வெள்ளி, 28 மே, 2010

முள்ளிவாய்க்காலும் ஸ்டாலின்கிராடும் .......................

உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர்,
நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. பகலும் இரவும் தெரியாத அளவிற்கு குண்டுவீச்சின் ஒளி அந்நகரை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. கட்டடங்கள்மீது பொழியப்பட்ட குண்டுவீச்சுகளால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எஃகு சட்டங்கள் உருகி நீராய் பெருகியது. ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் எண்ணெய் சதுக்கங்கள்கூட குண்டுவீச்சால் பற்றி எரிய தொடங்கியது. புயலாய் ஸ்டாலின்கிராடை பிடிப்போம் என்று கொக்கரித்த இட்லருக்கு மிக அமைதியான பதில் மொழியாக செஞ்சேனை சொன்னது, "நிலைத்து நின்று வெல்லுங்கள்". இது செஞ்சேனை படைவீரர்களுக்கான உறுதிமொழியாக இருந்தது.
தம்முடைய குருதியை வார்த்து, வெற்றியை அடைவதற்காக அந்த களத்திலே செஞ்சேனை வீரர்கள் தம்மை அர்ப்பணித்தார்கள். தமது உறுதியையும், அஞ்சாமையையும் வெளிப்படுத்தினார்கள். நடைபெற்ற மாபெரும் இந்த சமரானது மிக சாதாரணமானது கிடையாது. இரண்டாம் உலகப்போரின் விளைவை, அதன் எதிர்வினையை தீர்மானிக்க வல்லதாக இருந்தது என்பதை உலகப் பார்வையாளர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள். பாசிச ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறை நுகத்தடியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டடோம் என்ற நம்பிக்கையை அடிமையாக்கப்பட்ட மக்களது இதயங்களில் ஸ்டாலின் கிராடு தோற்றுவித்தது. ஸ்டாலின்கிராடு என்ற பெயருக்கு வேறொரு பொருள்கூட இருக்கிறது. அது, சோவியத் போர் தந்திரத்தின் வெற்றி என்று கூறப்படுகிறது. இந்த சமரிலே தமது வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்ற சோவியத் வீரர்களை உந்தித்தள்ளியது தாய் மண்ணின்மீது கொண்ட பற்று மட்டுமல்ல, ஒரு பாசிச வெறியனை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற வெறி.
இதுதான் சமீபத்தில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் போரிலும் காணப்பட்டது. அன்று இட்லர் புயலாக ஸ்டாலின்கிராடை பிடிப்போம் என்று கொக்கரித்ததைப் போல, இன்று மகிந்தா கிளிநொச்சியை கைப்பற்றுவோம் என்று அறிவித்தான். ஆனால் செஞ்சேனை படைவீரர்களுக்கு கொஞ்சமும் இடைவெளி இல்லாத அளவிற்கு தமிழீழ தேசிய ராணுவம் களத்திலே நின்றது. தேசிய தலைவரின் கட்டளையை ஏற்று நின்று, நிதானித்து வெற்றிக்கான பெரும் முயற்சி எடுத்தது. அவர்கள் நிகழ்த்திய அந்த சமரை இதுவரை யாராலும் குறை சொல்ல முடியாது என்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம். நம்மைவிட நம் பகைவன் சரியான உணர்ந்திருக்கிறான் என்பதை அடுத்தடுத்து தமிழீழத்தில் நடத்தப்படும் அக்கிரமங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கடும் சமர் நாம் தோற்கடிக்கப்பட்டோம் என்பதற்காக கவலைப்பட வேண்டாம். காரணம், நாம் இன்னமும் உயிரோடு இருக்கிறோம்.
கடந்த 30 ஆண்டுகளாக நாம் சமர் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, தோற்கடிக்கப்பட்ட இந்த சமர் நமக்கு புதிதல்ல. நமக்கு கண்ணீரும் குருதியும் ஒன்றுதான். நாம் கண்ணீரைவிட குருதியைத்தான் மிகுதியாகக் கொட்டி இந்த விடுதலையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, இது முடிந்துவிட்டது. பல்வேறு உலக நாடுகளின் அணிவகுப்போடு நாம் தோற்கடிக்கப்பட்டோம் என்கின்ற சிந்தனை நமக்குள் இருந்து தோற்கடிக்கப்பட வேண்டும். நமது பெயர் வெற்றியின் அடையாளமாக பொறிக்கப்பட வேண்டும். நாம் தோற்பதற்காக பிறந்தவர்கள் அல்ல. வெற்றியின் வாசலிலே நமது வீர அடையாளத்தை பதிப்பிக்க வந்த வித்தகர்கள் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்வதற்கான காலத்தை நாம் சிந்தித்துப் பார்த்து செயல்படுத்த வேண்டும். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைப்பது முட்டாள் தனத்தின் முகவரியாகும். முடிந்தது. முடிந்ததிலிருந்து எதை தொடங்குவது என்பதைத்தான் ஒருபோராளி இப்போது சிந்திக்க வேண்டும்.
அமெரிக்க ஆதிக்க வெறியர்களை எதிர்த்து வியட்நாமிய மக்கள் கடும் சமர் புரிந்துக் கொண்டிருந்த காலக்கட்டம். அமெரிக்கா ஹோசிமினுக்கு எச்சரிக்கை செய்தது, எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறது. நாங்கள் வியட்நாம் மீது அதை வீசுவோம் என்று. ஹோசிமின் பதிலுரைத்தார், நீங்கள் குறைந்த எண்ணிக்கையிலான அணுகுண்டுகள்தான் வைத்திருப்பீர்கள். ஆனால், வியட்நாமிய மக்கள் ஒவ்வொருவரும் அணுகுண்டுகளாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று. நினைவுப்படுத்திக் கொள்வோம், ஒவ்வொரு தமிழனும் விடுதலை களத்திலே அணுகுண்டுகளாக இருக்கிறோம். ஆகவே எந்த ஒரு ஆதிக்க சக்தியாலும் நமது விடுதலையை புறந்தள்ள முடியாது. நமக்கான தேசிய அடையாளத்தை அதனால் ஒதுக்கி வைக்க முடியாது.
நாம் அணுகுண்டுகளாக இந்த களத்திலே இருக்கிறோம். ஆகவே நாம் முட்டாள்களிடமிருந்து ஆறுதலை தேட வேண்டாம். நாம் புலிகளாக களம் கண்டவர்கள். வாலை சுருட்டி இடையில் வைத்துக் கொண்டு ஒடுங்கிப்போவதற்காக நாம் களத்திற்கு வரவில்லை. நமது வால் நெருப்பைக் கிளறும் துடுப்பைப் போல் எழுந்துநிற்க வேண்டும். வெந்தனலில் நின்று நமது வெற்றியை மீட்டெடுக்கும் ஆற்றலாக நாம் மிளர வேண்டும். அடங்கிப்போய் கால்களுக்கிடையே கரங்களை கட்டிக்கொண்டு, கண்ணீரில் மூழ்கிபோக, ஐயோ... நாம் தோற்றுவிட்டோமே என்று புலம்பிக் கொண்டிருக்க நமது இனம் சமானிய இனம் கிடையாது. நமக்கான தேவை என்பது அநீதியானது கிடையாது. நீதிக்கான ஒரு போராட்டம் தோற்றுப்போனது கிடையாது. ஆகவே எந்த நிலையிலும் நாம் வெற்றியை நமது வாசலுக்கு அழைத்துவர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழர்கள், உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதைநோக்கித்தான் நமது பயணம் தொடர்கிறது.
அன்று செஞ்சேனை வீரர்களுக்கு களத்திலே இருந்தபோது ஆறுதல் சொல்வதற்கு கனிவான வார்த்தைகள் மாஸ்கோவிலிருந்து பறந்து வந்தது. இன்றும் தமிழீழ விடுதலை வீரர்களுக்கு கனிவான வார்த்தைகள் உலகெங்கும் இருந்து வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை நமது தேசிய தலைவர் பேசும் வார்த்தையாக இருக்கிறது. இளைஞர்களே முன்னேறுங்கள். அவர்களுக்கு சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கலாம் என்ற வார்த்தைகள் நம்மை நெஞ்சுயர்த்தி மீண்டும் மீண்டுமாய் களத்திற்கு அழைத்து வருகிறது. ஆகவே, இந்த போராட்டம் என்பது ஏதோ நேற்று தோன்றி, இன்று மறையக் கூடிய ஒரு சாதாரண நிகழ்வல்ல. மாறாக, ஒரு இனத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கும் மாபெரும் அற்புதம். இது உலக வரலாற்றில் இடம் பதிக்கச் செய்யும் ஒரு வரலாற்று ஆவணம். உலகெங்கும் தேசிய இன விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் வீரம் செறிந்த களப் போராளிகளுக்கு நம்முடைய போராட்ட வெற்றி முன்னுதாரணமாக அமையப்போகிறது.
ஆகவே, இந்த வெற்றியை நாம் கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறோம். அந்த வெற்றியை நாம் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து தயங்காமல் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். பகைவனுக்கு வேண்டுமானால் நமது தோல்வி வெற்றியாக தெரியலாம். ஆனால் நமக்குத் தெரியும், நமது தோல்வி தான் நமக்கு வெற்றியின் தொடக்கமாக அமையப் போகிறது. காரணம், பகைவனிடம் இருக்கும் படைவீரர்கள் கூலி அடிமைகளாக களத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கென்று இலட்சியம் கிடையாது, கோட்பாடு கிடையாது, கொள்கை கிடையாது. வெற்றிபெற வேண்டும் என்கின்ற சிந்தனை கிடையாது. மேலிருந்து கிடைக்கும் கட்டளைக்கு அடிமைகளைப்போல் சுட்டுத் தள்ளக்கூடிய சிந்தனை மட்டும் தான் அவர்களிடம் இருக்கிறது. இதை நிரூபிக்கும் விதமாக, போராளிகளை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டபோது, மேலிருந்து கட்டளையிட்டார்கள், நாங்கள் கொன்றுவிட்டோம் என்ற ஒரு படையாளியின் பதில் நமக்கு வியப்பளிக்கவில்லை.
மாறாக, நமது படையை நடத்திச் செல்வதற்கான விளக்கமாக இருக்கிறது. அவர்களுக்கென்று சொந்த மூளை கிடையாது என்பதை இந்த பதில் அப்பட்டமாக நிரூபித்தது. ஆனால் நமது நிலைப்பாடு அப்படியல்ல. மிஹாயீல் அலேக்செயெவ் என்கின்ற ஓல்காவில் சராத்தவ் பகுதியைச் சேர்ந்த ராணுவ கிராமத்தில் பிறந்த கவிஞன் ஒரு படையாளியாய் இருந்துக் கொண்டு எழுதிய கவிதை, நமது முள்ளிவாய்க்காலில் இருக்கும் குழந்தைக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது. இது தனது வீர தாலாட்டாக ஒரு குழந்தையின்தாய் தமது மழலையை உறங்க வைக்க பாடிய பாடல்.




கண் வளராய் கண்ணே
கண் வளராய்
தன்மதியும் கண்ணில்
ஒளிரவில்லை.
கண் வளராய் கண்ணே
கண் வளராய்.




தந்தை புரிந்த
சண்டையோ நூறு.
சிந்தை மகிழ
கூறுவேன் கேளு.
கண்ணை மூடித்
தூங்குவாய் நீயும்.




உந்தன் நாட்டிற்கெதிராய்
வந்தனர் சண்டாளர்
சண்டையிட.
எங்கெனும் சாவினை
விதைத்தனர்.
துணிவுள்ள வீரர்
உன் தந்தையும்
போரிலே பெற்றார்
விழுப்புண்ணும்.




இரவே நீண்டது
என் முதல் மகனே.
கண் வளராய் நீயும்
கண் வளராய்.
இந்த பாடல் வரிகளில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தமிழீழ மண்ணில் தமது குழந்தைகளுக்குப் பாடும் தாலாட்டாக நமக்கு ஒலிக்கிறது. இது ஸ்டாலின் கிராடிலிருந்து ஒலித்த ஒலி. இது முள்ளிவாய்க்காலில் தொடர்கிறது. ஆக, நாம் வீர குழந்தைகளை, வீர தந்தையரை பெற்றெடுத்த பெருமை பெற்றவர்கள். நாம் தோற்றுப்போக மாட்டோம். ஸ்டாலின்கிராடு வெற்றி எப்படி உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததோ, அதேபோன்று தமிழீழத்தின் வெற்றி உலக ஆதிக்க சக்திகளுக்கு முடிவு கட்டும் வெற்றியாக இருக்கும். அந்த வெற்றி மாந்த குல வாழ்வை அடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுக்கும் வெற்றியாக இருக்கும்.
அது தொடங்குவதற்கான காலம் நெருங்கிவிட்டது. தமிழீழ உறவுகளே! உலகத் தமிழர்களே! ஒன்றிணைந்து எம் மண்ணை மீட்டெடுக்கும் களத்திற்கு முன்னேறி வருவோம். நமக்கான தேசியக் கொடி, நமக்கான தேசிய அடையாளம், நமது தேசிய தலைவர் இது நம்முடைய மனங்களில் மாறாத சின்னங்களாக பொறிக்கப்படட்டும். வெற்றி பெறுவோம். தமிழீழம் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக