செவ்வாய், 4 மே, 2010

தாயை நேசிக்க மீசை முளைக்க தேவையில்லை

சமீப காலங்களில் தமிழ் தேசியத்திற்கு எதிரான எதிரிகள் மூலைக்கு மூலை முளைக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு தமிழ் தேசியத்தின் அடையாளத்தை முடக்கிப்போட வேண்டும், அதற்கான முயற்சிகள் எதையும் செய்வதற்கு அவர்கள் தயார். களத்திற்கு வரமாட்டார்கள், தெருவுக்கு வரமாட்டார்கள், ஆனால்
 அறைக்குள் இருந்து வரையத் தொடங்கிவிடுவார்கள். இந்த அதிமேதாவிகள் ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலையை ஒடுக்கிப்போடும் முயற்சிகளை தொடர்ந்து செய்திருந்தார்கள். இவர்களுக்குள் புதைந்திருப்பதெல்லாம் எந்த நிலையிலும் தமிழனுக்கென்று ஒரு நாடு கிடைத்துவிடக் கூடாது என்பதுதான். 1965க்கு பிறகு முடங்கிக் கிடந்த தமிழ் தேசிய உணர்ச்சி தமிழ்நாட்டில் 1983க்கு பிறகு வீறுகொண்டு எழத் தொடங்கியது. 1967க்கு பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற கட்சிக்கு கல்லறை கட்டப்பட்டது. கல்லறையின் கற்களை எப்படியாவது உடைத்துக் கொண்டு மேலெழ காங்கிரஸ் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 1965க்குப் பிறகு ஏற்பட்ட இந்தி திணிப்புக் கெதிரான மாபெரும் மாணவர் போராட்டம் தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.ஆனால் அதே தி.மு.க.தான் 1983க்கு பிறகு எந்த நிலையிலும் தமக்கு நிகரான தமிழர் இன அமைப்பு உலகில் எந்த மூலையிலும் எழுந்து விடக் கூடாது என்பதிலே மிக சரியாக அரசியல் நடத்தியது. அதன் காரணமாகத்தான் தமிழீழ தேசிய விடுதலை போராட்டம் தமிழ்நாட்டில் மழுங்கடிக்கப்பட்டது. தன் எழுச்சியாக மக்கள் எப்போதெல்லாம் கிளர்ந்தெழுகிறார்களோ அப்போதெல்லாம் அப்போராட்டம் காயடிக்கப்பட்டது. ஒகனெக்கல் பிரச்சனை குறித்து தமிழ்நாடே தன்னெழுச்சியாய் நிமிர்ந்து நின்றபோது இடையே வந்த கருணாநிதி அப்போராட்டத்தை இடைமறித்து நிறுத்தி போக செய்தார். அதுபோன்று தான் தமிழீழப் போராட்டமும் தன்னெழுச்சியாக தமிழ்நாட்டில் பேரெழுச்சியோடு சிலிர்த்தெழுந்து நின்றபோது, சில்லறைத்தனமான சில போராட்டங்களால் அதை மழுங்கடிக்க செய்தார். ஆனாலும் கூட தமிழ் தேசியம் என்பது இன்று காலத்தின் கட்டாயமாகி விட்டது. ஒரு நாட்டின் தேவையாகி விட்டது. ஒரு இனத்தின் அவசியமாகிவிட்டது. இதை தவிர்த்து எந்த நிலையிலும் நம்மால் எதுவும் சிந்திக்கவோ செயல்படவோ முடியாது. நாம் செய்யாவிட்டாலும் வரலாறு தமது செயலை தாமாக செய்து முடிக்கும். காரணம் தமிழனுக்கென்று ஒரு நாடு என்பது வரலாற்றின் கட்டாயம். இந்த வரலாற்றை முறியடிக்க முனைவதென்பதும், அதற்காக முயற்சி செய்வதென்பதும் முட்டாள் தனமான செயலாகத்தான் இருக்கும் என்பதை ஒருநாள் இந்த தமிழின எதிர்ப்பாளர்கள் எல்லாம் உணர்வார்கள். அதற்கான காலம் மிக மிக அருகில் இருக்கிறது.தமிழ் நாட்டில் நடைபெற்ற எத்தனையோ போராட்டங்கள் தமிழீழத்தை படைப்பதாக இருக்கும் என தமிழர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது அது முடிந்து போனதாக இன்று இந்து-ராமும், துக்ளக்-சோவும், சுப்ரமணியசாமியும் சாமியாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டத்திற்கு எந்த நிலையிலும் தமிழனுக்கென்று ஒரு நாடு அமைந்துவிடக் கூடாது என்பதுதான்.இப்போது தமிழீழத்தில் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டதாகவும், முற்றிலும் துடைத்தெறியப்பட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. இலங்கை அரசின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் சில ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலே புரட்சிகர அரசியல் நடத்துவதாக கூறிக்கொள்ளும் ‘மக்கள் கலை இலக்கிய கழகம்’ போன்ற அமைப்புகளும் அடங்கும். காரணம் இவர்களுக்கு புலிகள் ஆதரவு என்பது பாசிச ஆதரவு. புலிகள் ஆதரவு என்பது வன்முறைக்கு ஆதரவு என்பதைப் போன்ற ஒரு பொய் தோற்றத்தை இல்லாவிட்டால் இவர்களுக்கு தோன்றிய எண்ணத்தை இவர்கள் மக்கள்மீது திணிக்க முயற்சிக்கிறார்கள்.இவர்களுக்கெல்லாம் பெரிய தாத்தா கட்சி ஒன்று இருக்கிறது. தமது பெயருக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்று வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் மார்க்சின் சிந்தனையை சிறிதுகூட மதிப்பதும் கிடையாது, ஏற்பதும் கிடையாது. இவர்களுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை என்றால் என்னதென்று ஒரு புரிதலே இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வர்க்க போராட்டம் என்பதை போன்ற ஒரு பார்வை இவர்களுக்கு புதைந்து போயிருப்பதால் அதே பார்வையை அவர் தம் அமைப்புகளின் மீதும் பதிவு செய்கிறார்கள். அந்த பதிவுகள் மறுப்பதிவுகளாய் மக்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.அவர்களின் தொடர் பரப்புரைகள் 1983க்கு பிறகு தான் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்பிரச்சனைகள் துவங்கியது போன்ற ஒரு மாய்மால செயலில் ஈடுபடுகிறார்கள். இது அடிப்படையிலேயே தவறு என்பது அவர்களுக்கு தெரியாதா? என்றால் தெரியும். அதை சொல்ல முடியுமா என்றால் முடியும். ஆனால் சொல்ல மாட்டார்கள். இதுதான் அவர்களின் வர்க்க பார்வை. 1983ல் சிங்கள இனவெறியர்கள் தமிழீழ மக்கள் மீது தொடுத்த பாரிய இனவெறி தாக்குதல்தான் தமிழீழ பிரச்சனைக்கு தொடக்கமா? என்பது மனசாட்சியோடு தமிழ்தேசிய எதிரிகள் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.இந்த தாக்குதலின் போது சிங்கள இனவெறியர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்தால் இது மக்களுக்கான ஒரு மோதலாக வரையறை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அதை அடுத்து சிங்கள பேரினவாத அரசே தமிழீழ மக்கள் மீது அடக்குமுறையை தொடுத்தபோது தமிழீழ மக்கள் மீது சிங்கள பேரினவாத ராணுவம் பெரும் தாக்குதலை நிகழ்த்திய போது நடந்த அரச பயங்கரவாத செயல்களிலும் இனப்படுகொலையிலும் அந்த அரசு ஈடுபட்டிருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிந்திருக்கும் போது அந்த அரசு என்பது பாசிச அரசு என்பதை பதிவு செய்வதற்கு ஏன் இவர்களுக்கு துணிவு வரவில்லை. இல்லையென்றால் இவர்களை தடுத்து வைத்திருப்பது, இவர்களின் எந்தவித சிந்தனை என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.இலங்கையில் நடைபெற்ற இன படுகொலையின் வேர் இரண்டு வெவ்வேறு இனங்களின் எண்ணங்களின் அடிப்படையில் விளைந்தது என்பதை சாமானியனும் கூட மிக எளிதாக புரிந்து கொள்வான். ஆனால் இந்த அறிவாளிகளுக்கு ஏனோ புரியாமல் இருக்கிறதா? புரிந்தும் புரியாததைப் போல் இருக்கிறார்களா? என்பதை புரிந்து கொள்ளவே நமக்கு சிரமமாக இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டு முதல்வரும்கூட அவர்களுக்கான சலுகைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதை தேர்தல் வாக்குறுதிகளின் மூலம் தெளிவுபடுத்தி வாங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இந்திய அரசு அதில் தலையிட்டு பெற்றுத் தரலாம் என்றெல்லாம் மேலோட்டமான ஒரு அடிப்படையற்ற கருத்தியலை தொடர்ந்து அடுக்கிக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் என்பது ஒரு தேசிய இனம். தமிழீழம் என்பது ஒரு தேசம். அது சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறையில் சிக்கி சீரழிகிறது. அந்த ஒடுக்குமுறையால் எழுந்த இயல்பான விடுதலை உணர்ச்சி தன்னுடைய தன் தீர்வுரிமையை பெறுவதற்காக அதை முந்தி தள்ளுகிறது. ஆக தமிழீழ தேசிய இனம் தனது விடுதலைக்காக அங்கே களம் அமைத்திருக்கிறது என்கிற சாதாரண அடிப்படை தத்துவத்தைக்கூட புரிந்து கொள்ள மறுக்கும் இவர்களை எப்படி விமர்சிப்பது என்று நமக்கு விளங்கவில்லை.வரலாற்றுவழி வந்த ஒரு சிக்கலை தீர்க்க வேண்டும் என்றால் நாம் வரலாற்றை பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி வரலாற்றை பின்னோக்கிச் சென்று பார்க்கும்போதுதான் இந்த வரலாற்றின் சிக்கலுக்கான முடிச்சி நமக்கு தெளிவுபடும்.அப்படியானால் இந்த வரலாற்றின் தொடக்கம் தான் என்ன? தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனமாக காலங்காலமாய் தமக்கான மண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு அரசியல் நிர்பந்தத்திலே அது அந்த தேசிய அடையாளம் சிதைக்கப்பட்டு சிங்கள தேசியத்தோடு அது கலந்து வாழ வேண்டும் என்கின்ற பெரும் சுமையை ஒரு தேசிய இனத்தின்மீது அழுத்தும்போது அது திணறி திரண்டு எழுகிறது. இதுதான் தமிழீழத்திலே நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது. இது முடிவாய் ஒரு மகிழ்ச்சிகரமான தன்மையை கொண்டு வெளிவரும் என்பதிலே இருவேறு கருத்துக்கு நிச்சயமாய் இடமில்லை.இந்த தமிழீழ தேசிய பிரச்சனையை விடுதலை புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இருந்தே பார்க்கக்கூடிய ஒரு போக்கை திட்டமிட்டு நம்முடைய மக்கள்மீது இவர்கள் அறைய முயற்சிக்கிறார்கள். கடந்த காலங்களில் வரலாற்றை திரித்து நம்மை வந்தெறிகளாக அடையாளம் காட்டிய அதே சூழ்ச்சி இப்போது அவர்களுடைய வரலாற்று அடையாளங்களாய் வெளிப்பட தொடங்கியிருக்கிறது.இதை மாற்றுவதற்கு தமிழ் தேசிய அடையாளங்கள் முன்பை காட்டிலும் இப்போது மிக வேகமாக, விவேகமாக வீச்சோடு செயல்பட தொடங்கியிருக்கிறது. இதை நொறுக்கும் எண்ணத்தோடு தான் சில தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமது அடையாளத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். நாம் இவரிடம் கேட்பதெல்லாம் அடிப்படையான சில கேள்விகள்தான். சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் ஏதாவது தெரு பிரச்சனையா? அல்லது தண்ணீர் பிரச்சனையா? இல்லாவிட்டால் குடி பிரச்சனையா? இல்லையே. அவர்களின் அடிப்படையில் இனப் பிரச்சனை இருக்கிறது. ஒரு இனத்திற்கும் வேறொரு இனத்திற்குமான மோதல் இருக்கிறது. ஆகவே இந்த மோதலை களைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருக்கும் நாம் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். புலிகள் சண்டை போடுகிறார்கள் என்றவுடன் உலகெங்கும் அவர்கள் செய்த பரப்புரை என்னதென்றால் ஐயோ! இந்த கடுஞ்சமரில் சிறுவர்களையெல்லாம் இவர்கள் பயன்படுத்துகிறார்களே! இது படு பாதகம் அல்லவா! என்பதுதான். இருக்கட்டும். நல்ல கேள்வி தான். இந்த மாந்த குலத்தின் மேல் இவர்களுக்கு உள்ள அக்கறை நம்மை புல்லரிக்க செய்கிறது. ஆனால் செஞ்சோலை என்ற குழந்தைகள் நடுவத்தில் ஈவு இரக்கமற்று குண்டுகளை வீசி அந்த பச்சை தளிர்களை படுபாதகமாய் குருதியில் குளிப்பாட்டினார்களே! இது கொடுமையில்லையா? இந்த பாசிசத்தை என்னதென்று வர்ணிப்பது.இவர்களுக்கு வரலாறும் தெரியாது, அல்லது வரலாற்றை இவர்கள் விருப்பத்திற்கு மாற்றி வாசிக்கும் மனநிலைதான் இவர்களுக்குள் புதைந்து போய் இருக்கும். இந்திய அமைதி படையை இலங்கைக்கு அப்போதைய இந்தியாவின் பிரதமர் ராஜீவ்காந்தி அனுப்பி வைக்கும்போது 2000 பொடியன்கள் என்று எகத்தாளமாக சிரித்து வழியனுப்பினார். ஆனால் இந்திய பேரினவாத ராணுவம் சிதறி வெளியேறியது. இவர்கள் குழந்தைகளை போருக்கு அனுப்பலாமா? என்று கேட்டால், நாம் கேட்கிறோம் நம்முடைய கண்களுக்கு முன்னால் நம்முடைய தாயும் தந்தையும் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகிக் கொண்டிருக்கிறார்கள். நமது தமக்கைகள் இலங்கை காடையர்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களை காப்பதற்கு நம்மைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள். நாம் ஆயுதம் ஏந்துவதில்தான் என்ன தவறு இருக்கிறது. இதைத்தான் தோழர் லெனின் கூறுகிறார் "பாரிஸ் கம்யூனில் ஆண்களோடு கூட பெண்களும் பதின்ம வயது குழந்தைகளும் போர் புரிந்தார்கள். முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிவதற்காக வரவிருக்கும் போர் களங்களிலும் இதுவே தான் நிகழும்". மேலும் ஆண் தொழிலாளர்கள் முதலாளி வர்க்கத்தின் ஆயுத படைகளால் சுட்டு வீழ்த்தப்படும் போது பாட்டாளி வர்க்க பெண்கள் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று லெனின் விளக்கமளித்தார்.இதுதான் தமிழீழத்தில் நிகழ்ந்தது. தமது சொந்த சகோதரன் செத்து மடியும்போது சகோதரி பெண் புலியாக உருவெடுத்தாள். பொடியன்கள் என்று புலிகளை கேவலப்படுத்தியபோது, ஒரு இளம்புலி தந்த மறுமொழி இது. தாயை நேசிப்பதற்கு மீசை முளைக்க தேவையில்லை. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இந்த வரிகள் எப்படி புரிகிறதோ தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக