ஞாயிறு, 30 மே, 2010

விதைகளிலிருந்து.........................

உலகை உலுக்கிய ஓர் மாபெரும் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு இன விடுதலைக்கான போராட்டம் கடும் கருவி போராட்டத்தால் நெருக்குதலுக்கு உள்ளானது. வளம்கொழிக்க வாழ்ந்த ஓர் இனம் சிங்கள பேரினவாத கூட்டுப்படையால் கொலை வெறிக்களம் ஆனது. பல்வேறு போராட்டங்களை கடந்து கருவி ஏந்தி களத்தில் புகுந்த தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிக்கை கொடுத்தார்கள்.
ஓர் நெடிய போராட்டத்தில் சிறிய இடைவெளி கண்டது. வரலாறும் வாழ்வும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடக்கும் என்பதை ஆதிக்க வெறியர்கள் அறியவில்லை. உலகம் தமது விடுதலைக்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறது.
சிறு பூச்சிகள் கூட தமது வாழ்வு சுயமரியாதையோடும், விடுதலையோடும் இருக்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் இன்று முள்வேலி முகாமில் முடக்கப்பட்டு உள்ளது. மாறிவரும் காலத்துக்கு ஏற்ப அடிப்படை மனித உரிமைகள் அந்த மக்களுக்கு மறுக்கப்படுகிறது. பெரும் மாறுதலுக்குள்ளான மனித நாகரீகம் அங்கே மண்ணிலே புதைக்கப்பட்டு சிதைக்கப்படுகிறது. 2009 ஏப்ரல், மே மாதங்களில் ஈழத்தில் இருந்து பேரவலமாக பெருங்குரல் கடல் தாண்டி கண்ணீரை சுமந்து கொண்டு காற்றின் வழியே தமிழ் மனங்களை வேதனைப்படுத்தியது. தமிழர்களாகிய நமக்கு இயலாமையே நம்மை அடித்து நொருக்கியது. ஊடகங்கள் அறிவித்த செய்திகள், நம்மை உலுக்கி எடுத்தது. அடித்து நொருக்கப்படும் தமிழனுக்கு அடைக்கலம் தர, அரவனைக்க யாரும் இல்லை என காட்டுவதற்கு தமிழர்களின் பிணங்களே சாட்சியம் ஆனது.
போரின் இறுதி நாட்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களின் உயிர் பிரித்து எடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் உடல் உறுப்புகளை இழந்து ஊனமானார்கள், ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் கேள்வி முறையில்லாமல் சிங்கள இனவெறியர்களின் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். தமிழ் பெண்களின் கர்ப்பம் கலைக்கப்பட்டது. இந்த கொடிய நிகழ்வுக்கு பின் இராசபட்சே, கோத்தபயஇராசபட்சே, பாசில் இராசபட்சே, சரத் பொன்சேகா போன்ற பேரினவாதிகளின் குருதி தாகம் அடங்கவில்லை. இன அழிப்பு ஒன்றையே தமது கனவாக கொண்ட இந்த சிங்கள வெறியர்கள், தமிழ் இனத்தை மேலும் மேலும் கருவருக்கத் தொடங்கினார்கள். அங்கே ஓர் இன அழிப்பு நடைபெறுகிறது என கத்தி கூச்சலிட்டப் போதுக் கண்டுகொள்ளாத உலக சமூகம் இன்று விறுவிறுப்போடு சிங்கள இனவெறி அரசுமீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. மிகவும் கொடுமையான, கீழ்த்தரமான, அவலம் நிறைந்த சிங்கள தடுப்பு முகாமில் 2,64,000 இலங்கை தமிழ் மக்களை சிங்கள இராணுவத்தின் கட்டுக்காவலில் முள்வேளி முகாமில் அடைத்து வைத்துள்ள சிங்கள இனவெறி முகாமில் 10,000 தமிழ் மக்களை மீள்குடி அமர்த்தியதாக அறிவித்தது.
வியப்போடு நாம் புருவங்களை உயர்த்திய போது தான் அந்த மக்களை முள்வேளி முகாம்களை விட மிகவும் கீழ் நிலையான ஓர் முகாமில் தான் மீண்டும் அடைத்தார்கள் என்பது நமக்கு புரிந்தது. உலகச்சமூகத்துக்கு தொடர்ந்து பொய்களையே அடுக்கிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதக் கூட்டம் ஒட்டுமொத்த பொய்களும் தீர்ந்துவிட்ட நிலையில் மக்களை மீள்குடி அமர்த்தியதாக ஓர் பொய் பரப்புரையை செய்து கொண்டிருக்கிறது. ஈழப்போர் முடிந்து விடுதலைப் புலிகளை மொத்தமாக அழித்து விட்டோம் என்னும் சிங்கள பேரினவாத அரசு எவ்வித குற்றச்சாட்டும் இன்றி சற்றேக்குறைய 3,00,000 தமிழ் மக்களை சிறைப்பிடித்து வைத்து உள்ளது. இப்படி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வித விடுதலை உணர்வும் இன்றி அடிமைகளாக வாழ அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி சிறு சம்பவம் நிகழ்ந்தால் கூட அவர்களைச் சுட்டுக் கொள்ள சிங்கள இராணுவம் சிறிதும் யோசிப்பதில்லை. போரின் முடிவில் சற்றேக்குறைய 2,89,000 தமிழர்கள் இச்சித்தரவதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு இவர்களின் 10,000க்கும் மேற்ப்பட்டவர்களை புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று தனியே பிரித்தெடுத்து தனி முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதத்திற்கு பின் இந்த முகாம்களை பார்வையிட செஞ்சிலுவை சங்கத்துக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. புலிகள், புலிகளோடு பணியாற்றியவர் என்ற சாக்குகளோடு பிரித்து எடுக்கப்பட்டோரின் நிலை என்னதென்று இதுவரை உலகுக்கு தெரியவில்லை. மக்களை மீள் குடியமர்த்த பல பொய் காரணங்களை சிங்கள அரசு கூறிகொண்டு உள்ளது. ஒன்று மக்கள் வாழ்ந்த இடங்களில் கண்ணி வெடிகளை அகற்றப்போகிறோம் என்று ஆனால், அவர்கள் தாம் வாழ்ந்து வந்த பகுதிகளிலேயே குடியேற விரும்புகிறார்கள். இதே பகுதிகளிலேயே தான் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த மக்களுக்கு தெரியாதா தாம் வாழும் பகுதி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதியா இல்லையா என்று தெரியாதா? இந்த மக்களை விடுவிக்க சிங்கள இனவெறி அரசு தயாராக இல்லை. ஆகவே பல்வேறு பொய் காரணங்களைக் கூறி அவர்களை விடுவிப்பதற்கான செயலை தள்ளிப் போட்டுக் கொண்டே உள்ளது. ஐ.நா.பொதுச் செயலாளர் பான்.கி.மூன் தமது அறிக்கையில், சிங்கள அரசு தமிழ் மக்களை அடைத்து வைப்பதின் மூலம் அவர்களின் வெறுப்பையே சம்பாதிக்கின்றனர், இதுவே நாளை ஒற்றுமையான வாழ்வுக்கு கேடாகி மீண்டும் வன்முறைகள் பிறக்க காரணமாகி விடும் என்று எச்சரித்துள்ளார்.
தெற்காசிய நாடுகள் என்றுமே சந்திக்காத மிகப்பெரிய கொடூரத்தை தமிழினம் சந்தித்திருக்கிறது. ஓர் இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொடுமையை நிகழ்ந்துக் கொண்டிருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் இன்று அறிக்கைகளால் அளந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மெனித்பாம் 5 வளையங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமில் உள்ள மக்கள் உறவினரோடு பேசுவதற்கு தடை செயப்படுகிறார்கள். இம்முகாமில் இருந்து தப்பி வந்த ஓர் பெண் கூறிய சாட்சியம் மனித சமுதாயத்தை வெட்கி தலைகுனிய செதுள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு கடும் காற்று வீசியது. இது ஓர் நிரந்தர மண்புயலை எம்மீது வீசியபடியே இருந்தது. எல்லோரும் மணலால் குளிப்பாட்டப்படுவோம். ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு பிறகும் இந்த மண் புயல் வீசிக் கொண்டே இருக்கும். நாங்கள் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட சில தினங்களில் கடும் மழை பெய்தது. தாழ்வான பகுதியில் உள்ள முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன.


எனது கூடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவிலே கழிவறை உள்ளது. இதன் துர்நாற்றம் எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கும். நிறம்பிய மல, சலக் கூடங்கள் அகற்றப்படுவதில்லை. அது தேங்கியபடியே இருக்கும் அங்கு நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை ஒருவர் ஓர் நாளில் கழிவறை சென்று வருவதே கேள்வி குறியாகி இருந்தது. உணவு பிரச்சனை சுகாதார பிரச்சனையை விட மோசமான பிரச்சனையாக இருந்தது, எனது வாழ்நாளில் இவ்வளவு தொகையில் ஈக்களையும், நுலம்புகளையும் கண்டது இல்லை. உணவு அருந்தும் போது ஒரு கை ஈக்களை விரட்டிய படியே இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைக்கு பழக்கம் இல்லாத குழந்தைகள் அருகில் உள்ள நிரம்பிய கழிவறையில் இருந்து நேரடியாக வரும் ஈக்கள் மொக்கும் உணவுகளை உண்டு நோக்கு உள்ளாகின்றனர். முகாமைச் சுற்றி வடிகால் வாகள், கழிவுநீர்பாதைகள் வெட்டி விடப்பட்டுள்ளன. இதுவே நுலம்புகளின் வாழ்விடத்துக்கும், பெருக்கத்துக்கும் பொருத்தமான இடமாக அமைந்துவிட்டது. பகல் வேளைகளில் திண்மையான அடுக்குகளாக கழிவு நீரின் மேல் நுலம்புகல் படிந்திருந்து சூரியன் மறைந்த பின் தன் வேலையை தொடங்கிவிடும். குழந்தைகளுக்கு பால் மாவு கிடைப்பது இல்லை. ஒரு முறை 7 மாத குழந்தையின் தந்தை தன் குழந்தைக்கு தயாரித்த கருப்பு சாய தேநீருக்கு ஓர் கரண்டி சீனீக்காக கெஞ்சிக் கொண்டிருந்தார். போசாக்கில்லாத அறைக் குறை உணவு உண்ணும் தாய்மார்க்கு தாய் பால் என்பது கேள்விகுறிதான். இவ்வாறு அந்த கொடிய முகாமுக்குள் தாம் சந்தித்த அனுபவங்களை அடுக்கடுக்காக கூறும் அப்பெண்மணியின் வாக்குமூலம் நம்மை நடுநடுங்கச் செகிறது.


இப்படிப்பட்ட முகாம்களை பார்வையிட தமிழ் நாட்டில் இருந்து தி.மு.க, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் ஒரு குழுவாக இலங்கைக்கு சென்று இருந்தனர். கேலிகூத்தான இந்த பயணத்தால் முடக்கப்பட்டுள்ள தமிழீழ மக்களின் வாழ்வு விடியல் காணப்போவதில்லை என்பதை தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் அறிவுறுத்தினார்கள். 2009 மே மாதம் 19 தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாகவும் இனி அவர்கள் எந்நிலையிலும் வெளிவர முடியாது எனவும் கூறிய சிங்கள பேரினவாத கும்பல் நான்காம் கட்ட ஈழப் போரில் 1,00,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக்கொன்று குவித்தது. இந்நிலையில் தான் இந்த தமிழக மக்களவைக் குழு இலங்கைக்கு சென்று இராசபக்சே அளித்த விருந்தை உண்டு முடித்து இரத்தக்கரை படிந்த அந்த சிங்கள பேரினவாதியின் கரங்களைக் குலுக்கி பரிசளித்து விட்டு திரும்பி இருக்கிறார்கள். முன்னாள் இ.பி.ஆர், எல்,எப்ன் அங்கம் வகித்த இன்றைய இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் இவர்களை வரவேற்றார்.
இந்த குழு இலங்கைக்கு சென்றபோது, இவர்களுடன் இந்திய பத்திரிகையாளர்களையோ குறைந்தபட்சம் தினமலர், ஜூனியர் விகடன் இந்து போன்ற இலங்கை தேசியத்தை ஆதரிக்கும் செய்தியாளர்களையோ உடன் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தமிழர் வாழும் முகாம்களின் சீர் கேட்டை கண்டிக்க தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று திரும்பி வந்த பின்னர், இராபக்சேவுக்கு ஆதரவாக வாழ்த்து பாடல் இசைத்துக் கொண்டிருக்கின்றனர். இச்சான்றிதழ் பெற தான் இராசபச்சே கருணாநிதி மூலமாக கள்ளத் தனமாக முயற்சித்து வெற்றிக் கண்டுள்ளார். 1,00,000 தமிழ் உயிர்களை பறித்த இராசபச்சேவின் ரத்தவாடை வீசும் கரங்களைக் குலுக்கி தமிழ்வரலாற்றிலே ஓர் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது அவர்களின் பயணம்.
இப்படி தமிழ்நாட்டில் இருந்தே தமிழனுக்கு இழைக்கப்படும் துரோகங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. சோந்த மண்ணிலே அகதிகள் ஆக்கப்பட்ட தமிழ்மக்களின் ஆற்றலும், நம்பிக்கையும், அளவிட முடியாத கனவுகளும், தமது எதிர்காலத்தைக் குறித்த இலட்சியங்களும் இன்று சிதறடிக்கப்படுவதற்கு, சிங்களம் மட்டும் அல்ல இந்திய தேசிய பேரினவாதமும் துணை போகிறது. சிகப்பு கொடி ஏந்தி மனித உரிமைக்கான போர்களத்தில் குரல் எழுப்புவதாக பாசாங்கு செய்யும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சியின் குரலுக்கு ஒத்து பாடுகிறது. காவிகளின் அகண்ட பாரத கனவு கம்யூனிஸ்ட்டுகளின் குரலோடு ஒத்து போகிறது. பிரிந்து போகும் உரிமையை அங்கிகரித்த மார்க்சிய ஆசான் மாவீரன் லெனின் சிந்தனைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகளின் சிந்தனைகள் அமைந்து இருப்பது வியப்பாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.


ஈழதமிழர் அரசியலில் இந்திய அரசியல் கலந்து உள்ளது. தமிழீழம் என்ற ஓர் தனிநாடு கிடைத்துவிடக்கூடாது என்றும், ஓர் தேசிய இனத்தை முற்றிலுமாக அழித்துப் போட நினைத்த சிங்கள இனவெறியர்களுக்கு துணை போனது இந்தியா. அதை ஆதரித்தது மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய அரசியலில் அங்கம் வகித்துக்கொண்டு ஈழதமிழ் மக்களின் துயருக்கு துணை போன தி.மு.காவின் செயல்பாடு தமிழ்வரலாற்றிலே கருப்பு வரிகளாக பதிவு செயப்பட்டு உள்ளது. ஊழிகாலம் மட்டும் இந்த களங்கம் களையாமல் இருக்கும். உலகத் தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவரும் தமிழர் வரலாற்றில் வர்ணிக்க முடியாத சிறப்பு வாய்ந்தவரும் சங்க கால தமிழர் வீரத்தை இந்த காலத்தில் நடைமுறைபடுத்திக் கொண்டிருப்பவருமான மாவீரன் கடைசியாக மாவீரர் தினத்தில் உரையாற்றிய போது இந்தியாவை தமது நண்பர் என்று அறிவித்தார்.
நட்பாக இருக்க வேண்டிய இந்தியா தமிழீழ கனவுக்கு துரோகம் இழைத்தது. தொடர்ந்து பொய்யுரைகளால் அந்த மாமனிதனை அழித்துவிட்டதாக கூறும் இலங்கை இந்திய பேரினவாதிகளுக்கு எதிர் மறையாக பிரபாகரன் தோன்றுவார் என பல்வேறு தளங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்ருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் ஓட்டத்தை எந்த ஆற்றலாலும் அடக்கி போட முடியாது. காரணம் புலிகள் இயக்கம் என்பது வெறும் இலட்சியமற்ற போராளிகள் கூட்டம் அல்ல. தமக்கான ஒரு நாட்டைப் பெற எந்த தியாகத்தையும் செய்ய தயாரான இலட்சியக் கூட்டம் அதற்காக அந்த இயக்கம் கொடுத்த முதல் களபலி ஆன சங்கரின் தியாக மரணத்தில் இருந்தே இந்த மாவீரர் தினம் தோன்றியது. வீரர்களின் கூட்டத்துக்கு இந்த முதல் களபலியே உற்சாகத்தையும் உறுதியையும் ஈந்தது. அது தொடங்கி இந்த நான்காம் கட்ட போர் வரை தொடர்ந்து விடுதலை புலிகள் செய்த தியாகங்களும் சந்தித்த இழப்புகளும் சோல்லில் அடுக்கி வைக்க முடியாது.
ஒரு முறை அய்யா பழநெடுமாறன் அவர்களோடு சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த போது தமிழ் ஈழத்தில் அவர் சந்தித்த ஓர் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரான கிட்டு அவர்களின் தாயாரை சந்தித்து பேச நேர்ந்த போது அம்மா, தங்களின் கணவர் கருவி ஏந்தாத அமைதி வழியில் விடுதலைப் பெற வேண்டும் என்ற வேட்கைக் கொண்டவர். ஆனால் தங்களின் மகனோ கருவி ஏந்தி களத்தில் நிற்கும் போராளியாக திகழ்கிறானே என்று கேட்ட போது அந்த தாய் மறுமொழி அளித்தாராம் ஒருவேளை என் கணவர் கருவி ஏந்தி களத்தில் நின்று இருந்தால் என் மகன் சுதந்திரமான தமிழீழத்தில் பிறந்து இருப்பான். இதை விட ஓர் சிறந்த பதிலை வேறு யாராலுமே சொல்ல முடியாது என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆக அங்கு வாழும் தமிழர் மனங்கள் ஒவ்வொன்றிலும் தமிழீழ தாகம் தமிழீழ தாயகம் கனவு புதைந்து உள்ளது. இந்த கனவுகளுடன் தான் போராளிகள் களம் கண்டார்கள். களம்வேண்டுமானால் மாறிப் போகலாம் போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மனிதர்களை கொல்லலாம் அவர்களின் கனவுகளை யாராலும் கவர்ந்து செல்ல முடியாது.
விடுதலைப் போராட்ட வரலாற்றில் விதைக்கப்பட்டவர்களின் உயிரோசையும், உயிர்துடிப்பும் தமிழீழ மண்ணிண் காற்றிலே கலந்திருக்கும். ஒவ்வொரு விடியலிலும் சூரிய கதிர்கள் அந்த காற்றை எடுத்து அணைத்துக் கொள்ளும். மண்ணில் விதைக்கப்பட்ட அந்த வீரவித்துக்களை பனியும் மழையும் தாலாட்டுப் பாடி உறங்க வைக்காது. மாறாக, அடிமை மண்ணை கீறி ஆர்த்தெழுந்து ஆகாயம்வரை விருட்சமாக வடிவெடுக்கும். இதை எந்த ஆற்றலாலும் அடக்க முடியாது. காரணம் இந்த தாகம் காற்றோடு கலந்துவிட்டது. அது விடுதலை என்னும் மொழியால் என்றும் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். குருதி வடிவிலே அது புதிய வரலாற்றை உருவாக்கும். அந்தநேரத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களிலிருந்து புறப்பட்ட புதிய கீதங்கள் அநீதி செய்தவர்களுக்கு எதிராக புதுபுதிதாக கவிதை செய்யும். அந்த கவிதைகள் வருங்கால தலைமுறைக்கு வரலாறை வாசித்துக் காட்டும். இதுவே ஐந்தாம் கட்ட விடுதலைப்போருக்கு அருகிலிருக்கும். விதைப்பதிலிருந்தே முளைக்கிறது என்கிற தத்துவத்தை முட்டாள்கள் ஏனோ மறந்து போகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக