நின்ற அமைப்புக்களையும், தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயத்துடனான தனித்தமிழீழ அரசுக்கோட்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. எங்கள் தேசியத்தலைவரின் விருப்பிற்கிணங்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதால், அது தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அதற்குமுன் கூட்டமைப்பினரை யாரும் அடையாளம் கண்டதில்லை. அதிலும் சம்பந்தனை திருகோணமலையிலோ, அல்லது வேறெங்குமோ யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. அவர் மக்களால் தூக்கியெறியப்பட்டு, ஏற்கனவே தேர்தல்களில் முகம்கொடுக்க முடியாமல் இருந்தவர். மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர் மட்டும் சுகமாக இந்தியாவில் வாழ்ந்தவர். பதவிக்கும் புகழுக்கும் பேராசைகொண்டு கூட்டமைப்பில் இணைந்து, பழசு என்ற காரணத்தால் தலைமையையும் பெற்றுக்கொண்டவர். இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார். தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையான வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கிய சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நட்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார். இவ்வாறு தமிழ் மக்களை சரத்திற்கு வாக்களிக்க வைத்து, இனவெறியன் மகிந்தவின் தீராத பகையாளியாக்கியுள்ளார். இதுதான் தமிழ்மக்களுக்கு அவர் ஆற்றியதொண்டு. இலங்கைச் சட்டசபையில் தனித்தமிழீழத்திற்காக குரல் கொடுக்கவேண்டிய சம்பந்தன், எமது தேசியத் தலைமை மீது பலமுறை சேற்றை வாரி இறைத்துள்ளார். சிங்களத்தின் கறுப்புப்பணம் அவர் பைகளை நிரப்பியதால், இனி தனிநாடு கேட்டுத் தனது சிங்கள நண்பர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறிச், சிங்களத்தின் வயிற்றில் பால் வார்த்துள்ளார். விலகித் தூரநின்று துரோகம் செய்பவன் கருணா என்றால் விலகாமல் கூட இருந்தே குழிபறிப்பவர் சம்பந்தன். தமிழ் மக்களின் தமிழீழத் தாகத்திற்கு ஆப்புவைக்கும் சம்பந்தன் போன்ற செயல் வீரர்கள் இருக்கும்வரை எங்கள் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும். சாக்கடை நீரானது கடல்நீரைச் சேர்ந்தால் அதற்குப் பெயரும் வேறாகிப் புண்ணிய தீர்த்தமாகிவிடும். கடல் பொங்கும்போது கடல்நீர் சாக்கடையில் புகுந்தால் மீண்டும் அது சாக்கடைநீராகி அருவருப்புக்குள்ளாகிவிடும். சம்பந்தனும் இனி சாக்கடைநீர்தான், இனி தமிழ்மக்கள் அருவருப்புடன்தான் அவரை அவதானிப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக