ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இனப்படுகொலை குற்றங்களை வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஐ.நா வுக்கு எழுதி ராஜபக்சேவை யும் ஏனையவர்களையும் கைது செய்ய வழிவகை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.!!!!

எல்லோரும் எழுதுவோம்! சர்வதேச விசாரணை அமைய எழுதுவோம்!


முள்ளிவாய்க்கால், தமிழர் மனங்களை இன்றும் நிறைத்து நிற்கும் வடு. அந்த பேரவலத்திற்கு இன்னும் பரிகாரம் தேடுகின்றனர் ஈழத்தமிழ் மக்கள்.


தனது கடமையில் இருந்து தவறிய ஐ.நா சபையும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் தொடர்ந்து
எழுந்த அழுத்தம் காரணமான ஈற்றில் ஓராண்டின் பின்பு, இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டன என்று சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை கடந்த யூன் மாதம் நியமித்தார்.






இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சுகி டாருஸ்மன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின்; பணிகள் நான்கு மாதங்கள் கழித்து கடந்த செப்ரெம்பர் 18 ஆம் நாளே தொடங்கியது.


இந்த நிபுணர் குழு, 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்குப் பயணம் செய்த ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த ராஜபக்ச இருவரும் விடுத்த கூட்டு அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள்; நடைமுறைபடுத்தப்பட்டனவா என்பது தொடர்பாக ஆராயவுள்ளது.


அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பன்னாட்டுச் சட்டங்கள் பின்பற்றப்பட்டனவா? என்பது தொடர்பாகவும் இந்தக்குழு ஆராயும்.
இந்தக் குழு உண்மை கண்டறியும் குழுவாக இருக்கமாட்டாது எனத் தெரிவித்துள்ள ஐ.நா. பேச்சாளர், செயலாளர் நாயகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆலோசனை வழங்கும் உரிமை மட்டும் இதற்கு உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தக் குழு அமைக்கப்படுவதைத் தடுக்க சிறீலங்கா அரசு பகீரத முயற்சிகள் செய்து பலத்த எதிர்ப்புக்கள் தெரிவித்த போதும் அதனை மீறி ஐ.நா. அவையின் செயலாளர் நாயகம் இந்தக் குழுவை அமைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.


இது இராசதந்திர மட்டத்தில் சிறீலங்கா அரசுக்குக் கிடைத்த படுதோல்வி ஆகும். தமிழர் தரப்புக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். ஐ.நா. நியமித்த நிபுணர் குழுவை எதிர்த்து சிறீலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த யூலை மாத முற்பகுதியில் ஐ.நா.வின் கொழும்பு தூதுவராலயத்துக்கு முன் பௌத்த தேரர்கள் புடை சூழ சாகும்வரை உண்ணாநோன்பு இருந்தார். அவரது ஆதரவாளர்கள் ஐ.நா.தூதுவராலயத்தை நாள்கணக்கில் முற்றுகை இட்டு முடக்கினார்கள். இதனால் தூதுவராலய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி அங்கிருந்து வெளியேற நேர்ந்தது.


இந்தக் குழு அமைக்கப்படுவதற்கு 118 அணிசேரா நாடுகளைக் கொண்ட அணிசேரா அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. பின்னர் அந்த எதிர்ப்பு கைவிடப்பட்டது. இந்த அணிசேரா நாடுகளின் அமைப்பில் சிறீலங்கா இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர் குழுவை எதிர்த்து ரஷ்ய வெளியுறவு அமைச்சு அறிக்கை விட்டது. அதில் ஐ.நா.பாதுகாப்பு அவை மற்றும் பொதுச் சபை இரண்டையும் மீறி பான் கீ மூன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. .


சிறீலங்கா அரசு நிபுணர் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடைபோட்டுள்ளது. இந்த குழுவுடன் எந்தவொரு தொடர்பையும் பேணப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது..


இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கூடிய இக்குழு தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக வெளியில் இருந்து கருத்துக்களை பெறவிரும்பி ஒரு அறிவுறுத்தலை கடந்த ஒக்டோபர் 14ஆம் நாள் வெளியிட்டது. அதில் சில அறிவுறுத்தலிகள் வெளியிடப்பட்டுள்ளன.


1) கருத்துக்களை, முறைப்பாடுகளை செய்ய விரும்பும் முறைப்பாட்டாளர்கள் எழுத்து மூலம் பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத முறைப்பாட்டை சமர்ப்பிக்கலாம் என்றும் ஒருவர் ஒரு முறைப்பாட்டை மட்டும் சமர்ப்பிக்கலாம் எனவும் குறிபிடப்பட்டுள்ளது. கருத்துக்களை, முறைப்பாடுகளை அனுப்பி வைப்போர் தமது தொடர்பு விபரங்களை தவறாது குறிப்பிடுமாறும் வேண்டப்பட்டுள்ளனர். முறைப்பாடு எந்த மொழியில் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படாவிட்டாலும் ஆங்கில மொழியில் அனுப்புவதே சிறந்தது. ஆங்கிலம் தெரியாதோர் தமிழில் எழுதி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வசதியைப் பெற்று ஆங்கிலத்திலேயே அனுப்புதல் சிறந்தது.


யாரும், அவர் எந்த நாட்டையோ இனத்தையோ சார்ந்தவராக இருப்பினும் இங்கு தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். சுயாதீனமான சர்வதேச நீதிவிசாரணையே இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த பேரவலத்திற்கு தீர்வாக அமையும் என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்துவதே இங்கு முக்கிய கருதுகோளாகும். சிறீலங்கா ஆட்சியாளர்களால் அமைக்கப்படும் எந்த விசாரணைக்குழுவும் அதற்கு பரிகாரமாக அமையாது என்பது பலதரப்பாலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


அதிலும் உலகறிந்த தலைவர்கள் பலர் இக்கருத்தையே தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.


இதில் பின்வருவோர் குறிப்பிடத்தக்கவர்கள்.


Archbishop Desmond Tutu, chair of The Elders, David Cameron, British Prime Minister, Navaneetham Pillai, United Nations high Commissioner for human Rights, Kofi Annan, Former UN Secretary-General, Jimmy Carter, 39th President of the United States of America, Nelson Mandela, Former President of South Africa, Mary Robinson, Former Irish President and former UN high Commissioner for human Rights, Madame Louise Arbour, President and CEO, International Crisis Group, Fernando henrique Cardoso, Former President of Brazil, Kenneth Roth, Executive Director, human Rights Watch, Salil Shetty, Secretary General, Amnesty International, Martti Ahtisaari, Former President of Finland and international mediator, Lakhdar Brahimi, Former Algerian Foreign Minister and former UN envoy, Grafa Machel, Former Minister of Education and Culture in Mozambique.


இந்நிலையில் நாம் தமிழர்கள், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் எழுதுகின்ற அதேவேளை ஏனையவர்களையும் எழுத வைக்கவேண்டும். யாரெல்லாம் எழுதலாம்.


அ) நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாமே எழுதலாம்


ஆ) உறவுகள், நண்பர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்பில் எழுதலாம்


இ) தமிழர் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புகள், புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், மத அமைப்புக்கள், மகளீர் அமைப்புக்கள், தொழில்சார் வல்லுனர்கள் எனத் தமிழர்கள் அனைவரும், அமைப்க்களாகவும், தனிநபர்களாகவும் எழுதலாம்.


ஈ) தமிழர் இல்லாதோர், அரச சார்பற்ற நாட்டு அல்லது பன்னாட்டு அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் புரியும் சகநண்பர்கள், சேர்ந்து கல்வி கற்கும் கச நண்பர்கள், கல்விமான்கள், தொழிற்சந்க வாதிகள் எனத் தமிழர் இல்லாதோர் அனவரையும் எழுத வைக்கலாம்.


ஒருவர் ஒரு மின்னஞ்சல் மட்டுமே அனுப்பலாம்.


அனுப்பவேண்டிய முகவரி - panelofexpertsregistry@un.org


இந்த மின்னஞ்சலை வேறு யாரும் பார்க்க முடியாது.


அனுப்பி வைப்பதற்கான காலக்கெடு: டிசெம்பர் 15, 2010


முறைப்பாட்டாளர்கள் விரும்பின் அந்தந்த நாட்டு தமிழ் அமைப்புகளுக்கு ஒரு பிரதியை அனுப்பலாம். கனடாவைத் தளமாகக் கொண்ட போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்திற்கு ஒரு படியை அனுப்பி (un@cwvhr.org) வைக்கலாம்.


சிறீலங்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் முன் போரினால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் உறவினர்களும் பொது அமைப்புக்களும் தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்வது அவசியம். இந்தக் குழுவின் அதிகாரங்கள் சிறீலங்காவில் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பன்னாட்டு மனிதவுரிமை மற்றும் போர் பற்றிய மானிட சட்ட மீறல்கள் பற்றி ஐ.நா அவையின் செயலாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் என மட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் அதன் பரிந்துரைகள் ஒரு முழு அளவிலான போர்க்க குற்ற விசாரணைக்கு வழிசமைக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.


எனவே உங்கள் சமர்ப்பித்தல்களின் இறுதியில் நிபுணர் குழு கீழ்க்கண்டவற்றை ஐ.நா.அவைச் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்கலாம்.


சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான குழுவை அமைத்தல்.


எனவே இந்த அரிய வாய்ப்பைத் தமிழ்மக்கள் நழுவ விடக்கூடாது. நாம் அனைவரும் எழுதுவதுடன் ஏனையவர்களையும் எழுத வைப்போம். சர்வதேச விசாரணை அமைய விரைந்து எழுதுவோம். உதவிகள் தேவைப்படின் 416-628-1408 என்ற தொலைபேசி இலக்கத்தில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவத்தை அழைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக