சனி, 4 ஜூன், 2011

எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள்,,,

நிழற்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம்குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்கள இராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை நிழற்படத்தில் காணும்போது இதயம் சுக்குநுறாக வெடிப்பது போலவே இருக்கிறது.





கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்த நிழற்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன. அந்தக்காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிகநீண்டகாலத்துக்கு எப்படி.. ஏன்.. யாரால் இப்படிநிகழ்ந்தேறியது என்ற கேள்வி அந்த நிழற்படங்களை பார்ப்பவர்களின் மனதை போட்டு பிசைந்து பிசைந்து மனஉறுதியை உடைத்தெறிந்து துளாக்கிவிடும்.


ஏனென்றால் அந்த வீரர்களை நாம் எங்களின் பிள்ளைகளாக, எமது சகோதரங்களாக, எங்கள் உயிர்த்தோழர்களாக, எல்லாவற்றையும்விட எமது தேசத்தின் காவல்தெய்வங்களாக நினைத்திருந்தோம். எங்களின் விடுதலைக்காக எண்ணற்ற களங்களில் எதிரிக்கு மரண அடிகொடுத்தவர்கள் அவர்கள். கடந்துபோன காலங்களில் பெரும் எடுப்புடன் மிகப்பெரும் படையணியாக வந்த எதிரிகளை மிகச்சிறிய படையணிகளைக்கொண்டே சுற்றிவளைத்து தாக்கி துரத்தியவர்கள் இவர்கள்.


எமது விடுதலைப் போராட்டத்தின் நம்பிக்கைத்துண்கள் இவர்கள். அப்படியானவர்கள் வெற்று உடலகங்களாக, உடம்புமுழுதும் இரத்தத்துடன் கிடக்கும் காட்சியை பார்க்கும்போது மனம் மெதுவாக சுருளத்தொடங்கிவிடும். ஆனால் இப்படியான உள்ளக் குமுறல்களுக்குள்ளாக சிலவற்றை நாம் சிந்திக்க வேண்டியதும், ஆராய்வதும் தேவையாக இருக்கின்றது.


அந்த நிழற்படங்களின் கோரங்கள் நடந்துமுடிந்து இரண்டு வருடமாகின்றது. 2009ம் ஆண்டின் மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் அது நடந்திருக்கின்றது. அப்படியானால் இந்த படங்களை இரண்டு வருடம் கழித்து இப்போது வெளியிட வேண்டிய காரணங்கள் எவை..? இந்த நிழற்படங்களை வெளியிட்ட எல்லா இணையங்களைவிட இந்த நிழற்படங்களை இணையங்களுக்கு வழங்கியவர்களுக்கு இருக்கும் நோக்கங்கள் எவை..?


போர்க்குற்ற ஆதாரம் என்ற வெற்றுக்காரணம் வெளிப்படையாக சொல்லிக்கொண்டே வெளியிடப்படும் இந்த நிழற்படங்களின் உண்மை நோக்கம் ஒரு வகையான உளவியல் தாக்குதல்தான். இத்தகைய உளவியல் தாக்குதல் இன்று, நேற்று சிங்களத்தால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அந்த நிழற்படங்களை பார்த்தபோது எங்களுக்குள்? பெரும்பயம் ஒன்று தோன்றி இருந்தால் அது அவர்களுக்கு வெற்றியே. அந்தப் படங்களை பார்த்த போது எமது உள்ளங்களுக்குள் சோர்வு எழுந்திருந்தால் அதுவும் அவர்களுக்கு வெற்றிதான்.


மனஉறுதியை இலக்கு வைத்துதான் இப்படியான காட்சிபடுத்தல்கள் நடாத்தபடுகின்றன. தமது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் இதே வழியினுடாகவே மனங்களுக்குள் பயத்தையும், சோர்வையும் புகுத்துவார்கள். இது நேற்று, அதற்கு முன்தினம் தோன்றிய ஒரு உத்தி அல்ல. 1983ல் லெப்.சீலனும், வீரவேங்கை ஆனந்தும் மீசாலையில் வீரமரணமாகியபோது குருநகரிலிருந்து வந்திருந்த இராணுவத்தினரிடம் அவர்களின் உடலங்கள் அகப்பட்டுக்கொண்டன.


தமிழீழ வரலாற்றிலேயே மிகச்சிறந்த தளபதியான சீலனின் உயிரற்ற உடலில் இருந்த ‘சாரம்’ அகற்றப்பட்டு வெறும் உள்ளாடையுடன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் போடப்பட்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு வரிசையாக காண்பிக்கப்பட்டு அதன் ஊடாக வெளியில் இருந்த போராளிகளுக்கு போராடி மடிந்தால் இப்படித்தான் கேவலமாக சவக்கிடங்கில் கிடப்பீர்கள் என்று அச்சுறுத்தலுடன் கூடிய செய்தி போராட்டமனங்களுக்குள் தெரிவிக்கப்பட்டது.


பின்னர் 85ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களுக்கும், நிதிக்கும் பொறுப்பானவரும், மத்தியகுழு உறுப்பினருமான கப்டன் பண்டிதர் அச்சுவேலியில் நிகழ்ந்த சிங்களப்படை முற்றுகை ஒன்றுக்குள் போராடி மரணித்தபோது அவனின் வெற்றுடலை எடுத்து சிங்கள அரச தொலைக்காட்சியான ரூபவாகினியில் மணிக்கொருதரம் காட்டியதற்கு பின்னால் ‘உங்களின் மிகமூத்த உறுப்பினரும், பெரும் தளபதியுமான பண்டிதருக்கே இந்த நிலைதான்’ என்ற உளவியல் செய்தி தான் இருந்தது.


90களின்போது மண்கிண்டிமலைத் தாக்குதலுக்கு சென்ற போராளிகள் சுற்றிவளைக்கப்பட்டு தாக்கப்பட்டபோது 200க்கும் அதிகமான போராளிகள் வீரமரணமாகினர். அவர்களின் உடலங்கள் அனைத்தும் மீட்கப்படமுடியாமல் சிங்கப்படைகளிடம் சிக்கியபோது இப்போது போலவே ஆண், பெண் போராளிகளின் உடலங்களையும் உடையையும் சிதைத்து, கிழித்து மோசமாக நிழற்படங்களாக சிங்களத்தின் தொலைக்காட்சியிலும், அச்சுஊடகங்களிலும் படம்காட்டப்பட்டதும் வெறுமனே சிங்கள முகாம் மீதான தாக்குதல் முறியடிப்பு என்பதற்கு அப்பால் ‘அனாதைப் பிணங்களாக, சிதைந்துகிடப்பீர்கள்’ என்ற தகவல் இருந்தது.


94ம் ஆண்டில் சந்திரிகா ஜனாதிபதியாக வந்தபோது நல்லெண்ண அறிகுறியாக விடுதலைப் புலிகள் அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியில் லெப் கேணல் மல்லி மீது தாக்குதல் நடாத்தி, வீரச்சாவு அடைந்தபின்பும் அவரின் தலையை வெட்டி எடுத்துவிட்டு வெறும் பிண்டத்தை மட்டும் அந்த இடத்திலேயே விட்டுசென்றதற்கு பின்னுக்கு என்ன செய்தி இருந்தது.


தளபதி மல்லி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப்பிரிவின் இரண்டாவது நிலைத் தளபதிகளில் ஒருவர். முக்கியமானவர். அப்படியான முக்கியத்துவம் மிகுந்த புலனாய்வுத் தளபதியின் தலையையும் வெட்டிச்செல்லமுடியும் என்ற உளவியல் செய்திதான் அந்த தலையற்ற உடலைவிட்டு சென்றவர்கள் சொல்லாமல் சொன்னது.


அநுராதபுரம் விமானத்தளத்துக்குள் சென்று சிங்களத்தின் நெஞ்சுக்குள் தீவைத்த போராளிகளின் உயிரற்ற உடல்களை நிர்வாணப்படுத்தி உழவு இயந்திரத்தின் பேட்டியில் அடுக்கிவைத்து தெருதெருவாக ஊர்வலம் நடாத்தியது சிங்களமக்களுக்கான காட்சி காட்டுதல் அல்ல. உங்களின் சாவுகள் உங்களுக்கு உன்னதமானவை ஆக இருக்கும். ஆனால் உங்கள் உடல்களை இப்படித்தான் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டுபோவோம் என்ற செய்திதான் சொல்லப்பட்டது.


எல்லாவற்றையும்விட, மரணித்த பின்னரும் உங்களின் நினைவை சொல்லிநிற்கும் எதையும் விட்டுவைக்கமாட்டோம் என்ற செய்திதான் மாவீரர் துயிலகங்களை சிதைத்துவிட்டு சிங்களம் போராளிகளுக்கும், இனி போராட வரப்போகின்றவர்களுக்கும் சொல்லிவைத்த செய்தி.


இத்தகைய உளவியல் செய்திகளையே விடுதலைக்கு போராடும் மக்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் விதவிதமான முறைகளில் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லிவந்திருக்கிறார்கள். சொல்லியும் வருகிறார்கள்.


சிங்களம் இப்போது மெதுவாக கசியவிடும் படங்களுக்கு பின்னாலும் இதைப்போன்ற உளவியல் செய்திகள்தான் எழுதப்பட்டு இருக்கின்றன. நாம் படங்களைப் பார்த்து அதிர்ச்சியிலும், சோகத்திலும் உறைந்துபோய்விடுகிறோமே தவிர படங்களுக்கு பின்னுக்கு பேரினவாதம் எங்களுக்கு தரும் உளவியல் அடியை புரிந்துகொள்ள சுணங்கிப்போகின்றோம்.


இதே உளவியல் அடியை மீண்டும் ஒரு ‘பூமராங்’ போல சிங்களத்துக்கு எதிராக சுழற்றிவீச நாம் முயலவேண்டும். அவர்கள் கோரமாக மரணித்துக்கிடக்கும் எங்களின் தோழர்களினதும், தளபதிகளினதும் படங்களை காட்டி எமது மன உறுதியை உடைத்து துள்துள் ஆக்க நினைக்கிறார்கள்.


நாம் என்ன செய்யவேண்டும்?


அதே தோழர்கள் கடந்த காலங்களில் அதிஉச்ச வீரம் வேகம், போர்க்குணம் காட்டிய களங்களை நினைவுகொள்ளவேண்டும். அந்த வீரர்களுக்கு அஞ்சி சிங்களம் ஒடுங்கிநின்ற காலத்தையும், ஓடிய காலத்தையும் மீளமீள நினைத்துக்கொள்ள வேண்டும். எமது இனம் எழுந்துநின்று போர்க்கோலம் கொண்ட காலத்தின் அடையாளங்கள் அவர்கள். தன்னம்பிக்கையின் உச்சம் அவர்கள். அவர்களின் நினைவுகள் உறுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு மட்டுமேதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக