புதன், 7 ஏப்ரல், 2010

தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்...........

பூமி உருண்டையானது. அது மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தாமும் இயங்கிக் கொண்டு, வரலாற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது. இந்த இயக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள், அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். சில நிகழ்வுகள் வியப்பை தந்திருக்கலாம். சில அச்சத்தையும், வேறு சில மகிழ்வையும் விளைவித்திருக்கலாம். இவை அனைத்தும் மாறி மாறி நிகழ வேண்டும் என்பது ஒரு நியதி. மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கால ஓட்டத்தில் அனைத்தும் கலந்து அடித்துச் செல்லப்படும். அவைகளின் திடமான பதிவுகள் வரலாறாய் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில்தான் பல்வேறு சம்பவங்கள் நமக்கு நினைவுகளாய் நிலைத்து விடுகின்றன. அவை நாம் விரும்பினாலும் மனங்களைவிட்டு அகன்று போகவில்லை. இது கால, சமூக கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாந்தகுலம் ஏற்று, அனுபவித்துவரும் ஒரு இயக்கவியல் கோட்பாடு. இதிலிருந்து யாராலும் மீற முடியாது. இதிலிருந்து ஒருவரும் தப்பித்துச் செல்ல முடியாது.எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது. கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி. தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள். அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது. எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக