வியாழன், 9 டிசம்பர், 2010

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு -அமெரிக்கா

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களுக்கு இந்தியா பாரிய பொறுப்பு வகிப்பதாக, அமெரிக்க இராஜாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. புதிதாக வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் தகவல்கள் இவற்றை உறுதி செய்துள்ளன. விக்கிலீக்ஸ் வழங்கிய தகவல் அடிப்படையில், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற சஞ்சிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் ரோ மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரின் ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அவரது அரசாங்கமும் பாரிய யுத்தக் குற்றங்களை மேற்கொண்டமை தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் நன்கு அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இரகசிய தகவல் பரிமாற்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக விக்கிலீக்ஸை மேற்கோள் காட்டி, அந்த சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் கடந்த 2006ம் ஆண்டு ஜுலை மாதம் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம், 2009ம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது.
இந்த காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மகிந்தவின் அரசாங்கத்தினால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த அமெரிக்கா பலமுறை வலியுறுத்திய போதும், இலங்கை அவற்றை முழுமையாக நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக