வியாழன், 6 மே, 2010

அதிர்ச்சித் தகவல்!!


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பி வந்து தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியை பாடசாலை முன்றலில் வைத்து கறுப்பு வாகனத்தில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர். அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார். இதனையடுத்து அப்பாடசாலை அதிபர் கைலாசபிள்ளை அந்த மாணவியுடன் சென்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தான் கடத்திச் செல்லப்பட்ட வேளை, தன்னைப் போன்று மேலும் ஆறு மாணவியர் மயக்கமான நிலையில் அங்கிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவலை இம்மாணவி வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பா.அரியநேத்திரன், சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புடைய துணைக்குழுக்களே இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக