செவ்வாய், 14 டிசம்பர், 2010

புலம்பெயர் மக்களை எச்சரிக்கிறார் -இமெல்டா

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிலர் தொடர்ச்சியாக தமது நிம்மதியான வாழ்க்கையை குழப்பிவருகின்றார்கள் என்ற நிலைப்பாடு வட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.



வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறான உதவி ஒத்துழைப்புக்களை வழங்கலாம் என்று புலம்பெயர் தமிழர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயற்படுவதை விடுத்து வீணான ஆர்ப்பாட்டத்திலும், வட மாகாணம் தொடர்பில் கூறப்படும் பொய்யான தகவல்களை திரிவுபடுத்தி வெளியிடும் விடயத்திலேயே தமது நேர காலங்களை கழித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


ஒரு சிலர் தம்மால் முடியுமான உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். இந் நிலையில் வன்னியில் வாழும் மக்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை. தொல்லை செய்ய வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வட பகுதியில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகளை அறியாமலேயே பல்வேறு கருத்துக்களை வெளியிட்டும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.


வட பகுதி மக்கள் யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்டவர்கள்.


தமது உறவுகளையும் உடன் பிறப்புக்களையும், சொத்துச் செல்வங்களையும் இழந்து கஷ்டப்பட்டவர்கள் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற பின்னர் மீண்டும் அமைதியான சூழலில் இயல்பு வாழ்க்கை நடத்த ஆரம்பித்துள்ளனர்.


இங்குள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தது தொடக்கம் இன்று வரை அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் தம்மாலான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். மக்கள் மத்தியில் துரிதமாக இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கம் கோடிக்கணக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது.


பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, வட மாகாண சபை, ஆகியவற்றின் ஊடாகவும் பல்வேறு திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.


தமது எதிர்காலத்தை மீண்டும் ஆரம்பித்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்து வருகின்றது. இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் செயற்பாடுகள் இந்த மக்களுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஏன்றார்.


யுத்தத்தின் கஷ்டங்களை அனுபவிக்காமல் தமது வசதிகளை பயன்படுத்தி வெளிநாடு களுக்குச் சென்றவர்களில் சிலரே இவ்வாறு செயற்படுகின்றனர். ஆனால் அவர்கள் இங்குள்ள மக்களின் நிலைமைகளை பற்றி சிந்தித்து பார்ப்பதில்லை.


30 வருட காலத்தின் இறுதி முடிவு பூச்சியமாகவே உள்ளது. எனவே இனியாவது இருக்கின்ற மக்களை பாதுகாத்து இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.


புலம் பெயர்ந்த மக்களுக்கு முடியுமாயின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து உங்களால் செய்ய முடியுமான உதவி ஒத்துழைப்புக்களை வழங்குங்கள் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.


வடக்கில் வாழும் ஒரு குடும்பத்தை புலம் பெயர்ந்து வாழும் ஒருவர் பொறுப் பெடுத்தாலே இந்த மக்களின் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இமெல்டா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக