புதன், 7 ஏப்ரல், 2010

பொய்ப் பரப்புரையில் ஈடுபடும் தமிழ்வின் இணையத்தளம்

தமிழ்த் தேசியத்திற்காகக் குரல் கொடுக்கின்றோம் எனக்கூறும் “தமிழ்வின்” இணையத்தளம், கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை வேட்பாளர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். பிலிப்பையா ஜோன்சன் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களால் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில், தமது அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழ்வின் இணையத்தளம் பொய்ப்பரப்புரையை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன், மற்றும் பிலிப்பையா ஜோன்சன் ஆகியோர் கூட்டாகக் கூறியுள்ளனர். தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகி விட்டார்கள் என்பது உட்பட, இவ்வாறான பல பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனையும் மீறி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு பெருகி வருவதால், தமிழ்வின் இணையத்தளம் இவ்வாறான அடாவடித்தனமான பொய்ப் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. உண்மையான ஊடக தர்மத்துடன் இந்த இணையத்தளம் இயங்கினால் இருவரிடமும் கருத்துக்கேட்டு அதனை உறுதி செய்திருக்க வேண்டும் என, இரண்டு வேட்பாளர்களும் கண்டனம் வெளியிட்டனர். கெளரிமுகுந்தனும், ஜோன்சனும் பிளவுபட்டுள்ளதாகக் கூறும் தமிழ்வின் இணையத்தளம், அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இணைந்திருக்கும் நிழற்படத்தை, தங்களுக்குத் தெரியாமலே வெளியிட்டுள்ளமைதான் மிகவும் நகைப்பிற்கிடமான விடயமாகும். தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையத்தளங்களின் உரிமையாளரான சுவிசில் வசிக்கும் சிறிகுகனின் சகோதரரான சிறீதரன் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதால், ஒருபக்க செய்திகளையும், இவ்வாறான விசமப் பரப்புரைகளையும் அந்த இணையத்தளம் மேற்கொண்டு வருவதாகக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக