செவ்வாய், 4 மே, 2010

11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்

இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, ஆகையால் அவசரகால சட்டம் தேவை இல்லை அத்துடன் 11ஆயிரம் தமிழ் இளைஞர்களும் விடப்படவேண்டும், அரசியல் தீர்வு காணவேண்டும். இவ்வாறு பாராளுமன்றில் சரத் பொன்சேகா கூறினார். முள்ளிவாய்க்காலில்
தமிழர்களை கொன்றவர்களில் இரண்டாம் கட்ட தலைவராக இருக்கும் பொன்சேகாவே இவ்வாறு கூறினார் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் இளைஞர்கள் பற்றியோ, அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்பது பற்றியோ பெரிதாக எதனையும் கூறாததும் கவனிகப்படவேண்டியவை. பொன்சேகா கூறியவை வருமாறு; நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட் டிருக்கும் தமிழ் இளைஞர்கள் 11 ஆயிரம் பேரின் விசாரணை களைத்துரிதப்படுத்தி அவர்களை விரை வில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றில் கூறினார். அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜனாதிபதித் தேர்தலில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். அத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் 98 ஆயிரம் விருப்பு வாக்குகளை எனக்கு வழங் கினர். அவர்கள் அனவைருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், என்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, என்மீது சேறு பூசி என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நன்றி. படையினரின் அர்ப்பணிப்புக் காரணமாக 30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது. அந்த வெற்றியை வேறு எவரும் அபகரிக்க முடியாது. படையினருக்கும், படையினரின் உறவினர்களுக்குமே அந்த வெற்றி உரித்தாகிறது. பாதுகாப்புக்கு ஆபத்தில்லை ஆகையால் அவசரகாலம் சட்டத்தை நான் விரும்பவில்லை, இப்படியானதொரு நிலையில் இந்த நாட்டில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. ஒரு வருடகாலமாக இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அல்குவைதா அமைப்பால் அமெரிக்காவுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும், அந்நாடு அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படவில்லை. ஆனால், எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத இந்நாடு மட்டும் அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படுகின்றது. நாட்டில் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும். மக்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டம் உருவாக்கப்படவேண்டும். இந்த நாட்டில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. இதனால், மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இராணுவத்தினர் கூட மிரட்டப்படுகின்றனர். சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் காரணமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். யுத்தத்தை வென்று கொடுத்த படையினருக்கு எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். யுத்தம் வெல்லப்பட்டாலும் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை இல்லை, யுத்தத்தைப் படையினர் வென்றுகொடுத்துள்ளபோதிலும், அந்த யுத்த வெற்றியின் ஊடாக இனங்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானம் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். அவர்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக