செவ்வாய், 1 ஜூன், 2010

மகிந்தா எனும் மாந்தகுல எதிரி!!

இரத்தவெறி பிடித்த காட்டுமிராண்டியாய் ஒரு இனத்தின்மீது வரலாறு காணாத அளவிற்கு பெரும் கொடுமையை நிகழ்த்திய ராசபக்சே தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி. அகில உலக போர்குற்ற நடவடிக்கையில் கைது செய்து, நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டிய இன ஒழிப்பு ஆதிக்கவாதி என்பதை உலகெங்கும் இருக்கும் பல்வேறு தளங்கள் உறுதி செய்து கொண்டிருக்கின்றன.
 தமிழர்களின் வாழ்வில் தொடர்ந்து ஏற்பட்ட கடும் துயர்களின் எல்லையாக 2007 முதல் 2009 வரை நிகழ்த்தப்பட்ட கொடுமை, கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை, ஊனமான தமிழ் உறவுகளின் அகோர வாழ்க்கை இவை எல்லாவற்றிற்கும் காரணம் சிங்கள பேரினவாதி ராசபக்சேதான் என்ற அடிப்படை உண்மை கசியத் தொடங்கி இருக்கிறது. இதுவரை தாம் செய்தவைகள் எவையும் வெளிவராது என்ற இருமாப்பில் இருந்து கொண்டிருந்த ராசபக்சேவின் பேரினவாத கொடுமை அம்பலப்பட்டிருக்கிறது.


சமர் வரலாற்றில் மூன்றே நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது, முள்ளிவாய்க்கால் பகுதியில்தான். அந்த மண்ணை ரத்த சகதியாக மாற்றிய கொடுமைக்காரன் ராசபக்சேவின் கூட்டாளிகளும் குற்றவாளிகள் தான். அவர்களையும் சேர்த்தே நாம் தண்டிக்க வேண்டும். அதற்கு உலகெங்கும் வாழும் மாந்தகுல ஆர்வலர்களை, மாந்தநேய சிந்தனையாளர்களை உடனழைக்க வேண்டும். இதற்கான போராட்ட நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் இருக்கிறார்கள். ஏன் ராசபக்சே தண்டிக்கப்பட வேண்டும்? மாந்த வாழ்வில் அவலத்தை ஏற்படுத்திய, அரக்க மனம் படைத்த ரத்த வெறிகொண்ட போர் வெறியாளனாக களத்திலே இருந்த ராசபக்சே, பெறும் தண்டனையே உலகெங்கும் வாழும் கொடுமையாளர்கள் திருந்துவதற்கு வழி வகுக்க வேண்டும்.


கடந்த 2007, 2008 ஆம் ஆண்டுகளில் வன்னியில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் வீடுகள் இருந்தும் வாழ்வதற்கு பதுங்கு குழிகளையே பயன்படுத்திய பெருங்கொடுமை நிகழ்ந்தது. சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்து பொழியும் வான்வழி குண்டுகளிலிருந்து தப்பிக்க தாயும் குழந்தையுமாக முதியோர்களும் ஆண்களுமாக பதுங்கு குழிகளுக்குள் வாழ்க்கையை தொடர்ந்த கோரம் இடைவிடாமல் இந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. வீடுகள் எல்லாம் பதுங்கு குழி மையங்களாக மாற்றப்பட்டது. சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக நாம் தொடர்ந்து நிகழ்த்திய போராட்டங்கள் நமது வாழ்வுரிமைக்கான போராட்டங்களாக இருந்தது. ஆனால் பாசிச வெறி கொண்ட ராசபக்சே ஆட்சியில்தான் எமது இனம் உயிர் வாழ்வதற்கான உத்திரவாதம் இன்றி, ஓடி ஓடி ஒளிந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டது.


அந்த மக்களின் வாழ்வுக்கு, உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை மட்டுமல்ல, மாந்தநேய கட்டமைப்பிலிருந்து அவர்களை புறந்தள்ளி உணவு, மருந்து ஆகியவையும்கூட அவர்களுக்குக் கிடைக்காத வண்ணம் தடுக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாய் அவர்களை கொன்றொழிக்கும் திட்டத்தை ராசபக்சே அரசு செய்து முடித்தது. உலக நாடுகள் அமைப்பும், செஞ்சிலுவை சங்கமும் வற்புறுத்தியப்பின் பாதுகாப்பு வலையம் என பொய் தோற்றம் கொண்ட கொலைகளம் ஒன்றை உருவாக்கி, அதிலே ஒட்டுமொத்தமாக மக்களை கூட்டம் கூட்டமாக வரச் செய்து அந்த பாதுகாப்பு வளையத்தின்மீது குண்டுவீசி, கொத்துக் கொத்தாய் தமிழர்களை கொன்றொழித்த பெருங்கொடுமையை ராசபக்சே செய்து முடித்தான்.


வேட்டைக்காரன் பறவைகளைப் பிடிக்க தீனியை தூவி வைப்பது போல, பாதுகாப்பு வளையத்தை அமைத்து, ஓடிவந்த எமது தமிழ் உறவுகளை கொன்றொழித்த நயவஞ்சகனாக ராசபக்சே நடந்துகொண்டான். அப்படி கொல்லப்பட்ட தமிழ் உறவுகள் குப்பை அள்ளும் வண்டிகளிலே ஒட்டுமொத்தமாய் அள்ளப்பட்டு, வயல் ஓரங்களிலிலும், ஒதுக்குப் புறங்களிலும் வீசி எறியப்பட்டார்கள். அவர்களின் இறுதி சடங்கை நடத்தக்கூட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு கல் நெஞ்சம் படைத்த பெரும் கொடுமையை சிங்கள பேரினவாத அரசு செய்து முடித்தப்பின் இப்போது நியாயம் பேசிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள்.


உலக அரங்கில் ஜெனிவா உடன்பாட்டின்படி உலக நாடுகள் தடைசெய்த கொத்து குண்டுகள், நாபாம் குண்டுகள், உடலில் பட்டவுடன் பற்றி எறியும் பாஸ்பரஸ் குண்டுகளை மிக தாராளமாக பயன்படுத்தி ஒரு இனத்தையே அழிக்க முயற்சி செய்த பெரும் கொடுமையாளன் இந்த 21ஆம் நூற்றாண்டின் மனித நாகரீகமற்ற அரக்கன் ராசபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலே எமது உறவுகள் ஒரு துளிக்கூட பின்வாங்கக்கூடாது. வாழும் குடியிருப்பு பகுதிகளை மட்டுமல்ல, தேடி ஓடி ஒலியலாம் என்று நினைத்த கோவில்களையும் அவர்களின் பொது கட்டமைப்புகளையும் சீரழித்ததின் மூலம் ராசபக்சேவின் திட்டம் மிகச் சரியாக அம்பலப்பட்டது.


இனி தமிழர்களுக்கான வாழ்வியல் கட்டமைப்பு தமிழீழ மண்ணிலே இருக்கக்கூடாது என திட்டமிட்டு இன அழிப்பாளனாக தமது கோரமுகத்தை காட்டி நின்ற பெரும் கொடுமையாளனாக ராசபக்சேவின் அரக்க முகம் அம்பலப்பட்டது. 2006ஆம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டி பெருங்கொடுமைக்கு ஈடுகொடுக்கும் விதத்திலே இந்த கொடுமை தமிழின உறவுகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதாவது அரேபியர்களின் எண்ணிக்கைக்கு பலமடங்கு அதிகமான படையணிகளை கொண்டுச் சென்று அந்த இன மக்களை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் கட்டமைப்புகளை சிதறடித்த நாசகார தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை தாகீயா தத்துவம் என்று அழைக்கிறார்கள். இதே கீழ்த்தரமான தத்துவத்தை ரத்தவெறியன் ராசபக்சே தமிழின உறவுகளுக்கு எதிராக செயல்படுத்தினான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். போர் முடிந்து ஒட்டுமொத்தமான புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டோம் என்று கொக்கரித்த ராசபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அதன் பின்னரும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து மாறுபடவில்லை. லட்சக்கணக்கான மக்களை உணவு, உடை, உறைவிடமற்ற முகாம்களில் அடைத்து, அவர்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளக்கூட முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக கொடுமைசெய்த அரக்க மனம் படைத்தவனாக ராசபக்சே நடந்துகொண்டதை உலக அரங்குக்கு அம்பலப்படுத்தவேண்டிய கட்டாயக்கடமை தமிழர்களுக்கு உண்டு.


தமிழின உறவுகள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்கள் மீது அறையப்பட்ட சித்ரவதைகள், நிகழ்ந்து முடிந்த பெரும் கொடுமையான கொலைகள் இவைகளை பட்டியல் போட்டு காட்ட வேண்டிய கடமையில் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் இருக்கிறார்கள். நலன்புரிமுகாம் என்று ஒரு நடுவத்தை அமைத்து, அந்த நடுவத்தை நலனுக்கு எதிரான முகாமாக மாற்றிய செயலைத்தான் ராசபக்சேவின் ஏவலாளிகளான சிங்கள பேரினவாத ராணுவமும் செய்தது. அங்கே நடைபெற்ற பாலியல் வக்கிரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சிங்கள கூலி அடிமைகளாக இயங்கிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டி சிங்கள அமைச்சர்கள் சொல்லும் வார்த்தைகளிலிருந்து அவர்களின் மாந்தகுல நாகரீகத்திற்கு எதிரான சிந்தனை வெளிப்படுகிறது.


அதோடு இல்லாமல் ஐ.நா.விற்கான இலங்கைத் தூதர் பாலித்தா கோகோனா என்பவர் மிக தெளிவாக சொல்கிறார், தனி முகாம்களில் 13 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் 10 ஆயிரம் புலிகள் மறைந்திருக்க கூடும் என்று நம்புகிறோம். ஆக, இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதுதான் எமது நோக்கம் என எந்த உலக நிலைகளுக்கும் அஞ்சாமல் பகிரங்கமாக அறிவிக்கக்கூடிய உலக மாந்தத்தின் எதிரியாக சிங்கள பேரினவாதம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


அதோடு மட்டுமல்ல, ராசபக்சேவின் ரத்த உறவு தம்பி பசில் ராசபக்சே இருமாப்போடு திமிரோடு சொல்கிறான், பாலஸ்தீன அகதிகளை மறு குடியேற்றம் செய்ய 70 ஆண்டுகள் ஆயிற்று. வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அகதிகளை மீள் குடியமைக்க 10 ஆண்டுகள் ஆயிற்று. இப்படியிருக்க தமிழ் அகதிகளை மீள் குடியேற்ற துரிதப்படுத்துவது ஏன்? இது நியாயமற்றதல்லவா? என்று கூறும் அளவிற்கு தமிழினம் ஒன்றும் தாழ்ந்து போய்விடவில்லை. நாம் ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் இந்த இன துரோகிகளின் மூலமே அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்யலாம். போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த இறுதியான காலக்கட்டங்களில் பௌத்த தலைவரான தலாய்லாமா இலங்கையிடம் போரை நிறுத்த கோரிக்கை வைத்தார். அவை நிராகரிக்கப்பட்டது.


உலக நாடுகள் பல்வேறு நிலையில் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கைகள் குப்பைத் தொட்டியில் எடுத்து வீசப்பட்டது. எந்த அளவிற்கு இனவெறி கொண்ட அரசாக சிங்கள பேரினவாத அரசு செயல்படுகிறது என்பதற்கு சாட்சியமாக பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் நாடுகளைச் சார்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கொழும்பு சென்று ராசபக்சேவை சந்தித்து பேச திட்டமிட்டபோது, சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா தரமாட்டேன் என்று மறுத்துரைக்கும் அளவிற்கு சிங்கள பேரினவாதத் திமிர் அவர்களுக்குள் உறுதியாக இருக்கிறது. ராசபக்சேவை சந்தித்து பேச வந்த அமைச்சர்களுக்கு சிங்கள வெளியுறவுத் துறை அமைச்சர் ரோகிதா பொகலாகாவை மட்டுமே சந்தித்துப் பேச முடிந்தது. இதனால் பயன் இல்லாத நிலை தான் உருவானது. இந்த நிலையில் அமெரிக்காவை சார்ந்த சட்ட வல்லுனர் பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் மிகத் தெளிவாக கூறுகிறார், போர் குற்றங்களைக் குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வருமானால், அது இலங்கையின் இறைமையில் குறுக்கிடும் செயலாகும் என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கெதிரான ஐ.நா.மாநாட்டில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை ஏற்றுக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.


எனவே ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர், இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியாக ஐ.நா.குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு எல்லாவிதமான அதிகாரமும் அவருக்கு உண்டு என்று கூறிய பாயில்ஸ், மேலும் கடந்த ஆண்டு காசா பகுதியில் பாலஸ்தீன, அரேபிய மக்களுக்கெதிராக இஸ்ரேல் ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் குழு அமைத்த கோல்டு ஸ்டோன் ஆணையம் அந்த குற்றங்கள் உண்மையானவையே என்று கூறியிருக்கிறது. பாலஸ்தீன மக்களுக்கு ஐ.நா. மனித உரிமைக்குழு வழங்கிய நீதியை தமிழீழ மக்களுக்கும் வழங்க முன்வர வேண்டும்.


உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி சர்வதேச போர்க்குற்றங்கள் விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஐ.நா. பட்டயம் 22வது பிரிவின் கீழ் இதை ஐ.நா.வின் இணையமைப்பாக ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் ஐ.நா. பேரவைக்கு உண்டு. ஐ.நா. பேரவையில் யாரும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. ஐ.நா. பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பெரும்பான்மையின் ஆதரவை உலகத் தமிழர்கள் திரட்ட வேண்டும். இதன் மூலம் இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச போர்க்குற்றங்களை விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்க உலகத் தமிழர்கள் முன்வருவார்களானால் அவர்களுக்கு நான் துணையாக இருப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆக, மகிந்தா எனும் அந்த மாந்தகுல எதிரியை நாம் அடையாளம் கண்டு ஒன்றிணைந்து உலக மக்களை ஓரணியில் திரட்டி உலக நாடுகள் அந்த குற்றவாளியை தண்டிக்க பணியாற்ற வேண்டும்.


அவருக்குள் உருவெடுத்த இந்த உணர்வு உலகத் தமிழர்கள் அனைவருக் குள்ளும் படர வேண்டும். இதை ஒரு உறுதியாக எடுத்துக் கொண்டு தமிழின அழிப்பை தலையாய கடமையாக செய்த ராசபக்சேவை குற்றவாளி கூண்டிலே நிறுத்தி தண்டிக்க வேண்டும். தமிழீழ அரசு அமைய அதுவே நமக்கு பெருந்துணை புரியும். செயல்படுவோம். வெற்றிபெறுவோம். அதுவரை உறங்காமல் ஓய்வின்றி பணிபுரிவோம். வாழ்க தமிழீழ தாயகம்.

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு