சனி, 29 மே, 2010

தமிழினத்தின் அடையாளம் தேசிய தலைவர்!!

2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. சற்றேறக்குறைய 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்கள் தங்களுடைய இன்னுயிரை தேச விடுதலைக்கான விதைகளாக தமிழீழ மண்ணிலே தூவினார்கள்.
 இலட்சக்கணக்கான தமிழீழ உறவுகள் சிங்கள பேரினவாத அரசு நிகழ்த்திய வெறித்தனமான அடக்குமுறை தாக்குதலில் தமது இன்னுயிரை ஈந்தார்கள். தேச விடுதலை வேட்கையோடு தமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்த தமிழீழ மக்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முள்வேலி வதைமுகாமிலே அடைக்கப்பட்டார்கள்.




ஆனாலும்கூட இவைகளைக் கடந்து முன்பைக் காட்டிலும் இன்னும் வேகமாக, கூடுதலான வேட்கையோடு தமிழ் தேசிய விடுதலை உணர்வு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அது, தமக்கான ஒரு நாட்டை கட்டியமைக்கும்வரை ஓயாது என்பதை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றன. இத்தனை கொடூரங்களுக்குப் பிறகு சோர்வடைந்து தமிழினம் துவண்டுப்போய்விடும் என்று நம்பிக்கொண்டிருந்த இந்திய-சிங்கள பாசிச வெறியர்கள் தலைகவிழ்ந்து செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். எந்த நிலையிலும் தமது வாழ்வை விடுதலைக்காக அர்ப்பணிக்க உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகள் தயாராக இருப்பது, இந்த பேரினவாத ஆற்றல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. அதற்காக இரு அரசுகளும் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவும், அது தன்னெழுச்சியாக வளர்ந்து மீண்டுமாய் களம் அமைப்பதை தடுக்கவும் பல்வேறு கருப்பு சட்டங்களாலும், பொய் பரப்புரைகளாலும் தமிழன உறவுகளுக்குகெதிராக தொடர்ந்து சமர் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.




மே 17ல் நிறைவு பெற்றது வெறும் கருவி ஏந்திய சமர் தான். ஆனால் இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு உளவியல் பேரியக்கமாக வலுவடைவதற்கு பெரும் முயற்சியை மகிந்தாவின் அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசிய விடுதலை ராணுவத்தின் எல்லாவித நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டதாக ஒரு பொய் செய்தியை அறிவித்தாலும், மகிந்தா அரசுக்கு உள்ளுக்குள் உறைந்து போயுள்ள அச்ச உணர்வு அவரை பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக நமது விடுதலை போராட்டத்தை முடக்க இந்த இரண்டு அரசுகளும் கையில் எடுத்திருக்கும் பெரும் கருவி, தேசிய தலைவர் கொல்லப்பட்டார் என்பதுதான். கடந்தகால வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், நமது தேசிய தலைவர் பலமுறை கொல்லப்பட்டிருக்கிறார். பலமுறை உயிர் பெற்றிருக்கிறார்.




கிறித்துவ நம்பிக்கையாளர்களுக்கு இயேசு கூட ஒரு புனித வெள்ளியிலே கொல்லப்பட்டு, உயிர்ப்பு ஞாயிரிலே மீண்டும் எழுந்ததுதான் இதுவரை உலகத்தில் சொல்லப்படும் உயிர்ப்பு ஆகும். ஆனால் தமிழ் தேசிய தலைவரின் வரலாற்றில் பலமுறை இந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டது. அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பலமுறை பரப்பப்பட்டு, அது பொய்யாக்கப்பட்டு காற்றடைத்த பந்தில் ஊசி பட்டதைப் போன்று சோர்வடைந்துபோனதுதான் இதுவரை நாம் கண்ட நிகழ்வுகளாகும். ஆனால் ஒவ்வொருமுறையும் மேதகு தேசிய தலைவர் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு அது பொய்யாக்கப்பட்டப் பின்னர், முன்னைக்காட்டிலும் தமது இயக்கத்தை, மக்களை, போராட்டத்தை மிகப்பெரும் ஆற்றலும், எழுச்சியும் கொண்ட அமைப்பாகத்தான் இதுவரை மாற்றியிருக்கிறார் என்பதை வரலாறு அறிந்தவர்கள் உணர்வார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய சில போராளிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, தமது 17 வயதில் ஒரே துப்பாக்கியுடன் களத்திற்கு வந்து, இன்று உலக போர்முறைக்கு உதாராணமாகத் திகழும் ஒப்பற்ற மாவீரர் மேதகு தேசிய தலைவர் என்பதை நமது எதிரிகூட மறுதலிக்க முடியாது.




அவர்தாம் தொடங்கிய விடுதலை போராட்டத்தில் இதுவரை எத்தனையோ சரிவுகள், எவ்வளவோ தடங்கல்கள், எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்கள், அத்தனையும் தாண்டித்தான் தமது இன அடையாளத்தை, மொழியின் உத்தமத்தை உயர்த்திப்பிடிக்கும் தமிழின காவலராக உலகத் தமிழர்கள் இதயங்களில் இன்றுவரை துடித்துக் கொண்டிருக்கிறார். எமது தேசிய தலைவர் தமது போராட்டத்தை துவக்கும்போது, மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த கருவிகளை தன்னகத்தேக் கொண்ட சிங்கள படையணியை எதிர்த்து நிற்கிறோம் என்பதை எண்ணி, ஒரு சிறு நடுக்கமோ, அச்சமோ இல்லாமல் களத்திற்கு வந்தார். சிங்கள பேரினவாத அரசின் கருவிகளை தமது கரந்தடித்தாக்குதல் முறையாலே முறியடித்து, சிங்கள சிப்பாய்களுக்கு அச்சத்தை அன்பளிப்பாக தந்தார்.




அதேநேரத்தில் நமது மானத்தைவிட பெரிதொன்றும் இல்லை என்பதை தமது மக்களுக்கு படிப்பினையாக தொடர்ந்து வழங்கினார். இதுவரை ஒடுக்கப்பட்ட ஒரு இனமாக இருந்த தமிழ் தேசிய இனம், உலகையே நடுங்கச் செய்யும் பேராற்றல் பெற்ற இனமாக உலக பார்வைக்கு கொண்டு வரப்பட்டது எமது தேசிய தலைவரின் அர்ப்பணிப்பான வாழ்வியல் முறைகளும், போராட்ட நெறிகளும்தான் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக உலகத் தமிழர்கள் எமது தேசிய இராணுவத்தின்மீது பற்றுதலும், நம்பிக்கையும் கொண்டவர்களாக மாறினார்கள். அதுவே அவர்களை எமது தேசிய தலைவரின் பக்கத்தில் நம்பிக்கையோடு நிற்க வைத்தது.




ஜெயவர்த்தனா இலங்கை அதிபராக இருக்கும்போது, தாம் புலிகளை ஒடுக்குவதென்பது பெரும் பிரச்சனை இல்லை என அறிவித்து, தனது மருமகன் பிரிகேடியர் வீரத்துங்காவுக்கு அளவில்லா அதிகாரங்களை அள்ளி வழங்கி சென்றுவா மருமகனே. ஆறுமாதத்தில் புலிகளை வென்று வா என்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். புலிகளை வேட்டையாடச் சென்ற அட்டைச் சிங்கம், அப்பாவி இளைஞர்களை வேட்டையாடி, தமிழ் நிலங்களை ராணுவ மயமாக்கியது. ஆனால் இந்த நிலையிலும், தமது ஆக்ரோஷமான பாய்ச்சலில் புலிகள் அளவிட முடியாத வெற்றியை ஈட்டி வந்தார்கள். இவர்களை தோற்கடிப்பது எப்படி என்பது புரியாமல் உறக்கமில்லாமல் உருண்டு படுத்த சிங்கள பேரினவாத அரசுகளுக்கு கூலி அடிமைகளாக ஒரு பெரும் படையை திரட்டி, புலிகளை ஒழிக்க அனுப்ப நினைத்தது. அவர்கள் எந்தவித அடிப்படை சிந்தாந்தம் இன்றி, தனது சொந்த நாட்டைக் குறித்த அறிவு ஏதும் இன்றி, தமிழீழ உறவுகளை கொன்றொழிக்க படை திரட்டினார்கள்.




இந்த நேரத்தில் தமிழ் தேசிய தலைவர் உலக வரலாற்றையே திருப்பிப்போட்ட மாபெரும் ஆற்றல் வாய்ந்த ஒரு பெரும் திறனை கையாண்டார். வெறும் இரும்பும், பாஸ்பரசும், வெடிமருந்தும் இதுவரை வெடித்ததை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள பாசிச ராணுவத்திற்கு, முதல் முறையாக ஒரு மனிதன் வெடித்து சிதறியதை கண்டபோது, அச்சம் தலைக்கேறி அங்குலம் அங்குலமாக அல்ல, மீட்டர் மீட்டராக தலைதெறிக்க ஓடினார்கள். மிகப்பெரிய படைபலம் வாய்ந்த சிங்கள பாசிச ராணுவத்தை முறியடிக்க தேசிய தலைவர், மில்லர் என்ற உயிர் கொடையாளியை உருவாக்கினார். மில்லர் தமது நாட்டின் விடுதலைக்காக தமது உயிரை அர்ப்பணிக்க மகிழ்வோடு சென்று நெல்லியடி ராணுவ முகாமை உரு தெரியாமல் சிதறடித்தார். அவரது உடலும் உடன் சேர்ந்து சிதறிப்போனது.




இந்த உயிர் கொடையாளிகளின் ஈகத்தைக் கண்ட சிங்கள பாசிச படையணி பித்துப்பிடித்து பின்வாங்கியது. உயிரச்சம் இன்றி களத்திலே உலாவரும் இந்த கரும்புலிகளின் ஆற்றல், சிங்கள பேரினவாதிகளுக்கு பெரும் இடியாக வீழ்ந்தது. அத்தனை பெரும் படையாளுமே எமது தேசிய படையை அழிக்க முடியவில்லை. இந்த நேரத்தில் நேரிடையாக ஒரு போராளி அமைப்பை நம்மால் வெற்றிப் பெற முடியாது என்பதை உணர்ந்த சிங்கள பாசிச வெறியர்கள், பொய்யான ஒரு உடன்படிக்கையாக பார்ப்பனிய இந்தியாவோடு கரம் கோர்க்க தொடங்கினார்கள். இந்தியா இலங்கையோடு சேர்ந்து எமது தமிழ் தேசிய ராணுவத்தை மூழ்கடிக்க செய்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது. வஞ்சகம் நிறைந்த இந்தியாவின் கொடுமைகள் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நஞ்சாக இன்றுவரை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட பெரும் கொடுமைகளை பேரழிவுகளை ஏற்படுத்திய இந்திய ராணுவம் பரிதாபகரமாக இலங்கையை விட்டு வெளியேறியதைத் தவிர, எமது புலிப்படையை தோற்கடிக்க அதற்கு முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் பல்வேறு நிலைகளில் நூற்றுக்கணக்கான தமிழ் தேசிய வீரர்கள் மாண்டுபோயினர். பலர் சிறைபிடிக்கப்பட்டனர். ஆனால் வரலாறு சொல்கிறது, வெறும் 50 வீரர்களை மட்டும் தமது பக்கத்தில் இறுத்தி வைத்துக் கொண்டு மீண்டுமாய் மாபெரும் ஆற்றல் வாய்ந்த ஒரு போராளிக் குழுவை தமிழ் தேசிய தலைவர் கட்டியமைத்திருக்கிறார்.




வன்னிக்காடு என்பது தமிழர்களின் வரலாற்றை மாற்றி அமைக்கும் மறம் நிறைந்ததாக, அறம் நிறைந்ததாக, அன்பு கொண்டதாக மாறியது. அங்கு வெறும் கருவி ஏந்துவதற்கு மட்டுமல்ல, கண்ணியத்தையும் உடன் சேர்த்து போதித்த மிகப்பெரிய மாந்தநேய ஆற்றலாளராக எமது தேசிய தலைவர் செயலாற்றியதை இன்றுவரை அவரோடு இணைந்த பல்வேறு தலைவர்கள் நினைவுக்கூறுகிறார்கள். நமது தேசிய ராணுவப்படையின் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி நிகழ்ந்திருப்பதை நம்மால் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியும். தமது போராட்டக் களத்தின் முதல் பத்தாண்டுகளை கரந்தடி தாக்குதலாக வைத்திருந்த எமது தேசிய தலைவர், அடுத்து வந்த காலங்களில் ஒரு நாட்டிற்குறிய, பண்புமிக்க, மரபுவழி சமரிலே தம்மை முழுமையாக ஈடுபடுத்தினார்கள். அவர்கள் நிகழ்த்திய மரபுவழி சமர், தாயக மண்ணை மீண்டுமாய் தமது மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்தது. போராட்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட எத்தனையோ வெற்றித் தோல்விகள் நம்மை மேலும் மேலும் மெருகூட்டி வலிமையடைய வைத்திருக்கிறதே தவிர, இதுவரை நாம் தோற்றது கிடையாது. ஆகவே, இந்த நான்காம் கட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் கூட ஒரு சிறு இடைவெளியைத்தான் உருவாக்கி இருக்கிறதே தவிர, போராட்டத்தின் பாதையைத்தான் மாற்றியிருக்கிறதே தவிர, அதன் வலிமையை, ஆற்றலை அணு அளவேனும் குறைக்கவில்லை. அது குறைந்து போய்விடவில்லை என்பதற்கு அடுக்கடுக்கான சாட்சியங்கள் நிறைந்திருக்கிறது.




தமிழீழ விடுதலையை நிதானித்து பார்வையிட்டு வந்த பல்வேறு அரசியல் வல்லுணர்களுக்குத் தெரியும், எமது தமிழ் தேசிய ராணுவம் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தாலும், எமது தேசிய தலைவர் அமைதியையும், சமாதானத்தையும் பெரிதும் விரும்பிய ஒரு பண்பாளராக இருந்தார். இதை நாம் பதிவு செய்வதிலே பெருமைப்படுகிறோம். காரணம், எமது இயக்கம் ரத்த வெறி பிடித்த மாந்த உயிர்களை சிதறடிக்கும் ஒரு இயக்கமல்ல, மாறாக உலகமெல்லாம் மாந்த இனம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும், உரிமையோடு வாழ வேண்டும், மானத்தோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக களமாடிய இயக்கம். களமாடிக் கொண்டிருக்கும் இயக்கம். இதை நாம் சொல்லவில்லை, இந்திய படைத் தளபதிக்கு தேசிய தலைவரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட தீட்ஷீத் தாம் எழுதியுள்ள புத்தகத்தில் கூறுகிறார், புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனிடம் காணப்படும் கட்டுப்பாடு, மனஉறுதி, ஈழத்தமிழரின் மீட்சி என்கின்ற லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்துள்ளவை ஆகியவை சிறந்த குணாதிசயங்களாகும்.




இவர் யாராலும் எப்படி விமர்சிக்கப்பட்டாலும், நெஞ்சில் விடுதலைதாகம் சுவாலை விட்டு எரிந்துக் கொண்டிருப்பதையும், அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் குணமும் இவரிடம் இயல்பாக உள்ளது என்பதையும், இயற்கையான ராணுவ வல்லமையை கொடையாக பெற்ற ஒருவர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, ஒரு தேசிய படையை எப்படி நடத்த வேண்டும் என்பதிலே அவர் இதுவரை தடம் மாறியது கிடையாது. நமது தமிழினத்தின் அடையாளமாக அவர் இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பலமுறை மரணத்தை வென்ற எம் தேசிய தலைவர் தொடர்ந்து நமது விடுதலை வரை நம்மோடு இயங்கிக் கொண்டிருப்பார். மனம் தளராத எந்த நிலையிலும், எத்தனை துரோகங்கள் வந்தாலும் துவண்டு விடாத குணநலன் கொண்ட தேசிய தலைவரை முறியடிக்க எந்த பீரங்கியாலும் முடியாது, எத்தனைபேர் கூட்டுச் சேர்ந்தாலும் முடியாது. காரணம், அவர் ஆன்மபலம் கொண்டவராக, அகத்தூய்மை கொண்டவராக களத்திலே நின்று கொண்டிருக்கிறார். ஆண்டு ஒன்று நிறைவெய்தியப் பின்னும் எமது இயக்கம் பயன்படுத்திய போர் கருவிகள் எங்கே போனது என்று தெரியாமல் சிங்கள ராணுவமும், இந்திய உளவு பிரிவும் தேடி தேடி நிலைகுலைந்து போயிருப்பதே எமது இன விடுதலையின் வெற்றிக்கு அடையாளமாக நம்முன்னே இருக்கிறது.




இந்த தற்காலிக பின்னடைவு நம்மை சோர்வுற வைக்கவேண்டாம். 15க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து நம்மை ஒடுக்கியபோதும், இதுவரை நாம் வீழ்ந்துவிடாமல் இருக்கிறோமே, அதுதான் எமது தேசிய தலைவர் நமக்குள் ஏற்றிய தமிழ் வெற்றி உரமாகும். இதைநாம் மனதில் கொண்டு போராட்ட பாதைக்கான வழிகளை திறனாய்வு செய்து அடுத்தக்கட்ட நகர்விற்கு தேசிய தலைவரோடு இணைந்து நடக்க தயாராவோம். தமிழீழம் கிடைக்கும். இதை மாற்றுவதற்கு யாராலும் முடியவில்லை. இனிமேலும் முடியப்போவதில்லை. தேசிய தலைவரின் தலைமையிலான தமிழ் தேசிய அரசு அமையும்போது உலகத் தமிழர்களின் நெஞ்சம் விம்மி நிற்கும். நமது விடுதலை விடை பகரும். தேசிய தலைவரோடு கரம் இணைத்து, அவர்தம் தோள்மீது சாய்ந்து, தமிழீழ வெற்றி விழாவில் பங்கேற்போம் என்பதை நம்புங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக