ஞாயிறு, 27 ஜூன், 2010

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே
வெறுப்பாய் இருக்குது தமிழே!


ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே



பார்ப்பன பரவலுக்கு எதிரானவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


சிங்கள வெறியர்களின் உச்சந்தலையில் ஓங்கியடித்தவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே


வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று


ஆரிய அதிகாரத்துக்கெதிரான
சமணர்கள் ஆயுதம் தமிழ்


சமணமுனிகளின் கொடூரத்திற்க்கெதிரான
பக்தியக்கத்தின் ஆயுதம் தமிழ்


பார்ப்பன அதிகாரத்துக்கெதிரான
ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம் தமிழ்


இந்திவெறியர்களின் ஆதிக்கபரவலுக்கெதிரான
தமிழர்களின் ஆயுதம் தமிழ்


சிங்களவெறியர்களின் கொடூரத்துக்கெதிரான
ஈழத்தமிழர்களின் ஆயுதம் தமிழ்


வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று


ஆனால் இன்றோ
துரோகிகள் சொல்கிறார்கள் தமிழே
நீ அவர்கள் கையிலாம்...


உன் மகன்கள் அங்கே
அம்மணமாக்கப்பட்டு
தலையில் சுடப்படுகிறார்கள்


உன் மகள்கள் அங்கே
அம்மணமாக்கப்பட்டு
இடையில் சுடப்படுகிறார்கள்


உன் மகன்கள் கருமாதியில்
உன் மருமகள்கள் தாலியறுக்க
உனக்கோ இங்கே துரோகிகள்
நடத்துகிறார்களாம்
அறுபதாம் கல்யாணம்


அதிகாரத்துக்கு அருகில்
இடம்பிடிக்க
ஓடுகின்றதொரு கூட்டம்


புறங்கைய நக்குவதில்
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்


ஆனால் வெறும் பிரியாணி
துண்டுக்கே
குலைக்கிறதொரு கூட்டம்


அந்த பிரியாணியில்
கிடக்கும் கால்களை
மெதுவாக கடியுங்கள்
அது எம் தமிழனின் கால்கள்


அந்த பிரியாணியில்
கிடக்கும் நெஞ்செலும்பை
மெதுவாக பிய்யுங்கள்
அது எம் தமிழனின் நெஞ்செலும்பு


எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
நம்பிக்கைதுரோகி
தம் கையிலிருக்கும் தமிழனின்
ரத்தத்தை கழுவுகிறான்
நரிச்சிரிப்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக