புதன், 22 செப்டம்பர், 2010

வெறுமை நிறைந்த மனங்களில்

சிதைவுகளால் மூடுண்டுள்ள நிலத்தில்
சாட்சிகள் ஒளிக்கப்பட்டுள்ளது…..
ஒளித்திருப்போர் ஒளிவீசாதபடி
அச்சமூட்டும் பேய்கள் நிறைந்து
பயங்களால் அழிகிறது வாழ்வு……

பதுங்குகுளியிலிருந்த வாழ்வு இப்போ
பயங்களால் நிறைகிறது.
கம்பிகளின் பின்னால் சாவுறையும் நினைவுகளோடு
காத்திருக்கும் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும்
அம்மாக்கள் அழுதுவடிக்கும் கண்ணீரால்
காலம் தனது கவிதைகளை எழுதிச் செல்கிறது.

காணாமற்போன பிள்ளைகளையும் கணவர்களையும்
கனவுகளில் கண்ணுற்றுத் திடுக்குற்று விழித்த
கண்களிலிருந்து வரலாற்றின் கதைகள்
தோற்றுக் கொண்டிருக்கிறது…..

வெறுமை நிறைந்த மனங்களில் – எல்லாம்
வெற்றிடமாய் கிடக்கிறது
ஓர் சந்ததியின் வாழ்வு
சாவுகளால் அடை(ட)க்கப்பட்டுள்ளது…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக