தமிழீழம் அதன் பிரதிநிதிகள் யார்? காலத்திற்கு காலம் பலர் உரிமை கோரியிருக்கின்றார்கள். ஆனால் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் யார்? எமது மக்கள் அறிந்த விடயம் உலகம் அறியத் தவறிய விடயம். அதுவே தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை! உண்மையிலேயே உலகம் அறியத் தவறிவிட்டது அல்லது தவிர்க்கப்பட்டது.
ஏன் தவிர்க்கப்பட்டது? தவிர்க்கப்பட்டதற்கும் காரணம்
எமக்கு பிரதிநிதிகள் இல்லாததுதான். அப்படியானால் விடுதலைப்புலிகள்? ஆம் அதை இந்த கட்டுரையின் இறுதியில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இங்கே மிக முக்கியமான விடயம் சர்வதேசத்தில் எமது நிலைகளை எடுத்துச்சொல்ல ஜநாவில் எமக்கான பிரதிநிகள் இல்லை. அதனாலேயே உலகம் எமது பிரதிநிதிகள் யார் என்பதில் அக்கரை கொள்ளவில்லை. நாடு இல்லாமல் எப்படி ஜநாவில் எமது பிரதிநிதிகள் இருக்க முடியும்.
அப்படியானால் ஜநாவில் பிரதிநிதிகள் வேண்டும் அதற்காகத்தான் நாடு கேட்டு விடுதலைப்புலிகள் போராடினார்களா? என்று விதண்டாவாதிகள் கேட்பார்கள். இவர்கள் கேட்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே ஏனெனில் இவர்களுக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும். விடயத்திற்கு வருவோம்.
வரலாறு இங்கு தேவையில்லை, வரலாற்றை எமது மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். தமிழீழம் ஏன் என்பது யாவரும் அறிந்ததுதான்.உண்மை இப்பொழுது விளங்கியிருக்கவேண்டும் யார் எமது உண்மையான பிரதிநிதிகள் என்பதை. எவ்வித பிரிவினையும் இல்லாத தனித்தமிழீழம் ஒன்றே தீர்வென தீர்க்கதரிசனமாக இன்றுவரை இருப்பவர்கள் யார்?.
தமிழர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படும் சிங்களவன் தமிழர்களின் பிரச்சினையையா ஜநாவில் பேசப்போகின்றான்? அல்லது தமிழர் ஓருவரை ஓட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பினாலும் அந்த தமிழரை சிங்களவன் ஜநாவிற்கு அனுமதிப்பானா? ஏன் ஜநாவிற்கு மட்டுமா உலக நாடுகளுக்கு எல்லாம் அனுப்பினார்களே ஒரு தமிழனை! அப்படியா? யார்? தெரியாதா? அவர்தான் கதிர்காமர்! அந்த தமிழன் தமிழீழத் தமிழர்களுக்காக ஏறி இறங்காத நாடே இல்லை! சந்திக்காத உலகத் தலைவர்களே இல்லை.
அவர் ஏறி இறங்கியது தமிழீழத் தமிழர்களுக்காகத்தான் ஆனால் ஆக்கத்திற்கு அல்ல முளுமையான அழிவிற்கு. அரசியலில் எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்து அரசியலில் பங்கெடுத்தாலும் எமது மக்களின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க முடியாது அல்லது அனுமதிக்கப்படுவதில்லை. ஓம் ஓம் அவர்கள் எங்களை அனுமதிப்பதில்லைதான் நீங்கள் சரியாக சொல்கின்றீர்கள் என்பார்கள் எமது அரசியல்வாதிகள். என்ன ஒரு வெட்கக்கேடு அனுமதியில்லாத அரசியல் அடிமைகளாக இருப்பதைவிட வீட்டிற்குள் முடங்கியிருக்கலாம்.
ஒன்று பயந்து முடங்குவது அதாவது சிங்களவனை எதிர்க்காமல் அரசியல் செய்வது. இரண்டாவது பயந்து எமது மக்களை காட்டிக்கொடுப்பது துரோகங்களுக்கு துணைபோவது போன்ற வேலைகளில் ஈடுபடுவது. இப்படிப்பட்டவர்கள் ஜநா சென்றால்தான் என்ன செல்லாவிட்டால்தான் என்ன. வரலாற்றிலும் சரி நிகழ்காலத்திலம் சரி அரசியல்வாதிகளின் செயற்பாட்டையும் நிலைப்பாட்டையம் சற்று யோசித்துப்பாருங்கள். கால காலமாக அரசியல்வாதிகளின் குழப்பகரமான செயற்பாடுகளே இன்றைய நிலைக்குக் காரணம்.
ஒரு நேரம் தமிழீழ தனியரசு மறுநேரம் சுயாற்சி சில நேரம் கூட்டாட்சி என இவர்களின் நிலை என்பது மிக வேடிக்கையானது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்னவே சிங்களவன்தான் ஆனால் அவன் நினைப்பதைப்போல் ஆடும் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கம்வரை எமது மக்களுக்கு விடிவேது? நாடேது? ஆகவே இவர்களையெல்லாம் பிரதிநிதிகள் என்பதா? அல்லது எமது இனத்தையே கருவறுத்த சிங்களத்தோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களையும் அவர் சார்ந்தவர்களையும் பிரதிநிதிகள் என்பதா?.
சிந்தியுங்கள் அரசியலில் இறங்கவே முதலமைச்சர் போன்ற பதவிகளையோ ஒருபோதும் ஏற்க மாட்டேன் என உறுதியாகவும் தீர்க்கதரிசனமாகவும் அன்றே முடிவெடுத்தார் எமது தலைவர். அரசியலும் ஆயத போராட்டமும் முளுமையாக ஒன்றுசேரும் போதுதான் முளுவெற்றி கிடைக்கும் இதை எமது தலைவர் மிக தெளிவாக உணர்ந்திருந்தார்.
ஆனால் எமது தலைவரிடமும் போராளிகளிடமும் இருந்த உறுதியம் தெளிவும் அரசியல்வாதிகளிடம் இருந்திருக்கவில்லை. அதானாலயேதான் எமது தலைவர் ஆயுத போராட்டத்திற்கு முளு வடிவம் கொடுத்தார். இப்பொழுது தமிழ் அரசியல்வாதிகளுக்குள் நடக்கும் வாய்ப்போர் வாயிலாக உணர்ந்திருப்பீர்கள்.
இவர்களால்தான் இந்த நிலைமை என ஒருவர் மாறி ஒருவர் குற்றம் சுமத்துகின்றனர். இவர்கள் அனைவருடைய செயற்பாடுகள் வாயிலாகவும் அறிக்கைகள் வாயிலாகவும் அறிந்திருக்கின்றீர்கள். ஆகவே என்றும் எப்பொழுதும் தீராத விடுதலை வேட்கையிலும் தனியாத தமிழீழ தாகத்திலும் எதையும் இழக்க தயாராக எமது தேசியத் தலைவரின் கீழ் இயங்கும் தமிழீழ மக்களின் தமிழீழ விடுதலைப்புலிகளே என்றும் எப்பொழுதும் எமது ஒரே உண்மையான நேர்மையான தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள்.
இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக