ஞாயிறு, 6 ஜூன், 2010

விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது.

வன்னி இறுதி யுத்தம் வரை முல்லைத்தீவில் பணியாற்றிய வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் இலங்கையின் காவற்துறையின் விசேட புலனாய்வுப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தத்தின் இறுதியில் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறிய அவர் நீண்ட நாட்களின் பின் தன்னை வைத்தியர் என இனங்காட்டாது முகாமிலிருந்து வெளியேறி குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று இந்தியா சென்றிருந்தார்.



அங்கு தனது மேற்படிப்புத் தொடர்பான விடயங்களை கவனித்திருந்த வேளை கியூப் பிரிவினருக்கு இவரொரு வைத்தியர் என்றும் இறுதி யுத்தம் வரை வைத்தியராகப் பணியாற்றியவர் என்றும் விடுதலைப் புலிகளுக்கு சிகிச்சை வழங்கியவர் என்றும் இலங்கைத் தமிழர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார். இந்த நிலையில் இவரிடம் பல முறை சென்ற கியூப்பிரிவு காவற்துறையினர் நாட்டை விட்டு வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே 2 தடவை சிங்கப்பூர் சென்றிருந்ததினால் மீண்டும் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.


எனினும் கியூப்பிரிவு காவற்துறையினர் சிங்கப்பூர் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து விமான நிலையத்தில் வைத்தே இலங்கைக்கு வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சனும் குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டனர். அவ்வாறு நாடு கடத்தப்படும் போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு சிங்கப்பூர் புலனாய்வுப்பிரிவினரல் வழங்கப்பட்ட தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி கைலைநாதன் சுதர்சன் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் 2ம் மாடியில் கடுமையான விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை. இவரது மனைவி தணிகைச் செல்வி மாத்தளையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலேயே வாகனம் ஒன்றின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக