செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இந்தியாவுக்கு எதிரான சிங்கள வியூகம்

இலங்கையில் தமிழர் இல்லையேல் அங்கே இந்தியாவுக்கென்று எதுவும் இருக்காது. பொதுவாக முழு இந்தியாவுக்கும், குறிப்பாக தென் இந்தியாவிற்கும் பாதுகாப்பு இல்லாது போய்விடும் ஆபத்து உண்டு. இலங்கையின் இனப்பிரச்சினை என்பது உண்மையில் இந்தியாவுக்கு எதிரான சிங்கள அரசியலின் வெளிப்பாடே ஆகும். வெளிப்பார்வைக்கு அது ஈழத்தமிழருக்கு எதிரானது போலத் தோன்றினாலும், சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுதான் தமிழின எதிர்ப்பாய் வெளிப்படுகின்றது. அதாவது இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகவும், கையாளாகவும் ஈழத்தமிழர் உள்ளனர் என்று கூறி, இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தை ஈழத்தமிழர் மீது சிங்கள ஆட்சியாளர் புரிகின்றனர். எனவே உள்ளடக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது, சிங்கள ஆட்சியாளரின் இந்திய எதிர்ப்பு யுத்தத்தின் ஒரு வடிவமாகவே அமைந்துள்ளது. இந்தியாவை இலங்கையில் செயலற்றதாக்க வேண்டும் என்றால், தமிழரை இலங்கையில் முற்றிலும் தோற்கடித்தாக வேண்டும் என்பதே சிங்கள அரசியல் இராஜதந்திரத்தின் மூலோபாயம் ஆகும். இதற்காக நயத்தாலும், பயத்தாலும் வேறுபல வியூகங்களினாலும் ஈழத்தமிழரை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதன் மூலம், இந்தியாவை இலங்கையில் கதியற்ற நிலைக்கு தள்ளுவதும், இந்தியாவின் எதிரிகளுடன் இறுதியில் கூட்டுச் சேர்வதுமே சிங்கள இராஜதந்திரத்தின் இறுதி இலக்காகும். இதற்காக முதலில் சர்வதேச வியூகங்களையும், அயலுறவு வியூகங்களையும், உள்நாட்டு வியூகங்களையும், தமிழினத்திற்கு உள்ளேயான உள்ளின அரசியல் வியூகங்களையும் ஒருங்குசேர வடிவமைத்து சிங்கள மயமாக்கும் இனக்கபளீகரக் கொள்கையை (Policy of assimilation) சிங்கள ஆட்சியாளர் வகுத்துள்ளனர். முழு இலங்கைத்தீவையும் முற்றிலுமாக சிங்களமயப்பட்ட இனப்பரம்பலுக்கும், ஆதிக்க வட்டத்திற்கும் உரிய தீவாக்குவதே இக்கொள்கையின் பிரதான உள்ளடக்கம் ஆகும். இனக்கபளீகரக் கொள்கையை உள்நாட்டு ரீதியில் பல வழிகளினாலும் சிங்கள ஆட்சியாளர் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். முதலாவதாக இலங்கை சிங்கள, பௌத்த தேசம் என்றும், சிங்கள – பௌத்தத்தை வளர்ப்பதும், பேணிப் பாதுகாப்பதும் அரசின் பிரதான கொள்கை என்றும் சிறிதும் நெகிழ முடியாத அரசியல் யாப்பு ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ் அனைத்தும் யாப்புக்கும், சட்டத்திற்கும் உட்பட்டே அமைய வேண்டும் என்று கூறி எத்தகைய இனவுரிமை, மனிதவுரிமை மீறல்களையும் சிங்கள ஆட்சியாளர் முதற்கண் நியாயப்படுத்துகின்றனர். ஓர் இனத்தின் மேலாதிக்கத்திற்காக மதவாத மேலாதிக்கச் சட்டத்தை எழுதி வைத்துவிட்டு, ஏனைய இனங்கள் தமது இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை இனவாதம், பிரிவினைவாதம் என சிங்கள அரசு முத்திரை குத்துகிறது. அதாவது ஒடுக்கப்படும் இனம் தன் இனவுரிமையைப் பற்றிப் பேசுவதை, ஒடுக்கும் இனம் பிரிவினைவாதம் என்றும், இனவாதம் என்றும் கொச்சைப்படுத்துகிறது. ஆனால் அவர்களின் யாப்பே முற்றிலும் சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதமாக உள்ளது என்பது பெரிதும் கவனிக்கத்தக்கது. அதாவது ஒடுக்குமுறையும், இனக்கபளீகரமும் யாப்பால் நியாயப்படுத்தி உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு சிங்கள, பௌத்த மேலாதிக்க இனவாதத்தினை அரசியல் யாப்பின் ஊடாக உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டு, சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற சமத்துவக் கொள்கையை (Egalitarian policy) சிங்கள அரசியல் தலைவர்கள் பேசுகின்றனர். இது அடிப்படையில் மிகவும் அபத்தமானது, அநீதியானது, ஆபத்தானது. இதனைப் புரிந்து கொள்ள இங்கு ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்தில் கணவன் மீன், இறைச்சி போன்ற மாமிசம் மட்டும் சாப்பிடுபவனாகவும், மனைவி மரக்கறி மட்டும் சாப்பிடுபவளாகவும் இருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில், வீட்டில் மாமிசம் மட்டும் சமைக்கப்பட வேண்டும் எனக் கணவன் தனது பலத்தின் மூலம் உத்தரவிட்டு, மனைவியையும் மாமிசம் சாப்பிட வேண்டும் என்று திணித்து உணவுண்ண வைத்துக் கொண்டு, தான் வீட்டில் சமத்துவத்தைப் பேணுவதாகவும், உணவில் தனக்குள்ள சகல உரிமையும் தனது மனைவிக்கும் உள்ளதாகவும் கணவன் பெருமை பாராட்டுவது எவ்வளவு அபத்தமானதோ, எவ்வளவு அநீதியானதோ அதே போன்றது தான் சிங்களத் தலைவர்களின் 'சமத்துவ' அணுகுமுறையும். இச் 'சமத்துவ' அணுகுமுறை என்பது இனக்கபளீகரக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடேயன்றி வேறொன்றுமல்ல. இத்ததைய ஓர் அணுகுமுறையைத் தான் தற்போதைய ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸவும் கடைப்பிடிக்கிறார். ஸ்ரீலங்காவில் சிறுபான்மை என்று எவருமே இல்லை என்கிறார். இலங்கைத் தீவில் வாழும் அனைவரும் ஸ்ரீலங்கரே என்கிறார். அனைவருக்கும் சட்டத்தின் முன் சமவுரிமை உண்டு என்கிறார். அனைவரும் எங்கு செல்லவும், வாழவும் உரிமை உண்டு என்கிறார். மக்கள் அனைவரையும் தமது அரசாங்கம் சமத்துவமாக நடத்தும் என்கிறார். எமது உதாரணத்தில் மீன், இறைச்சி மட்டும் உண்ணும் கணவனாக மகிந்த விளங்குகின்றார். இவ் அணுகுமுறை மகிந்தவுக்கு மட்டும் உரியது அல்ல. அனைத்துச் சிங்களத் தலைவர்களும் இத்தகைய இனக்கபளீகரக் கொள்கையினைத் தான் கைக்கொண்டுள்ளனர். இதனை வெளிப்படுத்துவதிலும், செயற்படுத்துதிலும் இவர்களிடையே சிறு,சிறு வேறுபாடுகள் இருக்க முடியுமேயன்றி அடிப்படையில் இவர்களது கொள்கை ஒன்றுதான். ஏனெனில் இனக்கபளீகரம் என்பது ஸ்ரீலங்காவின் அரச கொள்கை. அது ஒரு அரசாங்கத்தின் கொள்கை மட்டுமன்று. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இதனையே மேற்கொண்டு வந்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை பதவிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் மேற்கொண்டமை இதற்கு சாட்சியாய் அமைகின்றன. இனக்கபளீகரத்தின் ஆபத்தான அடுத்த ஏற்பாடு சிங்களக் குடியேற்றத்திலேயே தங்கியுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்று, பெரியமீன் தத்துவத்தை அரசியல் யாப்பில் எழுதி வைத்துவிட்டு, பெரிய மீனான சிங்கள இனம் சிறிய மீன்களான தமிழர், முஸ்லிம்களை விழுங்குவதை இத்தத்துவம் நியாயப்படுத்துகிறது. அதாவது தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என தமிழர் கூறும் போது, தமிழர் இலங்கையில் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும், அவ்வாறே சிங்களவரும் எங்கும் குடியேற சட்டப்படி உரிமையுண்டு என்றும் ஒரு 'பெரிய மீன் சட்டத் தத்துவத்தை' கூறுகிறார்கள். இதன்படி சிறுபான்மையினரான தமிழர் பெருபான்மையினரான சிங்களவரின் பகுதிகளில் குடியேறுவதனால் சிங்கள குடிப்பரம்பலில் எவ்வித மாற்றமும் ஏற்படமாட்டாது. ஆனால் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களது நிலப்பரப்பில் குடியேறினால் அந்த நிலப்பரப்பு சிங்கள மயமாகிவிடும். இதனையே பெரியமீன் தத்துவ சட்டம் எனக் கூறுகிறோம். பார்வைக்கு சட்டம் பெரிய மீனுக்கும், சின்ன மீனுக்கும் இடையே சமம் எனத் தோன்றினாலும் நடைமுறையில் அது பெரிய மீனுக்கு மட்டுமே சேவை செய்யும் சட்டமாக உள்ளது. இந்த பெரிய மீன் சட்டத்திற்கு பதிலாக சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான சட்டமே அவசியமானதும், நியாயமானதும் ஆகும். ஆனால் சிங்கள அரசியலானது சிங்கள பெரும்பான்மையினரின் எண்ணிக்கைப் பலத்தை வைத்துக் கொண்டு, அதனை ஜனநாயகம் என வர்ணித்து இனநாயகம் புரிவதன் மூலம் அளவால் சிறிய தேசிய இனங்கள் இலங்கையில் விழுங்கப்படுகின்றன. இந்த வகையில் குடியேற்றம் எனும் திட்டத்தின் மூலம் முழு இலங்கையையும் சிங்கள மயமாக்கும் மூலோபாயத்தை சிங்கள ஆட்சியாளர் கொண்டுள்ளனர். 1911 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின் படி கிழக்கு மாகாணத்தில் ஒரு வீதம் வரையான சிங்கள மக்களே காணப்பட்டனர். ஆனால் அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை 1937 ஆம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து கிழக்கு மாகாணம் சிங்கள மயமாகும் நிலை உருவாகி, சுதந்திரம் அடையும் காலத்தில் சுமாராக 5 வீதமாய் உயர்ந்து, இன்று கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் ஏறக்குறைய 1/3 பங்கினர் சிங்களவர் என்ற ஆபத்து உருவாகிவிட்டது. இன்றைய அரசியல், இராணுவ நிலையின் போக்கின்படி இன்னும் சில வருடங்களுள் கிழக்கு மாகாணத்தில் சிங்களவரே பெரிய இனம் எனும் நிலை உருவாகிவிடும். 1930 களின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பாக ஆங்கிலேய ஆட்சியாளரின் பிரித்தாளும் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சிறுபான்மையினரை அணைத்து பெரும்பான்மையினரை ஆளவல்ல பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் இலங்கையில் கடைப்பிடித்து வந்தனர். ஆனால் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மகாத்மா காந்தியை ஈழத்தமிழர் 1927 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரவழைத்து மாபெரும் வரவேற்பை அவருக்கு அளித்ததுடன், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான நிதியையும் சேகரித்து காந்தியிடம் மக்கள் கையளித்தனர். இதைக்கண்ட பிரித்தானியர் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இலங்கைத் தீவையும் ஈழத்தமிழர் இணைத்துவிடுவர் என அச்சமடைந்து, ஈழத்தமிழருக்கு எதிராக சிங்கள தலைவர்களை அரவணைக்கும் வகையில், சிங்கள இனத்திற்கு சாதகமான அரசியல் ஏற்பாடுகளை ஏற்படுத்தத் தொடங்கினர். ஈழத்தமிழருக்கு எதிராக பிரித்தானியா இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதற்கான பிரதான காரணம் ஈழத்தமிழர் இந்தியாவின் நண்பராக உள்ளனர் என்பதும், அதனால் இந்திய விடுதலைப் போராட்டம் இலங்கைக்கு பரவிவிடும் என்ற அச்சமுமே ஆகும். இக்காலகட்டத்தில் தமிழர் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைந்து விடக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆங்கிலேயக் கனவான் ஒருவரிடம் டி.எஸ்.சேனநாயக்கா கூறியதாகவும், அதற்கு அவர் பின்வருமாறு ஆலோசனை கூறியதாகவும் எழுதப்படாத ஒரு தகவல் ஒன்று உண்டு. அதாவது கிழக்கு மாகாணமே முக்கியமானது என்றும், சிங்கள குடியேற்றத்தை படிப்படியாக செய்வதன் மூலம் கேக் சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தை சிங்களமயமாக்கி விழுங்கலாம் எனவும், கிழக்கில்லாத வறண்ட வடக்கு இந்தியாவுக்கு தேவைப்படாது எனவும் அவர் ஆலோசனை கூறியதாக பேசப்படும் கூற்றொன்று உண்டு. இதன் பின்பு, அல்லை கந்தளாய் குடியேற்றத் திட்டத்தை அரசியல் உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா வடிவமைத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது. டி.எஸ்.சேனநாயக்காவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவரும், நிர்வாக சேவை அதிகாரியுமாய் இருந்த தமிழரான திரு.ஸ்ரீகாந்தா என்பவர் இத்தகைய உள்நோக்கத்துடன் டி.எஸ்.சேனநாயக்கா செயற்பட்டார் என்றும், இப்படியொரு ஆலோசனை ஆங்கிலேயரால் அவருக்கு வழங்கப்பட்டதாக தான் அறிந்திருந்ததாகவும் தனிப்பட்ட உரையாடலின் போது அவர் கூறியதான தகவல் ஒன்று உண்டு. எனவே இந்தக் குடியேற்றத் திட்டக் கொள்கையும், சிங்கள மயமாக்கல் கொள்கையும் இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட வகையில் கருக்கொண்டிருப்பதை அவதானிக்கும் போது இதன் நீண்டகால நோக்கமும், இதற்குள் அடங்கியிருக்கும் ஆபத்தும் தெளிவாக தெரிய வருகிறது. ஆதலால் இக்குடியேற்றத் திட்டக் கோட்பாட்டை வெறுமனே ஓர் இனம் சார்ந்த உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு பிராந்திய, சர்வதேச அரசியல் வியூகப் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டியது அவசியம். கிழக்கு மாகாணத்தில் தொடங்கிய இக்குடியேற்றத் திட்டமானது தொடர்ந்து வடக்கு வரை அது விஸ்தரிக்கப்பட்டு வருவதை நாம் காணலாம். மணலாறு குடியேற்றத் திட்டத்தின் மூலம் அது கிழக்கில் இருந்து வடக்குக்கு விரிந்துள்ளதுடன், புவியியல் ரீதியாக கிழக்கையும், வடக்கையும் பிரிக்கும் திட்டச் செயற்பாடுகளையும் இது கொண்டுள்ளது. எனவே சிங்கள குடியேற்றத் திட்டங்களால் இனக்கபளீகரம் அடிப்படையில் வெற்றிகரமாகச் செயற்படுகிறது. போர் முடிந்து முற்றிலும் வடக்கு - கிழக்கு இராணுவ மயப்பட்டுள்ள சூழலில் சிங்களக் குடியேற்றம் மூலமான சிங்கள மயமாக்கல் துரித வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் கிழக்கு மாகாணம் வேகமாக சிங்கள குடியேற்றத்துக்கு உள்ளாகுவதுடன், வடக்கும் இதன் விஸ்தரிப்புக்கு பல வகைகளிலும் உள்ளாகிறது. இதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம். வன்னி மாவட்டங்களில் கிழக்கு கடல் கரையோரம் முழுவதும் சிங்கள மீனவக் குடியேற்றங்களை மேற்கொள்வதன் வாயிலாக ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கடல் தொடர்பை முதற்கண் அறுக்க முனைகிறார்கள். அத்துடன் அக்கடற் பிராந்தியத்தை சிங்கள இன ஆதிக்கத்தின் கையில் எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். அதேவேளை மேற்கு கடற்கரையோரமாக காலபோக சிங்கள மீனவரை ஆயுதம் தாங்கிய மீனவர்கள் ஆக்கி, மன்னார் கடற்பரப்பை சிங்கள ஆதிக்கத்தின் பிடிக்குள் கொண்டு வருகிறார்கள். காலகதியில் இந்த மீனவர்கள் காலபோக மீனவர்களாக அன்றி, நிரந்தர வாசி மீனவர்களாக விரைவில் மாறிவிடுவார்கள். இதன் மூலம் கிழக்காலும், மேற்காலும் ஈழத்தமிழருக்கும், இந்தியாவுக்கும் இடையிலான கடல் தொடர்பு இன்னும் சில வருடங்களில் முற்றாக அறுந்து போய்விடும். இது தமிழரைத் தனிமைப்படுத்தி இனக்கபளீகரம் செய்ய முடிவதுடன், இலங்கையில் இந்தியாவுக்கான அடிப்படை வாய்ப்புக்களை இல்லாது ஒழிக்கவும் ஏதுவாகிறது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில், வன்னியில் மக்கள் அற்றுப் போன காலமாக யுத்தத்தின் மூலமான இன்றைய காலகட்டமே உள்ளது. இது வன்னிக்கு ஏற்பட்ட மிகப் பெரும் அவமானமும், தோல்வியுமாகும். இவ்வாறு வன்னி வாழ் தமிழ் மக்கள் அகற்றப்பட்ட சூழலில் வன்னிப் பிரதேசம் முழுவதுமே சிங்கள இராணுவ வாழ்விடமாகி விட்டது. மக்கள் குடியகற்றப்பட்ட நிலையில் ஆகக்கூடியது 1,50,000 க்கு மேல் மக்கள் திரும்பக் கூடிய மனநிலை அங்கு இல்லை. குறைந்தது 1,00,000 இராணுவத்தினரைக் கொண்ட இராணுவ குடியிருப்புத் தளமாக வன்னியை ஆக்கும் கொள்கையை அரசு கொண்டுள்ளது. இந்த 1,00,000 இராணுவத்தினருடன் கூடவே காவல்துறையினர், கடற்படையினர் என ஆயுதம் தாங்கிய படையினரின் எண்ணிக்கை ஆக்குறைந்தது 1,25,000 த்தை எட்டும். இத்தொகை ஏறக்குறைய அங்கு குடியிருக்கப் போகும் மக்களின் தொகைக்கு சமனானது. அத்துடன் இந்த 1,25,000 ஆயுதம் தாங்கிய சிங்கள படையினருடன் அவர்களது குடும்பங்களும் உத்தியோகபூர்வமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் குடியமர்த்தப்படுவர். இதன் மூலம் வன்னியின் ஆயுதம் சார் படையினரின் குடித்தொகை குறைந்தது 2,00,000 த்தை இலகுவாகவே எட்டிவிடும். மேலும் அபிவிருத்தி, கீழ்கட்டமைப்பு அபிவிருத்தி என்பதன் பேரில் உள்வரவாகவுள்ள சிங்களத் தொழிலாளாரின் தொகை இன்னும் ஒரு பகுதி சிங்கள சனத்தொகையாய் அமையும். அத்துடன் அபிவிருத்தி, கைத்தொழில் திட்டங்களுக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஒப்பந்தங்களின் போது 75 வீதத்திற்கு குறையாத சிங்களவர்களிற்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சிங்கள அரசின் ஒரு கொள்கையாக உள்ளது. இதன் மூலம் அபிவிருத்தி என்பது சிங்கள மயமாக்கலுக்கான விருத்தியாகவே அமையும். இது வன்னிக்கு மட்டுமன்றி முழு வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திற்கும் பொருந்தும். மேலும் இவை சார்ந்து உருவாகும் கடைத் தெருக்கள், சந்தைகள், சேவை மையங்கள் என்பன எல்லாம் திட்டமிட்டு சிங்கள வணிகர்களின் கைகளுக்கு அரசால் வழங்கப்படும். அத்துடன் இராணுவ, காவல் துறையினரின் ஆதரவும், சிங்கள அரச நிர்வாகத்தின் ஆதரவும் நேரடியாக சிங்களவருக்கு துணையாகவே அமைவதால் தமிழர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இலகுவில் அனாதரவாய் விழுங்கப்பட்டு விடக்கூடிய பரிதாபமே பெரிதாய் உள்ளது. இவற்றுடன் கூடவே பௌத்த நிறுவன அமைப்புகளுக்கான அபிவிருத்திகளும் கட்டிட நிர்மாணிப்புக்களும் தமிழ்ப் பிரதேசத்தை காட்சியளவில் சிங்களப் பிரதேசமாக காட்சியளித்துவிடும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது தொடர்புபட்டவர்கள் என்பதன் பெயரில் தமிழர் மீது எப்போதும் இராணுவ, பொலீஸ் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பிருப்பதால் உளவியல் ரீதியாக தமிழர் ஒடுங்கிப் போய் சிங்கள மயமாக்கலுக்கு பலியாகிவிடுவார்கள். இவற்றைத் தவிர தாம் வெற்றி வீரர்கள் என்ற மன உணர்வில் சிங்கள இராணுவ, பொலீஸ் படையினரும், சிங்கள அரச அதிகாரிகளும் தமிழர் மீது நேரடியாக ஆதிக்கம் செலுத்துவர். அத்துடன் சாதாரண பாமர சிங்கள மகனிடமும் இத்தகைய அணுமுறையே நடைமுறையில் இருக்கும். அத்தகைய சிங்கள பாமரர்கள் இராணுவ அரவணைப்பில் தமிழர் மீது ஏளனமாய் நடந்து கொள்ள முடியும். அடுத்து வெற்றி வீரர்களாய்க் காட்சியளிக்கும் சிங்களத் தலைவர்கள், தமிழ் அரசியல் தலைவர்களை நாதியற்றவர்களாய் பார்க்கவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாய் பயன்படுத்தவும் இலகுவில் துணிவர். இவ்வாறு எல்லா வகைகளிலும் தமிழினம் பலவீனப்படுத்தப்பட்டு சில ஆண்டுகளுக்கு உள்ளேயே சிங்கள ஆதிக்கத்தால் விழுங்கி இனக்கபளீகரம் செய்யப்படக் கூடிய ஆபத்து துல்லியமாய்த் தெரிகிறது. எனவே இப்பொழுது தமிழ் பேசும் மக்களின் பிரதான பிரச்சினை, இந்த இனக்கபளீகரத்தில் இருந்து உடனடி அர்த்தத்தில் எவ்வாறு தற்காப்பது என்பதே. 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்'. அடிப்படையிலும் அடிப்படையாக சிங்களக் குடியேற்றத் தடுப்பு, அபிவிருத்தி என்ற பெயரிலான சிங்களத் தொழிளாளர் குடியிருப்பு வளர்ச்சியை தடுக்க வேண்டியவை என்பன உடனடிக் கவனத்திற்குரிய விடயங்களாய் காணப்படுகின்றன. ஈழத்தமிழரின் முக்கியத்துவத்தை சனத்தொகை அளவால் பார்ப்பதை விடவும், கேந்திர முக்கியத்துவ அளவால் அவர்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இலங்கையை ஒரு சிறிய தீவு என்று அளவால் பார்க்காமல் வர்த்தக, இராணுவ, கடல்வழி கேந்திர மையமாக அதனை பார்ப்பது போலவே, ஈழத்தமிழரையும் அவர்களது சனத்தொகை எண்ணிக்கையால் பார்க்காமல் அவர்களுக்கு இருக்கும் கேந்திர முக்கியத்துவத்தால் பார்வையிடவேண்டும். பல நூற்றாண்டு கால வரலாற்றை நோக்கும் போது காலத்திற்கு காலம் வெளியரசுகளின் அல்லது வல்லரசுகளின் நலன் சார்ந்து ஈழத்தமிழர் தொடர்ந்து பலியாகும் கதை நீண்டு செல்கின்றது. ஆனால் ஈழத்தமிழருக்கு ஏற்படக் கூடிய முழுத் தோல்வி இறுதியில் இந்தியாவின் பாதுகாப்பிலும், அதன் பொருளாதார நலன்களிலும் பேரடியை ஏற்படுத்தக் கூடியதாய் அமைந்துவிடும். தற்போது படிப்படியான தோல்வியில் இந்தியாவுக்கு நேரடியாக தாக்கம் ஏற்படக் கூடிய அளவிற்கு இந்தியாவின் எதிரிகளின் வளர்ச்சி காணப்படவில்லை. ஆனால் தமிழரின் முழு நீளத் தோல்வியில் இந்தியாவின் எதிரிகள் முழு நீளமாய் இலங்கைத் தீவில் தலையெடுப்பது தெரிய வரும் போது இந்தியாவுக்கு மாற்று வழி இருக்காது. ஆதலால் வெள்ளம் தலைக்கு மேல் ஏற முன்னர் இந்திய தலைவர்களும், ஈழத்தலைவர்களும் அணைக்கட்டத் தவறினால் ஈழத்தமிழரின் அழிவில் இந்தியாவின் அழிவும் தலையெழுத்தாய் அமையக் கூடிய ஆபத்து உண்டு. தமிழர் தோற்கடிக்கப்பட்டால் சிங்கள ஆட்சியாளர் இலங்கையை எந்நேரத்திலும் இந்தியாவுக்கு எதிரான களமாக்கக் கூடிய ஆபத்து பெரிதாய் உள்ளது. இன்றைய தற்காலிக மனோநிலையில் நின்று பார்க்காது, எதிர்கால சூழலில் வைத்து சிந்தித்தால் இது தெளிவாய்த் தெரிய வரும். ஈழத்தமிழர் பிரச்சினையை வெறுமனே ஒரு மொழிப் பிரச்சினையாக அல்லது இனப் பிரச்சினையாக மட்டும் பாராது, இந்திய உபகண்ட பிரச்சினையாய், பிராந்திய அமைதிக்கான பிரச்சினையாய், சர்வதேச அரசியல் பொருளாதாரத்தோடு நெருங்கிய தொடர்புள்ள பிரச்சினையாய், மொத்தத்தில் உலகளாவிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினையின் ஒரு பகுதியாய் அதனைப் பார்வையிடுவதே மிகவும் சரியான கண்ணோட்டமாய் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக