திங்கள், 14 ஜூன், 2010

சுதந்திரக் காற்றை சுவாசிக்க விடுங்கள்!

"நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் தவிக்கும் நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே. எமது விடுதலையை துரிதப்படுத்தி எங்கள் உறவுகளோடு இணைந்து வாழ உதவுங்கள்" என தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இணைந்து மகிந்தவிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளனர். "இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள், மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.


அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது:


"ஜனாதிபதி அவர்களே !
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நாம் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடமாகியும் தொடர்ந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை. கடந்த மூன்று தசாப்தங்கள் நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அனைத்து மக்களும் சமூக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும்.


கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளைத் தங்களின் சிறந்த தலைமையில் நடத்தி வருகின்றீர்கள். நான்கு சுவர்களுக்குள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக வாழவே விரும்புகின்றோம்.


எங்களுக்கு எப்போது வசந்தம் வீசும்?


கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர், சமூகப் பெரியோர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எம் விடுதலையைத் துரிதப்படுத்துவதாக உறுதிமொழிகள் கூறியும் எவ்வித முன்னேற்றமோ, நன்மையோ இதுவரை ஏற்படவில்லை.


"சிறுபான்மை இனம் என்ற ஒன்றில்லை; அனைவரும் இந்த நாட்டை நேசிக்கும் மக்களே..." என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.
தமிழ் மக்கள் அனைவரும் இந்த நாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும்.


எனவே நீண்டகாலமாக இலங்கையில் உள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம் மீது கருணைகாட்டி எம் வாழ்வுக்கு வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக