வியாழன், 23 செப்டம்பர், 2010

நமது ஈழநாடு நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் பொன்னுத்துரை குருதேவ் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலர் வீதியில் உள்ள ’நமது ஈழநாடு’ அச்சகம் மற்றும் பணியகமே காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளது.
அதன் உரிமையாளரான பொன்னுத்துரை குருதேவ் சிறப்புக் காவல்துறைக் குழுவினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
2002ம் ஆண்டு ஒக்ரோபர் 01ம் திகதி தொடக்கம் ’நமது ஈழநாடு’ நாளிதழ் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டு வந்தது. 2006 ஓகஸ்ட் 20ம் திகதி ’நமது ஈழநாடு’ நாளிதழின் நிர்வாகப் பணிப்பாளர் சின்னத்தம்பி சிவமகாராசா சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் தெல்லிப்பளையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
இதையடுத்து ’நமது ஈழநாடு’ நாளிதழ் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் ’சுரபி பதிப்பகம்’ என்ற பெயரில் அங்கு அச்சுவேலைகள் இடம்பெற்று வந்தன. இந்த அச்சகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தினமுரசு ஏட்டை அச்சிட்டு வெளியிடுவதற்கும் முயற்சித்திருந்தனர். அதற்கு உரிமையாளர் மறுப்பு வெளியிட்டிருந்தார். தற்போது ஈ.பி.டி.பியினர் யாழ்ப்பாணத்தில் தினமுரசு நாளிதழை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக