புதன், 8 டிசம்பர், 2010

கொலை வழக்கில், டக்ளஸ் . தலைமறைவு குற்றவாளி என்பதை ரத்து செய்ய முடியாது.

ஆனந்தன் என்ற டக்ளஸ் தேவானந்தா, . இவர் முன்பு `இ.பி.ஆர்.எல்.எப்' என்ற போராளி இயக்கத்தில் இருந்தார். சென்னை சூளைமேடு பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருடன் அவர் வசித்து வந்தார். கடந்த 1.11.86 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட தகராறில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சென்னை 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 

இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரும் பின்னர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக செசன்சு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து டக்ளஸ் தேவானந்தா உட்பட அனைவரையும் தலைமறைவு குற்றவாளிகளாக 30.4.94 அன்று அறிவித்தது. இந்த நிலையில், சமீபத்தில் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவுக்கு இலங்கை மந்திரி என்ற தகுதியில் வந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தொடர்ந்து நீடிக்கும் அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டுமென்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதைத்தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்னை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக கோர்ட்டு பிறப்பித்த அறிக்கை, செய்தியாகத்தான் பத்திரிகையில் வெளிவந்ததே தவிர, முறையான விளம்பரமாக வெளியாகவில்லை என்றும், எனவே செசன்சு கோர்ட்டின் அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதில் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.  கொலை வழக்கை எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் அதில் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இவர்களை தலைமறைவு குற்றவாளிகள் என்றுதான் செசன்சு கோர்ட்டு அறிவித்துள்ளதே தவிர பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவிக்கவில்லை.,,,,தலைமறைவு குற்றவாளிகள் அனவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று 30.4.94 அன்று செசன்சு கோர்ட்டு வெளியிட்ட அறிவிப்பு செல்லத்தக்கதுதான். பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிப்பது, இதற்கு அடுத்த நிலையில்தான். அதற்கான இறுதி உத்தரவுகளை செசன்சு கோர்ட்டு பிறப்பிக்கவில்லை.

கொலை வழக்கு விசாரணையில் இருந்தபோது, ஆஜராகாததால் இவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே டக்ளஸ் தேவானந்தா இப்போது ஜாமீனில் இல்லை. அதனால் தலைமறைவுக் குற்றவாளியாக செசன்சு கோர்ட்டு அறிவித்ததை ரத்து செய்ய தேவையில்லை.இந்த நிலையில் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு டக்ளஸ் தேவானந்தா மனு தாக்கல் செய்யலாம். மேலும், 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் அவர் ஆஜராகி (சரண் அடைந்து) தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு உள்ள பிடிவாரண்டை திரும்பப் பெற வேண்டும்.
அப்போது இவ்வளவு காலம் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பதற்கான தகுந்த காரணங்களை எழுத்து பூர்வமாக அவர் தாக்கல் செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தை செசன்சு கோர்ட்டு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக