ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

எரித்திரியா எமக்கு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது

எரித்திரியாவுடன் தாம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இராஜதந்திர உறவுகள் சில ஊடகங்களின் அறிக்கைகளினால் முறிவடைந்துள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், குமரன் பத்மநாதன் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பெரும் பயனுள்ளவை எனவும் கோத்தபாயா ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசு எரித்திரியாவின் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயன்றிருந்தது. ஆனால் சில ஊடகங்கள் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளால் அது முறிவடைந்துள்ளது. தற்போது எரித்திரியா எல்லா வழிகளையும் மூடியுள்ளது. அவர்கள் எங்களுடன் பேச விரும்பவில்லை. அவர்களுடனான உறவுகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன. எரித்திரியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு நாம் அங்கு தூதரகத்தை அமைப்பதற்கு முற்பட்டிருந்தோம். ஆனால் எரித்திரியா தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு விவகாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்துவது மிகவும் பின்னடைவான விளைவுகளை எமக்கு ஏற்படுத்துகின்றது. எரித்திரியா தொடர்பில் நாம் சில கசப்பான அனுபவங்களை பெற்றுள்ளோம். எரித்திரியாவில் விடுதலைப் புலிகள் பலமான வலையமைப்பை கொண்டுள்ளதை நாம் அறிவோம். ஆனால் ஊடகங்கள் எமது நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதால் எம்மால் எரித்திரியாவின் ஆதரவை பெறமுடியவில்லை. தற்போது நாம் மீண்டும் அவர்களுடன் உறவை ஏற்படுத்த முயன்று வருகின்றோம். பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பல்வேறு வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அது அந்த நாடுகளுக்கு தெரியாது. நாம் தான் அதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.சில நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவது பயனற்றது, ஏனெனில் அவர்கள் அதனை விரும்புவதில்லை. சில நாடுகள் தமது நாடுகளில் விடுதலைப் புலிகள் செயற்படுகின்றனர் என தெரிவிப்பதை விரும்புவதில்லை. இது தொடர்பில் எமக்கு உள்ள சிறந்த உதாரணம் எரித்திரியாவாகும். விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு மேற்குலக நாடுகள் எம்முடன் ஒத்துழைப்பதில்லை. அதற்கு காரணம் அங்குள்ள மிகப்பெரும் புலம்பெயர் தமிழ் சமூகமாகும். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள். புலம்பெயர் தமிழ் சமூகத்தின் அழுத்தங்களை மீறி எம்மால் மேற்குலக நாடுகளை (குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை) எமது பக்கம் திரும்ப முடியவில்லை. இந்த நாடுகளின் உதவிகள் இன்றி விடுதலைப் புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது என்பது கடினமானது. இராணுவ மோதல்கள் மூலம் பெறமுடியாததை, சில நாடுகளின் உதவிகளுடன் அடைந்துவிட விடுதலைப் புலிகள் முயன்று வருகின்றனர். எனினும் பெரும்பாலான தமிழ் சமூகம் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் சிறீலங்காவுக்கு மீண்டும் வந்து வாழ விரும்புகின்றனர். குமரன் பத்மநாதனை நாம் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை. அவர் வழங்கிவரும் தகவல்கள் எமது புலானாய்வுப்பிரிவினருக்கு பயனுள்ளவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக