செவ்வாய், 1 ஜூன், 2010

பெரும் சவாலை ஏற்படுத்தப் போகும் "நாடுகடந்த அரசு"

இலங்கை அரசின் மீது சர்வதேச ரீதியாக வலுப் பெற்றுவரும் மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகள் ஒருபுறமிருக்க தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் உருவாக்கமும் அதன் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த சவாலாக அமைந்துள்ளது

சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு எதிராக வலுப்பெற்று வரும் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளை சமாளித்து கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தால் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத் துறையில் வல்லுனரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீது வந்து கொண்டிருக்கும் வரப் போகும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கு இராஜதந்திர ரீதியாக செயற்படக் கூடிய ஒரு இராஜதந்திரி என்பதை யாரும் மறுக்க முடியாது.


இலங்கை அரசின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் மற்றும் போர்க்குற்றங்களிற்கு ஒரு வருடமாகியும் பல ஆதாரங்கள் இருந்தும் இன்றுவரை இலங்கை அரசாங்கத்தின் மீது ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை சர்வதேசம் மேற்கொள்ள முடியாது இருப்பதற்கான காரணம் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகளே காரணம்.


ஆணை குழுக்களை அமைக்கிறோம், நல்லிணக்க சபைகளை அமைக்கிறோம், விசாரணைகளை நடத்துகிறோம் என்று சர்வதேசத்திற்கு பூச்சாண்டி காட்டும் இலங்கை அரசு நாடுகடந்த அரசின் செயற்பாடுகளை முடக்குவதற்கு புதுவிதமாக ஒரு இராஜதந்திரத்தை கையாளுகிறது. அது தான் கருத்தியல் இராஜதந்திரம் ( Informatic Diplomacy).


நாடுகடந்த அரசின் முதலாவது செயலமர்வு கூட்டம் ஜெனிவாவில் நடைபெறும் என்று இருந்த போதிலும் அது தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக 32 நாடுகளில் தடைசெய்வதற்கு முன்னோடியாக இருந்த அமெரிக்காவில் நடைபெற்றமையானது இலங்கை அரசாங்கத்தை திகைக்க வைத்துள்ளது.


நாடுகடந்த அரசின் செயற்பாடுகள் இலங்கை அரசிற்கு பெரும் சவாலை ஏற்படுத்த போகின்றது என்பதை புரிந்து கொண்ட இலங்கை அரசு அதன் செயற்பாடுகளை முடக்கி அதை இல்லாமல் செய்வதற்கு பல்வேறுபட்ட கருத்தியல் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.


இன்று வரை இலங்கை அரசு நாடுகடந்த அரசாங்கத்தையோ அல்லது அதன் செயற்பாடுகளையோ தடை செய்யும் படி உத்தியோகபூர்வமாக எந்த நாடுகளையும் வேண்டியதில்லை. அண்மையில் ஜி. எல். பீரிஸ் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தித்த போதும் நாடுகடந்த அரசாங்கம் சம்பந்தமாக எதுவும் கதைக்கவில்லை. இவ்வாறு இலங்கை அரசு செயட்படுவதற்கு அதன் இராஜதந்திரமான போக்கே காரணம்.


இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளிடம் நாடுகடந்த அரசை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டால் வெளிநாடுகள் நாடுகடந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடு, அதை நாங்கள் தடை செய்ய முடியாது என்று கூறினால் அது இலங்கை அரசிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விடும். இதன்காரணமாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளிடம் நாடுகடந்த அரசு சம்பந்தமாக எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை.
மாறாக அவர்கள் நாடுகடந்த அரசாங்கத்தை புலம் பெயர் தமிழ் மக்களிடம் இருந்து தனிமை படுத்த வித்தியாசமான தந்திரத்தை கையாளுகிறார்கள். கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறிய கருத்துக்கள் சான்று பகிர்கின்றன.


. பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் கூறுகிறார் நாடுகடந்த அரசு தொடர்பாக நாங்கள் பெரிதும் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்கிறார்..


. விநாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார் புலம்பெயர் தமிழ் மக்கள் பிரிந்து நிற்கிறார்கள்.. நாடுகடந்த அரசு மூலம் தமிழ் மக்கள் எதையும் சாதிக்க மாட்டார்கள் என்கிறார்..


சிங்கப்பூரைத் தளமாக கொண்ட பயங்கரவாதம் குறித்த ஆய்வளரான ரொஹான் குணரட்ன ( கே.பி கைது தொடர்பில் முக்கிய பங்கு வகித்தவர்) கே. பி யையும் நாடுகடந்த அரசாங்கத்தையும் தொடர்புபடுத்தி ஒரு கீழ்த்தரமான கருத்தை வெளியிட்டார்.
புலிகள் அமைப்பை தடைசெய்தது போன்று நாடு கடந்த அரசாங்கத்தை ஒன்றும் செய்து விட முடியாது என்று நன்றாக புரிந்து கொண்ட இலங்கை அரசு புலம்பெயர் மக்களை குழப்பும் விதமாக தனது கருத்தியல் இராஜதந்திரத்தை இலங்கை இந்திய ஊடகங்கள் மூலமும் செய்து வருகிறது.


இதில் உள்ள வேடிக்கை ஏனென்றால் புலம் பெயர் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் ஒரு சிறிய குழு (புலம் பெயர் தமிழ் மக்களின் பணத்தில் இயங்கும் சில ஊடகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்) இலங்கை அரசாங்கத்தின் நாடுகடந்த அரசு தொடர்பான காழ்ப்பு பிரச்சாரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி முன்னுரிமை கொடுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.


இது தொடர்பாக புலம் பெயர் தமிழ் மக்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும்.


விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியது போல் இல்லாது ரொஹான் குணரட்னவின் நாடுகடந்த அரசு தொடர்பான காழ்ப்பு பிரசாரங்களை கருத்தில் எடுக்காது புலம்பெயர் மக்கள் அனைவரும் நாடுகடந்த அரசாங்கத்திற்கு பக்க பலமாக நின்று தலைவர் ஏற்றி வைத்த அந்த விடுதலைத் தீயை அணையாது காப்பாற்றி எமது மாவீரர்கள் எதற்காக மடிந்தார்களோ எமது மக்கள் எதற்காக எத்தனையோ உயிர்களை பறிகொடுத்தார்களோ அந்த இலக்கை நோக்கி அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக