புதன், 14 ஜூலை, 2010

அமெரிக்க போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்!

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. "யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர்" என்ற பாரிய போர்க்கப்பலே நேற்று திருமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது என்று கடற்படையின் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார்.



அமெரிக்கா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த பேச்சாளர், குறித்த கப்பல் திருமலையில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.


சுமார் 186 மீற்றர் நீளமும் 11 ஆயிரத்து 251 தொன் நிறையும் கொண்ட இந்தப் போர்க்கப்பல் துருப்புக்களைத் தரையிறக்கும் வகையைச் சேர்ந்ததாகும்.


24 அதிகாரிகள் மற்றும் 328 மாலுமிகள் பணியாற்றும் இந்தப் போர்க்கப்பல் 500 படையினரைத் தரையிறக்கும் சிறிய மற்றும் நடுத்தர தரையிறங்கு கலங்களைக் கொண்டுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் உற்சாக வரவேற்பளித்தனர்.


கடற்படையின் கிழக்குப் பிராந்திய தளபதி றியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே, குறித்த அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்று அதன் கட்டளை அதிகாரியான கமாண்டர் டேவிட் குலுசியளனவை வரவேற்றதுடன் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார் என்றும் கடற்படையின் பேச்சாளர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக