செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பத்திரிகை தர்மம்

ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா. தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திருந்தார். ராஜபக்சேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்சேவின் ஆட்சியை தீவிரமாக விமர்சனம் செய்து, அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இனப்படுகொலைகளை லசந்த விக்கிரமதுங்கே நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்து விடவில்லை. புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்சேவை விமர்சனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக் கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அவர் அளித்திருந்தார். லசந்த விக்கிரமதுங்கவைப் போலவே என்.ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னை பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர். இன் சீஃப் என்.ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால் என்றாவது லசந்தாவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?இது தேசிய அவமானம் என்பதாக மங்களூர் பப் விவகாரம் பற்றி நீட்டியும், முடக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதரவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா? இலங்கை ராணுவம் போரில் சிறு முன்னேற்றம் கண்டாலும், ஆஹா வீழ்ந்தது முல்லைத்தீவு, அடுத்து கிளிநொச்சிதான் என்று கிளர்ச்சியுடன் எழுதிக் கொண்டு போகிறது தி ஹிந்து. புலிகள் இத்தோடு ஒழிந்தார்கள், இனி அவ்வளவுதான் என்று வாரத்துக்கு இருமுறையாவது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும். ஸார், மிகவும் சரியாகச் சொன்னீர்கள். புலிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். புலிகள் ஆயுதம் ஏந்துவதால்தான் இத்தனை பிரச்சனையும். ராஜபக்சே அப்பழுக்கற்ற தியாதி. அவர் அளிக்கும் வாய்ப்புகளை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் உள்ள கட்சிகளும் புலிகளிடம் பேசி, ஆயுதங்களை துறக்கச் சொல்ல வேண்டும். மற்றபடி, தமிழீழம் அமையும் என்று சொல்வதற்கில்லை. சிறிதும் சளைக்காமல் ஒருநாள் விட்டு ஒருநாள் ராஜபக்சேவிடம் பேசி, ஏதாவது மேட்டர் வாங்கி முதல் பக்கத்தில் போட்டு விடுகிறார் என்.ராம். தமிழர்களை நான் அவசியம் பாதுகாப்பேன். இந்தியா இனி அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் எல்லோரையும் விட, தமிழர்கள்மீது எனக்கு அளவு கடந்த பாசமும், நேசமும் உண்டு. எங்கள் எதிரிகள் விடுதலைப்புலிகள். அவர்கள் மீது மட்டும்தான் நாங்கள் யுத்தம் தொடுத்துக் கொண்டிருக்கிறோம். இடையில் எப்போதாவது, பை மிஸ்டேக் சில சிவிலியன்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். என்.ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார். ‘உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி.’ லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக