வியாழன், 22 ஏப்ரல், 2010


அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚ மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்… மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்… மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்… மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்… எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக