சனி, 10 ஏப்ரல், 2010

நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா!

2008 ஆம் ஆண்டு ஈழத்தின் நான்காம் கட்ட போரின் கடைசி யுத்தத்தில் சிங்கள பேரினவாத அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தமிழின படுகொலையை நிகழ்த்த ஆரம்பித்த தருணத்தில் தமிழகம் முழுவதுமே இந்தியாவின் துரோகச் செயலைக் கண்டித்து கொந்தளிக்க ஆரம்பித்தது. 16 தமிழர்கள் தங்களது தேக்குமர உடலை தீயிட்டு எரித்து ஈழத்தமிழினத்தைக் காப்பதற்கு குரல் கொடுத்து மடிந்தனர். செந்தமிழன் சீமான் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழகர்களிடையே சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தில் மக்கள் அனைவரும் கொதித்தெழுந்தப் போதிலும் தமிழக அரசோ அல்லது மத்திய அரசோ கண்டு கொள்ளாதது மட்டுமன்றி ஈழத்தமிழினப் படுகொலைக்கு பல்வேறு வகையிலே சிங்கள அரசோடு தோளோடு தோள் நின்றது. அதன் காரணமாக மே 16 தொடங்கி 18-க்குள்; 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, மிகப்பெரும் அழிவை தமிழினம் சந்தித்தபோது, தாய் தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் வாழும் 9 கோடி தமிழர்களும் அதிர்ச்சியோடு நெஞ்சடைத்து நின்றனர். தமிழகத்தில் மக்கள் அனைவருமே ஈழத்தமிழினத்தை பாதுகாக்க சீமான் பின்னே திரண்டு நின்றப் போதிலும் அரசியல் பலம் இல்லாத ஒரே காரணத்தினால் தமிழினம் இனப்படுகொலையை சந்திக்க நேர்ந்தது. அரசியல் அதிகாரத்தை மக்கள் சக்தியோடு அடையவே செந்தமிழன் சீமான் நாம் தமிழர் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றினார். அக்கட்சியின் கொடியை நாளை (ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள்) அறிமுகம் செய்கிறார். தஞ்சாவூர் திலகர் திடலில் உள்ள பேரரசன் ராசராசன் அரங்கத்தில் இந்நிகழ்ச்சி பெரிதொரு நிகழ்வாக நடந்தேற உள்ளது. பேராசிரியர் தீரன் அவர்கள் கொடி விளக்க அறிமுக உரை மேற்கொள்கிறார். மற்றும் அந்நிகழ்ச்சியில், ஆவல கணேசன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பேராயர் சூசை, முனைவர் தா.மணி, வழக்குரைஞர்கள் நல்லதுரை, மணிசெந்தில், ரா.வீரகுமரன், மூ.கருணாநிதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காமராஜ், சக்திவேல் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் பங்குபெற உள்ளனர். இன்று, இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் பேரணியும் அதைத் தெடர்ந்து 5 மணி அளவில் தேனிசை செல்லப்பாவின் தமிழிசை நிகழ்ச்சித் தொடங்கி, கொடி அறிமுக விழாவும், மாநாடும் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 4 மணியிலிருந்து நிகழ்ச்சிகளை நேரடிக் காட்சிகளாக www.naamtamilar.org எனும் இணையதளத்தில் பார்க்கலாம். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் முழவதிலுமிருந்து பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அலைகடலென ஆர்ப்பாரித்தவாறு தஞ்சையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். உலகம் முழவதிலும் உள்ள அனைத்துக் கண்டங்களிலும் வாழும் தமிழர்கள், ஆவலோடு, செந்தமிழன் சீமானின், விழா நிறைவுப் பேருரையை கேட்பதற்கு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக