புதன், 18 ஆகஸ்ட், 2010

தென்னிலங்கை வியாபாரிகளின் தகாத செயற்பாட்டால் வாள்வெட்டு !.

தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த தளபாட வியாபாரிகள் மூவர். வீதியால் சென்று கொண்டிருந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் விளைவாக மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட மர்ம நபர்கள் கொக்குவில் பகுதியில் துணிகரத் தாக்குதல் ஒன்றை நடத்தி விட்டு மாயமாக மறைந்துள்ளார்கள்.

முகமூடி அணிந்து வந்த நபர்களால் வாள்கள், கத்திகள் , இரும்புக் கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டுப் படுகாயம் அடைந்த வியாபாரிகள் மூவரும் பொலிஸார், இராணுவம் ஆகியோரின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது. கொக்குவில் கிழக்கில் உள்ள ஆடியபாதம் வீதியும் , நந்தாவில் அம்மன் வீதியும் இணையும் சந்தியில் இவர்கள் இரவு நேரம் தரித்து நின்றபோது வந்திருந்த இம்மர்ம நபர்கள் வியாபாரிகளுடன் சிங்களத்தில் மிரட்டிய பின்பே தாக்குதல் நடத்தினர்.

தென்னிலங்கை வியாபாரிகள் கொண்டு வந்திருந்த லொறியையும் தீயிட்டு கொளுத்தினர். பின் மாயமாக மறைந்து விட்டனர். வியாபாரிகள் போட்ட சத்தத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த அயலவர்கள் உடனடியாக அயலில் உள்ள இராணுவ முகாமுக்கும், பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தனர்.

விரைந்து வந்த பொலிஸாரும் இராணுவத்தினரும் காயப்பட்ட வியாபாரிகளை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அங்கு போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் இச்சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் பதட்டமான நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக