புதன், 5 மே, 2010

நேர்மை மாறாத மேதகு பிரபாகரன்

ஒரு இனவிடுதலைக்கான போராட்டம் மட்டுமல்ல, எந்தவொரு உரிமைக்கான போராட்டம் என்றாலும், அதில் இரண்டு செயல்கள் பங்கு வகிக்கும். ஒன்று கருத்தியல் போர், மற்றொன்று கருவியேந்தும் போர். கருவியேந்தி போராடிகூட வென்றுவிடலாம். ஆனால்
கருத்துக்களத்திலிருந்து வென்றுவருவதுதான் நீடித்த அழிக்கமுடியாத ஆற்றல் வாய்ந்த படிநிலையாக இருக்கும். இட்லருக்கு கோயம்பாஸ் என்ற உற்றத்துணை இருந்தபோதுதான் ஜெர்மானிய எதேச்சதிகாரத்தை அது இனத்திற்கான போர் என்பதை அவரால் பதிவு செய்து ஜெர்மனியர்களை வெறி கொள்ள வைத்தது. இந்த வெறிதான் லட்சக்கணக்கான யூதர்களை ஈவிரக்கமின்றி கொலை செய்ய வழிவகுத்தது. ஆகவே, கருவியேந்தும்போர் ஒரு பக்குவ நிலைக்குப் பிறகு முடிவுக்கு வரலாம். ஆனால், கருத்தியல் போர் எந்நிலையிலும், எப்போதும், எந்த விநாடியும் விழிப்பாய் இருந்து ஆற்றவேண்டிய செயல்களை வலியுறுத்தும். பொதுவான எந்தவொரு அமைவுக்கும் ஒரு அடிப்படைக் கருத்தே மூலாதாரமானது. கருத்துகளிலிருந்தே லட்சியம் தோன்றுகின்றன. அந்த லட்சியத்தை அடையவே போராட்டங்கள் தொடர்கின்றன. இப்படி கருத்தில் தோன்றிய லட்சியம் மனதில் பதிந்தபின் நாம் உறங்கப் போனாலும் அது கனவாய் வந்து தட்டியெழுப்பும். எந்த ஆற்றலாலும், கனவை தடைசெய்ய முடியாது. அதை சிறைபடுத்த முடியாது. கனவு என்பது முழுமையான விடுதலையுணர்வு. தமிழீழ கனவும் அப்படிப்பட்டதுதான். இப்போது கருவியேந்தும் போராட்டத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கருத்தியல் போராட்டம் வலிமையடைந்திருக்கிறது. நாம் நமக்கான ஒரு நாட்டையமைக்க செலுத்திய இழப்புகள் சாதாரணமானது அல்ல. உலக வரலாற்றில் வேறெந்த இனமும் தமது விடுதலைக்காக இத்தனை ஆண்டுகள் போராடியது கிடையாது. உலகம் முழுக்க பிரபாகரன் பயங்கரவாதி. அவரின் புலிகள் இயக்கம், பயங்கரவாத அமைப்பு என்கிற கருத்தியல்தான் இந்த மாபெரும் பின்னடைவுக்குக் காரணமாயிருந்தது. இந்நேரத்தில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து, தமிழின விடுதலைக்கான தமது கருத்தை அழுத்தமாகவும், ஆழமாகவும், பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உலகத் தமிழினம், இந்தியாவில் வாழும் தமிழர்களில் ஒரு பகுதியை எந்த நேரத்திலும் தமிழர்கள் என்று கருதி கொள்ளக் கூடாது. அவர்கள் பிள்ளைப்பூச்சிகளைவிட கேவலமானவர்கள். புழுவைக் கண்டு நடுங்குபவர்கள். தன்மரியாதையை இழந்தவர்கள். ஆகையால் அவர்களுக்குள் இன விடுதலைக்கான அடையாளமோ, மொழிமீதான பற்றோ தனிமனித விடுதலைக்கான பண்போ, அவரிடம் எதிர்பார்க்க முடியாது. காரணம் அவர்களுக்குள் இந்திய அடிமைப்புத்தி பதிந்து போயிருக்கிறது. அதிலிருந்து விடுபட அவர்களால் எந்தக் காலக்கட்டத்திலும் முடியாது. இந்த நேரத்தில் நாம் எப்படிப்பட்டக் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்கிற சிந்தனையை மேலோங்கச் செய்ய வேண்டும். நமது கனவு லட்சியம், தாகம் எல்லாம் தமிழீழம் ஒன்றுதான். இந்த நிலையிலிருந்து ஒரே ஒரு மில்லி மீட்டர்கூட நாம் பின்வாங்கக்கூடாது. உலக வரலாறு இந்தியாவின் சோனியாவைவிட இலங்கையின் ராஜபக்சேவை விட மிக மோசமான சதி அரசியலை நடத்தியவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு ஒடுக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து புதிய ஒளியையும், புதிய உயிரையும் வார்த்திருக்கிறது. முதலில் நம் இளையோருக்கு சிங்கள இனவெறி அரசு ஏதோ புத்தனை போல் தியானம் செய்து கொண்டிருக்கும்போது, புலிகள் கருவியேந்தி களத்திற்கு வந்தார்கள் என்கிற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய கருத்தியலை உடைக்க வேண்டும். பன்னெடுங்காலமாய் தமது தாய்பூமியில் உலாவி அந்த மண்ணிலே சுகமாகப் படுத்துறங்கி அந்த மண்ணோடு தோழமைக் கொண்டு அந்த மண்ணில் வாழ்ந்ததற்கு தமது உடலையே அந்த மண்ணுக்கு உரமாக்கி மண்ணோடு ஒட்டி வாழ்ந்தார்கள். 1977ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின்போது நினைத்திருக்கமாட்டார்கள். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு அதன் காரணமாய் ஒரு மாபெரும் விடுதலை இயக்கத்திற்கு இத்துணை பெரிய பின்னடைவு ஏற்படும் என விடுதலைப் புலிகள் மனம் ஒப்பியா கருவியை களத்தில் ஏந்தினார்கள். இந்த கருவி போராட்டம் என்பது அவர்கள்மேல் திணிக்கப்பட்டது. தமது இனத்தைக் காத்துக் கொள்ளவே அவர்கள் கரங்கள் கருவியைத் தூக்கியது. 1983ஆம் ஆண்டு சில ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்திற்காக சற்றேறக் குறைய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நமது தமிழ் உறவுகளை ரத்தவெறியோடு கொன்று குவித்து அதுவும் போதாதென்று ஏராளமான தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி சிதைத்த கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்த பின்னர்தான் இந்த பெருங்கொடுமையை எதிர்த்து தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து தம் இனத்தைக் காப்பதற்காக கருவியேந்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். இந்த இக்கட்டான நிலையில்தான் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அந்த இளைஞர்களை இந்தியாவுக்கே அழைத்துப் போர்பயிற்சியளித்து ஏராளமான கருவிகளையும் வழங்கி தமது இனத்தைக் காத்துக் கொள்ள அந்த இளைஞர்களுக்கு உதவி புரிந்தார்கள். அப்போதைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் தேவையான அளவிற்கு பொருளுதவி வழங்கி புலிகள் இயக்கத்தை மெருகூட்டினார். ஆனால் அதையெல்லாம் மீறி சற்றேறக்குறைய 30 ஆண்டுகாலம் தமிழீழ மண் விடுதலைப் புலிகளால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு அசைவிலும் நேர்த்தி, நேர்மை, துணிவு மற்றும் நம்பிக்கை இருந்ததை தமிழின எதிரிகூட மறுத்துரைக்க மாட்டான். இதுவரை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு உறுப்பினர் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்ததாகவோ அல்லது ஒரு அப்பாவி சிங்களன் புலிகளால் கொல்லப்பட்டதாகவோ, எங்காவது ஒரு பதிவு உண்டா? இறுதி கட்டப்போர் நடைபெற்ற காலக்கட்டத்தில்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வான்படையைக் கொண்டு செய்த அந்த உச்சக்கட்டத் தாக்குதலிலும் ஏதாவது சிங்கள குடியிருப்புகளின் மீது குண்டெறிந்ததாக யாராவது சொல்ல முடியுமா? ஆனால் நேர்மை தவறி வரம்புமீறி அப்பாவி மக்கள்மீது, மருத்துவமனைகள் மீது, பள்ளிக்கூடங்கள் மீது அந்த அரக்கர்களால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலையங்கள் மீது எறிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கூட விடுதலைப் புலிகள் மரபுவழித் தாக்குதலிலிருந்து, ஓரடிகூட பின்வாங்காமல், எல்லா இழப்புகளையும் தாங்கி, தமிழீழம் என்பது ஒரு நாடு. ஒரு நாடோடு இன்னொரு நாடு சமர் புரியும்போது எந்தநிலையிலும் தமது நாணயம், நேர்மை மீறப்படக் கூடாது என்கிற அடிப்படைப் பண்பை அவர்கள் கொண்டிருந்தார்கள். உலகிலேயே தலைசிறந்த கொரில்லா அமைப்பான விடுதலைப் புலிகள் நினைத்திருந்தால் எத்தனை லட்சம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை செய்துகூடப் பார்க்க கூடாது. ஆனால், தமிழீழத்தின் அதிபர் மேதகு பிரபாகரன் அவர்கள் தாம் மட்டுமல்ல, தமது இயக்கத்தையும், ஒரே நேர்க்கோட்டில் வடிவமைத்திருந்தார். அங்கே ஒழுக்கக்கேடு இல்லை. சாதிய கொடுமை இல்லை. பெண்ணடிமைத்தனம் இல்லை. களவு இல்லை. அநீதி இல்லை. ஆனால் உலகநாடுகள் செய்த பெரும் அநீதி ஒரு பேட்டை ரவுடியைப்போல தமிழீழம் என்ற சிறிய நிலப்பரப்பைக் கைப்பற்ற எல்லோரும் ஒன்று கூடினார்களே அப்போதே விடுதலைப் புலிகள் வென்றுவிட்டார்கள். காரணம் ஒரு ஆற்றல்வாய்ந்த ராணுவத்தை வைத்திருந்த சிங்கள இனவெறி அரசால் புலிகளைத் தனித்து நின்று வெற்றிக் கொள்ள முடியாது என்பதை ராஜபக்சேயும், ராஜபக்சேவின் சகோதரர்களும் உண்ரந்திருந்தார்கள். அதனால்தான் இங்கே நடக்கும் தெருச் சண்டை போல ஒருவனை அடிக்க ஒன்பது பேர் கூடி நின்றார்கள். அந்த நிலையிலும் கூட மனந்தளராமல், தமது லட்சியத்தை இழக்காமல் தமது மக்களைக் காப்பாற்றுவதையேக் குறிக்கோளாகக் கொண்டு அந்த வீரமரவர்கள் களத்தில் இருந்தார்கள். நான்காம்கட்டப் போர் துயரோடு முடிந்ததாக ஏற்றுக் கொண்டாலும், எந்தவொரு செயலும், நிறைவு எய்தும் போதுதான் புதிய ஒன்று புறப்படும் என்கிற தத்துவம் இப்போது தொடங்கியிருக்கிறது. உலகத் தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து சிங்கள இனவெறி பேரரசின் கருத்தியல் போரை முறியடிக்க வேண்டும். அமையப்போகும் தமிழீழ அரசின் அரியணையில் மீண்டுமாய் மேதகு பிரபாகரன் அமர வேண்டும். இது வரலாற்றுக் கட்டாயம். காலத்தின் கட்டளை. பிரபாகரனின் மூச்சுக் காற்றுப் பரவிய இடங்களில் எல்லாம் தமிழீழ உயிர்த்துளிகள் சிறகடிக்கும். அவரின் வார்த்தைகளை காற்று சுமந்து சென்று கனவுகளாய் உருமாற்றும். உலகெங்கும் வாழும் தமிழனுக்கு சொந்த மண் என்கிற லட்சியம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு நிமிடம்கூட சோர்வு இல்லாமல் நாம் உழைக்க வேண்டும். உலகத்தமிழர்கள் ஒவ்வொருவரின் தாகமும் தமிழீழம் தான் என்ற கருத்தியல் ஊன்றி வளர வேண்டும். நமது தேசியத் தலைவரின் கனவு மட்டுமல்ல, நமது கனவும் அதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக