சனி, 4 செப்டம்பர், 2010

போலீஸ்காரனாக நடந்து கொள்ள முடியாது. ஆனால் கொலைகாரனாக மட்டும் நடந்து கொள்ள முடியுமா?..

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் டி.ஆர்.பாலு. டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!


போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் டி.ஆர்.பாலு. அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும்.

அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார்.

ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்சேவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே? “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது,” என தனது தலைவர் கருணாநிதிக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்…, ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக